மொழி அழிப்பு வீரன.?
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என தந்தை அறிவுறுத்தியதால், ஆத்திரத்தில் மகன் அவரை கொலை செய்துள்ளார். இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மாரியப்பன் மீது, 19 வயதான தங்க பாண்டியன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.


சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 10 ஆண்டுகளுக்கான நிதியாக ரூ.2,533 கோடியும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு ரூ.133.14 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு - RTI தகவல்.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தி வரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, 2026 ஜூன் 30 வரை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.
மொழி அழிப்பு வீரன் அமித்ஷா !
சில நாட்களுக்கு முன்னதாக ஆங்கிலத்தின் மீது பாய்ந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தாய்மொழிகள் மீது பாசம் இருப்பதாகக் காட்டிக் கொண்டார்.
இவை அனைத்தும் சமஸ்கிருதம், இந்தியை வளர்ப்பதற்காகத்தான். அவர் தாய்மொழி என்று சொல்வது சமஸ்கிருதத்தையும் இந்தியையும்தான்.
ஆங்கிலத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் கொண்டு வந்து உட்கார வைக்க நினைக்கிறார். இந்திக்குத் தடையாக இருப்பது ஆங்கிலம்தான். அதனால்தான் அவரது கோபம் ஆங்கிலத்துக்கு எதிராக இருக்கிறது.
இதோ அமித்ஷா பேசுகிறார்.
“இந்திய அடையாளத்துக்குத் தாய்மொழிகள் முக்கியமானவை. வெளிநாட்டு மொழிகளைவிட அவை முன்னுரிமை பெற வேண்டும். இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை.
நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லாவிட்டால் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது.
வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு இந்தியாவை நாம் கற்பனைகூட செய்ய முடியாது. இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாடு முழுவதும் புது முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள ஆங்கிலம் உலகம் முழுவதும் வெறுக்கப்படும்.
நமது நாடு, நமது கலாச்சாரம், நமது வரலாறு மற்றும் நமது மதத்தைப் புரிந்துகொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது.
இந்தப் போர் எவ்வளவு கடினமானது என்பதை நான் முழுமையாக அறிவேன். ஆனால் இந்திய சமூகம் அதில் வெற்றி பெறும் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன்.
மீண்டும் ஒருமுறை, சுயமரியாதையுடன், நமது சொந்த மொழிகளில் நமது நாட்டை நடத்துவோம், சித்தாந்தம் செய்வோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம், உலகையும் வழிநடத்துவோம். இதில் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை.
2047–ஆம் ஆண்டில் உலகின் உச்சியில் இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும்” என்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரையாகும்.
இந்திய மொழிகள், தாய்மொழிகள், மாநில மொழிகள், சொந்த மொழிகள், இந்தியாவின் மொழிப் பாரம்பரியம் என்று அவர் சொல்வது அனைத்தும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒரியா, வங்கம், பஞ்சாபி... உள்ளிட்ட மொழிகளை அல்ல. அவர் துடிப்பது சமஸ்கிருதத்துக்காகவும், இந்திக்காகவும்தான்.
சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதையும், மற்ற மொழிகளுக்கு அநீதி இழைப்பதையும் பலமுறை தமிழ்நாடு சொல்லி இருக்கிறது.
இதனை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தி இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி இந்தத் தகவல்களை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ உறுதி செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடி செலவு செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதே நேரத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கியதைவிட 17 மடங்கு கூடுதல் நிதியை சமஸ்கிருதத்திற்கு வழங்கியுள்ளது அமித்ஷாவின் அரசு. இவர் தான் மாநில மொழிகளை வளர்க்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

சமஸ்கிருதத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.230.24 கோடி ஒதுக்கீடு செய்கிறது அமித்ஷா அரசு. ஆனால் தமிழுக்கு 5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது அமித்ஷா அரசு.
இந்தியாவின் பாரம்பரியம், பண்பாட்டு மொழிகள் என்று சொல்லி சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள்.
“பாரம்பரிய மொழிகள் இந்தியாவின் பண்டைய மற்றும் ஆழமான கலாச்சார மரபின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றன, அந்தந்த சமூகங்களின் வளமான வரலாறு, இலக்கியம் மற்றும் மரபுகளைப் பாதுகாக்கின்றன.
இந்த அந்தஸ்தை வழங்குவதன் மூலம், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார நிலப்பரப்பின் மொழியியல் மைல்கற்களை மதிக்கவும் பாதுகாக்கவும் அரசாங்கம் முயல்கிறது, எதிர்கால மக்கள் இந்த மொழிகளின் ஆழமான வரலாற்று வேர்களை அணுகவும் பாராட்டவும் முடியும் என்பதை உறுதி செய்கிறது,” என்று பா.ஜ.க. அரசு அக்டோபர் 2024 – இல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதான் சமஸ்கிருதத்தை திணிக்கும் வழி ஆகும்.
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகச் சட்டம், 2020–ன் கீழ் நிறுவப்பட்ட மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் (CSU) மூலம் அரசாங்கம் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கிறது.
புது தில்லி மற்றும் திருப்பதியில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருத மொழியில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கு நிதி வழங்குவதன் மூலம் மாணவர்களுக்குப் பட்டம், டிப்ளமோ, சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
இதுபோன்ற முன்னெடுப்புகள் மற்ற தேசிய இனங்களின் மொழிகளுக்கு இல்லை. ‘காசி சங்கமம்’ நடத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள்.
‘வணக்கம்’ என்று சொன்னால் போதும் என்று நினைத்துவிட்டார்கள். ‘என்னால் தமிழில் பேச முடியவில்லையே’ என்று நீலிக்கண்ணீர் வடித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இவை அனைத்தும் சந்தடி சாக்கில் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பதை மறைப்பதற்கான தந்திரம்தான்.
‘இந்த நாட்டின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம்தான் இருக்க வேண்டும். சமஸ்கிருதம் என்று சொன்னால் அனைவரும் ஏற்க மாட்டார்கள். அதற்கு முன்னதாக இந்தியை ஆட்சி மொழி ஆக்குங்கள். அதன்பிறகு சமஸ்கிருதத்தை ஆக்குவோம்’ என்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வார்க்கர். அதைத்தான் இப்போது அமித்ஷா அரசு செய்து வருகிறது.
கல்வியில்தான் இதனை முதலில் செய்ய முடியும். அதனால் தான் தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்ப்பது என்பது சமஸ்கிருத, இந்தி மொழி ஆதிக்கத்துக்கு எதிரான மாபெரும் போர் ஆகும்.
பல்வேறு படையெடுப்புகளில் இருந்து தற்காத்துக் கொண்ட தமிழ், இன்றைய படையெடுப்பில் இருந்தும் தன்னை தற்காத்துக் கொள்ளும்.