மீண்டும் ஊரடங்கு?

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  இன்று ராஜினாமா ?

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. 
கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது.
 பொருளாதார சுணக்கத்திற்கு பிரதமர் இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.
 இந்த தீர்மானத்தின் மீது வரும் 28 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது.

மொத்தமுள்ள 342 எம்பிக்களில், 172 பேரின் ஆதரவு தேவை. இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்பிக்களின் ஆதரவு உள்ளது.

 இவர்கள் தற்போது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளனர். மேலும் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த 24 எம்பிக்களும் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 

இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ஆளும் கட்சியைச் சேர்ந்த 50 அமைச்சர்கள் மாயமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்லாமாபாத்தில் தெஹ்ரிக் கட்சியின் சார்பில் இன்று நடைபெற உள்ள "நீதியுடன் நிற்பது" என்ற பேரணியில், தனது ராஜினாமா குறித்த தகவலை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே நேற்று, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் யூ டியூப் சேனலின் பெயர் இம்ரான் கான் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

----------------------------------------------------------------------

தமிழகம் முழுக்க கடும் ஊரடங்கு

சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கொரோனா வைரஸ் நான்காவது அலையின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் ஜூன் அல்லது ஜூலையில் தொற்று அதன் உச்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். 

கொரோனா வைரஸின் வேரியண்ட்டாக இருந்து மூன்றாவது அலையாக உருவெடுத்த ஓமிக்ரானில் இருந்து 'ஸ்டீல்த் ஓமிக்ரான்' என்ற புதிய மாறுபாடு தற்போது நான்காவது அலையாக வந்துள்ளது.

இது இந்தியாவில் பரவி, வேகமெடுத்து பின்னர் உச்சத்தை எட்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருப்பது, மாநில அரசுகளுக்கு தலை வலியை கொடுத்துள்ளது.

 அதன் எதிரொலியாக தமிழக முதல்வர் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. 

முதலாவது, தமிழகத்தில் இரண்டு தவணை தடுப்பூசியை எடுக்காதவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். இரண்டாவது, முதல் டோஸ் எடுக்காத 50 லட்சம் பேரும், இரண்டாவது டோஸ் எடுக்காத 1.32 கோடி பேரும் கண்டறியப்பட்டு, மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

மூன்றாவது, மாநிலத்தில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமானால் நிபுணர் குழு முதலமைச்சருக்கு பரிந்துரைக்கும் ஆகிய முக்கிய அம்சங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளன. 

நிபுணர்களின் எச்சரிக்கையான கணிப்புப்படி தமிழகத்தில் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காவது அலை பரவ தொடங்கினால் நிபுணர்கள் குழு முக்கிய கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கும்.

குறிப்பாக நிபுணர்கள் கூற்றுப்படி, இந்தியாவில் மூன்றாவது அலையை விட ஜூன் அல்லது ஜூலையில் நான்காவது அலை உச்சமடைந்து இறுதி வரை தாக்குப்பிடிக்கும் என்பதால் முதல் மற்றும் இரண்டாம் அலையில் போடப்பட்ட கட்டுப்பாடுகளை போலவே ஊரடங்கு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் பொதுமக்கள் அனைத்துக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று மருத்துவ துறையில் இருப்பவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

--------------------------------------------------------------------------

புற்று நோய் கண்டறிய எறும்பு.

புற்றுநோய் செல்கள், நம் உடலின் சாதாரண செல்களிலிருந்து மாறுபட்டவை. 

ஓயாது மாறும் தன்மைகொண்ட கரிமச் சேர்மங்களை உற்பத்திசெய்யும் திறன் அந்த செல்களுக்கு உண்டு. இந்தக் கரிமச் சேர்மங்களே புற்றுநோயைக் கண்டறியும் உயிரியக்கக் குறிப்பான்களாகத் (Bio-markers) திகழ்கின்றன. 

புற்றுநோய் கண்டறிதலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் குரோமட்டோகிராபி, இ-நோஸஸ் (ஆர்டிஃபிசியல் ஆல்ஃபாக்டரி அமைப்பு) போன்ற பரிசோதனைகள் இந்தக் குறிப்பான்களின் மூலம்தான் புற்றுநோயைக் கண்டறிகின்றன. 

ஆனால், இவற்றின் முடிவுகள் மிகுந்த மாறுபாடுகளைக் கொண்டவையாகவும், துல்லியமற்றதாகவும் இருக்கின்றன. இதற்கான செலவும்குறைக்கும்.

புற்றுநோயைக் குறைந்த செலவில், துல்லியமாகக் கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் சாத்தியப்படாத சூழலில், புற்றுநோய் செல்களை அவற்றின் உயிரியக்கக் குறிப்பான்களின் வாசனை மூலம் கண்டறிய நாய்களின் மோப்ப ஆற்றலைப் பயன்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 

ஆனால், புற்றுநோய் செல்களையும், பாதிப்பற்ற செல்களையும் பிரித்துணர்ந்து, புற்றுநோய் செல்களை மட்டும் துல்லியமாகக் கண்டறிவதற்கு நாய்களுக்குப் பல மாதங்கள் கடினப் பயிற்சி தேவைப்பட்டது. அவற்றின் துல்லியமும் 91 சதவீதம் என்கிற அளவில்தான் இருந்தது.

இந்த நிலையில்தான் எறும்புகளைப் பயன்படுத்தி புற்றுநோயைக் கண்டறியும் முயற்சியில் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் ஈடுபட்டது. எறும்பின் மோப்ப ஆற்றல் பரவலாக அறியப்பட்ட ஒன்று. சொல்லப்போனால், மருத்துவ அறிவியல் வளர்ச்சியடையாத காலகட்டத்திலேயே, நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கு எறும்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

AMP

பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர்கள் ஃபார்மிகா ஃபுஸ்கா (Formica fusca) என்கிற எறும்பு வகைகளை ஆய்வுக்குப் பயன்படுத்தினர். அவற்றுக்குப் பட்டு எறும்புகள் (silky ants) என்றும் பெயர் உண்டு. அந்த ஆய்வின் முடிவுகளின்படி, புற்றுநோய் செல்களைக் கண்டறிவதற்கு எறும்புகளுக்குச் சிறிது நேரப் பயிற்சியே போதுமானதாக இருந்தது. பயிற்சி கொடுத்த சில நிமிடங்களிலேயே அந்த எறும்புகள், ஆரோக்கியமான மனிதச் செல்களிலிருந்து புற்றுநோய் செல்களை வேறுபடுத்திக் கண்டறிந்தன.

”புற்றுநோய் செல்களை முன்கூட்டியே அடையாளம் கண்டறியும் முயற்சியில் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் எறும்புகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே எளிதானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கிறது. எறும்புகள் புற்றுநோய் செல்களின் உயிரியக்கக் குறிப்பான்களை முகர்வதன் மூலம் எளிதாக அடையாளம் காணுகின்றன” என்று பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, புற்றுநோய் கண்டறிதலில் ஒரு முக்கிய மைல்கல். இத்தகைய துல்லியக் கண்டறிதல், புற்றுநோய்க்கான சிகிச்சையைத் துரிதப்படுத்தும். புற்றுநோய்க்குப் பலியாகும் மனிதர்களின் எண்ணிக்கையையும் குறைக்கும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?