புதிய பாதையில் போதை!
தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, 15 நாள் ரிமாண்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், போதை விவகாரத்தில் பிரபல நடிகர் கைது செய்யப்படும்போது அது நிச்சயமாக பரபரப்பாகத்தான் இருக்கும்.
கொகைன் என்ற போதைப் பொருளை பயன்படுத்தியது நடிகர் ஸ்ரீகாந்த்திடம் மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் தெரிய வந்ததால் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கொகைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதை சப்ளை செய்ததாக கயானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் ஒசூரில் கைது செய்யப்பட்டார்.
இம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் திரையுலகினர் உள்பட பிரபலங்கள் பலருக்கும் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பதை போலீசார் கண்டறிந்து, அதில் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த்தை கைது செய்துள்ளனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், தன்னை வைத்து படம் தயாரித்தவரும் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான பிரசாத் மூலமாகத்தான் 250 கிராம் கொகைன் பாக்கெட் வாங்கினேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த பிரசாத் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
படத்தில் நடித்ததற்காக தனக்கு தரவேண்டிய பணத்தைக் கேட்டபோது, கொகைன் பழக்கத்தை கற்றுக்கொடுத்து, பணம் கேட்கும்போதெல்லாம் கொகைன் கொடுப்பது பிரசாத்தின் வாடிக்கை என்றும் நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. அரசுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை அ.தி.மு.க. மேற்கொண்டது. அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் உள்பட கட்சி நிர்வாகிகளின் வலைத்தளப் பக்கங்களில் Say No To Drugs – Say No To DMK என்ற வாசகம் இடம்பிடித்தன.
அ.தி.மு.க அண்மைக் காலமாக கொள்கை வேறு..கூட்டணி வேறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அது போல கொள்கை வேறு, வியாபாரம் வேறு என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் இருக்கிறார்கள் போலும்.
போதைப் பொருள் வழக்கில் ஏற்கனவே தி.மு.க முன்னாள் நிர்வாகி கைதானபோது, அவர் சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்தவர், படத்தயாரிப்பாளர் என்ற செய்திகள் வெளியாயின.
தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பிலான வாக்குமூலத்திலும் தன்னுடைய படத் தயாரிப்பாளரான அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மூலம்தான் போதைப் பழக்கத்திற்கு ஆளானதாகவும், அவரிடம்தான் போதைப் பொருளை வாங்கியதாகவும் கூறியிருக்கிறார்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை போதைப் பொருள் வியாபாரப் பணம் சினிமாவில் முதலீடு செய்யப்படுவது தொடர்பான சர்ச்சைகளும் விமர்சனங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
தற்போதைய போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த்துடன் மற்றொரு நடிகரும் தொடர்பில் இருப்பதாகவும், கொகைன் போதைப் பொருளைக் கொண்டு சினிமா பிரபலங்கள் பார்ட்டி கொண்டாடியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
கோடிகள் புரளும் சினிமா உலகில் கொகைன் போன்ற காஸ்ட்லி போதைப் பொருள்கள் புழங்கும் அதேவேளையில், இந்தியா முழுவதுமே மதுபானங்களைக் கடந்த புதிய போதையை நோக்கி இளைஞர்கள்போய்க்கொண்டிருக்கின்றனர். இதில் தமிழ்நாடும் தப்பவில்லை.
கொரோனா நேரத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தபோது, புதுவித போதைப் பொருள்கள் விற்பனைக்கு வந்து, இளைஞர்களை ஈர்த்தன. அதில், கஞ்சா முதன்மை இடத்தைப் பிடித்துவிட்டது.
இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் கஞ்சா புழங்காத ஊர்களே இல்லை என்கிற அளவில் சென்னை போன்ற மாநகரங்கள் தொடங்கி பேரூராட்சிப் பகுதிகள் வரை கஞ்சா விற்பனை நடக்கிறது.
கொகைன் போன்ற போதை பொருட்கள் தனிமனிதர்களுக்குப் பாதிப்பையும் சமுதாயத்தில் சீரழிவையும் ஏற்படுத்துவது போல, கஞ்சா புழக்கமும் பழக்கமும் பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது.
குறிப்பாக, இளைய சமுதாயம் தன்னுடைய ஆற்றலை வீணடித்து, நடைப்பிணங்களாக மாறக்கூடிய ஆபத்து உள்ளது.
கொகைன், கஞ்சா இன்னும் பல போதை பொருட்கள் வரும் வழியை ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள் துல்லியமாகக் கண்டுபிடிப்பதுடன், நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஞ்சா உள்ளிட்டவை புழங்குவதைக் கட்டுப்படுத்த மாநில அரசு ஒரு தனிப் பிரிவை உருவாக்கி, தீவிர நடவடிக்கையும் கடும் தண்டனையும் அளிப்பதுடன், இதில் டபுள் ஏஜென்ட்டுகளாக செயல்படும் உடுப்பணிந்த கருப்பு ஆடுகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.