உலகம் சுற்றும் திராவிடம் (6)

 இங்கிலாந்துக்கு சென்ற திராவிடத் தலைவர் டாக்டர் டி.எம்.நாயரின் கருத்துகளை அந்நாட்டு அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், வல்லுநர்கள் விவாதிக்கத் தொடங்கினர்.

 டி.எம்.நாயரின் பேச்சைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை அரவணைத்துக் கொண்டதுடன், அவரது கருத்துகளை ஆதரித்து பேச ஆரம்பித்தனர். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றத்தை உண்டாக்கியிருந்தது டி.எம்.நாயரின் இங்கிலாந்து பயணம்.

 நீதிக்கட்சி சார்பில் வைக்கப்பட்ட வகுப்புவாரி உரிமை, இந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலை ஆகியவை குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டங்களில் எம்.பி.க்கள்  பேசினார்கள். 

  அதற்கு காரணம், டாக்டர் தாரவாட் மாதவன் நாயர் எனும் ஒற்றைப் பேராளுமையின் உறுதியான செயல்பாடுகள்தான்.  1918ஆம் ஆண்டின் கடைசியில் அவர் சென்னைக்குத் திரும்பினர்.  மவுண்ட் ரோட்டில் மக்கள் கூடி நின்று அவருக்கு பெரும் வரவேற்பளித்தனர்.

தனித்தொகுதி, வகுப்புவாரி உரிமை இவையெல்லாம் மக்களை பிரிக்கும் சதி’ என்று பிரிட்டிஷார் காதுவரை கொண்டு சென்று அதனை நிறைவேறவிடாமல் தடுக்க ஒரு கூட்டம் முயன்றது.

 டி.எம்.நாயர் திரும்பவும் இங்கிலாந்து சென்றால்தான் நமக்கான உரிமையைப் பெற முடியும் என நீதிக்கட்சித் தலைவர்கள் தீர்மானித்தனர். இம்முறை, நாயருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.

”கப்பல் பயணம் என்பது உங்கள் உடலுக்கு சரியாக இருக்காது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடும்” என்று சக டாக்டர்கள் எச்சரித்தனர்.  தன் உடல்நிலையப் பற்றிக் கவலைப்படாமல் 1919ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்துக்குப் பயணம் செய்தார்.

“இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் நீதிக்கட்சியின் கோரிக்கைகளை முன்வைத்தால்தான் வகுப்புவாரி உரிமை, தனித்தொகுதி ஆகியவை கிடைக்கும்” என்பதை கப்பல் பயணத்தில் கிடைத்த நேரங்களில் சிந்தித்து, அது பற்றிய தெளிவான வியூகத்தையும் நாயர் வகுத்து வைத்தார்.

இங்கிலாந்து சென்றதும் தனது நண்பர்களிடம் இது பற்றி பேசினார்.   அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்தது. வேலை தொடர்ந்து கொண்டே இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய இங்கிலாந்து நண்பர்களும், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நலன் விசாரிக்க வந்திருந்தனர். அவர்களிடம் நீதிக் கட்சி நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார் நாயர்.

“மிஸ்டர் நாயர் நீங்க ரெஸ்ட் எடுங்க’‘ என்றனர் இங்கிலாந்து நண்பர்கள். ஒரு டாக்டராக தன் உடல்நிலையைப் பற்றி டி.எம்.நாயர் அறிந்திருந்தார்.

“ஜென்டில்மென்.. எங்க மண்ணில் சாதி ஒடுக்குமுறை ஆயிரக்கணக்கான ஆண்டாக இருக்குது. நான் நாயர். ஆனால், எங்கள் ஊரில் உள்ள நம்பூதிரி, நான் டாக்டராக இருந்தாலும், “அடே..மாதவா இங்கே வாடா” என்றுதான் கூப்பிடுவார்.

 அப்படியென்றால் ஆதிதிராவிட மக்கள், மற்ற திராவிட சமுதாயத்து மக்களின் நிலையை யோசியுங்கள். ஆதிக்கம் செலுத்தும் சாதியினரோடு, இவர்கள் சரிசமமாக போட்டி போட முடியுமா? கல்வி கிடைக்கலை. வேலை கிடைக்கலை. தெருவில் நடக்க-கோவிலுக்கு போக உரிமை கிடைக்கல. அதனால்தான் தனித் தொகுதி கேட்கிறோம். 

இங்கிலாந்து அரசாங்கம் இதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுக்க விரும்புறேன். அதற்காகத்தான் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்..” என்ற டி.எம்.நாயரின் உருக்கமான வார்த்தைகள் அவர்களை உலுக்கியது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் லார்டு செல்போர்னை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தார்கள். “டாக்டர் நாயரின் ஹெல்த் கண்டிஷன் மோசமா இருக்கு. இந்தியாவுக்கான அரசியல் சீர்திருத்தத்தில் தென்னிந்திய மக்களுக்கு என்ன தேவைன்னு அவரிடம் தெளிவான திட்டம் இருக்கு. அதனால, ஹாஸ்பிடலுக்கு கூட்டுக்குழு வந்து நாயரோட ஸ்டேட்மென்ட்டை பதிவு செய்ய முடியுமா?”

“ஓ..யெஸ்..ஜூலை 18 பதிவு பண்ணிக்கலாம்” என்றார் செல்போர்ன். இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அதுவரை இப்படி யாருக்கும் ஒரு வாய்ப்பை தந்ததில்லை. 

ஜூலை 17 அன்று மருத்துவமனையில் நாயரை சந்தித்து, மறுநாள் கூட்டுக்குழு நேரில் வந்து வாக்குமூலம் பெற இருப்பதைத் தெரிவித்தனர். “ஸ்டேட்மெண்ட் கொடுத்ததும் உங்க ஹெல்த்தும் நல்லாகிவிடும் டாக்டர் நாயர்” என்றார்கள்.

1919 ஜூலை 18. கூட்டுக்குழு வாக்குமூலம் பெறுகிற நாள். அவர்களுக்கு முன்பாக நீதிக்கட்சியினர் மருத்துவமனைக்கு வந்தனர்.

‘’Sorry.. Nair is no more’’ என்றார்கள் அங்கிருந்த டாக்டர்கள்.

சற்று முன்தான் நாயரின் உயிர் பிரிந்திருந்தது. மரணப்படுக்கையிலும் சமூக நீதிக்காகப் போராடிய அந்த மாவீரரின் உடலைப் பார்த்து நீதிக்கட்சியினரும் இங்கிலாந்து நண்பர்களும் கண்ணீர் விட்டார்கள்.

திராவிட இயக்கத்தின் தலைமகன்களில் ஒருவரின் மரணத்தில் இங்கிலாந்து நாட்டினரும் ஐரோப்பாவின் மற்ற நாட்டினரும் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக வந்தனர்.  பிரபல பத்திரிகைகள் ஒவ்வொன்றின் சார்பிலும் பிரதிநிதிகள் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

சமூக நீதிக்கான அறப்போர்க் களத்தில் டாக்டர் டி.எம்.நாயர் தன் உயிரையே தந்தார். அவர் இறப்பிற்குப் பிறகு, 1920ல் சென்னை மாகாணத்திற்கான தேர்தல் நடந்தது. அதில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தத. வகுப்புவாரி உரிமை அரசாணையை வெளியிட்டு செயல்படுத்தியது. 

அனைத்து சமுதாயத்தினருக்குமான கல்வி உரிமை, பொது உரிமை, இந்து அறநிலையச் சட்டம், பெண்களுக்கு சட்டமன்றப் பிரதிநிதித்துவம்-வாக்குரிமை என சமூக நீதிக்கான அனைத்திற்கும் அடித்தளமிட்டது.

அந்த அடித்தளத்தில் இன்றும் தொடர்கிற திராவிட மாடல் அரசு, எந்த இங்கிலாந்தில் டி.எம்.நாயர் திராவிட இனத்தின் சமூக நீதிக்காக பாடுபட்டாரோ அந்த இங்கிலாந்தில் திராவிடத்தை முழங்கியுள்ளது. உயிர் கொடுத்து உயர்ந்து நிற்கிறார் டாக்டர் டி.எம்.நாயர்.

                                                   -கோவி.லெனின்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி