அகர முதலி ஊழலெல்லாம்

 


அகரமுதலி திட்ட இயக்குனராக இருந்த தங்க காமராஜை, துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்து திருப்பூருக்கு மாற்றம் செய்துள்ளனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக, கூடுதல் பொறுப்பில் பணியாற்றிய கோ.விஜயராகவனை, அகரமுதலி திட்ட இயக்குனராக
நியமித்துஉள்ளனர்.இந்த விஜயராகவன், அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள்- எம்.பி., ஹரியின் சகோதரர். விஜயராகவன் தன் சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்தபடி தான் அலுவலகத்திற்கு வருவார்.


அதை வைத்து, துறையில் ஏகப்பட்ட தவறுகளை செய்துள்ளார். அவை ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


* உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், கையெழுத்து பிரதி பாதுகாப்பு மற்றும் ஆதார மையம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக 34 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 10 லட்சம் ரூபாய்க்கு மேலான அரசு துறை பணிகளை, பொதுப்பணித் துறை தான் செய்ய வேண்டும்.
ஆனால், அந்த பணிகளை சாதாரண தச்சு பணியாளர்களை கொண்டு, விஜயராகவன் முடித்து விட்டார். சம்பந்தப்பட்ட துறை செயலர், அப்பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் வாயிலாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிட்டார். மறு மதிப்பீட்டில், 20 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு, 14 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருக்கிறது என, அரசுக்கு அறிக்கை அனுப்பினர்


* திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அரபு மற்றும் சீன மொழி தவிர, மற்ற பணிகள் அனைத்தும் வலைதளங்களை பார்த்து தட்டச்சு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, போலி ரசீதுகள் தயார் செய்யப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது


* மொழிபெயர்ப்பு நுால்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டதாக பொய் கணக்கு எழுதப்பட்டது. அரிய நுால்கள் அச்சடிக்கப்படாமலே, அச்சிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு பணம்
எடுக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி உதவி பெற்ற பதிப்பு பணிகளில் பெரும்பாலானவை
முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. போலி ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பொய் கணக்கு
எழுதியுள்ளனர்

* பல்கலை மானியக் குழு அங்கீகாரம் இல்லாமல், நிறுவன ஆராய்ச்சியாளர்களுக்கு ஊதியம் மற்றும் இதரப் படிகள் வழங்கப்பட்டன. இந்த வகையில், அரசுக்கு 36 லட்சம் ரூபாய் கூடுதலாக இழப்பு ஏற்பட்டிருக்கிறது


* நிறுவனத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிக்காக, 2010ல் 3.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எம்.பி., -- எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதே பணிக்காக 1.46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, முகப்பு தோற்றம் மற்றும் உள் நுாலக கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்டது என, கணக்கெழுதி விட்டனர். இந்த முறைகேடும் வெளிச்சத்துக்கு வர உள்ளது


* ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை துவங்க, பொதுமக்களிடம் இருந்து நிதி வசூல் செய்யப்பட்டது. இதற்காக, நன்கொடையாளர்கள் வருமான வரி சலுகை பெற ரசீதுகள்
வழங்கப்பட்டன. இந்த ரசீதுகளை, 'கலர் ஜெராக்ஸ்' எடுத்து கொடுத்து ஏமாற்றி உள்ளனர்


* ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தொல்காப்பியர் ஆய்விருக்கை நிறுவ 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. வங்கியில் வைப்பு நிதியாக வைத்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையை வைத்து, ஆய்விருக்கை செயல்படுத்த கோரப்பட்டது. ஆனால், அந்த பணம் உடனடியாக வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்படவில்லை.

இப்படி பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள, கோ.விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் அவரைத் தான், தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், அகரமுதலி திட்ட இயக்குனராக நியமித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
--------------------------------------------------------
வெள்ளைக் கோடு
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, ரோடுகளில் கோடு போடும் கான்ட்ராக்ட்டில் மட்டும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக புகார் கிளம்பியுள்ளது.

அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு, அரசுப் பணிகளை எடுத்து கோடிகளில் சம்பாதித்துள்ள புதுக்கோட்டை சகோதாரர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம், பழனிவேல் ஆகியோர் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி ஏராளமான சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு இவர்கள் பினாமிகளாக இருந்ததாகவும் தகவல் இவர்களைப் போலவே, 'மாஜி' துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,க்கு நெருக்கமான புதுக்கோட்டை செல்வம் என்பவருக்கு, கடந்த பத்தாண்டுகளாக நீர் நிலைகளைத் துார் வாரும் ஒப்பந்தப்பணிகள் தரப்பட்டுள்ளன. அதை வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மண்ணை விற்றிருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் கிடைத்து அதுபற்றியும் விசாரணை துவங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் பழனிசாமி வசமிருந்த நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின், 'ஹரி வே லைன்' என்ற நிறுவனத்துக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப்பணி தரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

ரோடுகளில் கோடு போடுவதில் மட்டுமே ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அகலமான இரு வழிச்சாலைகளில், 'சென்டர் மார்க்கிங்' போட்டு, அதன் நடுவில் 'ஸ்டட்ஸ்' எனப்படும் ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டுமென்ற சாலைக்குழும விதிகளைப் பயன்படுத்தியே இந்த ஊழல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் ரோட்டின் நடுப்பகுதி தெரியும் வகையில் வெள்ளை நிற ஒளிரும் பெயின்ட் அடிக்க ஒரு லிட்டருக்கு, 2,000 ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும். ஆனால் புதுக்கோட்டை நிறுவனத்தால் லிட்டர் 100 ரூபாய் பெறுமானமுள்ள பெயின்ட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன; எளிதில் உடையாத தரமான 'ஸ்டட்ஸ்' ஒன்றின் விலை 2,000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த நிறுவனம் போட்டுள்ள 'ஸ்டட்ஸ்'கள், வெறும் 250 ரூபாய் பெறுமான சாதாரண பிளாஸ்டிக் தயாரிப்பாக உள்ளன.

நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் ரோடுகளில், ஏழு மீட்டர் அகலத்திலுள்ள ரோடுகளில்தான், தலா இரு புறமும் மூன்றரை மீட்டர் விட்டு நடுவில் 'சென்டர் மார்க்கிங்' கோடுகளைப் போட வேண்டும். ஆனால், வெறும் நான்கு மீட்டர் அகலத்திலுள்ள ரோடுகளிலும் 'சென்டர் மார்க்கிங்' கோடுகள் மற்றும் இரு புறமும் எல்லைக்கோடுகள் அமைப்பதற்கு கான்ட்ராக்ட் தரப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் மட்டுமின்றி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ரோடுகளிலும் இந்த கோடுகள் இஷ்டத்துக்குப் போடப்பட்டுள்ளன.இதனால் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வீதிகளுக்குள் உள்ள 30 அடி, 40 அடி ரோடுகளிலும் சென்டர் மார்க்கிங், இரு புறமும் எல்லைக்கோடுகள் போட்டு, அரசுப்பணம் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாடு பிரிவு இவற்றைப் பெயரளவுக்குக் கூட பரிசோதித்ததில்லை. எல்லாத்துறைகளிலும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் ரோடுகளுக்கு கோடு போடுவதற்கே 2,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளன. உண்மையில், இந்தத் தொகையில் 40 சதவீதத்தொகைக்குக் கூட, அந்தப் பணி தரமுடையதாக செய்யப்படவில்லை.


சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு முன் கூட்டியே 10 சதவீதத்தொகை கமிஷனாகத் தரப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கொடுத்ததும் செலவும் போக, ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு கோடு போடுவதில் மட்டுமே புதுக்கோட்டை நிறுவனம் சம்பாதித்திருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களிடம் தகவல்களைத் திரட்டி, நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் இதையும் ஒரு தரவாகக் கொண்டு வருவதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதே புதுக்கோட்டை கோஷ்டி, இப்போது மீண்டும் கோடு போடுவதில் கோடிகள் அடிக்க, தற்போதுள்ள அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன் அலுவலகங்களில் முகாமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?