சளி-இருமல்-குழந்தைகள்

 சில எச்சரிக்கைக் குறிப்புகள்.

தற்போது குளிர்காலம்.

சாதாரணமாகவே சளி,இருமலில் துன்பப்படுபவர்கள்.இக்குளிர்காலத்தில் அதிகமாகவே அயற்சியடைந்து விடும் நிலை.

குழந்தைகளைக் குளிர்காலம் பாடாய்ய்படுத்தி விடும்.

மும்பையைச் சேர்ந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தைக்கு இருமல் அதிகமாக இருக்கவே, தாயார் இருமல் மருந்து கொடுத்துள்ளார். 

அந்த மருந்தை குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தை திடீரென மூச்சுப் பேச்சின்றி மூர்ச்சையாகிவிட்டது. குழந்தையின் சுவாசத்தையோ, இதயத் துடிப்பையோ உணர முடியாமல் போகவே அதிர்ந்து விட்டனர்.

இத்தனைக்கும் அந்த தம்பதியினர் இருவருமே மருத்துவர்கள்தான்.

அப்போது வெளிநாட்டில் இருந்து வந்திருந்த, குழந்தையின் பாட்டியும், பிரபல வலி மேலாண்மை நிபுணருமான திலு மங்கேஷிகார் என்பவர்  பதற்றப்படாமல் செயல்பட்டதே குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. 
குழந்தைக்கு இதயம், நுரையீரலை மீள உயிர்ப்பிக்கும் சி.பி.ஆர். சிகிச்சையை அவர் அளிக்க, சுமார் 20 நிமிடங்கள் மூச்சுப் பேச்சின்றி இருந்த குழந்தை மெல்ல கண் விழித்துள்ளது.
அடுத்த சில நிமிடங்களில் சிறுவனின் சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை மெல்லமெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. 

தொடர்ந்து, குழந்தைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவ குடும்பம், மருத்துவத் துறையின் அடிப்படைகளை ஆய்வு செய்த போது, அவர்கள் குழந்தைக்குக் கொடுத்த மருந்தில் குளோர்பெனிராமைன் மற்றும் டெக்ஸ்ட்ராமெதார்ஃபன் ஆகிய 2 வேதிப் பொருட்களும் இருந்ததைக் கண்டனர்.

அமெரிக்காவில் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது என்ற எச்சரிக்கை வாசகங்கள் பாட்டிலின் லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

ஆனால், இந்தியாவில் அதுபோன்ற எச்சரிக்கை வாசகங்கள் இல்லை. மருத்துவர்களும் பரிந்துரைக்கவே செய்கின்றனர்.

தொண்டை முதல் நுரையீரலின் மூச்சுக்குழல் வரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருமலுக்கான தொற்று இருக்கலாம். இருமலுக்கான காரணம் என்னவென்பதை பரிசோதனையில் கண்டுபிடித்த பின்னரே முறையான சிகிச்சை அளிக்கப்படும்.

 உள்ளுறுப்புகளில் இருமல் தொற்று இருக்கும் போது மட்டுமே டெஸ்ட்ராமெதார்ஃபைன் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அது மூளையில் இருமல் தொற்றுக்கு காரணமான பாகத்தின் மீது செயல்படும். 

இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் மட்டுமே, மிகச் சரியாக அதே மருந்தை மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். 
ஒரே நாளில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது மருத்துவர் குறிப்பிட்டதைக் காட்டிலும் கூடுதலாகவோ கொடுத்தால் இதுபோன்ற நிலை வரலாம்.

2 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகளை கொடுக்கவே கூடாது. சுவாசம் குறைவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற காரணங்களால் சில குழந்தைகள் மரணமடையக் கூட வாய்ப்புள்ளது,

மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக கொடுப்பது, அடிக்கடி மருந்து தருவது என்பதையும் தாண்டி மருத்துவர்களின் பரிந்துரையின்றி தாமாகவே மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கிக் கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் இருக்கிறது. 
அது மிகவும் தவறானது. 

மேலை நாடுகளை பொருத்தவரை இதுபோன்ற நிலை இல்லை.
 4 வயது வரை மட்டுமல்ல, அதற்கும் மேலாக வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கும் கூட சளி, இருமல் மருந்துகள் மிகுந்த எச்சரிக்கையுடனே பரிந்துரைக்கப்படுகின்றன.

இருமல் என்பது நோய்க்கிருமிகள், தூசு, காற்று மாசு போன்றவற்றில் இருந்து நம் உடலில் காப்பாற்றிக் கொள்ள இயற்கையாகவே அமைந்துள்ள பாதுகாப்பு செயல்முறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
தொண்டையில் இருந்து நுரையீரலில் கடைசி பாகமான மூச்சுக்குழல் வரை எங்கு வேண்டுமானாலும் இருமல் தொற்று இருக்கலாம். இருமல் தொற்று எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்த பின்னரே மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

தொண்டையில் இருமல் தொற்று இருந்தால் சுடுதண்ணீர், தேனில் மிளகு கலந்து கொடுப்பது போன்றவற்றின் மூலமே குணப்படுத்தி விடலாம். இருமல் வரும் போதெல்லாம் மருந்தோ, சிகிச்சையோ எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 
உணவோ, குடிநீரோ எடுத்துக் கொள்ள முடியாத நிலை, பேசவோ தூங்கவோ முடியாத அளவுக்கு தொடர்ந்து இருமுதல் போன்ற அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு மோசமானால் மட்டுமே இருமலுக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைத்த மருந்து இல்லாவிட்டால், அதற்கு இணையான வேறொரு நிறுவனம் தயாரித்த மருந்தைத் தருவதாகக் கூறி மருந்துக்கடைகளில் தரும் மருந்தை வாங்கவே கூடாது. 
ஏனெனில், மருத்துவர் பரிந்துரைத்த மருந்தைப் போல இருந்தாலும், அந்த மருந்தில் உள்ள மூலப்பொருட்களின் கூட்டுச்சேர்க்கை, விகிதாச்சாரம் மாறுபடலாம் போன்றவை மாறுபடலாம் என்பதால் அது எதிர்மறை விளைவை உண்டாக்கிவிடும்.

சளி, இருமல் வந்தால் உடனே சரி செய்துவிட வேண்டும் என்று மக்கள் அவசரம் காட்டுவது தவறு. அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே மருந்து தேவை.
 அதுவும் மருத்துவரிடம் சென்று முறையாக சிகிச்சை பெற வேண்டும்.

மருந்தால் குழந்தைக்கு ஒவ்வாமையோ அல்லது பக்க விளைவோ ஏற்பட்டால், அடுத்த 5 நிமிடங்களிலேயே தெரிந்துவிடும். 
இருமல் அதிகமாவது, மூச்சுவிட சிரமப்படுவது, வாய் வீங்குவது, முகமும், உடலும் சிவப்பாவது, உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்திவிட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவது அவசியம். 


ஏனெனில், மருத்துவமனைகளில் மட்டுமே அவசர நிலையை கையாள தேவையான உயிர் காக்கும் கருவிகளும் மருந்துகளும் இருக்கும்.
-------------------------------------------------------

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...
ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.

தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்ஆச்சர்யப்பட்டார்கள்.


தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்.

வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

 தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ‘ணா’, ‘லை’ என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்கு இருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத்தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 1942 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன் ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத்ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசா கூட அவரது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

* 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

* அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன்முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை - வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

* 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டங்களில் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

-------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?