நன்றியும்,நக்கலும்!

 நன்றியும்,நக்கலும்!

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் முடிந்து இருக்கிறது. முதல்வராக பதவி ஏற்ற பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசியிருக்கிறார் முதல்வர் விஜய்.


எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அவரது உரையில், எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. அதோடு அடுத்து ஆட்சி எந்த திசையில் செல்லப்போகிறது என்ற பதிலும் இல்லை.


ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதில் 100க்கும் அதிகமான குற்றங்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தவெக அரசு அமைந்த ஒரு சில நாட்களிலேயே கோவையில் 10 வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, `சிங்கப்பெண் படை’ காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மூன்று பேர் பாலியல் தொல்லை, திருவாரூரில் ஆளுங்கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர், கல்லூரி மாணவியை ஈவ்-டீசிங் செய்து இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்,

தூத்துக்குடியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமையில், பாதிக்கப்பட்ட பெண், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சொல்லித்தான் அழைத்துச் செல்லப்பட்டதாக ெசால்லியிருக்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்த எந்த கேள்விக்கும் பதில் இல்லை.


ஆனால் சட்டம், ஒழுங்கு டிஜிபியை 9 மாதமாக நியமிக்கவில்லை, போதைப்பொருள் புழக்கம் தான் இந்த பிரச்னைகளுக்கு காரணம் என்று பூசி மெழுகி இருக்கிறார் முதல்வர் விஜய்.


மேலும் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,500, மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை, ஆண்டிற்கு 6 சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட தவெக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கேள்விக்கும் ஒரு பதிலும் இல்லை.


எந்த திட்டத்திற்கும் எந்தவித டைம் லைனும் முதல்வர் விஜய் வழங்கவில்லை.

ஆனால் சிங்கப்பெண் படை, 717 டாஸ்மாக் மூடல், அம்மா உணவகங்கள் புதுப்பித்தல், போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கை, 200 யூனிட் மின்சாரம் இலவசம், சட்டவிரோதமாக செயல்பட்ட கல் குவாரிகளுக்கு சீல் வைத்தது உள்ளிட்டவை தனது 40 நாள் அரசின் சாதனை என்று அவையில் தெரிவித்து இருக்கிறார்.


மின்வெட்டு பிரச்னை கூட நிர்வாக குளறுபடி என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு சிலர் வேண்டுமென்றே சதி செய்கிறார்கள்.

இதனை தடுக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளோம். விரைவில் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்த முதல்வர் விஜய், விவசாயிகள் போராட்டத்திற்கு கூட எதிர்க்கட்சி தூண்டுதலே காரணம் என்று கூறி தட்டிக்கழித்து இருக்கிறார்.


மொத்தத்தில் முதல்வர் பதில் உரையில் பல கேள்விகளுக்கு பதிலே இல்லை.


அதை விட முக்கியமாக தனது உரையில் அவர் தெரிவித்த குட்டிக்கதையும், உரை இறுதியில் அவர் காட்டிய சைகையும், அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கும், பாரம்பரியம் மிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்புக்கும் உரித்தானது இல்லை.

வேடிக்கை பார்க்க மாட்டோம்”

உதயநிதி ஸ்டாலின் 

தமிழ்நாடு முழுவதும் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்து திராவிட இயக்க கொள்கைகளை பரப்பி, அரசியல்படுத்தும் கூட்டங்களை இளைஞர்கள் தாமாக முன்வந்து நடத்தி வருகின்றனர்.


இதில் அன்பானந்தன் அரியப்பன் என்ற இளைஞரை கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில், காவல் ஆய்வாளர் சசிகலா உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட போலீசார் நள்ளிரவு 12.30 மணியளவில் அவரை கைது செய்யச் சென்றுள்ளனர்.


ஆளும் தவெக அரசு குறித்து விமர்சித்தால் காவல்துறையை ஏவுவது, அதே ஆளும் கட்சியினர் தவறு செய்தால் வாய் மூடி மௌனமாக இருப்பது முதலமைச்சர் விஜய்க்கு வாடிக்கையாகி விட்டது.

இதே வேகத்தில், எதிர்க்கட்சிகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து தவறாக விமர்சித்து பதிவிடும் த.வெ.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?


தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி ஆட்சியையும் பிடித்துள்ள சோபா மாடல் அரசு, சட்டமன்றத்திலும் மாண்பைக் குறைத்து தவறாக நடந்து கொள்ளும் சினிமா முதலமைச்சரை வைத்துக்கொண்டு இவர்களிடம் மாண்பை எதிர்பார்ப்பதும் தவறுதான்.


இந்நிலையில் காவல்துறையின் இந்த அராஜகப் போக்கை கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,


"கழகத்தின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.


இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.


கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?


நிர்வாகத்திறனற்ற Sofa Model அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.


கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன் "

-என பதிவிட்டுள்ளார்.

முதலீடு என்றால்,,,?

திமுக காலத்தில் ரூ.3லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக தவெக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சிறுபிள்ளைத்தனமான, பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படை புரிதல் இல்லாத பச்சைப் பொய்.


என தொழில் துறை முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று (ஜூன் 23) தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த திமுக ஆட்சியில் 25 பெரிய முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறின.


அந்த 25 முதலீடுகளின் மொத்த மதிப்பு ரூ 3.3 லட்சம் கோடி என குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து இன்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது.


எல்லாவற்றுக்கும் 6 மாத அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்துகொண்டு அதன்பிறகு இது பற்றி பேசலாம். தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க த.வெ.க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்ற உண்மையை உணரக்கூடத் திறனின்றி தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது திறமையின்மையை பொய்யான குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சிப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.3லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சிறுபிள்ளைத்தனமான, பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படை புரிதல் இல்லாத பச்சைப் பொய்.


தொழில் முதலீடுகள் குறித்த இன்றைய ஆட்சியாளர்களின் அறியாமையை அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. இதில் செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தானாக குஜராத் மாநிலத்திற்கு செல்லவில்லை.


ஒன்றிய அரசால் திட்டமிட்டு தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டவை என்பதை எங்கள் தலைவர், முன்னாள் முதலமைச்சர் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலேயே பகிரங்கமான குற்றச்சாட்டாக வைத்தார், டெல்லியுடன் தொடர்ந்து போராடினார்.


இதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், திமுகவையே குற்றம் சாட்டுவதன் மூலம், தமிழ்நாட்டின் நலனைக் காவு கொடுத்து, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு த.வெ.க அரசு சேவகம் செய்வது அம்பலமாகியுள்ளது.


டொயோட்டா வாகனத் துறை நிறுவனத்தைப் பொறுத்தவரை, அவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் தங்களது முதலீட்டை செய்துள்ளனர் ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவித்துள்ளது.


என்னால் இவர்கள் சொல்லும் எல்லா பொய்களுக்கும் புள்ளிவிவரங்களோடு பதில் அளிக்கமுடியும்.


இவை எதைப் பற்றியும் புரிந்துகொள்ளக் கூடிய திறனற்ற த.வெ.க. அரசு, முந்தைய அரசு கொண்டு வந்த முதலீடுகளுக்கு மட்டும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது வெட்கக்கேடானது.


முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் எங்கள் தலைவர் தலைமையிலான அரசும் அதில் அமைச்சராக இருந்த நானும் உறுதியாக இருந்தோம். முதலீட்டு ஊக்குவிப்பைச் சுற்றியுள்ள அற்ப அரசியல் தாக்குதல்கள் மாநிலத்திற்குத்தான பாதிப்பை ஏற்படுத்தும்.


எனது பதவிக் காலம் முழுவதும் முதலீடுகள் தொடர்பாக பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டேன். தேவையானபோது மட்டுமே பதிலளித்தேன். ஆனால் எந்த முதலீட்டாளரையும் சிரமமான நிலைக்கு தள்ளாதிருப்பதில் எப்போதும் கவனமாக இருந்தேன். அமைச்சரான எனக்கு அந்த முதிர்ச்சியை வழங்கக்கூடிய தகுதியுடையவராக எங்கள் முதலமைச்சர் இருந்தார்


. புதிய ஆட்சியாளர்கள் இனியாவது இதை உணர்ந்து, ஒரு அரசியல் வாதத்தில் வெற்றி பெறுவதற்காக பல முதலீட்டாளர்களின் பெயர்களை சேற்றில் இழுத்து விடாமல் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

நேற்று முதல், பல தொழில் துறையினர் எனக்கு தொலைபேசி மூலமாக பேசி இந்த புதிய அரசின் பிரதிநிதிகள் விமர்சனங்களை கையாளும் விதமும், பொதுவெளியில் சேறு வாரி இறைக்கும் விதமும் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


உலகளாவிய முதலீட்டாளர்களின் முன்னிலையில் தமிழ்நாடு அவமானப்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் அரசியல் பார்வையோடு பார்க்காமல் மாண்புமிகு முதலமைச்சர் தொழில் துறையில் தனி கவனம் செலுத்தவேண்டும்.


இதில் அரசியல் சாயம் பூசப்பட்டால் தமிழகத்தில் நிலவிய மிகுந்த ஆரோக்கியமான முதலீட்டு சூழல் முற்றிலும் சீர்குலைக்கப்படும். இது மற்ற மாநிலங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாநிலத்தை விட்டு முதலீடுகள் வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலீடுகள் வெளியேறாமல் தடுக்க என்ன நடவடிக்கைள் எடுத்தது என்பதை விளக்க வேண்டியதே புதிய அரசின் கடமை. அதற்கு பதிலாக, முந்தைய அரசின் கடின உழைப்பின் மீது தங்களது பெயர் ஒட்டும் செயலில் அவர்கள் ஈடுபடக் கூடாது.


ஊடகங்களின் சில பிரிவுகள் மூலம் பரப்பப்பட்ட பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள், அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெறவில்லை என்பது உண்மை என்னவென்று உரக்க சொல்கிறது.


ஏனெனில் 12.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலமாக 30லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகியது திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்பது உலகம் அறிந்த உண்மை. ஆகவே தான் முக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசில் இதுவரை இந்தியாவில் எந்த மாநிலமும் நடத்த முடியாத “கன்வர்ஷன் கான்க்ளேவ்” நடத்தப்பட்டு அதில் நானே பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலமாக முதலீடு விவரங்களை எடுத்துரைத்தேன்.


இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பல இதர காரணங்களினால் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்டை வைத்துக்கொண்டு 3 இலட்சம் கோடி இழப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு. இதில் நகைப்பிற்குரிய விடயம் என்னவென்றால் அவர்களது அறிக்கையிலேயே அந்த நிறுவங்களின் முடிவுக்கு விளக்கம் உள்ளது !


முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 3 இலட்சம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ள நிலையில் எங்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளையும், 36 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.


இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்காகும். திராவிடர் மாடல் அரசு தொடர்ந்திருந்தால் இம்முறை குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும். இன்று இந்த அரசு சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளை குறைத்து தலைவர் முக ஸ்டாலினின் இந்த சாதனையை திராணியிருந்தால் முறியடித்து காட்டட்டும் பார்போம்.

இல்லை இதில் பாதியாவது செய்யட்டும் பார்ப்போம்.


உலகளாவிய முதலீடுகளுக்கான போட்டி மிகக் கடுமையானது; முதலீட்டாளர்களுக்கு பல்வேறு தேர்வுகள் உள்ளன. இந்நிலையில் இன்றைய ரீல்ஸ் மாடல் அரசு சொல்லும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்திருந்தால், இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து 2024-25ல் 11.2% ஆகவும் 2025-26ல் 13.16% ஆகவும் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கொண்ட மாநிலப் பொருளாதாரமாக நாம் உருவாகியிருக்க முடியாது.


இந்தியாவின் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ஏறத்தாழ 14.5% ஆகவும் இருந்திருக்காது. தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களுக்கும் தொழில் வளர்ச்சி கிடைத்திருக்காது. இதெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் முதலில் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை பார்த்து கற்றுக்கொண்டு அதில் 10% பணியை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் செய்தாலே தமிழகத்தில் இன்று நிலவும் அசாதாரண முதலீட்டுச் சூழல் சற்று சரியாகும்.


உண்மைகளை மறைத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்படும் அவதூறுகளால் தனிப்பட்ட முறையில் திமுக பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால், இப்படி பொறுப்பற்ற முறையில் தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு செயல்பாடுகள் மீது சேற்றை அள்ளி வீசினால் தமிழ்நாடு என்கிற இந்த மகத்தான மாநிலத்தின் வளர்ச்சிதான் பாதிக்கப்படும்.


புதிய முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு

பறிபோகும். தமிழ்நாட்டிலிருந்து வாய்ப்புகளை அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல உதவுவதே இந்த அரசின் நோக்கம் அல்ல என்று நான் இன்னமும் மனப்பூர்வமாக நம்புகிறேன்.


எங்கள் தலைவரும் அவர் வழியிலான இயக்கமும் நானும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள்.

ரீல்ஸ் மாஃபியா கோஷ்டிகளை வைத்து பொய்களைப் பரப்பி, தி.முக.வை குறை சொல்வதை இனியாவது விட்டொழியுங்கள். 2016-21 அ.தி.மு.க ஆட்சியை விட 5 மடங்கு அதிகமான முதலீடுகளை தி.மு.க அரசு ஈர்த்த நிலையில், அந்தளவில் கூட அல்ல, உங்கள் ஆட்சிக்காலத்தில் எங்களைவிட இரண்டு மடங்கு அளவிலாவது முதலீட்டை ஈர்க்க முடிகிறதா என்கிற வேலையை உருப்படியாகப் பாருங்கள்.


அர்த்தமற்ற அரைவேக்காட்டு அரசியல் காழ்புணர்ச்சியோடு குறை பேசுவதை விட்டு, கொஞ்சமாவது செயல்படட்டும் த.வெ.க. அரசு.” என தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை