தலைவலிக்கு மேல் தலைவலி.

  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறப்பட்டுள்ள புதிய ஊழல் குற்றசாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் மேல் நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்திருப்பதால், அவருக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே எடப்பாடிக்கு தலைவலியை ஏற்படுத்திய கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். 

இதனையடுத்து தனிபடை போலிசாரிடமிருந்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவினர் பெற்று, விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, எடப்பாடி மீதான ரூ. 4,800 கோடி நெடுஞ்சாலை துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கும் அவருக்கு நெருக்கடியைக் கொடுத்து வந்தது. இவ்வழக்கில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

இதனால் இந்த ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது எப்போது வேண்டுமானாலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பாயக்கூடும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில்தான், அடுத்த ஊழல் புகாரிலும் சிக்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில், " தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிகளைக் கட்ட கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த மருத்துவ கட்டடங்கள் கட்டுவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுடி அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

ஆனால், 9 லட்சத்து 99 ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டடம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 482 சதுர அடி கட்டடம் கட்டப்படவில்லை. இதன்மூலம் 52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல 11 மருத்துவக் கல்லூரிகளிலும் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கூட்டுச்சதி செய்து பெரும்தொகை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டடம்) ராஜ்மோகன், முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மை செயலாளர், தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.கே.வார்ட்ஸ் ஆகியோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் கடந்த 2021 ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி புகார் செய்தேன்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,

* " மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

* இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்பதலை பெற வேண்டியதுள்ளது.

* எனவே அரசின் ஒப்புதலுக்கு ஊழல் கண்காணிப்பு துறை ஆணையருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, " தமிழ்நாடு காவல்துறையில் இந்த புகார் குறித்து விசாரிப்பதாக கூறும்போது, சி.பி.ஐ. விசாரணை ஏன் கேட்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஏற்கெனவே ஓ. பன்னீர் செல்வத்துடனான மோதலில் கட்சி ரீதியாக நெருக்கடிகளைச் சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, அவருக்கு எதிரான வழக்குகள் மூலமாகவும் சிக்கல்கள் அதிகரித்து வருவது அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


----------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?