கண்டிப்பார்களா?

 தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.இரவி அவர்களின் பேச்சுகள் சர்ச்சைக்குரியதாக இருப்பது மட்டுமல்ல, அவரது நடவடிக்கைகளும் சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன.

கோவை சம்பவத்தை மூன்றே நாட்களில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. அந்த மூன்று நாள் தாமதத்தையே பெரிய சர்ச்சை ஆக்கினார் ஆளுநர். 

சம்பவம் நடந்ததும் என்.ஐ.ஏ. வரவுக்காகக் காத்திருக்காமல் அனைத்து தடயங்களையும் திரட்டி, அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து வழங்கியது தமிழ்நாடு காவல்துறை. அதனையே சந்தேகப்பட்டார் ஆளுநர்.

இப்போது கர்நாடக பா.ஜ.க. அரசு என்ன செய்துள்ளது? 

ஆறுநாட்கள் கழித்து தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது பற்றி எல்லாம் இவருக்கு கவலை இல்லை. அதனைப் பற்றி இவர் கருத்துத் தெரிவிக்கவில்லை. இது எல்லாம் ஏன் என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க. அரசைப் பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும். அதற்காக எதையாவது சொல்வது என்று இருந்தார் ஆளுநர்.


இதோ, இப்போது ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அரசின் சட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் ஆளுநர் ஏற்படுத்தும் காலதாமதம் சந்தேகத்துக்குரியதாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகி பணத்தை இழந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறியதால், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்தது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றி, கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அன்றைய தினமே அதனை பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார்.


இதனைத் தொடர்ந்து, அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்து, தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.


அவசரச் சட்டத்தைப் போன்று இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. ஏன் என்பதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவும் இல்லை. அனைத்துத் தரப்பினரும் இது தொடர்பாக ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்பினார்கள். அதன்பிறகாவது ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும் ஆளுநர் .

 மாறாக, அந்த சட்ட மசோதாவில் தனக்கு சந்தேகம் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் ஆளுநர்.


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த 24-ஆம் தேதி கடிதம் எழுதினார். 

இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு அரசு விளக்க கடிதத்தை அனுப்பி வைத்தது. ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க அனுமதி கேட்டும், நேரம் ஒதுக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசரச் சட்டம் தானாகவே காலாவதி ஆகி விடும். 

இத்தகைய 6 வாரங்கள் முடிந்துவிட்டன. ''கவர்னர் கேட்ட விளக்கத்தை தமிழக அரசு அளித்தும், இன்னும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


அந்த மசோதாவுக்கு கவர்னர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சட்டம் காலாவதியாகி உள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் முழுவீச்சில் மீண்டும் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று 'தினத்தந்தி' நாளிதழ் கவலையோடு தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.


“ ஏற்கனவே இதே பொருளில் பிறப்பிக்கப்பட்ட சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பில் உள்ள விஷயங்கள் இந்த சட்ட முன்வடிவில் சரியாக பதிலளிக்கப்படவில்லை. 

குறிப்பாக, Game of Chance and Skill என்ற வித்தியாசம் இல்லாமல் முழுமையான தடை என்பது, அரசியலமைப்புச் சட்டக் கூறு 19 (1) (g)-க்கு எதிரானதாகும்” என்று ஆளுநர் அவர்கள் அரசுக்கு கேள்வி அனுப்பி இருக்கிறார்.

“அரசியலமைச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல் 2-ல் உள்ள Betting and Gambling, Public Order, Public Health, Theaters and dramatic performances என்ற பிரிவுகளின் படிதான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் எந்த வகையிலும் அரசியலமைப்பின் கூறுகளுக்கு எதிராக இல்லை. 

அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இந்த இணைய வெளி சூதாட்ட தடை சட்ட முன்வடிவு அமைந்துள்ளது.


இப்பொருள் குறித்த வல்லுநர் குழு அளித்த அறிக்கை மற்றும் பல்வேறு ஆராய்ச்சியின் அடிப்படையிலான தரவுகளையும் தெளிவாக குறிப்பிட்டுதான், இந்த அவசரச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப் பட்டது” என்று தெளிவாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


“குறிப்பிடத்தக்க அளவு தடை (Proportional ban) மட்டுமே அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை மீறி இந்த தடை அமைந்துள்ளது” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் ஆளுநர்.


“விளையாட்டுகள் முழுமையாக தடை செய்யப்படவில்லை. Game of Chance and Skill என்று வித்தியாசப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது தேவையான அளவில் மட்டுமேயான (proportional) தடைதான்” என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


இவை அனைத்தும் ஏதோ கேட்க வேண்டும், தாமதப்படுத்த வேண்டும் என்ற அளவில்தான் இருக்கிறதே தவிர, உண்மையான கேள்விகளாக இல்லை. 

ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற ஏன் தாமதம் என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியது. 

இது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டுமா என்று கேலி பேசியது பா.ஜ.க.. நிறைவேற்றப்பட்ட சட்டத்தை கையெழுத்துப் போட்டு அனுமதிக்காமல் ஆளுநர் இருப்பதைக் கேள்வி கேட்காத பா.ஜ.க., எதற்காக இழுத்தடிக்கிறார் ஆளுநர் என்று கேட்பார்களா?கண்டித்துப் பேசுவார்களா?

-------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?