உலக மக்கள் தொகை சவால்!
உலகெங்கும் வாழும் மக்களின் உரிமைகள், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ‘உலகமக்கள் தொகை தினம்'உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் ‘830 கோடியை’ கடந்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக மக்கள் தொகைப் பெருக்கத்தின் திசையைத் தீர்மானிக்கும் 8 முக்கிய நாடுகள் எவை என்ற விவாதம் தற்போது முன்னெழுந்துள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை 500 கோடியைத் தொட்டது. இந்த மைல்கல் உலக நாடுகளிடையே பெரும் விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
இந்த வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது ‘1989’ ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் ஆளும் குழு இந்தத் தினத்தை ஆண்டுதோறும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நிரந்தர நாளாக அறிவித்தது.
உலக மக்கள் தொகை கொண்ட 8 நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சமீபத்திய மக்கள் தொகை கணிப்புகளின்படி, தற்போதிலிருந்து வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் ஏற்படப்போகும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வெறும் 8 நாடுகள் மட்டுமே வழங்கவுள்ளன. அதில்,
1.இந்தியா:
சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்த இந்தியா, தற்போது 147 கோடிக்கும் அதிகமான மக்களுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகத் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதோடு, உலக வளர்ச்சிக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. நைஜீரியா:
ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த நாடு, விரைவில் அமெரிக்காவை முந்தி உலக மக்கள் தொகையில் 3-வது இடத்தைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
3.பாகிஸ்தான்:
ஆசிய பிராந்தியத்தில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருக்கும் மற்றொரு முக்கிய நாடு.
4.காங்கோ ஜனநாயகக் குடியரசு:
ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இந்நாடு, வரும் தசாப்தங்களில் மக்கள் தொகையில் இரட்டிப்பு வளர்ச்சியைச் சந்திக்கும்.
5.எத்தியோப்பியா:
கிழக்கு ஆப்பிரிக்காவில் மிக வேகமான மக்கள் தொகை வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் நாடு.
6.தான்சானியா:
வளரும் ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியலில் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் தொகையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த 8 நாடுகளில் 5 நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் வரும் காலங்களில் உலக மக்கள் தொகையின் மையப்புள்ளி ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்காவை நோக்கி நகர்வதை ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகிறது.
உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்திருப்பது மருத்துவத் துறையின் வளர்ச்சி மற்றும் மனித ஆயுட்காலம் அதிகரித்திருப்பதற்கான சான்றாக இருந்தாலும், இதனால் ஏற்படும் சவால்கள் அதிகம்.
குறிப்பாக, மேலே குறிப்பிட்டுள்ள 8 நாடுகளும் பெரும்பாலும் வளரும் அல்லது ஏழை நாடுகளாக இருப்பதால், அங்குள்ள மக்களுக்குத் தேவையான முறையான கல்வி, சுகாதார வசதிகள், குடிநீர், வேலைவாய்ப்பு மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்வது அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.






