ஆதாரமும் இல்லை.

 விருப்பமும் இல்லை.ஒன்றியத்திற்க்கு

தமிழ் மொழி தொன்மையானது.

 இன்று உலகில் பேசப்படும் பல மொழிகளைவிட முதன்மையானது. 

திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமாக விளங்குவது. இதைத் தமிழறிஞர்களும் புலவர்களும் சொன்னதைவிட அதிகளவிலான ஆய்வுப் பூர்வமாக-அறிவியல்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

 ஐரோப்பாவின் கால்டுவெல் முதல் ஜப்பானின் நெபுரூ க்ரோஷிமா வரையிலான பல்வேறு மொழியியல் ஆய்வறிஞர்கள் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழர்களின் பண்பாட்டு வாழ்க்கை முறை, ஆட்சி நிர்வாக முறை ஆகியவற்றை செய்யுள்களாக விளக்கக்கூடிய சங்கத்தமிழ்ப் பாடல்களில் பல்வேறு அடையாளங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

 பாடல்களாக உள்ள இந்த அடையாளங்களை ஆவணமாக மாற்றுவதில் சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய ஹரப்பா அகழாய்வுகள் முதல் வைகை ஆற்று நாகரிகத்தை வெளிப்படுத்திய கீழடி அகழாய்வுகள் வரை பல்வேறு ஆய்வுகள் அறிவியல்பூர்வமான ஆவணங்களாகத் திகழ்கின்றன.

 தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை உள்ளிட்ட மேலும் பல இடங்களில் நடைபெற்ற ஆய்வுகளும் தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மைக்கான ஆவணச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

இரும்பைத் தாதிலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்து, கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தை 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதை கீழடி, கொடுமணல் உள்ளிட்ட இடங்களின் அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்களை ஆய்வு செய்ததில் உறுதி செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது.

 அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உள்ள நவீன அறிவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கரிமம் மற்றும் வேதியியல் ஆய்வுகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதுபோலவே, கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அங்கே அருங்காட்சியகமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுடன் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் தொடர்ச்சியாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

கீழடியில் கிடைத்த இரண்டு மனித மண்டை ஓடுகளின் பகுதிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு செய்து, மண்டை ஓட்டின் தலைப்பகுதியுடன் செயற்கை நுண்ணறிவு மூலமாக தாடை பகுதிகளை உருவாக்கி, கீழடி வைகை ஆற்றங்கரை நாகரிகமான 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார் என்பதற்கான உருவப்படத்தை வெளியிட்டுள்ளன.

 இது தமிழர் பண்பாடு தொடர்பான ஆய்வாக மட்டுமின்றி, மனிதகுலத் தோற்றம்-நாகரிக வளர்ச்சி ஆகியவற்றிலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. தமிழர் நாகரிகம் தொன்மையான நாகரிகம் என்பதை அறிவியல்பூர்வமாக நிறுவுவதில் இந்த ஆய்வு முக்கிய பங்கு வகித்துள்ளது.

 இதன் தொடர்ச்சியாக உலகளாவிய மனிதகுல வரலாற்று ஆய்வாளர்கள், மானிடவியல் அறிஞர்கள், தொல்லியல் துறையினர் மேம்பட்ட ஆய்வை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

சங்ககால இலக்கியங்கள் எழுத்துகளாகப் பதிவு செய்திருந்ததை அறிவிய்ல பூர்வமான ஆராய்ச்சிகள் உறுதி செய்து கொண்டே இருக்கின்றன என்று இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தன் கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். 

தொல்லியல் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு இதன்பிறகாவது கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். 

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடி அகழாய்வில் கிடைத்தவை தமிழர் நாகரித்தின் தனித்தன்மையையும் அதன் தொன்மையையும் உறுதி செய்வதுடன், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்ட தனித்துவமான நாகரிகம் என்று சர் ஜான் மார்ஷல் நூறு ஆண்டுகளுக்கு முன் சுட்டிக்காட்டிய திராவிட நாகரிகத்தின் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

பாரத நாகரிகம், சரஸ்வதி நாகரிகம், வேதகால நாகரிகம் என மத்திய பா.ஜ.க அரசு இதுவரை நிரூப்பிக்கப்படாத நாகரிகங்கள் குறித்து தொடர்ந்து பெருமை பேசிவரும் நிலையில், கீழடி அகழாய்வுகளில் கிடைத்த மனித மண்டை ஓடுகள் மூலமாகத் தமிழர்களின் உருவங்கள் உருவாக்கப்பட்டிருப்பது ஒன்றிய அரசின் கூற்றைத் தவிடுபொடியாக்கி, திராவிட நாகரிகத்தின் தொன்மையை நிரூபிக்கிறது.

 அதன் காரணமாகவே, கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வருகிறது.

தென்தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கும், இந்தியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து தென்கிழக்கு நாடுகளுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை, ராமர் பாலம் என்ற மணல்திட்டுகளைக் காரணம் காட்டி நிறுத்தியது பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வுமாகும். 

இராமாயணத்தில் குறிப்பிடப்படும் பாலம்தான் ராமேஸ்வரம் அருகே உள்ள மணல்திட்டுகளான ராமர் பாலம் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு. 

ஆனால், இதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பதை  பா.ஜ.க அமைச்சரே தெரிவித்திருக்கிறார்.

ஆதாரங்கள் இல்லை என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழுக்கு எதிராக உள்ள ஒன்றிய அரசிடம் ஆதாரங்களும் இல்லை. தமிழர்களைப் பாதுகாக்கும் அக்கறையும் இல்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய