உலகம் சுற்றும் திராவிடம் ( 5)
நெடுநேரமாகியும் ஒரு வழியும் தெரியாததால், பொறுமையிழந்து சுருட்டுப் பற்றவைத்தவன், புகையை இழுத்துவிடுவதுபோல, அந்தக் கப்பலிலிருந்து கரும்புகை வந்து கொண்டே இருந்தது.
நான்கு திசையிலும் கடல்தான். கரை எங்கே என்பதற்கான வழி தெரியவில்லை.

இலக்கை நோக்கி பயணிக்கிறதும், அதற்கான வழியை உருவாக்குவதும் எளிதான காரியமல்ல. போராட்டமாத்தான் இருக்கும். சலிப்படைஞ்சா காரியம் நடக்காதுஎன்று சொன்னவர், தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து, சில புத்தகங்களைப் புரட்டியபடியே குறிப்பெடுக்கத் தொடங்கினார்.
அவர்தான் டாக்டர் டி.எம்.நாயர். . Antiseptic என்ற பத்திரிகையை நடத்தினார். காலங்காலமாக சாதிப் பாகுபாட்டால் புரையோடிப் போன சமுதாயத்திற்கு டாக்டர் நாயரின் கருத்துகளே Antisepticஆக அமைந்தன.
வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவுக்கு படிப்படியாக அதிகாரங்கள் வழங்குவதற்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டிருந்த இந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் மான்டேகுவும், இந்தியாவில் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டும் இணைந்து ஒரு திட்டத்தை தந்திருந்தார்கள்.
சென்னைக்கு மாண்டேகும் செம்ஸ்போர்டும் வந்த போது அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க சென்ற நீதிக்கட்சித் தலைவர்கள் குழுவில் நாயர்தான் முதன்மையானவர். ஆனால், அந்த கோரிக்கை நிறைவேறவில்லை.
கலெக்டரிடம் மனு கொடுத்து வேலை நடக்காவிட்டால் செகரட்டேரியட் போவதுதானே வழக்கம். அதனால்தான், நீதிக்கட்சித் தலைவர்கள் கூடி முடிவெடுத்து, டி.எம்.நாயரை இங்கிலாந்துக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தனர். கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட டி.எம்.நாயர், தன் சொந்த செலவில் கப்பல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
பல வாரங்கள் கப்பலில் பயணித்து இங்கிலாந்து சென்றதும், ரயிலில் பயணம் தொடர்ந்தது. லிவர்பூல் ரயில் நிலையத்தில் நாயர் இறங்கினார். மிடுக்கான அவர் முன்பாக, விறைப்பான ஒரு ராணுவ அதிகாரி வந்த நின்றார்.
“டாக்டர் நாயர்.. பிரிட்டிஷ் அரசின் கட்டளையை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.“
“சொல்லுங்க.. என்ன கட்டளை?”
“இங்கிலாந்தில் எந்த பொது இடத்திலும் எதைப் பற்றியும் நீங்கள் பேசக்கூடாது. இதுதான் அரசாங்கத்தின் கட்டளை” என்று சொல்லி அரசின் உத்தரவை கொடுத்தார் ராணுவ அதிகாரி.
“எதிர்பார்த்ததுதான் சார். உங்க அரசாங்கத்துக்கும், குறிப்பா இந்திய விவகாரத்துறை அமைச்சருக்கும் என் நன்றியை சொல்லிடுங்க’‘ என்றார், நக்கல் பிடித்தவரான நாயர்.
அவர் சொன்னதை மாண்டேகு மறக்கவில்லை. 1917 டிசம்பர் 21 தேதியிட்ட தனது ‘இந்தியா டைரி’யில் இப்படி எழுதியிருந்தார் மாண்டேகு. “டி.எம்.நாயர் இனிமையாகவும் அழகாகவும் பேசினார். கேட்போர் மனதில் நன்கு பதியும்படி தெளிவாகப் பேசினார். பார்ப்போர் ஒரு வித அச்சம் கொள்ளும் தோற்றமும் உடற்கட்டும் அவருக்கு இருந்தது”
இந்தியாவை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த இங்கிலாந்து அமைச்சரையே அச்சம் கொள்ள வைத்திருக்கிறது டி.எம்.நாயரின் நேரடியான-நேர்மையான-உண்மை நிலையைப் போட்டுடைத்த சொற்கள். அந்த பயம் இருக்கணும்ல… அதனால்தான் டி.எம்.நாயருக்கு இங்கிலாந்து அரசு வாய்ப்பூட்டு போட்டது.
பேசத்தானே தடை? எழுதினால்..? எழுதினார்.
இந்திய சமூகத்தின் சாதிக் கட்டுமானத்தையும் அது எப்படி குறிப்பிட்ட சாதியினருக்க மட்டும் சாதகமாகவும், பெரும்பான்மையான மக்களின் கல்வி-வேலை உள்ளிட்ட உரிமைகளை காலம் காலமாக மறுத்து வருகிறது என்பதையும் இங்கிலாந்திலிருந்து வெளிவந்த Spectator, Nineteenth century and after, Daily Telegraph, Edinburgh Review உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதினார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் லார்டு சைடன்காம், லார்டு செல்போர்ன் ஆகியோர் பேசினர். நாயருக்குப் போடப்பட்டிருந்த வாய்ப்பூட்டு விலகியது. எம்.பி.க்கள் அவரை நாடாளுமன்றத்திற்கு வந்து பேச அழைத்தார்கள்.
பிரிட்டன் நாடாளுமன்ற அரங்கில் திராவிட இனத்தின் நிலையையும் நீதிக்கட்சியின் நோக்கங்களையும் விளக்கி டி.எம்.நாயர் ஒரு மணி நேரம் பேசினர். நாடாளுமன்ற எம்.பிக்கள் அவரது பேச்சை கைத்தட்டி வரவேற்றனர். .
டாக்டர் தாரவாட் மாதவன் நாயருக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எழுப்பிய குரல் ஏற்கனவே அங்கு பேசத் தடை விதிக்கப்பட்டிருந்த பால கங்காதர திலகருக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் போடப்பட்டிருந்த பேச்சுரிமைத் தடையையும் சேர்த்தே நீக்கியது.
திராவிடம் தொடங்கும். இந்தியாவுக்கே விடியும். அப்போதும் இப்போதும் அப்படித்தான். -கோவி.லெனின்
(சுற்றும்)