உலகம் சுற்றும் திராவிடம் (4)

‘மோனப் புல்வெளி’ என்று பெயர் கொண்ட அமெரிக்கப் பண்ணை வீட்டில் அண்ணாவை விருந்தினராகத் தங்க வைத்திருந்தனர் ஜான் டி.பிரிஸ்கோ குடும்பத்தினர். அமெரிக்கர்களின் விருந்தோம்பல் பண்பு எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பதில் அண்ணாவுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

பிரிஸ்கோவின் மகனும் மனைவியும் அண்ணாவுடனான சந்திப்பை தங்களின் தனிச் சிறப்பாகக் கருதினார்கள். மகன் ஏற்கனவே மைசூர் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தவர். டாக்டர் பட்டம் பெறுவதற்காக மைசூர் மாநிலத்தின் வரவு-செலவு திட்டம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது அவரது நோக்கம்.


‘பணத்தோட்டம்’ எனும் பொருளாதார அரிச்சுவடி புத்தகம் எழுதிய அண்ணா, தங்களின் பண்ணைத் தோட்ட வீட்டில் விருந்தினராக வந்ததால், அவரிடம் நிறைய தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், மைசூர் சென்றபிறகு தமிழ்நாட்டுடன் தொடர்பு கொள்ளவும் எளிதாக இருக்கும் என்பதுதான் அந்த இணையரின் ஆர்வத்திற்கு காரணம்.


அமெரிக்க இளைஞர்கள் இந்தியாவைப் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை யேல் பல்கலைக்கழக உரையாடல்களிலும், அதன் பின் நடந்த சந்திப்புகளிலும் அண்ணா  உணர்ந்தார். 

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டினை தமிழ்நாடு முன்னெடுத்திருப்பது பற்றியும் குஜராத், மகராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அவை செயல்படுத்தப்படுவது பற்றியும் சொன்ன அண்ணா, அதே நேரத்தில், உத்தரபிரதேசத்திலும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளை அந்த மாநிலங்கள் சரியாக மேற்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். 57 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் அண்ணா சுட்டிக்காட்டிய வேறுபாட்டின் மோசமான விளைவை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


இந்தியாவை ஆளுகின்ற கட்சிக்கு எதிரான ஒரு கட்சியின் மாநில முதலமைச்சர் என்பதால் அண்ணாவிடமிருந்து அவர்கள் நிறைய எதிர்வினையை எதிர்பார்த்தார்கள். இந்தியாவின் மூத்த தலைவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னாள் பிரதமர்கள் ஆகியோர் மீது வெளிநாட்டில் போய்க் குற்றம்சாட்டும் அற்பத்தனமான செயலை அமெரிக்காவில் அண்ணா செய்யவில்லை. அமெரிக்கர்களின் கேள்விகளுக்கு அவர் அமைதியாகவே வினையாற்றினார். அண்ணா, இந்திய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக அமெரிக்கர்கள் முன் உயர்ந்து நின்றார்.


அண்ணாவை அமெரிக்கா கவர்ந்தது. ஆனாலும் அவரது அந்தப் பயணத்தில் கண்ட நாடுகளில் ஜப்பான் அவர் மனதில் நிலைத்தது. 


இயற்கை வளங்கள் சூழ்ந்த-பாதுகாப்பு நிறைந்த அமெரிக்காவின் வளர்ச்சியையும், இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு-போர்ச் சூழல்களையும் சந்தித்து மீண்டுள்ள ஜப்பான் நாடு 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அடைந்த முன்னேற்றம் அண்ணாவை வியக்க வைத்தது. தனது பயணத்தில், மே 8ஆம் நாள்  அவர் ஜப்பான் சென்றபோது, தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மிகி என்பவரோடு அண்ணா உரையாடினார்.


சாதி, மொழி, பண்பாடு சார்ந்த பிரச்சினைகள் எப்படி இருக்கின்றன என்று ஜப்பான் அமைச்சர் மிகி கேட்டதற்கு அண்ணா, “உங்கள் ஜப்பான் நாடு நெடுங்காலமாக எவ்வளவோ எரிமலைகளின் சீற்றங்களுக்கிடையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. உங்கள் நாட்டில் உள்ள எரிமலைகளைப் போல எங்கள் நாட்டில் மனித எரிமலைகள் உள்ளன. நாங்களும் அதை எதிர்கொண்டு சமாளிப்போம்” என்று உவமையுடன் கூறினார். ஹைகூ போன்ற அண்ணாவின் சொல்லாற்றல் ஜப்பான் அமைச்சரை ஈர்த்தது.

1968 மே 10ஆம் நாள் ஹாங்காங்கில் செய்தியாளர்களை அண்ணா சந்தித்தபோது, அவரது தொடர்ச்சியான பயணம் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். “நான் மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று புன்னகைத்தபடி கேட்டார் அண்ணா.


நிருபர்கள் விடவில்லை. “இப்போது தனி திராவிட நாடு கேட்கவில்லையா?” என்று கேட்டனர். “நாங்கள் அதை கைவிட்டு நெடுங்காலம் ஆகிவிட்டது” என்ற அண்ணா, அமெரிக்கர்களிடம் சொன்னதுபோலவே ஹாங்காங்கிலும் புன்சிரிப்புடன், “என் பழைய ஆசைகளைக் கிளப்பாதீர்கள். நான் அவற்றால் இழுத்துச்செல்லப்பட வேண்டாம்  என நினைக்கிறேன். இந்திய அரசுக்கு எந்த குந்தகமும் விளையாத வகையில், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக்க முடியும் என நம்புகிறேன்” என்றார் அண்ணா உறுதியான குரலில்.


இந்திய மாநிலங்களிலேயே முன்னோடியான பல திட்டங்களை செயல்படுத்தி, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியுடனன் கல்வி-மருத்துவம்-பெண்கள் முன்னேற்றம்-மதநல்லிணக்கம் என பல இலக்குகளிலும்  முன்னணியில் நிற்கிறது அண்ணா வழியில் அயராது உழைக்கும் தலைவரைக் கொண்ட இன்றைய தமிழ்நாடு.


(சுற்றும்).                                 -கோவி.லெனின்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி