எண்ணத்தில் தூய்மை இல்லை!
ஒன்றிய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை மீட்கும் நேரம் வந்துவிட்டது. கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.


எண்ணத்தில் தூய்மை இல்லை!
தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வைக்காமல் தமிழ்நாடு அமைச்சரவை திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறது. இந்த அறிவிப்புக்கும் குதர்க்கவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இன்னும் சொன்னால், ‘இப்படி எல்லாம் சலுகைகள் பணியாளர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது’ என்று நினைப்பவர்கள் அவர்கள் என முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் சில கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்துகிறார்கள். அமைச்சர்கள் அளவிலான நிர்வாக நிர்வாகம் அதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. ஆனால் இது சுமூகமாக முடிந்துவிடக் கூடாது என்று சில குதர்க்கவாதிகள் உள்ளே புகுந்து குழப்பினார்கள்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் 2020ஆம் ஆண்டு முதல் குப்பை மேலாண்மை ஆனது பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறைமையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தற்போது மேலும் இரண்டு மண்டலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 11 மண்டலங்களிலும் ஏற்கனவே பணியாற்றி வந்த 4 ஆயிரத்து 994 ஊழியர்களும், அப்படியே ஈர்க்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படுகிறது. உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி ஊழியர்களை தனியார் ஊழியர்களாக இப்போது மாற்றவில்லை. 2013 ஆம் ஆண்டு முதலே, தூய்மைப் பணியாளர்கள் யாரும் புதிதாக நியமிக்கப்படவில்லை. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், சுய உதவிக் குழுக்களின் மூலமாக, பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இவர்கள் சுய உதவிக்குழுவின் ஒப்பந்த ஊழியர்கள். அதாவது, சுய உதவிக் குழுக்கள் மூலமாகப் பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிகப் பணியாளர்கள் இப்போது தனியார் தொழிலாளர் சட்ட விதிகளுக்கு உட்பட்ட பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாட்டில் தனியார் நிறுவனங்கள் உள்ளன. அங்கு ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இருக்கிறது.
அங்கும் சங்கங்கள் உள்ளன. தூய்மைப் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, போனஸ், பண்டிகைக் கால சிறப்பு உதவிகள், திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, விபத்து இழப்பீட்டு உதவி, உடல் பரிசோதனைகள் ஆகியவை உண்டு. தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு உண்டு. தேசிய விடுமுறை நாட்களில் பணியாற்றினால் இரட்டிப்புச் சம்பளம் ஆகியவையும் உண்டு.
இந்த ஊதியச் சலுகைகள் குறித்து ஊழியர்களுக்கு அச்சம் ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. போராட்டம் நடத்திய ஊழியர்கள், தொடர்புடைய மண்டலத்தில்கூட 1,770 ஊழியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
எந்தப் பணியாளரும் நீக்கப்படவும் இல்லை. பணி மறுக்கப்படவும் இல்லை. அதுகுறித்து அவர்களிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் போது அரசுக்கு எதிரான சக்திகள் இதற்குள் நுழையத் தொடங்கின. ‘பணியாளர்கள்’ என்ற போர்வையில் இந்த சக்திகள் அளித்த பேட்டிகள், ஆட்சியைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்திருந்தன. வலதுசாரி நடிகைகள், பாட்டாளிப் போர்வைக்குள் நுழைந்து போராட்டத்தை ஆதரிப்பதாகக் கிளம்பியது எல்லாம் இதுவரை நடக்காதது ஆகும்.

தூய்மைப் பணியாளர்களின் பணிக்கு இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு உண்மையிலேயே தற்போதுதான் நிறையச் சலுகைகளும் முறையான ஒரு அமைப்பின்கீழ் பணிபுரிவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.
இதைப் புரிந்துகொள்ளாமல், ‘நாங்கள் உங்களுக்கு பணி நிரந்தரம் வாங்கித் தருகிறோம்’ என்று நடக்காத ஒன்றைக் கூறி அவர்களைத் திருப்பி உள்நோக்கத்தோடு சிலர் சுய லாபம் அடைவதற்கான போராட்டமாக இதனை மாற்றினார்கள். நீதிமன்றத்திற்கு இந்த விவகாரம் சென்றதால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நிலை அரசுக்கு ஏற்பட்டது.
தூய்மைப்பணியாளர்கள் நலன் காப்பதில் தி.மு.க. அரசு எப்போதும் உறுதியாக இருக்கும் அரசு ஆகும். 2007–ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம்தான், தூய்மைப் பணியாளர் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டது, தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அவர்களுக்கு உரிமைகள் தரப்பட்டு, சலுகைகள் கிடைத்தது அதன்பிறகு தான்.
14ஆம் தேதியன்று தமிழ்நாடு அமைச்சரவையில் இது தொடர்பாக முக்கியமான முடிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்மொழிய, அமைச்சரவை ஏற்றுக்கொண்டது கொண்டுள்ளது.
“ தூய்மைப் பணியாளர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
* 5 இலட்சம் ரூபாய் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். சுயதொழில் தொடங்க 35 விழுக்காடு மானியம் தரப்படும்.
* கடன் மானியத்தை ஒழுங்காகச் செலுத்துபவர்களுக்கு 6 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படும்.
* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ‘புதிய உயர்கல்வி உதவித் தொகைத் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
* கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின்கீழ் வீட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.
* தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும்.
– இவை அனைத்தும் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வைக்காமல் தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி இருக்கும் திட்டங்கள் ஆகும்.
இந்த அறிவிப்புக்கும் குதர்க்கவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இன்னும் சொன்னால், ‘இப்படி எல்லாம் சலுகைகள் பணியாளர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது’ என்று நினைப்பவர்கள் அவர்கள்.