இதுதான் கலைஞரின் டானிக்!
சூன் 3 – - சூல் கொண்ட சூரியன் தமிழினத் தலைவர் –
- முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். இது 103 ஆவது பிறந்தநாள்.
இது தனிமனிதனின் பிறந்த நாள் அல்ல. ஒரு தலைவரின் பிறந்தநாள். ஒரு தத்துவத்தின் பிறந்தநாள். கோடிக்கணக்கான தமிழர்களை தலை நிமிர வைத்த நெம்புகோலின் பிறந்தநாள். உணர்ச்சியால் சூடாக்கிய சூரியனின் பிறந்தநாள்.
இலக்கியத்தால் குளிர வைத்த தமிழ்நிலவின் பிறந்தநாள். அவர் மறையவில்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் மாமனிதரின் உருவில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
பெரியாரையும் அண்ணாவையும் நினைவூட்டும் நிழலாக கலைஞர் இருந்தார்.
அந்த மூவரையும் நினைவூட்டும் நம்பிக்கையாக இன்றைய தலைவர் இயங்கி வருகிறார். பெரியாராக இருந்தாலும் அண்ணாவாக இருந்தாலும் கலைஞராக இருந்தாலும் விதையை அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் சேர்த்து விதைத்துச் சென்றவர்களே தவிர, தன்னோடு அனைத்தையும் முடித்துக் கொண்டவர்கள் அல்ல.
அவர்கள் விதைத்த விதைக்குள் இருப்பது திராவிடப் பெருநெருப்பு. தமிழ் உயிர்த்துடிப்பு. இரண்டுக்கும் எப்போதும் அழிவில்லை. அதனை அழிக்க நினைத்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்துக்கு முகவரிகள் கூட இருக்காது. அதுவே முழு உண்மை.
வயது முதிர்ச்சியின் காரணமாக கலைஞர் அவர்கள் கோபாலபுரத்தில் ஓய்வு எடுத்தபோது, நினைவாற்றல் கூட குறைந்து வந்தது. அப்போதும் எழுதச் சொன்னால், ‘அண்ணா’ என்று எழுதினார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

நான் இப்படித்தான் இருப்பேன் என்பதை 1976 ஆம் ஆண்டு கலைஞர் எழுதி இருக்கிறார் என்பதைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
6.1.1976 ‘முரசொலி’யில் கலைஞர் எழுதுகிறார்: ‘‘மரணப்படுக்கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால் என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளை ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அம்மா, அப்பா என்று சொல்லி என் உயிர் பிரியப் போவதில்லை. அண்ணா, அண்ணா என்று சொல்லித் தான் இந்த உயிர்த்துடிப்புகள் இறுதியாக அடங்கும்” என்று எழுதி இருக்கிறார் கலைஞர். 1976 ஆம் ஆண்டு எழுதியது தான் 2018 இல் நடந்தது.
இதுதான் சாதாரண மனிதனுக்கும் இலட்சியவாதிக்கும் உள்ள வேறுபாடு. இலட்சியவாதி, தனது கொள்கைகளை மட்டுமல்ல; நடத்தைகளையும் தான் நினைப்பதைப் போலவே தீர்மானிக்கும் சக்தி படைத்தவன்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா மறைந்த போது, ‘இரவலாக இதயத்தைத் தந்திடண்ணா, நான் வரும்போது கொண்டு வந்து உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா’ என்பது உச்சகட்ட கற்பனைக் கவி வரிகள்.
கடற்கரையில் அண்ணாவுக்கு அருகில் கலைஞருக்கும் இடம் பெற்றுத் தந்ததன் மூலம் மெய்ப்பித்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின். இவை வரலாறு மட்டுமல்ல. வரலாற்றின் பெருமைகள் ஆகும்.
கலைஞர், பல வெற்றிகளை உருவாக்கித் தந்தவர்.
தோல்விகளில் இருந்து
மீட்டுத் தந்தவர். அவரது வாழ்க்கையே இன்று நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற முடியாமல் போயிருக்கலாம்.
ஆனால் கழகம் இருக்கிறது. அந்தக் கழகம், அடுத்து வெற்றியைப் பெற்றுத் தரும் வலிமையோடுதான் இருக்கிறது. தொண்டர்களும் அதே வலிமையோடுதான் இருக்கிறார்கள்.
‘ஆளும் கட்சியாக இருக்கும் போது தி.மு.க.வுக்கு 30 பேர் தான் அமைச்சர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டனும் அமைச்சர் தான்’ என்று எதிர் முகாமைச் சேர்ந்த ஒருவர் இணையத்தில் பேட்டி அளித்துள்ளார்.
‘‘தொலைவில் வெடிச் சத்தம் கேட்கிறது. காது அதிர்ச்சி அடைகிறது. அதற்காக காது கீழே விழுந்து விடுவது இல்லை. அப்படித்தான் கழகமும்” என்றவர் கலைஞர். காது கீழே விழாது.
ஆனால் வெடிச்சத்தம் நெடு நேரம் நீடிக்காது. இத்தகைய சொற்களில்தான் கழகத்தின் உயிரும் இருக்கிறது. உடன்பிறப்புகளின் உயிரும் இருக்கிறது. இதுதான் கலைஞரின் டானிக்.
மலையில் உருட்டினாலும், விஷம் கொடுத்தாலும் பிரகலாதன் பிழைத்துக் கொள்வது புராணமாக இருக்கலாம். ஆனால் இதுதான் தி.மு.க. உடன்பிறப்பின் வாழ்க்கையும். கட்சி பெரிது என்று வாழும் கூட்டத்தை உருவாக்கியவர் கலைஞர்.
அந்தக் கூட்டத்தைத் தக்க வைத்தவர் இன்றைய தலைவர்.
கட்சி பெரிதா, ஆட்சி பெரிதா என்ற போது கட்சியைத் தலையாகவும் ஆட்சியை கிரீடமாகவும் சொன்னவரும் அவர் தான். ‘தலை இருந்தால் கிரீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் கிரீடத்தை மட்டும் வைத்துக் கொண்டு தலையைத் தேட முடியாது’ என்றார்.
இப்போது தலை என்னும் கட்சி இல்லாத கும்பலிடம் தான்
கிரீடம் சிக்கி இருக்கிறது. அதனால்தான்,
‘ஆட தெரியாமல் தெரு கோணல்’ என்று சொல்பவர் கையில் தமிழ்நாடு சிக்கி இருக்கிறது.

யார் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும் மையப் பொருளாக தி.மு.க.வே இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் நிரந்தர தலைப்புச் செய்தியாக தி.மு.க.வை ஆக்கி வைத்தார் கலைஞர். இன்றும் பலமுனைத் தாக்குதலில் தி.மு.க. இருக்கிறது. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தாக்கப்படுகிறார். எதிரிகளும் தாக்குகிறார்கள்.
பழைய நண்பர்களும் தாக்குகிறார்கள். தாக்குதலினால் ஏற்படும் பயனும் தி.மு.க.வினால் கிடைப்பது தானே?
தலைவரால் அவர்களுக்குக் கிடைத்ததுதானே?
இப்போது கலைஞர் சொல்லே நினைவுக்கு வருகிறது. ‘‘இராமன், அயோத்தியில் இருந்தவரை இராமாயணம் இராமனைச் சுற்றியே எழுதப்பட்டது. இராமன் காட்டுக்குப் போன பிறகு பரதனைச் சுற்றி எழுதவில்லை இராமாயணம்.
இராமாயணம் எழுதிய வால்மீகியும், கம்பனும், துளசிதாச ரும் காட்டுக்குப் போய் விட்டார்கள். அதைப்போலவே கழகத்தைச் சுற்றியே அனைத்தும் நடக்கிறது” என்றார் கலைஞர்.
இதுதான் கலைஞரின் டானிக்!
அவரது சொல்லை ஆயுதமாக்கி வெல்வோம்!
