ஹோர்முஸ் நீரிணை
ஏன் இவ்வளவு முக்கியமானது?
அமெரிக்கா, மூன்று ஈரானிய இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானின் பதிலடி குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதன் விளைவாக, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கான அச்சுறுத்தல் மிக முக்கிய விவாதமாக உள்ளது.
இதுவரை, பெரும்பாலான வல்லுநர்கள் ஈரான் இந்த அளவிற்கு செல்லாது என்று கருதினர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்த நிலைப்பாட்டை மாற்றியமைத்துள்ளதாக தெரிகிறது.ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராச்சி, ஹோர்முஸ் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "ஈரான் வசம் பல்வேறு திட்டங்கள் உள்ளன" என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஹோர்முஸ் நீரிணையை மூட வேண்டாம் என்று ஈரானை வலியுறுத்துமாறு சீனாவை வலியுறுத்தினார்.
"சீனா, தங்கள் எண்ணெய் தேவைகளுக்கு ஹோர்முஸ் நீரிணையை பெரிதும் நம்பியுள்ளது. அதை மூடினால், அது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்து" என்று ஃபாக்ஸ் நியூஸில் ரூபியோ கூறினார்.
ஹோர்முஸ் நீரிணை என்பது இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நீர்வழியாகும். ஹார்முஸ் நீரிணை, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது.
ஓமன் வளைகுடா அரபிக்கடலுடன் இணைகிறது. எனவே, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள், திறந்த கடலை அடைய ஹோர்முஸ் நீரிணையை நம்பியுள்ளன.
இந்த நீரிணை, ஈரான் மற்றும் ஓமனின் பிராந்திய நீர் எல்லைக்குள் அமைந்துள்ளது. மேலும், இது உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது.

இது நீரிணையை மூடுவதையோ அல்லது கடந்து செல்லும் கப்பல்களை தாக்குவதையோ எளிதாக்குகிறது.
இதன், முக்கிய காரணம் எண்ணெய் தான். அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (EIA) கூற்றுப்படி, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹோர்முஸ் நீரிணை வழியாக சென்ற கச்சா எண்ணெய், உலகின் மொத்த கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் கால் பகுதிக்கும் அதிகமாகவும், உலகளாவிய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்காகவும் இருந்தது.
கூடுதலாக, உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (முக்கியமாக கத்தாரில் இருந்து) 2024 ஆம் ஆண்டில் இந்த நீரிணை வழியாக கடந்து சென்றது.
அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக, ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்று வழி இல்லை. எனவே, நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டால், உலகளாவிய எண்ணெய் மற்றும் LNG வர்த்தகத்தில் பெரும் தாக்கங்கள் ஏற்படும், மேலும், விலையும் கடுமையாக உயரும். எண்ணெய் விலைகளில் ஏற்படும் எந்த மாற்றம் பல பொருட்களின் விலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், காப்பீட்டு செலவுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கும். இது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் கப்பல் போக்குவரத்தை மிகவும் கடினமாக மாற்றும்.
ஹோர்முஸ் நீரிணையை மூடுவது அல்லது இடையூறு செய்வது என்பது கடலில் கடந்து செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால் தாக்குவது, கப்பல்களை சிறைபிடிப்பது போன்றவையாகும்.
எந்தவொரு போர் அல்லது மோதலின் போதும் ஈரான் இந்த நீரிணையை இதுவரை மூடியது இல்லை. 1980களில், ஈரான்-ஈராக் போரின் போது, இரு நாடுகளும் நீரிணை வழியாக சென்ற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், போக்குவரத்தை நிறுத்தவில்லை.
ஏனெனில், ஈரான் தனது சொந்த வர்த்தகத்திற்கும் இந்த நீரிணையை நம்பியுள்ளது, மேலும் அதை இடையூறு செய்தால் அதற்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சவுதி அரேபியா உட்பட ஈரானின் அண்டை நாடுகள், அதனுடன் உறவுகளை மெதுவாக மேம்படுத்தி வருகின்றன.
மேலும், மேற்கத்திய தடைகள் காரணமாக, ஈரானுக்கு அதன் எண்ணெய்க்கு சில வாடிக்கையாளர்களே உள்ளனர். அதை சீனா அதிக சலுகைகளுடன் மொத்தமாக வாங்குகிறது. நீரிணையில் ஏற்படும் இடையூறு ஈரானின் நட்பு நாடான சீனாவின் எரிசக்தி தேவைகளை பாதிக்கும்.
அமெரிக்கா தனது 5வது கடற்படையை பஹ்ரைனில் நிறுத்தியுள்ளது.
இதனால், பிராந்தியத்தில் ஈரானின் நடவடிக்கைகளுக்கு விரைவாக பதிலளிக்க முடியும். இருப்பினும், கப்பல் போக்குவரத்து சாதாரணமாக இயல்பு நிலைக்கு வரும்போது, பெரும் குழப்பம் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும்.
EIA இன் மதிப்பீட்டின்படி, "2024 இல் ஹோர்முஸ் நீரிணை வழியாக சென்ற 84% கச்சா எண்ணெய் மற்றும் 83% திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவை ஆசிய சந்தைகளுக்கு சென்றன. சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை ஹோர்முஸ் நீரிணை வழியாக ஆசியாவிற்குச் சென்ற கச்சா எண்ணெய்க்கான முக்கிய இடங்களாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ரஷ்யா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்குகிறது. எனவே, போதுமான எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெற முடியாது என்பது பிரச்சனையல்ல; விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் தான் இதில் முக்கிய பிரச்சனை.
மேலும், சீனா தனது எண்ணெயில் பெரும்பகுதியை ஈரானிடமிருந்து வாங்குவதால், இங்கு நீண்டகால இடையூறு ஏற்பட்டால், வேறு விற்பனையாளர்களை நாட வேண்டிய கட்டாயம் சீனாவிற்கு ஏற்படும்.