முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆளுநரின் அட்டூழியம்.

 பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் உலைவைக்க ஆளுநர் ரவி முடிவு எடுத்துவிட்டதாகவே தெரிகிறது. அவரது நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது.

தன்னை ஏதோ அவர் ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் போலும். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் அவரது வேலையே தவிர, ஊறுகாய்ப்பானையில் ஊற வைப்பது அவரது வேலை அல்ல.

சரியாகச் சொன்னால், அவருக்கு இருக்கும் கடமையைக் கூடச் சரியாகச் செய்யாமல் - அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் ஆளுநர் அவர்கள். 

ஒருவேளை, தமிழக பா.ஜ.க.வின் தலைமைப் பொறுப்பைத் தானே கவனிக்கலாம் என்று அவர் நினைத்து விட்டாரா எனத் தெரியவில்லை.

யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் தமிழக ஆளுநர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீட் விலக்கு சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பியது. உடனடியாக அதனை பரிசீலனை செய்யாமல் வைத்து இருந்தார். காலதாமதம் செய்தார். திடீரென்று ஒரு நாள் திருப்பி அனுப்பினார்.

அப்படித் திருப்பி அனுப்பியதை ஆளுநர் மாளிகையே ஊடகங்களுக்குச் சொன்னது. சில விளக்கங்களை தான் அரசிடம் கேட்டிருப்பதாகச் சொன்னார். அரசும், இரண்டாவது முறையாக சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பியது. இரண்டு முறை, ஆளுநரைச் சந்தித்துள்ளார் முதல்வர்.

‘இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பினால் மறுபடியும் நான் திருப்பி அனுப்ப முடியாது. குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பி வைக்கிறேன்’ என்று தன்னிடம் ஆளுநர் சொன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே சொன்னார்கள். இந்த நிலையிலும் இன்னும் காலதாமதம் செய்து வருகிறார்.

“இப்படி ஒரு சட்டமுன்வடிவு குறித்து முடிவு எடுக்க கால நிர்ணயம் கிடையாது. அதனால் நான் எப்போது வேண்டுமானாலும் அதனை அனுப்புவேன்’’ என்று ஆளுநர் சொல்லி வருகிறார். இதனைப் போன்ற அபத்தமான சிந்தனை இருக்க முடியாது.

 காலநிர்ணயம் வைக்கவில்லை என்றால், அவரே தனக்குத் தானே ஒரு காலநிர்ணயத்தை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே!

‘ஒரு காலத்தில் தமிழ்நாட்டு ஆளுநராக ரவி வருவார். அவர் இப்படி எல்லாம் நடந்து கொள்வார். அதனால் அனைத்துக்கும் காலநிர்ணயம் வைக்க வேண்டும்’ என்று அரசியல் சட்ட மேதைகளுக்கு யோசனை வராமல் போய்விட்டது. 

அத்தகைய தீர்க்க தரிசனம் அவர்களுக்கு இருந்திருந்தால் எல்லாவற்றுக்கும் ‘நேரம்’ குறித்து அரசியல் சட்டத்தையே ‘பஞ்சாங்கமாக’ எழுதி இருப்பார்கள். நம்முடைய அரசியலமைப்புச் சட்டமேதைகள் சட்டத்தை வடித்தார்களே தவிர, சட்டமீறல்கள் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வரும் எனச் சிந்திக்கவில்லை.

அதனுடைய விளைவுதான் நாமும், மற்ற பல மாநிலங்களும் ஆளுநர்கள் மூலமாக அனுபவிப்பது ஆகும். இத்தகைய சூழலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகமிகப் பொறுமையாகச் செயல்படுகிறார்.

 நேற்றைய தினம் ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் என்பது மாநில நலனுக்கானதே. நீட் தேர்வு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காதது தனக்கு மனவேதனை அளிப்பதாகச் சொல்லி இருந்தார்.

“மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும் பொழுது மாநில மக்களும், மாநிலமும் வளம் பெறும்” என்று அறிவுரை சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.

“ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும் சுமூகமாகவும் இருக்கும்” என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் முதல்வர். அத்தகைய உறவையே தமிழ்நாடு அரசு விரும்புகிறது. ஆனால் ஆளுநரின் போக்கு இதனை விரும்பாததாக அமைந்துள்ளது.

நீட் விலக்கு சட்டமுன்வடிவைக் கொண்டு வருவோம் என்று தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டது தி.மு.க. அதனை ஏற்று கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் (ஓய்வு) ஏ.கே.இராஜன் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவில் பலரும் இடம் பெற்றார்கள்.

ஒரு லட்சம் பேரிடம் கருத்துகள் பெறப்பட்டன. அந்தக் கருத்துகளின் அடிப் படையில் அரசிடம் அறிக்கை தரப்பட்டது.

அந்த அறிக்கையைப் பரிசீலிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்களே சட்டமுன் வடிவைத் தயாரித்தார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்று நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுநிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆளுநரைச் சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

‘நீங்கள் நிறைவேற்றியதாகச் சொல்லப்படும் சட்டமுன்வடிவு எங்களுக்கு இன்னும் வரவில்லை’ என்று உள்துறை அமைச்சரகம் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

பிரதமர் அவர்களைச் சந்தித்த முதலமைச்சர், நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

உள்துறை அமைச்சரிடமும் இதே கோரிக்கையை வைத்திருக்கிறார் முதலமைச்சர்.

உயர்நீதிமன்றத்தால் விவாதிக்கப்பட்ட பிரச்சினை இது.

உச்சநீதிமன்றத்தால் விவாதிக்கப்பட்ட விவகாரம் இது.

நீட் தேர்வின் கொடுமையை இந்த நாடு அறியும்.

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளும் அதிகம். ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைக்க 25 லட்சம் வரை ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் மாணவர்களும் - பெற்றோரும் கம்பி எண்ணிவருகிறார்கள். சிலர் தலைமறை வாக இருக்கிறார்கள்.

நீட் தேர்வில் 500 மதிப்பெண் வாங்கியவர்க்கு இடம் கிடைக்காமல் போகும். ஆனால் 120 வாங்கியவரும் பணம் கொடுத்தால் கல்லூரியில் சேரலாம் என்பதே உண்மை.

மூன்றாண்டு காலம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பயிற்சி எடுத்துக்கொள்ள வசதியானவர்கள், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளே போக முடியும். பள்ளிப் படிப்புக்குக் கூட பணம் செலுத்த முடியாமல் படித்த பிள்ளைகளுக்கு இது எப்படிச் சாத்தியம் ஆகும்?

கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை அல்ல இது. தனியார் கோச்சிங் சென்டர் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சில அதிகாரிகளால் நுழைக்கப்பட்ட தேர்வுதான் நீட்.

அனைத்துக்கும் மேலாக, பதினைந்துக்கும் மேற்பட்ட உயிர்கள் தங்களைத்தாங்களே மாய்த்துக் கொண்டு இருக்கின்றன. அதற்குப் பிறகும் ‘எனக்குக் கால நிர்ணயம் இல்லை’ என்று ஒருவர் சொன்னால், அவரை என்ன என்று சொல்வது?

‘தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி’ ஆகும். ‘Justice delayed is justice denied' என்பது சட்டவியலின் முதல் கோட்பாடு ஆகும். அதனைப் புரிந்தும், தெரிந்தும், தெளிந்தும் ஆளுநராக இருப்பவர் செயல்பட வேண்டும்.

நன்றி: முரசொலி

-------------------------------------------------------------

R.N.ரவிக்காக தமிழக மக்கள் செலவிடும் தொகை.? 

தமிழக மக்கள் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு எதிராகச் செயல்படும் மனசாட்சியை பா.ஜ.க விடம் அடகு வைத்த ஆளுநர் ரவி தான் வஞ்சிக்கும் தமிழக மக்கள் பணத்தை எவ்வளவு தான்தோன்றித்தனமாக செலவிடுகிறார் தெரியுமா?

முதல்வர்,அமைச்சர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.

ஆனால் இவர் எங்கிருந்தோ தேவையின்றி திணிக்கப் பட்டவர்.

மக்கள் நலனுக்காக சட்டப் பேரவை அனுப்பிய சட்டங்களை தடுக்க இவருக்கு என்ன தகுதியிருக்கிறது.

சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால், இந்த விருந்தை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. 

மக்களாட்சி மாண்பின் அடையாளமான சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் அலட்சியப்படுத்துவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டன. அதுமட்டுமல்லாது விருந்தில் கலந்துக்கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எதிர்கட்சிகள் விருந்தில் கலந்துக்கொள்ளவில்லையென்றால், ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகி இருக்கிறது. ஆளுநர் என்பவர் தமிழக மக்களின் பிரதிநிதி. ஆளுநர் விருந்துக்கு அழைப்பது என்பது காலம் காலமாக உள்ள மரபு என பேசியுள்ளார்.

தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருசேர கொண்டுவந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்ததைக் கண்டிக்கும் விதமாக, விருந்தை புறக்கணிக்கும் கட்சிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியதாக அண்ணாமலைக்கு கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ஆளூர் ஷாநாவஸ் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆளூர் ஷாநாவஸ் வெளியிட்டுள்ள பதிவில், “பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆளூர் ஷாநாவஸ் ட்விட்டர் பதிவுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த பதிவில், “இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதனை பத்திரிக்கையாளர் பர்கத் அலி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “ஆளுநர் மாளிகைக்கு எவ்வளவுதான் செலவாகிறது? அரசு வட்டாரத்தில் தகவலைத் திரட்டினேன். கவர்னர் செயலகம், கவர்னர் இல்லம் என ராஜ்பவனுக்காக இரண்டு வகையான செலவுகளை அரசு செய்கிறது. அதன்படி 2021 – 2022 ஆண்டுக்கான செலவு விவரங்கள் கிடைத்தன.

முதலில் கவர்னரின் செயலகம் பற்றிய செலவுகளைப் முதலில் பார்ப்போம். கவர்னரின் செயலகத்தில் கவர்னரின் அலுவலக ரீதியிலான பணிகளைச் செய்வதற்காக பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்காகவும் அலுவலகத்தின் பணிகளுக்காகவும் பணம் செலவிடப்படுகிறது. சம்பளத்திற்காக மட்டுமே 2021 – 2022-ம் ஆண்டுக்கு 1,60,79,000 கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கிறார்கள். என்னென்ன செலவுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன?

அடிப்படை சம்பளம் -1,44,43,000

மருத்துவ படி – 36,000

மருத்துவ செலவுகள் – 50,000

படிகள் – 88,000

வீட்டு வாடகைப் படி - 12,23,000

பயண சலுகை - 30,000

நகர ஈட்டுப்படி - 2,09,000

அகவிலைப்படி - 32,50,000

சுற்று பயணப் படிகள் – 8,00,000

தொலைப்பேசி கட்டணம் - 5,00,000

சில்லறை செலவுகள் – 5,10,000

மின் கட்டணம் – 3,91,000

தபால் செலவு – 90,000

வண்டிகளின் பராமரிப்பு - 1,53,000

பொருள்கள் வாங்கியது - 1,00,000

அரசு வழக்கறிஞர் கட்டணம் - 1,00,000

ஒப்பந்த ஊதியம் - 57,09,000

பெட்ரோல் / எரிபொருள் – 6,14,000

பராமரிப்பு – 42,000

ஸ்டேஷனரி – 1,29,000

மொத்தம் – 2,84,97,000

கவர்னரின் செயலகத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு 2 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் கவர்னரின் இல்லத்திற்கு என்னென்ன செலவுகள் செய்யப்படுகின்றன? அதன் விவரம் விரைவில்...” எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் இத்தகைய பதிவுக்கு பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------


அரசியலில் ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு  என்பது ஏற்கனவே நடந்துள்ள ஒன்றுதான்.

 

tn

 

1994-95 ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் சென்னாரெட்டி கொடுத்த தேநீர் விருந்தை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்திருந்தார். மாநில அதிகாரங்களில் ஆளுநர் சென்னாரெட்டி தொடர்ந்து தலையிடுவதாக இரண்டுமுறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து அவர் கொடுத்த தேநீர் விருந்தை ஜெ. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்தனர். தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகள் அமைச்சர்களுக்கு பிந்தைய வரிசையில் அமர வைக்கப்பட்டது தொடர்பான அதிருப்தியில் இந்தப் புறக்கணிப்பு நிகழ்ந்திருந்தது.

 

t

 

அதனையடுத்து 2019ஆம் ஆண்டு தெலுங்கானாவில் தமிழிசை சௌநதரராஜன் குடியரசு தினவிழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொடியேற்ற நிகழ்வை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். ஆளுநர் தமிழிசை தெலுங்கானா அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தானாகவே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோவிட் தடுப்பூசி அம்சம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினார். இதையடுத்து ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரை இன்றி தெலுங்கானா அரசு நடத்தியது.

 

t

 

இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் ஆளுநர் கும்மணம் ராஜசேகரனின் குடியரசு தின உரையை மக்கள் புறக்கணித்தனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அந்த நிகழ்வைப் புறக்கணித்த நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமே அவ்விழாவில் கலந்து கொண்டனர்.

 

tn

 

தற்போது தமிழக அரசால் தேநீர் விருந்து புறக்கணிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே நாகலாந்தில் ஆளுநராக இருந்து விடைபெற்று கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்பொழுது விடைபெறும் நிகழ்ச்சியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். அவருடைய பதவி காலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்தார் என்பதால் பத்திரிக்கையாளர்கள் அவரது தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?