இரும்புத் திரை நாடு பயணம்!

 உலகம் சுற்றும் திராவிடம்-14.

                                                        -கோவி.லெனின்

சோவியத் யூனியனுக்கு பெரியார்  கருங்கடலில் பயணிக்க வேண்டும். சிட்செரின் என்ற நீராவிக் கப்பல் தயாராக இருந்தது. 

அதில்தான் பயணம். மீண்டும் ஒரு கரை தெரியா பயணம். இந்த முறை  கடல் காய்ச்சலால் பெரியார் அவதிப்பட்டார். 

 ஒருவழியாக  கருங்கடலைக் கடந்து ஒடெஸ்ஸா துறைமுகம் வந்தது நீராவிக் கப்பல். அங்கிருந்து கீவ் நகருக்கு ரயிலில் சென்றார்கள். பிப்ரவரி 14ந் தேதி சோவியத் யூனியன் (ரஷ்யா) தலைநகர் மாஸ்கோவை அடைந்தார் பெரியார். .

இரும்புத்திரை நாடு என்று சோவியத் யூனியன் பெயர் பெற்றிருந்தது. மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவோ, அமெரிக்காவைப் போலவோ உள்நாட்டு விவரங்கள் சோவியத் யூனியலிருந்து வெளியே கசியாது.

 லெனின் நடத்திய புரட்சிக்குப்  பிறகு அமைந்த கம்யூனிச அரசை அவர் மறைவுக்குப் பிறகு, ஜோசப் ஸ்டாலின் வழிநடத்திக் கொண்டிருந்த காலம் அது.

திரைக்கு முன்பும் பின்புமான சோவியத் யூனியனை நேரில் காண வந்திருந்தார் பெரியார். அவரின் பயணத்திற்கேற்ப உதவி செய்வதற்கும் மொழிபெயர்ப்பதற்குமான ஆட்கள் ரஷ்யாவில் இருந்தனர்.

அதனால், தன் பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதை நிறைவேற்றும் ஆர்வம் பெரியாரிடம் இருந்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் எனும் பழமையான ரஷ்ய நகரம் லெனின்கிராடு என்று பெயர் மாற்றத்துடன் சமூக மாற்றமும் கண்டிருப்பதைப் பெரியார் கவனித்தார். நாத்திகர் சங்கத்துடன் இணைந்து தொழிலாளர் சமூகத்தை சந்தித்து கலந்துரையாடினார். 

குளிருக்கேற்ற உடையும், பனிக்குல்லாவும் அணிந்து தாடியுடன் இருந்த பெரியாரிடம் ஒரு சிறுவன், “நீங்க இந்தியாவிலிருந்து வரீங்களா? ” என்று கேட்டான். “ஆமாம் என்றார் பெரியார். “உங்க நாட்டுல ஏழை-பணக்காரன்னு ரெண்டு வகை மக்கள் இருப்பாங்களா?” என்று கேட்டான். “ஆமாம்.. ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் எல்லாம் உண்டு” என்றார் பெரியார். 

“எங்கள் நாட்டில் அதெல்லாம் கிடையாது. எல்லாரும் சமம்” என்றான் சிறுவன் பெருமிதத்துடன்.

 சொத்துடைமை-நிலவுடைமை இல்லாத எல்லாருக்கும் எல்லாம் என்கிற பொதுவுடைமைக் கொள்கையைத் தவிர வேறு எதுவும் அந்த சிறுவனுக்குத் தெரியாது.

 அதனால்தான், உலகில் ஏழைகள் பணக்காரர்கள் என்று இருவகையாக மக்கள் இருக்கிறார்கள் என்பது அந்த சிறுவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏழை-பணக்காரர்கள் இல்லாத ஒரு நாடு இந்த உலகத்தில் இருக்கிறது என்பது பெரியாருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அஜர்பைஜான் இன்று தனி நாடு. அப்போது சோவியத் யூனியனில் ஒரு பகுதி. அங்கு பூமிக்கடியில் இருந்து எண்ணெய் எடுக்கும் வயல்களை நேரில் போய் பார்வையிட்டார் பெரியார்.

  மாஸ்கோ நகரில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தியாகும் தொழிற்சாலைக்குப் பெரியாரை அழைத்துச் சென்றனர். “எங்கள் நாட்டில் எல்லாமும் அரசாங்கத்துக்கு உரிமையானது. அவையெல்லாம் மக்களுக்குப் பயன்படக்கூடியது” என்றார் பெரியாருடன் வந்த வழிகாட்டி.

மாஸ்கோ செஞ்சதுக்கம் பெரியாரை ஈர்த்தது. அங்கேதான் ரஷ்ய புரட்சியை தலைமையேற்று நடத்திய விளாடிமீர் இல்யீச் லெனின் உடல் பதப்படுத்தப்பட்டு கண்ணாடிப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

 நிம்மதியாக உறங்குவது போன்ற லெனின் உடலை இப்போதும் ரஷ்யாவுக்கு செல்பவர்களால் காண முடியும். 1924ல் லெனின் இறந்தார். 6 ஆண்டுகள் கழித்து அவரது உடலைப் பெரியார் பார்த்தார். “பொணத்தை வீட்டுக்குள்ள வைக்கக்கூடாது. 

பொழுது சாயுறதுக்குள்ள கொண்டு போய் எரிச்சிடணும்” என்கிற மண்ணிலிருந்து சென்றவருக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு தலைவரின் உடலை உறங்குவது போன்ற தோற்றத்தில் பார்ப்பது வியப்பாக இருந்தது.

கூட்டுறவு முறையில் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள், கூட்டுறவு முறையில் நடைபெறும் பண்ணை விவசாயம் எல்லாவற்றையும் பெரியார் பார்த்தார். பண்ணை வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார்

“எல்லா நாளும் வயல் வேலைதானா?” என அவர் கேட்டதற்கு, “எங்களுக்கும் வீக் எண்ட்  உண்டு” என்றார் ஒருவர்.

வாரத்தில் ஐந்து நாட்கள் வயலில் வேலை செய்யும் அவர்களில் சிலர், தங்களுக்கான விடுமுறை நாட்களில் நீதிபதிகளாக செயல்படுவதை வியப்புடன் அறிந்தார் பெரியார். 

ரஷ்ய பண்பாட்டில் நீதிமன்றங்கள் அனுபவம் வாய்ந்த உள்ளுர் பெரியவர்களைக் கொண்டு ஜூரி  என்ற முறையில் உருவாக்கப்பட்டிருந்தது. 

புரட்சியில் மலர்ந்த சோவியத் யூனியனில் கட்டப் பஞ்சாயத்து போல் இல்லாமல், பழைய பண்பாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாக மக்களின் பங்களிப்புடனான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அங்கே நீதி எப்படி வழங்கப்படுகிறது என்பதை பெரியார் உன்னிப்பாகக் கவனித்தார்.

(சுற்றும்)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி