அரசியல் அஞ்ஞானி!

 தமிழ்நாடு கண்டிராத ஒரு துயர சம்பவம்தான் கரூர் வேலுச்சாமிபுரம் சம்பவம். விஜய்க்கு கூடியதை விட பல தலைவர்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடியிருக்கிறது. 

ஆனால், இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியதில்லை.

வேலுச்சாமிபுரம் சம்பவம் அரசியல் சதி என்று குற்றம்சாட்டுவதில் இருந்தே விஜய்க்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

 தன்னை நம்பி வந்தவர்களை பலி கொடுத்துவிட்டு நிற்கும் குற்ற உணர்ச்சியும் விஜய்க்கு இல்லை என்பது தெரிகிறது.

கட்டுப்பாடு என்றால் என்ன? என்று கேட்கிறார்கள் தவெகவினர்.  நீதிமன்றமும், காவல்துறையும், ஏன், விஜய்யும் கூட எத்தனையோ முறை எடுத்துச்சொல்லியும் கூட, மின் கம்பங்களில் ஏறுவதும், மரக்கிளைகளில் ஏறுவதும், மாறவில்லை. 

 ஒவ்வொரு முறையும் விஜய் பிரச்சாரம் முடிந்ததும் அந்த இடம் போர்க்களமாக மாறுகிறது. குறைந்தது இருவர் மரணம் உறுதி.

நாற்காலிகள் உடைந்தும், காம்பவுண்ட் சுவர்கள்  உடைந்தும், செருப்புகள் சிதறியும் கிடக்கும் கக்கூஸ் நீரை ரசிகர்கள் குடிக்கும் காட்சிகள்  தொடர்கின்றன.

 இதனால்தான் இது என்றைக்காவது ஒருநாள் விபரீதமாக வெடிக்கும் என்கிற அச்சம் எல்லோருக்கும் இருந்தது.  அரசுக்கும் இந்த அச்சம் இருந்ததால்தான் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

 பொதுவாகவே  அரசியல் கட்சிகளும் சரி, தொண்டர்களும் சரி அரசு விதிக்கும்,

 நீதிமன்றங்கள் விதிக்கும், காவல்துறை அறிவுறுத்தும் கட்டுப்பாடுகளை மதித்து நடப்பார்கள். ஆனால், தவெகவினரும், விஜய் ரசிகர்களும் இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் கொஞ்சம் கூட மதிப்பதே இல்லை.  

தவெகவின் தலைமையே  இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் தங்களுக்கு எதிரான அரசியலாக கருதியதுதான் வேலுச்சாமிபுரம் வேதனையை தந்திருக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட  பல மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததும், விஜய்யின் பேரணியில் சாலையில் இரு புறமும் நின்றிருந்தவர்களும்,  விஜய் பேசும் இடத்திற்கு பின்னாலேயே திரண்டு வந்ததாலும் 41 அப்பாடி உயிர்கள் பலியான அசம்பாவிதம் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது. 

 காவலர்கள் சொல்லுவதை காதில் வாங்காமல், தாங்களாக முன்வந்து தன் கட்சி தலைவரை பார்க்க  வரும் கூட்டத்தை தவெகவினர் ஒழுங்குபடுத்த கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் தன்னார்வலர்கள் இருப்பார்கள்.  அவர்கள் கட்சியின்  பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலத்தின் போது கூட்டத்தை கட்டுப்படுத்துவார்கள்.  வழி நடத்துவார்கள்.   ஆனால், தவெகவில் தன்னார்வலர்கள் என்று யாரும் இல்லை. 

நடிகராக இருந்து கட்சி தொடங்கியவர்தான் விஜயகாந்த். கட்சி கூட்டங்களில் பாதுகாப்புக்கு என்றே ஒரு அணியை அமைத்திருந்தார் அவர்.  விஜயகாந்தை அடிக்கடி நினைவு கூறும் விஜய் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்யவே இல்லை. 

தவெக நிர்வாகிகள் எல்லோருமே இன்னமும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். விஜயை நடிகராகவே பார்க்கிறார்கள்.  அதனால்தான் விஜய் வந்தால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தாமல் அவர்களும் விஜயை பார்க்க முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.  

அனுபவமுள்ள பழைய கட்சிகளைப் பார்த்து புதிய கட்சி தவெக, கூட்டம் நடத்துவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.  இதே இடத்தில்தான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின்  பிரச்சாரக் கூட்டமும் நடந்தது.  எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அக்கூட்டம் நடந்து முடிந்தது.  அது அரசியல் கூட்டம் என்பதால் கட்டுக்கோப்பாக நடந்து முடிந்தது.  இது நடிகர் விஜயை பார்க்க வந்த ரசிகர் கூட்டம் என்பதால் கட்டுப்பாடுகளை எல்லாம் ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள்.

தமிழ்நாட்டில் நடந்த இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டதும் குடியரசுத்தலைவர், பிரதமர், எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் களத்தில் இறங்காமல் இருக்க முடியுமா? 

 எல்லோருக்குமான முதலமைச்சர்தானே? அதனால்தான் துயர சம்பவம் அறிந்ததுமே அந்த மாவட்டத்துக்காரர் செந்தில்பாலாஜி விரைந்து சென்று நடவடிக்கைகள் எடுத்தார்.  இரவோடு இரவாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் முதலமைச்சர்.  

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சியினரும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, உதவிகள் வழங்கி வருகின்றனர்.

அரசியல் என்பது எல்லோருக்கும் துணை நிற்பது.  இது கூட தெரியாத தவெகவினர்,  வேலுச்சாமிபுரம் சம்பவம் நடந்ததும் உடனே ஓடோடிச்சென்று முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் நடவடிக்கைகளில் இறங்கியது ஏன்? என்று சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.  

இதைச் செய்யாமல் இருந்தால் ஏன் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கலாமே தவிர, மக்கள் துயரத்தில் இருக்கும் போது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தது தவறு என சொல்லும் இவர்களை என்னவென்று சொல்லுவது?

இத்தனை நடந்தும், விஜய்க்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவேயில்லை.  அதனால்தான் துயரம் சம்பவம் நடந்தும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் கரூரில் இருந்து புறப்பட்டு நேரடியாக சென்னைக்கு சென்றுவிட்டார். 

 விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இது குறித்து கேள்விகள் கேட்டபோதும் கூட, இந்த துயர சம்பவம் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்ல மனமில்லாமல் ஓடியதும், அதற்கப்புறமும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல்,  தப்பிக்க நினைத்து நீதிமன்றம் செல்வதும் இன்னமும் விஜய்க்கு அரசியலும் தெரியவில்லை, தமிழ்நாட்டு மக்களின் மனநிலையும் புரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.


வர்றேன்’ என்றவர் பேக்கப் என ஓடினார்!


எந்தக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல், தான்தோன்றித்தனமாக, அராஜகத்தை வழக்கமாகக் கொண்டு நடிகர் விஜய் தரப்பால் நடத்தப்பட்ட கூட்டத்தில் சிக்கி 39 உயிர்கள் பரிதாபமாக இறந்துள்ளன.

இந்த நாட்டில் இலட்சக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் கூடிய பல மாநாடுகள் நடந்துள்ளன.

இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் கோவில் திருவிழாக்கள் நடந்துள்ளன. அங்கெல்லாம் நடைபெறாத விபத்து, இது போன்ற வேன் பரப்புரையில் நடந்ததற்கு என்ன காரணம்?

இக்கூட்டத்தை நடத்தியவர்களின் பொறுப்பற்ற தன்மையும், தன்னை ஏதோ பெரிய அவதாரமாகக் காட்டிக் கொள்ளும் ஆணவ எண்ணமும்தான் இத்தகை உயிர்களைக் குடித்துள்ளது.


தனது சுயநலத்துக்காக சொந்தக் கட்சிக்காரர்களை, ரசிகர்களை அந்த விளம்பர வெறி தின்றுள்ளது.

அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்று பார்ப்பது காவல் துறையின் கடமை மட்டுமல்ல, நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் அந்த பொறுப்பு வேண்டும்.


அதனால் தான் மாநாடுகளை, பொதுக்கூட்டங்களை நடத்துபவர்கள் அவ்வளவு முன்னெச்சரிக்கைகளைச் செய்கிறார்கள். கூட்டத்துக்கு, மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை முதலில் மதித்து, அவர்களுக்கான இருக்கைகளை, தேவைகளைச் செய்வது என்பது கூட்ட ஏற்பாட்டாளர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.


காவல் துறை, கட்டுப்பாடுகள் போடுவது அடக்குமுறையாக அல்ல, அசம்பாவிதம் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்காகத்தான். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கும் போடப்படுகிறது.

மாநிலத்தை ஆளும் தி.மு.க.வும், ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வும் நடத்தும் கூட்டங்களும் முறையான அனுமதி பெற்றே நடத்தப்படுகிறது.


பிரதமர் வந்தாலும், முதலமைச்சர் வந்தாலும் இதே கட்டுப்பாடுகள்தான் விதிக்கப்படுகிறது.

ஆனால் ஏதோ தனக்கு மட்டும் இப்படி கட்டுப்பாடுகள் விதிப்பதாக விஜய், பொய் சொன்னார். கட்டுப்பாடுகளைப் போட்டால், 'பயந்துவிட்டீர்களா?' என்று அவரே உளறிக் கொள்கிறார்.

நெருக்கமான தெருக்களைக் குறிபார்த்து கேட்கிறார்கள்.


குறைவான ஆட்கள் வந்தாலும் நிறைய வந்தது போல காட்ட நினைக்கிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத, பெரிய சாலைகளைக் கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். அங்கே கூட்டம் கூட்டிக் காட்ட முடியாது அவர்களால்.


காலையில் 8.45 வருவதாக அறிவித்து மதியம் 3 மணிக்கு நாமக்கல்லுக்கும், மதியம் 12 மணிக்கு வருவதாகச் சொல்லி இரவு 7 மணிக்கு கரூருக்கும் வந்துள்ளார் விஜய். தனது ரசிகர்கள் பசியோடு காத்திருப்பதைப் பார்க்கும் குரூர மனோபாவம் இது. இவைதான் இந்த மாபெரும் பேரழிவுக்குக் காரணம்.

தனக்கும் கட்டுப்பாடு கிடையாது, அரசாங்க கட்டுப்பாட்டுக்கும் அடங்க மாட்டேன் என்று நினைப்பவர்கள் நீதிமன்றங்களுக்காவது அடங்கி இருக்க வேண்டும். விஜய் கட்சி சார்பில் ஒரு நபர், உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். நாங்கள் அனுமதி கேட்கும் போது பாரபட்சம் இல்லாமல் அனுமதி தர வேண்டும் என்று கேட்டார்.


“கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படி சொல்ல முடியும்?” என விஜய் வக்கீல் கேட்டார்.


“இது போன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். ‘ஆம்’ என்று அரசு தரப்பின் சார்பில் சொல்லப்பட்டது. “முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல.


பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும். தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்” என்று நீதிபதி கடுமையாக எச்சரிக்கை செய்தார். ‘சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா?


இல்லையென்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும்’ எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

‘கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என கோரிக்கை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருக்கலாமே?’ என நீதிபதி அறிவுறுத்தினார்.

திருச்சி பரப்புரையின் போது விஜய் ரசிகர்களின் செயல்களை புகைப்படமாகவும் காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.


அதனை பார்த்த நீதிபதி, “இவர்கள் இது போன்று உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இதனை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் பிறகும் விஜய் தரப்பு திருந்தவில்லை.


ஊர்வலத்துக்கும், வேன் பிரச்சாரத்துக்கும், பொதுக் கூட்டத்துக்கும், மாநாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத கும்பலாக அது இருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் விஜயின் பஸ்ஸை சுற்றி ஊர்வலமாக வருகிறார்கள்.

பேசும் இடத்தில் பார்க்க வருபவர்களுக்கும், இந்த பஸ்ஸோடு நடந்து வருபவர்களுக்கும் ஏற்படும் தள்ளுமுள்ளு வழக்கமானதாக ஆகிவிட்டது. இவர்களை ஒழுங்குபடுத்தினால், காவல் துறை மீது பாய்கிறார்கள்.

இந்த களேபரங்கள் எதையும் விஜய் கண்டு கொள்வது இல்லை. அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுகிறார்கள் சிலர். அதைக் கண்டு கொள்ளாமல் பேசுகிறார்.

ஆம்புலன்ஸ்சில் அவர்களை தூக்கிச் செல்லும் போது, இவர் பஸ்ஸில் கிளம்பி விடுகிறார்.


அவரது பஸ்ஸை விரட்டி வரும் இரண்டு பைக்குகள் இவரது பஸ்ஸுக்குள் விழுகிறது. அதை குனிந்து பார்த்து விட்டும் நிற்காமல் புறப்படுகிறார்.


50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மரணத்தின் எண்ணிக்கை முப்பதைக் கடந்த பிறகும் திருச்சியில் இருந்து சென்னை புறப்படுகிறார் விஜய். விமான நிலையத்தில் ஊழியர்களுக்கு செல்பி எடுக்க சிரித்தபடி போஸ் கொடுக்கிறார்.


‘நான் வர்றேன்’ என்றவர் ஓடுகிறார். ‘எங்கே விஜய்?’ என்று கரூரில் அவர்களது ரசிகர்களே தேடுகிறார்கள்.


நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பிறகும், அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதால்தான் இத்தனை உயிர்ப்பலிகள். இத்தகைய ஒழுங்கீனத்துக்கு தரப்பட்ட விலை, 39 உயிர்கள் என்றால் அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?

அவர்களுக்கு மனச்சாட்சி இருக்குமா? ‘கட்சி’ என்பதே கால்ஷீட் ஆகிவிட்டதால், மரணங்களும் சூட்டிங்குகளாக அவரால் பார்க்கப்படுகின்றன.


தனது ரோல் முடிந்ததும் ‘பேக்கப்’ ஆவது தானே வழக்கம்?!



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை