அரியலூர் பயங்கரம்

நாட்டை உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து நடந்து இன்றோடு 66 ஆண்டுகள்  ஆகின்றது.

இதே நவம்பர் 23  தேதிதான் அந்த நாட்டையே உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து நடந்து 66 ஆண்டுகள் ஆகிறது.


ரயில் பயணம் பாதுகாப்பானது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஆனால் விபத்துகள் அரிதாக இருந்தாலும், அப்படி விபத்துக்கள் நிகழ்ந்தால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படுகிறது ரயில் பயணத்தில்தான்.

அந்த வகையில் கடந்த 1956-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அரியலூரில் நிகழ்ந்த விபத்து இந்தியாவையே உலுக்கியது. ஒன்றிய அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியை பதவியைவிட்டு  விலகச் செய்யதது  இந்த அரியலூர் விபத்துச் சம்பவம்.


இந்தவிபத்துஇந்த நாள் இரவு 9.30 மணிக்கு, சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவு ரயில்(வண்டி எண். 603) 13 பெட்டிகளில் 800 பயணிகளை சுமந்து கொண்டு புறப்பட்டது. 

அப்போது நீராவி என்ஜின் இணைக்கப்பட்ட அந்த ரயில் கொட்டும் மழையிலும் கரும்புகையை கக்கிக் கொண்டு கிளம்பியது.
இந்த ரயிலில் பயணம் செய்த யாருக்கும் இதுதான் நமது இறுதி பயணம் என்று தெரிந்திருக்கவில்லை. 

ரயில் சென்ற பாதையெல்லாம் இடைவிடாமல் இடி மின்னலுடன் பலத்த மழை. முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் அயர்ந்து தூங்கினார்கள். பொதுப் பெட்டிகளில் பயணித்தவர்கள் தூக்கமின்றி கண்விழித்த நிலையில் இருந்தனர்.
அன்று நள்ளிரவு நேரத்தில் விருத்தாசலம் ரயில் நிலையத்தை அடைந்ததும், ரயிலின் கடைசி பெட்டி கழற்றப்பட்டது.

 அது சேலம் செல்லும் இணைப்பு ரயிலில் மாற்றப்படுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது. 12 பெட்டிகளுடன், தூத்துக்குடி ரயில் அங்கிருந்து புறப்பட்டது.
அதிகாலை 5.30 மணிக்கு சூரியன் கண் விழிப்பதற்கு முன்பாக ரயில் அரியலூரை தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.


அரியலூர் மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலத்தை மூழ்கடித்த நிலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இந்த அபாயகரமான பாலத்தைதான் ரயில் கடந்து செல்ல வேண்டும்.


ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் ரயிலை இயக்கிய ஓட்டுநர் துரைசாமி, பயர்மேன்கள் (நிலக்கரியை எரியவைப்பவர்கள்) முனுசாமி, கோதண்டன் ஆகியோரின் கண்களுக்கு வெள்ளத்தின் அபாய நிலை தெரியவில்லை. வேகமான நீரோட்டத்தால் பாலத்தின் தூண்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.


ரயில் என்ஜின் பாலத்தை கடக்க முற்பட்டபோது, தண்டவாளம் ஆட்டம் கண்டது. ரயில் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேறிச் சென்ற நிலையில் பாரம் தாங்காமல் பாலம் அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நிலைகுலைந்த ரயில் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


தூங்கிக் கொண்டிருந்த பயணிகள்என்னதான் நடக்கிறது என்று  உணர்வதற்குள்  ரயிலில் உள்ள முதல் 7 பெட்டிகளை வெள்ளம் மூழ்கிவிட்டது.
அதில் நீராவி என்ஜினுக்கு அடுத்த பெட்டி பெண்கள் பெட்டி அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள் அனைவரும்  நீருக்கு அடியில் சிக்கிக்கொண்டு மாண்டுபோனார்கள்.

 
இந்த கோர சம்பவத்தில் 250 பேர் தண்ணீருக்குள்  சமாதி அடைந்தார்கள்.
விடிந்தும் விடியாததுமாக சம்பவத்தை கேள்விப்பட்டு, அங்கு மீட்புக் குழுவினர் வந்தனர்.


ஆனால் 2 நாள்கள் போராட்டத்துக்கு பிறகும் 150 சடலங்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.

 
இதில் பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து அழுகிய நிலையிலேயே மீட்கப்பட்டன.
ஒரு சில பெட்டிகள் மண்ணுக்குள் புதைந்ததால் தண்ணீர் வடிந்த பிறகு அதே இடத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

 
கடைசி பெட்டியில் இருந்த கார்டுகளான வைத்தியநாதசாமி, ஆறுமுகம் மற்றும் பின்வரிசை பெட்டிகளில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.
இந்த கோர அரியலூர் ரெயில் விபத்து அன்றைய ரெயில் விபத்துகளில் முதன்மையான கோரவிபத்தாக இன்றும் பதிவானது.இன்றளவும்பேசப்பட்டு வருகின்றது.


இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அப்போதையை ரயில்வே துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவியை  விட்டு விலகினார். அப்போதைய ரெயில்வே இணை அமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்த அழகேசன் பதவியை விட்டு விலக  மறுத்துவிட்டார்.


லால்பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்ததற்குபின்னணியாகஒரு வேறொரு காரணமும் இருந்த்து.. 

அந்த அரியலூர் ரெயில் விபத்து ஏற்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஒரு ரெயில் ஆற்றில் விழுந்து 126 பேர் கொல்லப்பட்டனர். வெள்ளத்தினால் பாலம் சேதம் அடைந்து விபத்து ஏற்பட்டது.

"மழைக்காலத்தில் ரெயில்வே பாலத்துக்கு ஆபத்து ஏற்படாத வகையில் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாலங்கள் சரிவர பழுது பார்க்கப்பட்டு பராமரிக்கப் படும் என"  லால்பகதூர் சாஸ்திரி உறுதி அளித்து இருந்தார்.

 
ஆனால் சில மாதத்துக்குள்ளாக ஐதராபாத் விபத்து போலவே தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் விபத்து ஏற்பட்டது.

இதனால்   தான்  கொடுத்த உறுதிமொழி பொய்யாகிவிட்டதே என்று கவலைப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி விபத்துக்கு பொறுப்பு ஏற்பதாக அறிவித்து விலகல் கடிதம் கொடுத்தார்.


அந்த விபத்து நடந்து 66 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அதில் இருந்து தப்பியவர்களில் ஒரு சிலர் இன்னும் உயிரோடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன் பின்நடந்த  ரெயில் விபத்துகளில்
பீகார் மாநிலத்தில்  ரெயில் ஆற்றுக்குள் விழுந்ததில் 2 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர் அதுதான் மிகப் பெரிய விபத்தாக இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலேயே ஆகிவிட்டது.


விபத்துக்கு உள்ளான அந்த பாசஞ்சர் ரெயில்,  6.6.1981சமஸ்திபூரில் இருந்து பான்மங்கி என்ற இடத்துக்கு போய்க்கொண்டு இருந்தது.
அந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. எல்லா பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூரை மீதும் பலர் தொத்திக்கொண்டு பயணம் செய்தனர்.

தமரகாட் என்ற இடத்தில் கோசி ஆற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது ரெயிலில் 7 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன. என்ஜினும், அதற்கு அடுத்த பெட்டியும் மட்டுமே ஆற்றுக்குள் விழாமல் தப்பின. ஆற்றில் வெள்ளம் போய்க்கொண்டு இருந்ததால் 5 பெட்டிகள் அடியோடு மூழ்கின. இந்த ரெயில் விபத்தில் 200 பேர் பலியானதாகவும், பின்னர் அது 800 பேர் என்றும் கூறப்பட்டது.ஆனால்ரெயில் விபத்தில் செத்தவர்கள்சரியான  எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை,


என்றாலும் விபத்து நடந்தபோது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இருக்கிறது. அதனால் 5 பெட்டிகளை வெள்ளம் அடித்துச்சென்று விட்டது. 2 பெட்டிகள் மட்டும் வெள்ளத்துக்குள் மூழ்கி கிடந்தது தெரிந்தது.

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது சாவு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்கலாம் என்று அன்றைய பீகார் சட்டசபை துணை சபாநாயகர் கஜேந்திர பிரசாத் கிமான்ஷு தெரிவித்தார்.

 
ஆனால் சாவு எண்ணிக்கை 3 ஆயிரம் இருக்கும் என்று பீகார் கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் சவுத்ரி சலாவுடீனும் தெரிவித்தார்.

பீகார் ரெயில் விபத்துதான் உலகிலேயே மிகப்பயங்கரமான பெரிய விபத்தாகும்.
அதற்கு முன்  1917 டிசம்பர் 10ந்தேதி பிரான்சு நாட்டில் ராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ரெயில் விபத்தில் சிக்கி 543 பேர் இறந்ததுதான், 

இதுவரை உலகிலேயே பெரிய ரெயில் விபத்தாக பதிவாகியிருந்த்து.. பீகார் ரெயில் விபத்து அதையும் மிஞ்சி விட்டது.

------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?