தறி கெட்ட.......?
தேவையற்ற அளவில் அதிகாரத்திற்கு அடிபணியும் தமிழ்நாட்டின் காவல்துறையால், இங்கு ஊடக சுதந்திரத்திற்கான அறிகுறியே இல்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்திக் கட்டுரை வெளியாகி உள்ளது.
“காவல்துறைக்கு சொல்ல வேண்டிய ஒரு கதை இருக்கிறது” என்று தலைமையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் (20.7.2026) அதன் தமிழ்நாடு பதிப்பு ஆசிரியர் அருண் ராம் எழுதியுள்ள செய்திக் கட்டுரையின்
தமிழாக்கம் வருமாறு:–
காவல்துறைக்கு பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்தும் உரிமை உண்டு. ஆனால், விசாரணையையே தண்டனையாக மாற்றும் உரிமை இல்லை. கடந்த வாரம் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் விஜயன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, ஒரு தனிப்பட்ட விசாரணையைப் பற்றிய கேள்விகளை மட்டுமல்ல; தமிழ்நாடு அரசு ஊடகச் சுதந்திரத்தை எவ்வாறு புரிந்து கொள்கிறது என்பதையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
ஜூலை 15 அன்று, சில த.வெ.க. (TVK) சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு இழுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், காவல்துறை செய்தியாளர் விஜயனை விசாரணைக்கு அழைத்தது. அதற்கு காவல்துறை கூறிய காரணம் என்னவென்றால், ஜூலை 11 அன்று
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, அந்த செய்தி வாசிப்பாளருடன் சில வாட்ஸ்அப் தகவல்களைப் பரிமாறியிருந்தார்
என்பதே.
ஒரு பத்திரிகையாளரை விசாரணைக்கு அழைப்பதில் தவறு இல்லை. ஆனால், அந்த விசாரணை நடைபெற்ற விதம் அச்சுறுத்தும் தன்மை கொண்டதாக இருந்தது. அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசிரியர் கூறுவதன்படி, விஜயனிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தி வீட்டிற்கு அனுப்பிய பின்னரும், மீண்டும் அழைத்து அதிகாலை 2 மணி வரை கேள்விகள் கேட்கப்பட்டன.
அவரது கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு மீண்டும் வருமாறு கூறி, அவர் வந்தபின் மாலை 7 மணி வரை காத்திருக்கச் செய்தனர்.அதேபோல், எந்த ஆதாரமும் இல்லாமல், அவர் ‘மேகாலயா திட்டம்’ எனக் குறிப்பிடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் என்ற வகையில் கையொப்பமிடப்படாத ஒரு காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டது. அவர் திருநாவுக்கரசு வுடன் சில “ஆட்சேபனைக்குரிய” செய்திகளைப் பரிமாறியதாக அதில் கூறப்பட்டது. ஆனால், எதன் அடிப்படையில் அவை
ஆட்சேபனைக்குரியவை?
பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் ஒரு பகுதியாக காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், தகவல் பரிமாறிக் கொள்வார்கள், சில சமயங்களில் குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களுடனும் தொடர்பில் இருப்பது இயல்பானது. தகவல் பரிமாற்றம் நடந்தது மட்டுமே குற்றத்திற்கான சான்றாகாது.
ஒரு பத்திரிகையாளர் குற்றமற்றவரா அல்லது குற்றவாளியா என்பதை தீர்மானிப்பது விசாரணையின் கடமை. ஆனால் அந்த விசாரணை நியாயமாகவும் மரியாதையுடனும் நடைபெற வேண்டும். காவல்துறை பெரும்பாலும்
அரசியல் சூழலிலிருந்து தனித்து இயங்குவதில்லை. ஆட்சியாளர்களிடமிருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் அவர்களின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.
இந்த அரசு ஊடகங்களுடன் நேரடியாக உரையாடுவதை விட சமூக ஊடகங்கள் வழியாக தகவல் பரிமாற்றத்தை விரும்புகிறது. அது அரசின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், அதே மனப்பான்மை பத்திரிகையாளர்களை நடத்தும் முறையிலும் வெளிப்பட்டால் அது கவலைக்குரியது.
ஜூலை 10 அன்று முதலமைச்சர் கரூருக்கு சென்றபோது, செய்தியாளர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தும், நுழைவாயிலில் காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, பெரம்பலூரில் முதலமைச்சரின் முதல் தொகுதி பயணத்தின் போது, செய்தியாளர்கள் மேடையிலிருந்து மிகவும் தொலைவில் அமர வைக்கப்பட்டதால், முதலமைச்சரை சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை.
இப்போது, எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லாத ஒரு செய்தியாளரின் கைப்பேசியே விசாரணை என்ற பெயரில் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. ஊடகச் சுதந்திரம் நிலவுகிறது என்ற நல்ல பெயரைப் பெற்றிருந்த தமிழ்நாட்டிற்கு, இத்தகைய காவல்துறை நடவடிக்கைகள் நல்ல அறிகுறியாக இல்லை.
ஒரு அரசு, பிரதான ஊடகப் பத்திரிகைத்துறை தேவையற்றது என்று நினைத்தால், முதலில் பத்திரிகையாளர்கள் தாங்களே தங்களை தேவையற்றவர்களாக மாற்றிக் கொண்டார்களா என்று சிந்திக்க வேண்டும். தெருக்களில் இறங்கி, மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளைத் தேடி, சமூகத்தின் கண்ணாடியாகச் செயல்பட வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.
அதே நேரத்தில், காவல்துறையினர் தேவையற்ற அளவில் அதிகாரத்திற்கு விசுவாசமாக நடக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அளவுக்கு மீறி ‘முனைப்புடன்’ செயல்படும் போதெல்லாம், அதன் விளைவுகளை முதலில் எதிர்கொள்வது பத்திரிகையாளர்கள்தான். இது புதிய அனுபவம் அல்ல; பல ஆண்டுகளாக ஊடக வியலாளர்கள் இதுபோன்ற சூழல்களை எதிர்கொண்டுள்ளனர்.
தங்கள் செய்திகளுக்குத் தகுதியான பத்திரிகையாளர்களுக்கு எந்தச் சலுகையும் தேவையில்லை; அச்சமும் தேவையில்லை.
இவ்வாறு டைம்ஸ் ஆப் இந்தியாவில் அதன் ஆசிரியர் அருண்ராம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி (18.07.2026) நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (20.07.2026) காலை 5 மணி அளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் வருகை தந்தனர்.
காலை 6 மணி அளவில் போலீசார் ஜீ. வி. மார்க்கண்டேயனை அதிரடியாகக் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவரை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக நடைபெற்ற 9 மணிநேர விசாரணைக்கு பின் நேற்று இரவு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து நீதிபதி சுமதி முன் முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஜீ.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக போலீசார் தரப்பில் போலீஸ் காவலில் எடுத்து ஜீ.வி.மார்க்கண்டேயனை போலீசார் விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக பிரபல ஆங்கில நாளேட்டில் தலையங்கம் வெளியாகியிருந்தாது.
இதனைக் குறிப்பிட்டு , திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது
பிரபல ஆங்கில நாளேட்டின் இன்றைய தலையங்கம்.
நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.
ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

