திராவிட மொழிதானே கன்னடம்?
ஒன்றும் கமல்ஹாசன் கன்னட மொழியை குறைத்துப் பேசவில்லை. ஆனால் அவர் கன்னட மொழியை இழித்தும் பழித்தும் பேசியது மாதிரி கன்னடர்கள் கொந்தளிக்கின்றனர்.
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்று வரலாற்றைச் சொன்னதற்காக கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக கன்னட பாஜக கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன் போஸ்டர்களை கிழித்துக் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘’கன்னட சூப்பர் ஸ்டார் சிவன்னா இங்கே என் மகனாக, ரசிகனாக வந்துள்ளார். நானும் அவரை சிவன்னா என்றே அழைக்கிறேன். ஆனால் அவருக்கு நான் சித்தப்பா.
இது அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என் குடும்பம். (சிவராஜ்குமாரைப் பார்த்து) அதனாலதான் அவர் இங்கு ( சிவராஜ்குமார் ) வந்திருக்கார்.
அதனால்தான் பேச்சை ஆரம்பிக்கும் போதே ‘’உயிரே, உறவே, தமிழே’’ என்று ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் (கன்னடம்) பாஷை. அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்’’ என்றார்.

’’தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் மொழி’’ என்று சொன்னதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் கர்நாடகாவில் போராட்டம் வலுக்கிறது.
மொழி ஆய்வுகள் தமிழின் பிரிவுகள்தான் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என்பின்றனர்.
அவை அனைத்தும் திராவிட மொழிகள் எனப்படுபின்றனர். பேச்சுவழக்கிலேயே பல ஒற்றுமைகளைக் காணலாம்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கமல்ஹாசன் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்துகின்றனர்.
‘’தமிழ் உயர்ந்தது; கன்னடம் தாழ்ந்தது என்ற கருத்து கமல் பேச்சில் இல்லை. திராவிட மொழிக்குடும்பங்களின் உருவாக்க வரலாறு என்ற வரலாறுதான் இதற்குள் இருக்கிறது. இந்த பின்புலத்தில் கமல்ஹாசன் பேசியதை தவறாக புரிந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கமல்ஹாசன் சொன்னதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை’’ என்கிறார் தமிழ்த்துறை பேராசிரியர் வீ.அரசு.
’’வரலாற்று ரீதியாக நாம் எல்லாம் ஒரு திராவிட மொழிக்குடும்பம் என்று சொல்லி இருக்கிறார். தெலுங்கு மொழியில் உள்ள பழமை இலக்கியவாதிகள் கூட தமிழ்தான் மூல மொழி. அங்கிருந்துதான் நாம் என்று சொல்லி இருக்கிறார்கள். திராவிட மொழிக்குடும்பத்தில் தான் நாம் இருக்கிறோம். நமக்குள் ஒரு உறவு இருக்கிறது என்பதை நிலைநிறுத்தித்தான் அவர் பேசி இருக்கிறார். ஒரு யதார்த்தத்தை பேசி இருக்கிறார் கமல். இதை இருமாநில பிரச்சனையாக இரு மாநில யுத்தமாக மாற்றிவிட வேண்டாம் ‘’என்கிறார் திமுக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.