வெள்ளைக்காரன் ஆட்சி

 தேச துரோக சட்டப்பிரிவு 124ஏ' 75 வருடங்களுக்குப் பிறகும் அவசியமா? 

தேச விரோத குற்றச்சாட்டை சுமத்த பயன்படுத்தப்படும் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு, நாடு சுதந்திரம் அடைந்த 75 பிறகும் அவசியமாகிறதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வொம்பாட்கெரே தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அமர்வு, விடுதலை உணர்வை ஒடுக்கவும் காந்தி, பாலகங்காதர் திலக் போன்றோருக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட காலனிய கால சட்டப்பிரிவு இன்னும் தேவையா என்று இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகரிடம் (அட்டர்னி ஜெனரல்) கேள்வி எழுப்பியது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை, இதே விவகாரத்துடன் தொடர்புடைய எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்த வழக்குடன் சேர்த்து ஒரே விவகாரமாக விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான், "இந்த விவகாரம் தங்களுடைய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள அதே அம்சத்தை கொண்டுள்ளது. சட்டப்பிரிவை பயன்படுத்துவதில் சில வழிகாட்டுதல்கள் இருந்திருக்க வேண்டும். தற்போதைய சூழலில் 124ஏ பிரிவு அரசியலமைப்புக்கு எதிராகவும் அது அப்பட்டமாக தவறாக பயன்படுத்தப்படுவது பற்றியும் நாங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அரசின் தலைமை ஆலோசகரிடம் தலைமை நீதிபதி ரமணா கேள்விகளை எழுப்பினார்.



"தேச விரோத சட்டப்பிரிவின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் வரலாற்றை பார்த்தீர்கள் என்றால், தண்டனை விகிதம் மிகக் குறைவாகவே இருந்துள்ளதை அறியலாம். இந்த சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படும் விதத்தை, ஒரு மரத்தை அறுக்க கொடுக்கப்பட்ட ரம்பத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த காட்டையே அழிப்பதற்கு இணையாக ஒப்பிடலாம்," என்று குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின்படியும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் எப்படி அந்த பிரிவை சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்துகின்றன என்றும் தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.

"தவறாக சட்டப்பிரிவு பயன்படுத்தப்படும் போது அதற்கு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பொறுப்புடைமை ஆக்கப்படுவதில்லை. இது தொடர்பாக பிற வழக்குகளையும் ஆராய்ந்து நிலுவையில் உள்ள அந்த அனைத்து வழக்குகளையும் ஒரே விவகாரமாக விசாரிக்கப்படும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு பழைய சட்டங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தி திருத்தம் செய்து கொண்ட இந்திய அரசு, எப்படி இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவை மட்டும் மாற்ற பரிசீலிக்காமல் போனது என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கே.கே. வேணுகோபால், "இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அதன் நோக்கம் சட்டபூர்வமாக அமல்படுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கலாம்," என்று கூறினார்.

இருப்பினும், ஒரு தரப்பால் எதிர் தரப்பு குரலை கேட்க முடியாமல் போனால் பிறகு எதிர் தரப்புக்கு எதிராக இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படலாம் அல்லது தவறாக ஒரு குற்றச்சாட்டில் சேர்க்கப்படலாம். தனி நபர்களைப் பொருத்தவரை இது மிகவும் தீவிர பிரச்னை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கின் மனுதாரர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல். இந்த நாட்டுக்காக தமது மொத்த வாழ்வையும் அவர் அர்ப்பணித்துள்ளார். எனவே இதை உள்நோக்கம் கொண்ட மனுவாக கருதி விட முடியாது என்று தலைமை நீதிபதி கூறினார்.

இதைத்தொடர்ந்து எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா மனுவுடன் வொம்பாட்கெரே மனுவையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட அறிவுறுத்திய நீதிபதி, அதன் பிறகு மனுதாரர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பவும் உத்தரிட்டார்.

1962ஆம் ஆண்டில் கேதார்நாத் சிங்குக்கும் இந்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு உறுதிப்படுத்தப்பட்டது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் வொம்பட்கெரே.

இந்திய அரசியலமைப்பின் 19(1) விதியில் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உரிமையின்படி ஒருவர் தெரிவிக்கும் கருத்தை ஏற்க முடியாமல், அதை அரசுக்கு எதிரான செயல்பாடு போல குற்றம்சாட்டி கிரிமினல் குற்றமாக்க முற்படுவது, குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளது என்று மனுவில் பொம்பட்கெரே கூறியிருந்தார்.

எனவே, அரசியலமைப்பின் 14, 21 ஆகியவற்றை பின்பற்றும் வகையில், அவற்றுக்கு எதிரான சட்டப்பிரிவு அவசியத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தும் தேவை எழுகிறது என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

124ஏ சட்டப்பிரிவு, கேதார்நாத் வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டது என்பதற்காக அதே அளவுகோலை வைத்து அந்த சட்டப்பிரிவை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்றும் அதுவே அந்த சட்டப்பிரிவை ஏன் மறுஆய்வு செய்யக்கூடாது என்ற கேள்வியின் அவசியத்தை நீதிமன்றத்துக்கு உணர்த்துவதாகவும் பொம்பாட்கெரே மனுவில் கூறியுள்ளார்.

இதே 124ஏ சட்டப்பிரிவுக்கு எதிராக மணிப்பூரை சேர்ந்த கிஷோர் சந்திரா வாங்கெம்சா, சத்தீஸ்கரை சேர்ந்த கன்னையா லால் ஷுக்லா ஆகிய இரு செய்தியாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு யு.யு.லலித், இந்திரா பானர்ஜி, கே.எம். ஜோசஃப் ஆகிய நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

124ஏ சட்டப்பிரிவு என்ன சொல்கிறது?

எவரேனும், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தலால் அல்லது மற்றபடி இந்தியாவில் சட்டபூர்வமாக அமைந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால் அது குற்றமாக கருதப்படும்.

இதற்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை அல்லது அபாரதம் தண்டனையாக விதிக்கப்படலாம்.

இதில்,"அவநம்பிக்கை" என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது.

இந்தியாவில் விடுதலை முழகத்தை எதிரொலிப்பவர்களை ஒடுக்க இந்த தேச துரோக சட்டத்தை பிரிட்டன் அரசு இயற்றியது. ஆனால், அதே பிரிட்டன் நாட்டில் இந்த சட்டம் 2009இல் நீக்கப்பட்டது. இந்தியாவில் இன்னும் தொடருகிறது.

---------------------------------------------------------------------------

தோழர்

சங்கரய்யா.


இன்று நூறாவது பிறந்த நாளைக் காணும் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா, தன் வாழ்வின் குறிப்பிடத்தக்க காலகட்டத்தை நாட்டிற்கான போராட்டங்களில் சிறையில் கழித்தவர். சங்கரய்யாவின் வரலாறு என்பது தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும்கூட.

இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கு எதிரான போராட்டம் என போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர் சங்கரய்யா.

தற்போது தூத்துக்குடியில் உள்ள ஆத்தூரைச் சேர்ந்தது சங்கரய்யாவின் குடும்பம். சங்கரய்யாவின் தாத்தா எல். சங்கரய்யா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் நரசிம்முலு பம்பாயில் பொறியியல் படிப்பை முடித்த பிறகு, கோவில்பட்டியில் செயல்பட்டுவந்த ஜப்பானிய நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்கும் அவருடைய மனைவி ராமானுஜத்திற்கும் 1922 ஜூலை 15ஆம் தேதி சங்கரய்யா பிறந்தார். அவருக்கு எட்டு சகோதர - சகோதரிகள். சங்கரய்யாவுக்கு பெற்றோர் இட்டபெயர் பிரதாபசந்திரன்.

ஆனால், தனது பெயரையே தன் பேரனுக்கு வைக்க வேண்டுமென தாத்தா வலியுறுத்தியதால், அவரது பெயர் சங்கரய்யா என மாற்றப்பட்டது. 1930ல் நரசிம்முலு மதுரை ஹார்வி மில்லில் பணியாற்ற மதுரைக்கு குடும்பத்தோடு சென்றார். புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும் ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்தார் சங்கரய்யா. 1937ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் வகுப்பில் சேர்ந்தார்.

அந்த காலத்தில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடமும் மேலோங்கிவந்த அந்த உணர்வை கல்லூரி முதல்வர் பிளிண்ட் விரும்பவில்லை. இருந்தபோதும் சங்கரய்யா உள்ளிட்ட மாணவர்கள் தேசிய உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டனர். அப்போது சென்னை மாகாண பிரதமராக இருந்த ராஜாஜி, இந்தியை கட்டாயப் பாடமாக்கியபோது அதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் சங்கரய்யா.

இதற்குப் பிறகு சுதந்திர போராட்டத்திற்கென சென்னையில் செயல்பட்ட சென்னை மாணவர் சங்கத்தைப் போலவே மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கரய்யா அதன் செயலாளரானார். மதுரையில் உள்ள மக்கள் பிரச்சனைக்காக இந்த சங்கம் தொடர்ந்து ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தியது. இதன் பிறகு பல்வேறு இடங்களில் மாணவர் சங்கங்கள் துவக்கப்பட்டன.

இதில் கலவரமடைந்த கல்லூரி முதல்வர் பிளின்ட், சங்கரய்யாவை அழைத்து வேறு கல்லூரிக்குச் சென்றுவிடும்படி கூறினார். ஆனால், சங்கரய்யா மறுத்து விட்டு, அமெரிக்கன் கல்லூரியிலேயே படிப்பைத் தொடர்ந்தார்.

துவக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்த சங்கரய்யா, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேசிய விடுதலை இயக்கத்தின் பக்கம் திரும்பினார். அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே 'பூரண சுதந்திரம்' கோரி தீர்மானம் நிறைவேற்றியிருந்ததால், அந்த கட்சியில் இணைவதென முடிவெடுத்தார் சங்கரய்யா. ஆனால், அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

1941ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். அதனைக் கண்டித்து அமெரிக்கன் கல்லூரியில் கூட்டம் நடத்தி, பேசினார் சங்கரய்யா. முடிவில் பிப்ரவரி 28ஆம் தேதி காலையில் காவல்துறை ஆய்வாளர் தீச்சட்டி கோவிந்தனால் சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார்.

பி.ஏ. தேர்வுக்கு 15 நாட்களே இருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டதால், அவர் படிப்பைத் தொடர முடியாது போயிற்று. மதுரைச் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட சங்கரய்யா 1942 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார். ஜூலை மாதம் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் வெளிப்படையாக தன் செயல்பாட்டைத் தொடங்கியது. இதையடுத்து பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாணவர் கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக சங்கரய்யா கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து கண்ணணூர் சிறைக்கும் பிறகு தஞ்சாவூர் சிறைக்கும் மாற்றப்பட்ட சங்கரய்யா 1944ல் விடுதலை செய்யப்பட்டார்.

சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

விடுதலையாகி வந்த சில நாட்களிலேயே, கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக் குழுவின் தலைவராக சங்கரய்யா தேர்வானார். இதற்குப் பிறகு, ஆங்கிலேய அரசால் தொடரப்பட்ட மதுரைச் சதி வழிக்கில் சங்கரய்யா சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சங்கரய்யா 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இது பொய் வழக்கு என்பதை நிரூபித்து, 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு, அதாவது இந்திய சுதந்திரத்திற்கு முதல் நாள் சங்கரய்யா விடுவிக்கப்பட்டார்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆசிரியையான நவமணியைத் திருமணம் செய்தார் சங்கரய்யா.

இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தடைசெய்யப்படுவதற்கு முன்பாகவே கைது நடவடிக்கைகள் துவங்கின. சங்கரய்யா தலைமறைவானார். சுமார் இரண்டு ஆண்டு காலம் தலைமறைவாக இருந்தபடி, மாறுவேடம் பூண்டு கட்சிப் பணியை மேற்கொண்டார் சங்கரய்யா.

1948-51ல் மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான அடக்குமுறை கடுமையாக இருந்தது. பலர் கொல்லப்பட்டனர். பாலு தூக்கிலிடப்பட்டார். ஐ.வி. சுப்பய்யா சிறையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். 1950ல் உமாநாத் இருந்த தலைமறைவு மையம் கண்டுபிடிக்கப்பட்டு, உமாநாத் பாப்பா, கல்யாணசுந்தரம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். 1951ல் சங்கரய்யாவும் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட சங்கரய்யா, முதல் பொதுத் தேர்தலுக்கு கட்சியைத் தயார் செய்வதில் தீவிரமானார். இந்தத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் பி. ராமமூர்த்தி வெற்றிபெற்றார்.

1957ல் நடந்த பொதுத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார் சங்கரய்யா. ஆனால், வெற்றிகிடைக்கவில்லை.

1962ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் யுத்தம் மூண்டபோது, கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். சங்கரய்யாவும் கைதுசெய்யப்பட்டார்.ஆறு மாதங்களுக்குப் பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.

1963ல் மார்க்சிய - லெனினியப் பார்வையோடு தீக்கதிர் நாளேடு வெளியாக ஆரம்பித்தது. சங்கரய்யா, பி. ராமமூர்த்தி உள்ளிட்டோரின் கட்டுரைகள் புனைப்பெயரில் வெளியாக ஆரம்பித்தன. இந்த கட்டத்தில் கட்சி, தி.மு.கவுக்கு எதிராக காங்கிரசுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது. இதனை சங்கரய்யா உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.

1964ல் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் கட்சி இரண்டாக உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. மாநிலக் குழுவில் சங்கரய்யா இடம்பெற்றார். 1965ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை அரசு கைது செய்யத் துவங்கியது. இதில் சங்கரய்யாவும் கைதானார். 16 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு 1966ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான பிறகு, தீக்கதிர் கட்சியின் அதிகாரபூர்வ ஏடாக அங்கீகரிக்கப்பட்டது. என். சங்கரய்யா அதன் ஆசிரியரானார்.

1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். சட்டமன்ற துணைத் தலைவராகவும் தேர்வானார். 1967ல் திருவாரூரில் நடந்த விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில், சங்கரய்யா மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். 1969ல் மாநிலத் தலைவராகவும் தேர்வானார். 1982, 91லும் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார். இந்த காலகட்டங்களில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று கூட்டங்களிலும் போராட்டங்களிலும் பங்கேற்றார் சங்கரய்யா.

1977லிலும் 1980லும் நடந்த தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட சங்கரய்யா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசிய சங்கரய்யா, மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தினார்.

1986ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார் சங்கரய்யா. அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியக் குழுவில் இருந்து வருகிறார் அவர்.

1995ல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என். சங்கரய்யா கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரிவரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

என். சங்கரய்யா - நவமணி தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். நான்கு பேரன்களும் மூன்று பேத்திகளும் உள்ளனர்.

---------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?