எது தேவை?
முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்". சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.







எது தேவை?
ஒன்றியஅரசு தனது தேசியக் கல்விக் கொள்கை 2020 அறிக்கையை வெளியிட்டு, 5 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு மாநில அரசு தன்னுடைய மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது.
இதற்கென குழு அமைக்கப்பட்டு, அதில் இடம்பெற்றிருந்த கல்வியாளர்கள் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துகளைப் பெற்று, அவற்றிலிருந்து மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் உடனடியாகக் கவனத்தை ஈர்த்தது, தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இனி கிடையாது என்கிற அறிவிப்புதான்.
தேசிய கல்விக் கொள்கையில் 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளிலேயே பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றாக வேண்டும்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் பள்ளிக் கல்வி என்பது இப்போதுதான் வளர்ந்து வருகிறது. இதில் 3, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயிலாக்கினால் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவது தடைபடும். இடைநிற்றல் ஏற்படும். கல்வியின் பரவல் குறையும். மாநிலக் கல்விக் கொள்கையில் தற்போதுள்ளது போல 8ஆம் வகுப்பு வரை எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களைவிடவும் இந்தியாவின் சராசரியைவிடவும் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களின் விகிதம் கூடுதலாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

தாய்மொழி, ஆங்கிலம் எனும் இரு மொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வித் திட்டத்தில் நீடிக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியும் உயர்கல்வியும் உயர்ந்திருப்பதுடன், உலகளவில் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுவது இருமொழிக்கொள்கையின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.
மாறாக, தேசியக் கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது.
தாய்மொழி, ஆங்கிலம் இவற்றுடன் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளைக் கற்கலாம் என தேசிய கல்விக் கொள்கையில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் எல்லா இடங்களிலும் இந்தி மொழியே கற்றுத் தரும் நிலை உள்ளது.
ஏனெனில், ஒரு வகுப்பில் 10க்கும் அதிகமான மாணவர்கள் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே அந்த மொழி கற்றுத் தரப்படும். ஆனால், நாடு முழுவதும் இந்தி மொழியைக் கற்றுத் தரும் ஆசிரியர்களை நியமிப்பதையும் இந்தியை வளர்ப்பதையும் முதன்மை நோக்கமாக மத்திய அரசு கொண்டிருக்கிறது.
இந்தியுடன் சமஸ்கிருதத்தைக் கற்றாக வேண்டும் என்கிற கருத்துகளும் அழுத்தமாக வெளிப்படுகின்றன.
நாட்டின் பண்பாட்டுப் பெருமைகள் பலவும் சமஸ்கிருதத்திலேயே இருக்கின்றன என்றும், பழமையான அறிவியல், கணிதம், மருத்துவம் ஆகியவற்றை அறிந்துகொள்ள சமஸ்கிருதம் அவசியம் என்றும் தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படுகிறது.
அதாவது, நமது புராண-இதிகாசங்களில் உள்ள புஷ்பக விமானம், வஜ்ராயுதம் போன்றவற்றை அறிவியலாக முன்னிறுத்தும் முயற்சியே இது.
அதே நேரத்தில், மாநிலக் கல்விக் கொள்கையில் கணினி அறிவியல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பள்ளிப் பருவத்திலேயே கற்றுத்தரும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

3ஆம் வகுப்பு முதல் கடுமையான தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய மத்திய அரசின் கல்வித் திட்டத்தில் சரியாக படிக்க முடியாதவர்களுக்கு கைத்தொழில் கற்றுத் தருவது என்ற பெயரில் குலத்தொழில் ஊக்குவிப்பு முன்வைக்கப்படுகிறது.
மாநிலக் கல்விக்கொள்கையில் திறன்மிக்க மாணவர்களை உருவாக்கும் வகையில், ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் வழியே புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ற மாணவர்களை உருவாக்கும் வாய்ப்பு அமைகிறது.
5 வயதில் ஒன்றாம் வகுப்பில் சேரும் வாய்ப்பை உருவாக்குகிறது மாநிலக் கல்விக் கொள்கை. 6 வயதில்தான் ஒன்றாம் வகுப்பில் சேர முடியும் என்ற நிலை தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது.
இப்படி பல நிலைகளிலும் மத்திய அரசின் கல்விக் கொள்கையும் மாநில அரசின் கல்விக் கொள்கையும் பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை அடிப்படையிலான மும்மொழித் திட்டத்தில் இந்தியைக் கட்டாயமாக்குவதை பா.ஜ.க ஆட்சி செய்யும் மகாராஷ்ட்ரா மாநிலம் கூட எதிர்த்து நிற்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையை பிற மாநிலங்கள் கவனித்து, கடைப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
வெற்றிப் பள்ளிகள் போன்ற மாநில அரசின் கல்விக்கொள்கையில் உள்ள சில அறிவிப்புகள் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருவதும் கவனத்திற்குரியது. ஆட்சியாளர்கள் இவற்றில் உள்ள சந்தேகங்களைக் களைய வேண்டியது அவசியம்.
காலந்தோறும் கல்வியில் சீர்திருத்தங்களும் முன்னேற்றங்களும் தேவைப்படுகின்றன. அதை உணர்ந்து வெளியிடப்பட்டுள்ள மாநில அரசின் கல்விக் கொள்கை, இன்றைய காலத்திற்குத் தேவையான-நடைமுறை சாத்தியமான பல அம்சங்கள் உள்ளன.