2,000 ஆண்டுகளுக்கு முன்பே கணினி
'ஆண்டிகிதேரா' !
பழங்கால கிரீஸின் 'ஆண்டிகிதேரா மெக்கானிசம்'
பழங்கால கிரீஸில் வெண்கலத்தால் செய்யப்பட்ட விசித்திரமான இயந்திரம், "ஆண்டிகிதேரா மெக்கானிசம்" (Antikythera Mechanism).
இது நவீன கணினிகள் பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சூரியன், சந்திரன் மற்றும் கோள்களின் இயக்கத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட ஒரு 'அனலாக் கணினி'.
ஆனால், இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்ட இந்த இயந்திரம், பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே செயலிழந்து இருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் புதிய ஆய்வில் வெளியாகியுள்ளது.அர்ஜென்டினாவின் மார் டெல் பிளாட்டா தேசிய பல்கலை. விஞ்ஞானிகள், இந்தச் சிதைந்த பாகங்களைக் கணினி மென்பொருள் மூலம் டிஜிட்டல் முறையில் மீண்டும் உருவாக்கி சோதனை செய்தனர். அவர்களது ஆய்வின்படி, இந்த இயந்திரம் தோல்வியடைய அதன் வடிவமைப்பில் இருந்த குறைகள் காரணமல்ல; மாறாக, பற்சக்கரங்களை இணைப்பதில் ஏற்பட்ட மிகச்சிறிய 'தயாரிப்புப் பிழைகளே' காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் ஒரு கப்பல் விபத்தில் சிக்கி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீருக்குள் கிடந்தது. இதனால் இதன் வெண்கல பற்கள் தேய்ந்து, துருப்பிடித்து உருமாறிவிட்டன.
நவீன 3D எக்ஸ்-ரே மூலம் இதைப் பார்த்தாலும், துருவினால் ஏற்பட்ட சிதைவுகளுக்கும், தயாரிப்பாளர் செய்த சிறு பிழைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவது சவாலாக உள்ளது.
பற்சக்கரங்களின் பற்கள் முக்கோண வடிவிலா அல்லது சதுர வடிவிலா என்பது பெரிய சிக்கல் இல்லை. ஆனால், இரண்டு பற்சக்கரங்களுக்கு இடையே உள்ள இடைவெளி (Spacing) ஒரு மில்லிமீட்டர் மாறினாலும் இயந்திரம் 'ஜாம்' ஆகிவிடும்.
பற்களின் உராய்வினால் வேகம் மாறுபடுவதால், வானியல் நிலைகளைக் காட்டும் முட்கள் சீராக நகரால் அவ்வப்போது அதிர்வது போலத் தோன்றும். ஒரு பற்சக்கரத்தின் அச்சு சிறுதளவு விலகி இருந்தாலும், அது சுழலும் போது மற்ற எல்லா பற்சக்கரங்களையும் அப்படியே உறைய வைத்துவிடும்.
பெரும்பாலான டிஜிட்டல் சோதனைகளில், இந்த இயந்திரம் சில சுழற்சிகளிலேயே நின்றுவிட்டது. இருப்பினும், இது மாபெரும் தோல்வி என்று கூறிவிட முடியாது.
ஒருவேளை இது கடலில் மூழ்காமல் இருந்திருந்தால், அந்த காலக் கலைஞர் இதன் பிழைகளைத் திருத்தியிருக்கலாம். அல்லது, இது வானத்தை நேரடியாகப் பார்க்காமல், மாணவர்களுக்குப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை விளக்கிக் காட்டும் ஒரு கருவியாகக்கூட இருந்திருக்கலாம்.
எது எப்படியோ 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு நுணுக்கமான இயந்திரத்தைச் சிந்தித்த மனித மூளையின் ஆற்றல் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
பூமியைத் தாக்கும் விண்வெளிக் கழிவுகள்
நிலநடுக்க மானிகள் மூலம் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம்
நிலநடுக்க மானிகள் மூலம் விண்வெளிக் கழிவுகளின் ஒலி அதிர்வுகளைக் கண்காணிப்பதன் மூலம், அவை பூமியில் விழும் பாதையை ரேடாரை விடத் துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் செயற்கைக்கோள் பாகங்கள் மற்றும் விண்வெளிக் கழிவுகள் எங்கே விழும் என்பதைக் கண்டறிவதில் விஞ்ஞானிகள் இப்போது ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
பொதுவாக ரேடார் கருவிகள் மூலம் கண்காணிக்கப்படும் இந்த விண்வெளிப் பொருட்கள், வளிமண்டலத்திற்குள் நுழைந்த பிறகு அவற்றின் பாதையைத் துல்லியமாகக் கணிப்பது கடினமாக இருந்தது.இதற்குத் தீர்வாக, நிலநடுக்கங்களை அளவிடப் பயன்படும் 'சீஸ்மோமீட்டர்' (Seismometer) கருவிகளைப் பயன்படுத்தி, விண்வெளிக் கழிவுகள் உருவாக்கும் ஒலி அதிர்வுகளை (Sonic Booms) வைத்து அவற்றின் பாதையைத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒலி அதிர்வுகள் மூலம் துல்லியக் கணிப்பு 2024-ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியா வான்பரப்பில் சீனாவின் 'ஷென்சோ-15' விண்கலத்தின் ஒரு பகுதி கட்டுப்பாடின்றி நுழைந்தபோது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 1.5 டன் எடை கொண்ட அந்தப் பகுதி வளிமண்டலத்தில் உராய்ந்து பல துண்டுகளாக உடைந்தபோது பயங்கரமான ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தியது.
ரேடார் கணிப்புகளைக் காட்டிலும், நிலநடுக்க மானிகள் பதிவு செய்த தரவுகள் அந்தப் பொருளின் பாதையை சுமார் 30 கிலோமீட்டர் தள்ளித் துல்லியமாகக் காட்டின.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதன்மை ஆய்வாளர் பெஞ்சமின் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர், 120-க்கும் மேற்பட்ட நிலநடுக்க மானிகளில் பதிவான தரவுகளைக் கொண்டு இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
ஏன் இந்தத் தொழில்நுட்பம் அவசியம்? கடந்த பத்து ஆண்டுகளில் விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) போன்ற நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன.
இவை அனைத்தும் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்று நிறுவனங்கள் கூறினாலும், சில நேரங்களில் எஞ்சிய பாகங்கள் பூமியில் விழுந்து பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இவை பறந்து கொண்டிருக்கும் விமானங்களின் மீது மோதக்கூடும் என்ற அச்சம் விஞ்ஞானிகளிடையே நிலவுகிறது.
இத்தகைய சூழலில், விண்வெளிப் பொருட்கள் விழும் இடத்தை சில நிமிடங்களுக்கு முன்பே துல்லியமாகக் கண்டறிவது, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் ஆபத்துகளைக் குறைக்கவும் உதவும்.
எதிர்காலத் திட்டங்கள் இந்த புதிய முறையைப் பயன்படுத்தி, டெக்சாஸில் தோல்வியடைந்த ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் சோதனைகளின் சிதறல்களையும் விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்காணித்துள்ளனர்.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக விழ வைக்கும் நாசாவின் திட்டத்திற்கும் இந்தத் தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தத் தரவுகளை ஆய்வு செய்ய காலதாமதம் ஆனாலும், எதிர்காலத்தில் காற்றின் திசை மற்றும் வேகம் போன்ற காரணிகளை இணைத்து, விண்வெளிப் பொருட்கள் விழும் பாதையை இன்னும் சில நொடிகளில் கணக்கிடும் வகையில் மென்பொருள்களை மேம்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
பூமியின் சுற்றுப்பாதை பெருகிவரும் செயற்கைக்கோள்களால் நெருக்கடியாகி வரும் நிலையில், இந்த 'ஒலி அதிர்வு' கண்காணிப்பு முறை விண்வெளிப் பாதுகாப்பில் ஒரு முக்கிய அங்கமாக மாறும் என்று ஆய்விதழான 'சயின்ஸ்' (Science) குறிப்பிட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் .
‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்.
நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஜனவரி 23, 1897
இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா
இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.
இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள “பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்” தொடங்கினார்.
பின்னர், 1913ல் “கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்” தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார்.
1915 ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்த அவர், “சி.எஃப் ஓட்டன்” என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
பின்னர், “ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம்.
இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.
பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது,
இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.
‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது’ எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது.
“கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.
சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர்.
இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சியை” தொடங்கியது மட்டுமல்லாமல், “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார்.
1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார்.
இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.
1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், “நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை” என முழங்கினார்.
போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார்.
ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.
இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.
‘பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
‘இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார்.
ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார்.
எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.
1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார்.
பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார்.
1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார்.
பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது.அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார்.
அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.
ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது.
இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.
எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது.
சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.











