வி.சி.க. தடுமாற்றம்?

 சென்னை மாநகரில் நேற்று இரவு பெய்த கனமழையால் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கி, இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறுகிய நேரத்தில் கொட்டி தீர்த்த மழையால் பெரம்பூர் சுரங்கப்பாதை மூழ்கியது. மேலும், பட்டாபிராம் சுரங்கப்பாதையிலும் தண்ணீர் சூழ்ந்ததால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டன.


சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை. அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் 10 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.


திருவள்ளூரில் இடி, மின்னலுடன் நள்ளிரவு வரை தொடர்ந்த மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; மக்கள் அவதியடைந்தனர்.


ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு. இந்நிலையில்,விதிமுறைகளுக்கு ஒத்துவராததால் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்.

எஸ்.பி.பாலசிப்பிரமணியத்துக்கு( பாடும் நிலா பாலுவுக்கு) பெருமை சேர்த்த தமிழ்நாடு அரசு. இந்தவகையில், நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்பிபி பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.


போலி பத்திர பதிவு புகாரில் சிபிசிஐடி சேலம் பத்திர பதிவுத்துறை டிஐஜியை கைது செய்துள்ளது.


சிவகாசியில் லாரி குடோனில் பட்டாசு வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகி சேதம்.


பெங்களூருவில் பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி ஒடிசாவில்தூக்கிட்டுதற்கொலைஎனகாவல்துறை தகவல்.


இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பு இடையே மோதல் வலுக்கும் சூழலில், இருப்பதாக இந்திய தூதரகம் லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்.


வி.சி.க. தடுமாற்றம்?


40 ஆண்டுகாலமாக திருமாவளவன் கட்டி வைத்திருக்கும் விசிக எனும் இரும்புக் கோட்டையை திட்டமிட்டே தகர்க்கிறார்களோ.. பேரழிவுக்கு கொண்டு போய் முச்சந்தியிலேயே நிறுத்திவிட்டுதான் ஓய்வார்களோ என்கிற வகையில் அரசியல் களத்தில் அவரை சதிவலை சூழ்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கிறது.


எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் ஒடுக்கப்படுகிற மக்களின் ஓர்மைக்காக, உரிமைக்காக, சுயமரியாதைக்காக பட்டி தொட்டி எங்கும் இரவும் பகலுமாக ஓடி ஓடிச் சென்று திருமாவளவன் உருவாக்கிய பேரியக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கு விசிகவில் அதிகாரத்தைப் பற்றி பேசுகிறார்கள்.. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படையே தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் உருவெடுத்ததுதான் என்பது சரித்திரம்.

தேர்தல் அரசியலில் எத்தனையோ நிலைப்பாடுகள் எடுத்திருக்கிறார் திருமாவளவன்.


பாஜக- திமுக கூட்டணியில் இருந்த போது விசிகவும் இருந்திருக்கிறது. காங்கிரஸ் பேராயக் கட்சியின் மூப்பனாரை போற்றியவர்; பாமகவுடனும் இணைந்து நின்றிருக்கிறார் திருமாவளவன்; ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டு பிரசாரம் செய்தார்; கட்டு விரியன், கண்ணாடி விரியன் என்று கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒருசேர விமர்சித்து மக்கள் நலக் கூட்டணியின் நாயகனாகவும் இருந்தார்.


அங்கேயும் இங்கேயும் அலைந்து அழிந்த தேமுதிக: இத்தனைக்கும் பிறகும் கடந்த சில தேர்தல்களாக திமுக கூட்டணியில் உறுதியாக நின்று கொண்டிருக்கிறார். தேர்தல் அரசியலில் தொகுதி பங்கீடு என்பது முழுமையான திருப்தியளிக்கக் கூடியதாக எந்த காலத்திலும் இருந்ததே இல்லை.


ஆனால் இந்த திருப்தியின்மையை அரசியல் எதிரிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளவும் எந்த காலத்திலும் தயங்கியதும் இல்லை. இப்படி தூபம் போட்டு ஒரு அணியில் இருந்து ஒரு கட்சியை தட்டி தூக்கி வந்துவிடுவதுதான் அந்த அரசியல் எதிரிகளுக்கு லாபம்.


அப்படி தட்டி தூக்கிச் செல்லப்படுகிற கட்சியின் எதிர்காலம் என்னவானாலும் கவலை இல்லை என்பதும் அவர்களின் பாணி. இப்படி அரசியல் சதுரங்கத்தில் ஊசலாட்டங்களில் சிக்கி சிதைந்து கட்டிய இரும்புக் கோட்டையையும் இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிற அரசியல் கட்சிகள் ஏராளம்.. இதற்கு மிக சிறப்பான உதாரணம் தேசிய முற்போக்கு திராவிட கழகம்.


இதனை உணர்ந்தவராகத்தான், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றி என்னை நடுத்தெருவில் நிற்க வைக்க சதி செய்கிறார்கள் என பகிரங்கமாகவே பேசியிருந்தார் திருமாவளவன்.


ஆனாலும் திருமாவளவனைச் சூழ்ந்திருக்கும் சதிவலைகளுக்குள் அவர் சிக்குண்டவராகவே தத்தளிக்கிறார் என்பதையே அவரை மீறிய பேட்டிகள், அவரை மீறிய விமர்சனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.


இத்தகைய போக்கு எங்கே கொண்டு போய் முடியும் என்பது திருமாவளவனுக்கு நன்றாகவே தெரியும்.


திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவுக்கு திருமாவளவனின் விசிக தாவினால் நிச்சயம் அந்த கட்சி பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாது என்பதை விசிக நிர்வாகிகளின் வெட்ட வெளிச்சமான அதிருப்தி குரல்கள் தெளிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது.


அதாவது விசிகவின் ஒரு அணி திமுக கூட்டணியிலும் விசிகவின் திருமா அணி அதிமுகவிலும்தான் இடம் பெறும் சூழ்நிலை உருவாகும். விசிகவின் 'தலித்' வாக்கு வங்கியை கொல்லைப்புறமாக ஒரு கும்பல் அபகரித்து தன்வயமாக்கிக் கொள்ள அதிதீவிரமாக களமிறங்கும்.


கேரளாவில் ஈழவர் தலைவர்கள் இன்றும் யார் பிடியில் சிக்கி இருக்கிறார்கள் என்பதை திருமா நன்கே அறிவார். 40 ஆண்டுகால அரசியல் பயணத்தில் அதுவும் நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கும் திருமாவளவன் இதனை எல்லாம் உணராமல் இருக்கமாட்டார்.


ஆனால் யதார்த்த சூழலில் திருமாவளவன், விசிகவின் அரசியல் 'கதையை' முடிக்க வேண்டும் என்கிற அரசியல் எதிரிகளின் 'உறவாடி' கெடுக்கும் சதிவலையில் திருமாவளவன் உணர்ந்தும் உணராமல் சிக்குண்டு கிடக்கிறாரோ என்பதையே அவரது குழப்பமான, கனத்த மவுனமான நகர்வுகள் அப்பட்டமாகவே சொல்கின்றன!


அதாவது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக.. சூடுபட்டும் திருந்தாத பூனையாகிறதா விடுதலை சிறுத்தைகள் என்கிற கேள்வி மீண்டும் மீண்டும் எழுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறதே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக