இந்தியாவின் எதிர்காலம்?

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான அமர்த்தியா சென் அளித்த பேட்டியில், கடந்த பத்தாண்டுகளில் நிகழ்வுகள் எப்படி வரிசையாக பாசிச வழியை நோக்கி திட்டமிட்டு நடந்துள்ளது என்பதை இந்திய மக்கள் கவனிக்க வேண்டும்.



இது ஜனநாயகப் பண்புகளை உருவாக்குவதற்கு எதிர்த் திசையில் அமைந்திருக்கிறது. இது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதில் பலவீனமாக்குகிறது. சீராக்குவதற்கான அரசியல் செயல்முறை இல்லாமல், பொருளாதார சமத்துவம் கரைக்கப்பட்டு, தவறாக கையாளப்படுவதை அனுமதிப்பதால் இது மோசமானது.

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் தனிநபர்களுக்கு மிகவும் மோசமானது.

ஏனெனில் எந்த குற்றமும் இல்லாத போது அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லாத போது, தனிநபர்கள் கைது செய்யப்பட வழி செய்கிறது. இவர்கள் ஏதேனும் தவறாக செய்து விடுவார்கள் என்ற வாதத்தின் அடிப்படையில் சிறையில் வைத்திருக்க செய்கிறது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் சமத்துவமின்மையின் பரவல் தொடர்வது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் சொல்கிறார். இதன் விளைவாக, ஜனநாயகம் இல்லாதது, அரசு சமத்துவமின்மையை எதிர்கொள்வதிலும், அரசு மக்கள் பிரச்சனை பற்றி சிந்திக்கும் போது அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதற்கும் இடையே வலுவான தொடர்பு இருக்கிறது.

அண்மையில் வெளியான நினைவலை புத்தகமான ’ஹோம் இன் தி வேர்ல்டு’ பின்னணியில் அமர்த்தியா சென் இவை பற்றி எல்லாம் பேசினார்.

கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் தொடர் கல்வி நிலையங்கள் மூடல் பற்றிப் பேசியவர், இளம் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பற்றிக் கவலை கொள்வதாகக் கூறினார். பெருந்தொற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளும் மட்டும் இதற்குக் காரணம் அல்ல. பெருந்தொற்று இல்லாதபோது எந்த விதமான பலனை அமைப்பு அளிக்க வேண்டுமோ அதை அளிக்காத வகையில் இந்தியாவில் பள்ளிகள் அமைப்பு மிகவும் செயலிழந்து போயிருப்பதாக கூறினார்.

“கற்றுத்தருபவை எல்லாம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டவை. மேலும் உண்மையான அறிவை நோக்கிய விழைவில் அசாதாரணமான பிறழ்வுகள் நிகழ்வதாக அறிகிறோம். கல்வியில் நமக்கு சுதந்திரம் தேவை, ஆனால் இவை எல்லாம் கணிதம் போன்ற கலைகள் மீதான பெருமிதத்திற்கு பதிலாக தேசியவாதத்தால் வழிநடத்தப்பட்டால் பெரும் தவறாகும். இந்தப் பிரச்சினை பெரிய அளவில் முன்வைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது.



சுயேச்சையான சிந்தனைகள் கொண்ட கல்வி நமக்குத் தேவை. பள்ளிகள் மூடல், கோவிட்-19 காரணமாக ஆசிரியர்கள் இல்லாதது ஆகியவை பிரச்சினைதான் என்றாலும் இவை மட்டுமே நம் பிரச்சினைகள் அல்ல” என்கிறார் சென்.

நரேந்திர மோடி அரசு யு.ஏ.பி.ஏ. சட்டத்தைப் பயன்படுத்தும் விதத்தையும் அமர்த்தியா சென் கடுமையாக விமர்சிக்கிறார்.

இந்த சூழலை, எந்த தவறும் செய்யாமல், ஆனால் ஏதேனும் தவறு செய்துவிடலாம் எனும் அடிப்படையில் தனது மாமாக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஆங்கிலேயர்கள் காலத்துடன் இதை ஒப்பிடுகிறார். “இந்தியாவில் இது தொடரும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது. யு.ஏ.பி.ஏ. தனிநபர் சுதந்திரத்திற்கு மட்டும் மோசமானது அல்ல, கல்வி என்பது எதை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதற்கும் ஜனநாயகம் என்றால் என்ன பொருள் என்பதற்கும் மோசமானது” என்கிறார் சென்.

“பொதுமுடக்கம் ஏற்பட்ட போது, திடீரென மக்களிடம் நீங்கள் வீட்டிற்குச் செல்ல முடியாது எனக் கூறப்பட்டது. தினக்கூலி தொழிலாளர்களைப் பொருத்தவரை, இது பட்டினி கிடப்பதற்கான ஆணை போன்றது. அதே போல பிஹாரிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள், எங்கும் செல்ல முடியாவிட்டால் வீட்டிற்கு செல்ல விரும்புவார்கள், ஆனால் அதுவும் முடியாமல் போனது”.

“இதன் பின்னே இருக்கும் கேள்வி, இதற்குக் கிடைத்திருக்க வேண்டிய கவனத்திற்கு நிகரான கவனம் ஏன் கிடைக்கவில்லை என்பதாகும். அரசியல் செயல்முறையில் ஏழைகள் நலன்கள் முக்கியம் இல்லை எனில் இவ்வாறு நிகழும். இது ஜனநாயகம் இல்லாததை உணர்த்துகிறது” என்கிறார் அவர்.

ஏழைகள் குறித்தும் அவர்கள் நலன் குறித்தும் மத்திய அரசு முழு அலட்சியப் போக்கு கொண்டிருப்பதுதான் இந்த பிரச்சினையின் பெரும் பங்கு என்று கூறுபவர், ஜனநாயக மாண்புகள் வீழ்ச்சி அடைந்து வருவதை நாம் பார்ப்பதற்கான ஆபத்தான அறிகுறி இது என்றார்.

“மிக ஏழைகள் நலன் மீது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் கவனத்தை ஈர்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. கவனத்தை ஈர்க்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. ஜனநாயக செயல்முறை பலவீனமாக இருக்கும்போது இது இன்னும் மோசமாக இருக்கிறது. இப்போது ஜனநாயகச் செயல்முறை மிகவும் பலவீனமாக உள்ளது. எல்லோரின் நலனுக்காகவும் நாடு இது தொடர்பாக ஏதேனும் முயற்சித்துத் தீர்வு காண வேண்டும்”.

ஜனநாயக மாண்புகள், ஜனநாயக அமைப்புகளின் வீழ்ச்சி குறித்துப் பேசும் சென், பல கட்சி ஜனநாயகம் மிகவும் முக்கியமானது, ஆனால் ஏன் எனும் கேள்வி முக்கியமானது என்கிறார். ஒரு கட்சி இருந்தால், நாடாளுமன்றத்தில் விரும்பியது போல செயல்படும். மேலும், நீதித்துறை, பிற அமைப்புகளைப் போல நாடாளுமன்றத்தை மிகவும் சக்தி மிக்கதாக்கும் என்கிறார்.

“நீதிமன்றங்களில் நமக்கு பல்வேறு அனுபவங்கள் இருக்கின்றன. அதிகாரத் துறை, நீதித் துறை ஆகியவற்றுக்கு ஜனநாயகம் எந்த அளவு முக்கியம் என நாம் சிந்திக்க வேண்டும். இந்த அமைப்புகளின் பாத்திரத்தை நாம் யோசிக்க வேண்டும். அதிகாரத்துறை சமமில்லாத, நியாயம் இல்லாத வழியில் அதிகாரத்தைச் செயல்படுத்தத் துவங்கினால், அது பெரிய வேறுபாடாகிவிடும்.

துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் ஆட்சியில் கூட பல அமைப்புகள் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தன. சல்மான் ருஷ்டி புத்தகத்தை முதலில் தடை செய்த நாடு இந்தியா. இதற்கு முன்னர்கூட அநீதிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் மத்திய அரசின் செயல்பாடுகளால் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளன. இது நிகழும்போது கல்வி பாதிக்கப்படுகிறது, சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, சமூக அரசியல், பொருளாதார உரிமைகள் பற்றி பேசுவது பாதிக்கப்படுகின்றன” என்று அவர் விளக்குகிறார்.

“அடித்தட்டில் இருக்கும் தலித்கள், பழங்குடியினர் மிக மோசமான காலத்தை எதிர்கொண்டுவருகின்றனர். இவை எல்லாம் ஒவ்வொருவர் மீது சமத்துவமின்மையையும் அநீதியையும் திணிப்பதை அதிகரிக்கச்செய்கிறது. இதை நாம் மாற்ற வேண்டும். சுதந்திரத்தின் முக்கியக் கூறுகள் சிலவற்றையாவது நம்மால் சிறிதளவேனும் பாதுகாக்க முடிய வேண்டும்”.

அரசியல் தலைமை, விவசாயிகள் போராட்டம் போன்ற மக்கள் இயக்கம் பற்றிய கேள்விக்கு, இரண்டும் நமக்குத் தேவை என்கிறார் சென். ஒரு பிரச்சினை இருக்கும்போது, முதலில் அதற்கான காரணத்தை அறிய வேண்டும், இதற்கு ஆய்வும் விசாரணையும் தேவை. எல்லாவற்றுக்கும் மேல், நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனில் என்ன நடவடிக்கை, அது எப்படி நிகழும் எனும் கேள்வி எழுகிறது. நமக்குத் தலைமை தேவையா? அது எங்கிருந்து வரும்? நீதித்துறை இதைச் செய்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் சில நேரங்களில் இதை செய்கிறது. மற்ற நேரங்களில் தோல்வியாக அமைகிறது” என பதில் அளிக்கிறார்.

“நாம் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை என உணர்த்தப்படும்போது பொதுமக்கள் போராட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் குறுகிய அணுகுமுறை அல்லது பெரும்பான்மைவாதம் கொண்டிருக்கும்போது, சிறுபான்மையினரை மோசமாக நடத்தும்போது, மக்களை மாற்ற முடியாது என்றும் நம்புகிறேன். இவ்வாறு நிகழ்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனினும் குறுகிய நோக்கிலான பெரும்பான்மைவாதம் நீடிக்க கூடாது என நாம் கோருவதற்கு நியாயம் உள்ளது. பல நேரங்களில் இது பெரும்பான்மைவாதம்கூட இல்லை, ஏனெனில், காலம் காலமாக நாம் அறிந்துவரும் இந்தியர்கள் சிறுபான்மையினர் உரிமைகளை நசுக்குபவர்கள் அல்ல. 



இந்துக்கள்முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் நூற்றாண்டுகளாகச் சிக்கல் இல்லாமல் இணைந்து வாழ்ந்துள்ளனர்.

காந்தி அல்லது தாகூர் கூறியது போல, சமத்துவம், நீதியின் அடிப்படையில் ஊக்கம் பெற்ற பெரும்பான்மையை உருவாக்கலாம்”.

“சில நேரங்களில் குறிப்பிட்ட வகையான தலைமை முக்கியம். தலைமைக்கான தேவை காணாமல் போகாது. ஆனால் நீங்கள் சொந்தமாக எழுந்து நிற்கும் அவசியம் ஏற்படலாம். தாகூரின் பாடலைப் போல, ‘மக்கள் நம் குரலுக்கு செவி சாய்க்கவில்லை எனில், நாம் தனியாகச் சென்றாக வேண்டும்”

இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையோடு இருப்பதாக சென் சொல்கிறார். “இந்தியாவில் இருப்பது குறித்து, பல்வேறு வகையானவர்களுடன் பேசிக்கொள்ளும் ஆற்றல் குறித்து பெருமிதம் கொள்கிறேன். அசோகர் இதைக் கல்வெட்டில் பொரித்திருக்கிறார். ரோமில் மாற்று நம்பிக்கை எரிக்கப்பட்டபோது, இங்கு அக்பர் அனைத்து மதங்களையும் அரசு சமமாகப் பார்க்க வேண்டும். தலையீடு இருக்கக் கூடாது எனக் கூற முடிந்தது. ஆனால் அண்மைக் காலமாக நிறைய தலையீடு இருக்கிறது. சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினர் பாதகமாக நடத்தப்படுகின்றனர்.

இது நிகழும்போது, ஏதேனும் செய்ய வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. இது குறித்து கருத்து சொல்லும் ஆற்றல் எதிர்கட்சிகளுக்கு இருக்க வேண்டும்.”

“கடந்த காலத்தில் நடந்த பல விஷயங்கள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்ளலாம். ஆனால் அதில் பெருமை கொள்வதற்கு பதில் நாம் எதிர்மாறாக நடந்துகொள்கிறோம். நாம் வரலாற்றுக்கு விசுவாசமாக இல்லை. இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லை. இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்வதால்தான் இந்திய பாஸ்போர்ட்டை இன்னமும் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்களிடையே பாகுபாடு காணும்போது நாம் எழுந்து நிற்க வேண்டும். 88 வயதில் நான் பலவீனமாக இருந்தாலும், நான் எதிர்த்து நிற்க வேண்டும். நான் எழுந்து நிற்பேன் என நம்புகிறேன். இந்தியாவில் உள்ள எல்லோரும் இவ்வாறு நம்ப வேண்டும். இது நம்முடைய பொறுப்பின் அங்கம், மகத்தான செழுமையான பாரம்பரியத்தின் வாரிசு என்ற முறையில் நம் கடமை”.

நன்றி: தி வயர் .

-----------------------------------------------------------------------------------------

உலகம் மாறுது.

காணொலிhttps://youtu.be/IsBQdPRTh6A

-----------------------------------------------------------------------------------------

சாதித்தப் பெண்.

காபி டே சி.இ.ஓ வாக இருந்தவர் வீரப்பா கங்கையா சித்தார்த்தா ஹெட்ஜ். கடந்த 2019ல் சித்தார்த்தா கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

கழுத்தை நெறிக்கும் கடன், வெளி அழுத்தம் என பல்வேறு காரணங்களால் சித்தார்த் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். காபி டே நிறுவனர் சித்தார்த்தின் நிறுவனத்துக்கு 7200 கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில் 2020ல் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.


இந்தியா முழுவதிலும் பல்வேறு கிளைகளை கொண்ட காபி டேவை மாளவிகா எப்படி நிர்வாகிப்பார் என பெரும் கேள்வி எழுந்தது. தனது அசாத்திய உழைப்பால் நிறுவனத்தின் கடனை பாதியாக குறைத்த மாளவிகா 7,200 கோடியில் இருந்து ரூ.3,100 கோடி ரூபாயாக ஆக்கியுள்ளார்.

அதன்படி காபி டே நிறுவனத்தின் கடன்களை நிறுவனம் நிச்சயம் திரும்பச் செலுத்தும் என தெரிவித்த மாளவிகா தனது வார்த்தையைக் காப்பாற்றியுள்ளார். மாளவிகா ஏற்படுத்திய மாற்றம் ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

எனது கணவரின் கனவுகளை நனவாக்க பாடுபடுவேன் என மாளவிகா ஒரு பேட்டியில் முன்னர் கூறியிருந்தார், அது உண்மையாகவும் மாற தொடங்கியுள்ளது. 

    

------------------------------------------------------------------------------------

அயோத்தியில் இருந்து பின்வாங்கிய யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.


உ.பி. அரசியலில் கடந்த 15 ஆண்டுகளாக மாயாவதி(2007-2012) அகிலேஷ் யாதவ்(2012-2017), யோகி ஆதித்யநாத்(2017-2022) ஆகிய 3பேருமே தேர்தலில் போட்டியிடாமலே எம்எல்சியாகி அதன்மூலம் முதல்வராகினர்.
இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் த லைவர் மாயாவதி போட்டியிடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

 அதே போன்று காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான ப்ரியங்காகாந்தியும் போட்டியிடுவதாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் 125 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று பிரியங்கா ஏற்கனவே கூறியிருந்தார்.

 அதற்கேற்ப இப்பட்டியலில் பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, 50 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.

அதுபோல், இன்னும் 50 வேட்பாளர்கள், இளைஞர்கள் ஆவர்.

 உன்னா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான இளம்பெண்ணின் தாயார் ஆஷா சிங், உன்னா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

இது இந்தியா முழுக்க கவனம் பெற்றிருக்கும் நிலையில்,

அயோத்தி என்பது இந்துத்துவத்தின் அடையாளம் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 

அங்கு பாஜக செல்வாக்குப் பெறும் என நம்பிக்கொண்டிருந்த நிலையில்
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தலில் 40 பஞ்சாயத்து இடங்களில் வெறும் 8ல் மட்டுமே பாஜக வென்றது. அந்த மாவட்டத்தில் பாஜக படுதோல்வி அடைந்தது. 

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி செல்வாக்குப் பெற்றுள்ள அயோத்தியில் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்பதால் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியான கோரக்பூரில் போட்டியிடுகிறார். 

சட்டசபை தேர்தலுக்கான 107 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.இதில் கோரக்பூர் தொகுதி யோகி ஆதித்யநாத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

சமாஜ்வாதி கட்சி பாஜகவின் வெற்றிக்கு பெரும் சவாலைக் கொடுத்து வருகிறது.

-----------------------------------------------------------------------

டோலோ 650, 

டோலோ 650, கரோனா கோர தாண்டவமாடிய மார்ச் 2020 முதல் ரூ. 567 கோடி விற்பனையாகி, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தியா கோவிட் மூன்றாவது அலையுடன் போராடி வரும் இந்த தருணத்தில் மக்களுக்கு இது கண்கண்ட மருந்தாகி விட்டது.

#Dolo650 கடந்த வாரம் முழுவதும் சமூக ஊடகங்களில் டிரெண்டான வார்த்தையாகியுள்ளது.

 ஜனவரி 2020 முதல் பாராசிட்டமால் விற்பனைத் தரவைக் கவனித்தால், டோலோ 650 தவிர, கால்பால் சுமோ எல் உள்ளிட்ட 37 பிராண்டுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகம் விற்பனையாகியுள்ளன.

சுகாதார ஆய்வு நிறுவன தரவுகளின்படி டோலோ மற்றும் கால்பால் ஆகியவை காய்ச்சலுக்காக சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பாராசிட்டமால் மருந்து கொண்ட முக்கிய பிராண்டுகள் ஆகும். 

இந்த பிராண்டுகள் ஒவ்வொன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்களால் பரவலாக பரிந்துரைக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி இது மக்கள் மனதிலும் சாதாரண காய்ச்சல் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கான மருந்தாகி விட்டது.

AMP

2021 டிசம்பரில் டோலோ 650 ரூ.28.9 கோடி விற்பனையாகியுள்ளது, 

இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 61.45 சதவீதம் அதிகமாகும்.

 இருப்பினும் கோவிட் இரண்டாவது அலையின் உச்சத்தில் இருந்த காலத்தில் அதன் அதிகபட்ச விற்பனை இருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 2021-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.48.9 கோடி மற்றும் ரூ.44.2 கோடி விற்பனையாகியுள்ளது.

2021 டிசம்பரில் அதிகம் விற்பனையான இரண்டாவது பாராசிட்டமால் பிராண்டான கால்பால் விற்பனை 28 கோடி ரூபாயாக இருந்தது. இது 2020 டிசம்பரில் இருந்து 56 சதவீதம் அதிகமாகும். 

இரண்டாவது அலையின் உச்சத்தில், கால்பால் ரூ.71.6 கோடியுடன் அதிக விற்பனையான பாராசிட்டமால் ஆகும். ஃபெபனில், பி-250, பாசிமால் மற்றும் குரோசின் ஆகியவை பாராசிட்டமாலின் பிற பிரபலமான பிராண்டுகள் ஆகும்.

டோலோ 650 இன் வெற்றிக்கு ஒரு காரணம், குரோசின் போலல்லாமல், இன்னும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தாக இருப்பதுதான் என்று மருத்துவர்கள் மற்றும் மருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இது அனைத்து வயதினருக்கும் கொடுக்கப்படலாம் என்பதாலும் குறைந்த பக்க விளைவுகள் மட்டுமே உள்ளதாவும் டாக்டர்கள் டோலோ 650 ஐ பரிந்துரைக்கின்றனர்.

“டோலோ 650 என்பது பாராசிட்டமாலின் பிராண்டுகளில் ஒன்றாகும், இது காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான நேரத்தை பரிசோதிக்கும் மற்றும் பொதுவான மருந்தாகும். இது குரோசின், கால்பால், பாசிமோல் போன்ற பிற பிராண்டுகளிலிருந்து வேறுபட்டதல்ல. இது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான மருந்து மற்றும் அனைத்து வயதினரும் மற்றும் இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் எடுத்துக்கொள்ளலாம்" 

.காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல்வலி ஆகியவை மூன்றாவது அலையில் கோவிட் நோயின் முக்கிய அறிகுறிகள். அறிகுறிகள் லேசானவை பொதுவாக நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகிவிடும். அதுபோன்ற சூழலில் இந்த வகை பாராசிட்டமால் மருந்துகள் உதவுகின்றன.

டோலோ 650 ஒரு பிராண்டாக மாறியுள்ளது. அதன் பெயர் பாராசிட்டமாலுடன் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. 

பிஸ்லேரி அல்லது ஜெராக்ஸ் போன்ற பிராண்டுகள் அந்தந்த பொருட்களாகி போனது போலவே டோலோ 650 யும் மாறி விட்டது.

லேசான காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால் பாராசிட்டமால் சாப்பிடும் போக்கு உள்ளது. பிஸ்லேரி ஒரு பெரிய பிராண்டாக மாறிய விதத்தில், டோலோ 650 ஒரு பிராண்டாக மாறியுள்ளது. 

AMP

டோலோ 650 ஆனது மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டது, இது பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம்.

 இந்த நிறுவனம் 1973 இல் இது மருந்து விநியோகஸ்தர், ஜி.சி. சூரனா என்பவரால் நிறுவப்பட்டது, இந்நிறுவனத்தை தற்போது அவரது மகனும் நிர்வாக இயக்குநருமான திலீப் சுரானா நடத்தி வருகிறார்.

இதயவியல், நீரிழிவு நோய், கண் மருத்துவம் மற்றும் தோல் மருத்துவம் ஆகியவை அதன் நிபுணத்துவத்தின் முக்கிய பகுதிகளாகும். டோலோ 650 தவிர, உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஆம்லாங் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்தான டெனெப்ரைடு போன்ற பிராண்டுகளையும் நிறுவனம் விற்பனை செய்கிறது.

நிறுவனத்தின் இணையதள தகவல்படி அதன் ஆண்டு வருவாய் ரூ.2,700 கோடியாகும், இதில் ரூ.920 கோடி ஏற்றுமதியும் அடங்கும்.

----------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?