ஒவ்வொரு நாளும்......
🔹 கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக கனமழை. வேடசந்தூர் அருகே சூறாவளி காற்றில் பறந்த தகர மேற்கூரையால் போக்குவரத்து பாதிப்பு.
🔹 சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தல். வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்.
🔹 சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி 18 வயது இளம்பெண் கொடூரக் கொலை. 2 பேர் கைது, மேலும் 5 பேரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரம்.
🔹 காவிச்சாயம் பூசப்பட்ட வள்ளுவர் சிலைக்கு ஆளுநர் மரியாதை செலுத்தியதற்கு வலுக்கும் கண்டனம். வள்ளுவரின் சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதா என தவெக, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக கேள்வி.
🔹 வெளியூர் சென்றவர்கள் ஒட்டுமொத்தமாக சென்னை திரும்புவதால், விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு. மதுரையில் இருந்து சென்னை வர 17 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பால் பயணிகள் அதிர்ச்சி.
🔹 மானாமதுரை அருகே திருப்புவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடல். வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதி.
🔹 பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பம். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவு.
🔹 தஞ்சாவூரில் மூன்றரை வயது குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய். பலத்த காயமடைந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
🔹 கும்பகோணம் அருகே அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை. பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைக்க வலியுறுத்தி உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்.
🔹 சென்னை அருகே, ஹூண்டாய் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து. 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்.
🔹 சுமார் 20 லட்சம் மாணவர்களின் சி.பி.எஸ்.இ., ப்ளஸ் டூ விடைத்தாள்கள் பொது தளத்தில் வெளியானதால் அதிர்ச்சி. இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சி.பி.எஸ்.இ., விளக்கம்.
🔹 மாணவர்களின் விடைத்தாள்கள் பொது தளத்தில் வெளியானது ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஊழல் என விமர்சனம். ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்.
🔹 இமாச்சலப் பிரதேசத்தில் மலையில் இருந்து, 500 மீட்டர் பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்து. 8 பேர் சடலமாக மீட்பு.
🔹 பிரான்ஸில், சாம்பியன்ஸ் லீக் வெற்றிக் கொண்டாட்டத்தில் பயங்கர வன்முறை. 264 கார்கள் தீக்கிரை, 780 பேர் கைது.
🔹 மியான்மரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 55 பேர் உயிரிழப்பு. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம், மீட்புப் பணிகள் தீவிரம்.
முப்படைத் தளபதி
முப்படை தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து நாட்டின் 3-வது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றார்.
இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார்.
பல பிரிவுகளில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா நிலவரங்களை இவர் நன்கு அறிந்தவர் என்பதால், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைமை செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
புதிய கடற்படை தளபதி:
இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஓய்வு பெற்றதையடுத்து, நாட்டின் 27-வது கடற்படை தளபதியாக அட்மிரல் கிருஷ்ண சுவாமி நாதன் நேற்று பொறுப்பேற்றார்.
இவர் கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு சேர்ந்தார்.மக்களை ஏமாற்றுவது முதலமைச்சர் விஜய்க்கு எளிமையானது. அரிதாரம் பூசி சினிமாவில் வென்றதைப் போலவே அரசியலிலும் வென்ற அவர், வெற்றிக்குப் பிறகும் மக்களை ஏமாற்றுவதை மட்டும் விடவில்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக தூக்கிப் போட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்து விட்டார் விஜய்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பதைப் போல அவர் இட்ட முதல் கையெழுத்தே ஏமாற்றுக் கையெழுத்து ஆகும். இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை மின்சாரத்துக்கு கட்டணமில்லை என்று அரசாணை வெளியிட்டார் விஜய். இதுதான் அவரது முதல் கையெழுத்து ஆகும்.
ஆனால், தேர்தலுக்கு முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தகுதி வாய்ந்த வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்னது வேறு. வெற்றி பெற்றதற்கு பிறகு செய்தது வேறு.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று இருக்கிறது. அதைப் பற்றி எதுவுமே சொல்லாமல் ஏமாற்றியது விஜய் அரசு. அனைத்துத் தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததும், ஏற்கனவே இருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட்டுக்கு கட்டணமில்லை. 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால் 200 யூனிட்டுக்கு கட்டணமில்லை என்று இப்போது சொல்லி இருக்கிறார்கள்.

இது விஜய் கொடுத்த வாக்குறுதி அல்ல. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லாமின்சாரம்' என்பதுதான் அவரது வாக்குறுதி ஆகும். 500 யூனிட்டுக்குள், 500 யூனிட்டுக்கு மேல் என்று அவர் தனது அறிக்கையில் சொல்லவில்லை. இது முதல் ஏமாற்று ஆகும். அதாவது முதல் கையெழுத்தே முதல் ஏமாற்று ஆகும்.
இப்போது அடுத்ததாக ஒட்டுமொத்தமாக விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக விஜய் கொடுத்த வாக்குறுதி என்ன? “5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயி களுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் பயிர்க்கடனில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்”என்று விஜய் அள்ளி விட்டார். அவரது வாக்குறுதிகளில் இதுதான் மிகப்பெரியதாகப் பேசப்பட்டது.
முதலமைச்சர் ஆனதும் விஜய் போட்டுள்ள உத்தரவில் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் மனதில் வேதனையை விதைக்கப் பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறுவிவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன்
தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் இருந்தால் அந்தக் கடனில் 50 விழுக்காடு வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த கடன் தள்ளுபடி திட்டமும் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஒட்டுமொத்தமாக ஏமாற்றி இருக்கிறார் விஜய்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டும்தான் இதுபொருந்தும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு இதுவும் பொருந்தாது. அவர்களுக்கு எந்த சலுகையும் இல்லை.
இந்த வகையில் மொத்தமே ரூ.2 ஆயிரம் கோடி தான் தள்ளுபடி செய்துள்ளார் விஜய்.
தனது ஆட்சி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க. உறுப்பினர்களை பதவி விலக வைத்து தனது கட்சியில் இணைத்து கீழ்த்தரமான அரசியலை நடத்தி வருகிறார் விஜய். அவரது ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சிகளால் கூட இந்த கீழ்த்தரமான செய்கைகளைஏற்க முடியவில்லை.
எனவே, மக்களின் கவனத்தை திசை திருப்பு வதற்காக பயிர்க்கடன் அறிவிப்பை விஜய் செய்துள்ளதாகவே தெரிகிறது. அதையும் முறையாகச் செய்திருந்தால் பரவாயில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லப்பட்ட அறிவிப்பு மிகமிக மோசடியானது. நிலத்தை அளவுகோலாக வைத்து பயிர்க்கடன்கள் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்தை அளவுகோலாக வைத்து கடன்களை தள்ளுபடி செய்வது தவறு.

தேர்தல் காலத்தில் சொல்லப்பட்ட வாக்குறுதியை நிறை வேற்றுங்கள் என்று கொந்தளித்து வருகிறார்கள் விவசாயிகள். வயலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள் விவசாயிகள். “ஏமாற்றாதே, ஏமாற்றாதே” என்று முழங்கி வருகிறார்கள்.
பாகுபாடு இல்லாமல் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கத் தொடங்கிஇருக்கிறார்கள் விவசாயிகள் அனைத்து வகை பயிர்க்கடன்களையும்தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
‘நான் விவசாயி அல்ல, ஆனாலும் விவசாயிகளின் வலியைப் புரிந்தவன்’ என்று சினிமா டயலாக் விட்டார் விஜய். இன்று அவரது அரசாணை, ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் வலி ஏற்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் விஜய்யின் அரிதாரம் கலைந்து கொண்டே வருகிறது.