ஏன் தேர்தல் இல்லை?
தமிழ்நாட்டில் ஏன் தேர்தல் அறிவிக்கவில்லை?
தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக உள்ளன. இதில் 6 இடங்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த தொகுதிகள். அதிமுக ஆறு எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.
இதனையடுத்து காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது இன்பதுரை தெரிவித்துள்ளார்.
அதாவது அதிமுக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் இருக்கும்போது, அவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கக்கூடாது. எனவே அந்த நான்கு தொகுதியிலும் தேர்தல் நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கரூர், விராலிமலையை சார்ந்த விஜயபாஸ்கர்களும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.இதனையடுத்து மொத்தமான ஆறு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தற்கு பின்பாக இன்பதுரை எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய அரசியல் சூழலில் தவெக தனக்கான ஆதரவு தளத்தை செயற்கையாக உயர்த்துவதற்கு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.
முதலமைச்சரே அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்புக்கு பின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன்பின்னர் 21 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கடிதம் வழங்கிய நிலையில், மீதமுள்ள நான்கு பேர் ராஜினாமா செய்தனர். எக்ஸ்பிரஸ் வேகத்தில் தவெகவில் இணைந்தனர்.
அவர்கள் சேர்ந்ததும், ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதும் தவறு. அவர் தனித்தனியாக விசாரிக்காமல் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
அதோடு மன்னிப்பு கடிதம் கொடுத்த இருவரும் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் சேர்ந்துள்ளனர்.
இது அரசியலமைப்பு சட்டத்தின் கண்களில் மண்ணை தூவுவது. இடைத்தேர்தல் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தொகுதி காலியானால் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும். சர்ச்சைக்குரிய முறையில் இருக்கும்போது தேர்தல் நடத்தக்கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு.
அதன்படி 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என மனு அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். அதோடு தொடர்ந்து பேசிய இன்பதுரை, இதில் சி. விஜயபாஸ்கர் கதை ரொம்ப மோசம்.
அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டு தன்னையே கொறடாவாக நியமித்து கூட்டம் கூட்டினார். அதன்பின்னர் பதவி போய் விடும் என்ற பயத்தில் மன்னிப்பு கடிதம் அளித்தார்.
தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இன்னொரு கட்சியில் சேர்ந்திருகிறார் சி. விஜயபாஸ்கர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இன்பதுரை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் ஆணையம் இன்று பிற மாநிலங்களுக்கு காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்தான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதே நேரம் தமிழ்நாட்டுக்கு எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக தற்போதைக்கு தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் அதிமுகவும் இடைத்தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
