இந்தியா எடுக்கப் போகும்

 நடவடிக்கைகள்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 அன்று சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் இணை அமைப்பான எதிர்ப்பு முன்னணி (TRF) பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்துள்ளது.

அதன்படி, பாகிஸ்தானுடனான 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைத்தல், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவு என பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது.


இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுள் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.


இந்தோ பாகிஸ்தானிய போர், கார்கில் போர், உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல் என பல இக்கட்டான காலகட்டங்களில் கூட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இப்படியொரு நடவடிக்கையை எடுத்ததில்லை.


மனிதநேய அடிப்படையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யாத இந்தியா, கடந்த 65 ஆண்டுகளில் முதல் முறையாக இப்படியொரு முடிவை எடுத்துள்ளது.


தேச பிரிவிணைக்கு பிறகு இருநாடுகளுக்கும் இடையே சிந்து, ஜீலம், செனாப், ரவி, பீஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய 6 நதிகள் தொடர்பாக பிரச்னை எழுந்தது. இதன் காரணமாக உலக வங்கி தலையிட்டு பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தியது.


இதில் அப்போதைய பிரதமர்களான நேருவும், ஆயுப் கானும் கையெழுத்திட்டனர்.

இருநாடுகளுக்கும் இடையே நதிநீர் பங்கீட்டில் எவ்வித தொய்வும் இல்லாமல் நதிகளின் ஓட்டத்தை உறுதி செய்வதன் மூலம் குடிநீர், விவசாயம், தொழில் பயன்பாடுகளாக நீர் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

இதன்படி கிழக்கே (பாகிஸ்தானிலிருந்து) பாயும் நதிகளான ரவி, பீஸ் மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் கட்டுப்பாடு இந்தியாவிடமும், இந்தியாவிலிருந்து (பாகிஸ்தானுக்கு) மேற்கே பாயும் நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் கட்டுப்பாடு பாகிஸ்தானிடமும் சென்றன.


இந்த ஒப்பந்தத்தால் 20% நீர் இந்தியாவுக்கும், 80% நீர் பாகிஸ்தானுக்கும் கிடைத்தன.


இந்நிலையில் தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தும் இந்தியாவின் முடிவால் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்கப்போகிறது. அந்நாட்டின் நீர் தேவையில் 80% சிந்து நதி மூலமே பெறப்படுவதால் இந்த ஒப்பந்தத்தை நிறுத்துகையில், பாகிஸ்தானில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, உணவு பஞ்சம், மின்சார உற்பத்தி பாதிப்பு போன்றவை ஏற்படும்.


பாகிஸ்தானின் பல மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் சிந்து நதி நீரை தான் நம்பியிருக்கின்றன.


இதுநாள் வரையில் மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தானுக்கான பலனளித்து வந்த இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதில்லை.

ஆனால் ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என்ற கூற்றுப்படி, பஹல்காம் தாக்குதலால் தற்போது இப்படியொரு முடிவை எடுக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.


தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கும் வரையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.


இந்தியா இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் போதிலும், இந்த விஷயத்தில் உலகநாடுகள் தலையீடுகள் இருக்கும் என்பதால், அடுத்தகட்டநகர்வுகள்பற்றி பொறுத்திருந்து பார்க்கவேண்டியுள்ளது..



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை