அரசியல் சாசன அமர்வு விசாரணை

 கூடலூரில் அரசு பேருந்து கடத்தல் .

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.வானிலை ஆய்வு மையம் தகவல்.

செல்போன் வாங்க மூதாட்டியை தாக்கி நகை பறித்த பிளஸ் 2 மாணவி கைது.

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டி.  இந்தியா விற்கு ஒரே நாளில் 4 பதக்கம்தங்கம் வென்றார் அவனி.

எதிர்கட்சி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமை!

அரசியல் சாசன அமர்வு விசாரணை!

நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சமாக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளின் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உயர் அரசியல் சாசன அமர்வு அமைத்து விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


கடன் வாங்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு உச்ச வரம்பு விதித்ததற்கு எதிராக கேரளா மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சூட் மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை முன்னதாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை விரிவாக விசாரிக்கும் விதமாக இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.


மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கு முன்னதாக விசாரிக்கப்பட்டு சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசும், கேரளா அரசும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான முடிவுக்கு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அத்தகைய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.


ஆனால் இருவருக்கும் இடையில் எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. தீர்வும் எட்டப்படவில்லை. எனவே நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக கேரளா மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறபிக்க வேண்டும். ஏனெனில் இது மாநில வளர்ச்சி திட்டங்கள் சார்ந்த ஒன்றாக இருக்கிறது.


எனவே எங்களது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு அவசரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.


இந்த விவகாரத்தில் கேரளா அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக கேரளா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இதே கோரிக்கையை கொண்டு பல்வேறு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.


எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் விதமாக, விரைவில் உயர் அரசியல் சாசன அமர்வு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படும். அந்த அமர்வு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான அனைத்து சாராம்சங்களையும் விரிவாக விசாரணை நடத்தும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.


தொடர்ந்து இந்த விவகாரத்துக்கு என்று ஒரு புதிய சிறப்பு அமர்வை உச்ச நீதிமன்றம் விரைவில் உருவாக்கும் என்று தெரியவருகிறது. இதில் பெருமழை காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யவும், நிவாரணம் வழங்கவும் சுமார் ரூ.37,907 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அதில் முதற்கட்டமாக ரூ.2000 கோடியை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதேபோன்று கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பாஜக கூட்டணி?

பாஜவுடன் அதிமுக கூட்டணி சேர எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச அதிமுக தலைவர்கள் தயக்கம் அடைந்துள்ளனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் பாஜ தலைவர்கள் தவிக்கின்றனர்.


எடப்பாடி வழிக்கு வரவில்லையென்றால் ஊழல் வழக்குகளை தூசி தட்ட டெல்லி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜவுடன் அதிமுக கூட்டணியில் இருந்தது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.


தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜ கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி திடீரென வெளியே வந்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியடைந்தன. கூட்டணி உடைவதற்கு மாநில பாஜ தலைவர் அண்ணாமலை தான் முழுக்காரணம் என அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். அண்ணாமலை,


எடப்பாடி பழனிசாமியை விட நான் தான் பெரியவர், முதல்வராக இருக்கும் தகுதி தனக்கு தான் உள்ளது என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை தாழ்த்தி பேசியதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உடைத்துவிட்டு வெளியே வந்ததாக அதிமுகவினர் கூறினர்.


இந்நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்திருக்கும் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும், பாஜவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என 6 மாஜி அமைச்சர்கள் அண்மையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.


ஆனால் அவர்கள் பேச்சை எடப்பாடி கேட்கவில்லை. பாஜவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது. பிரிந்து சென்றவர்களையும் சேர்க்க வாய்ப்பு இல்லை. அதையும் தாண்டி கூட்டணி வேண்டும் என்றால் கட்சியை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள் என கூறியதால் மாஜி அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த வழியிலாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து விட வேண்டும் என தமிழக பாஜவின் 2ம் கட்ட தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இதுகுறித்து மாஜி மந்திரி வேலுமணியிடம் பேசியுள்ளனர். ஆனால் அவர் நீங்களே பேசிக்கொள்ளுங்கள். நாங்கள் எதைச் சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி கேட்பதற்கு தயாராக இல்லை என கை விரித்துவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொள்ள முடியாமல் பாஜ நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.


அதே நேரத்தில் பாஜ தலைவர் அண்ணாமலையை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினால் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு வருவார் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அண்ணாமலையை நீக்குவோம் என பாஜ மேலிடம் தெரிவித்துவிட்டது.


எனவே, எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்தால் மட்டுமே மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையயை தூக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, எடப்பாடியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.


பதிலுக்கு எடப்பாடியும், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் அண்ணாமலையை விமர்சித்து பேசினர். இதனால் எடப்பாடியை கண்டித்து பாஜவினர், அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினரும் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில், அதிமுகவுடன் கூட்டணி சேரக்கூடாது என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்.


இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் மெகா கூட்டணியை தொடங்கி அதிமுக தலைமையில் கூட்டு அமைச்சரவை அமைப்பதற்கு இப்போதே பாஜ தயாராகிவிட்டது. இதன் காரணமாகத்தான் கூட்டணியில் சேர வேண்டும் என அதிமுகவுக்கு பாஜ நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.


எடப்பாடி பழனிசாமி பாஜவுடன் கூட்டணி சேரவில்லை என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் (ஊழல் வழக்குகளில்) டெல்லி மேலிடம் தயாராக உள்ளது. இது அதிமுகவை அழிப்பதற்கான முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம்.


கூட்டணி மந்திரி சபை என ஆசைக்காட்டி அதிமுகவை முற்றிலும் அழித்துவிடுவார்கள். அவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை போக போகத்தெரியும்,’’ என்றனர்.


பாஜ தலைவர் அண்ணாமலையை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினால் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு வருவார் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அண்ணாமலையை நீக்குவோம் என பாஜ மேலிடம் தெரிவித்துவிட்டது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக