50 ஆண்டுகளுக்கு விடிவே இல்லை!
"கடன் வாங்கும் வெற்றி தமிழகம்?"
50 ஆண்டுகளுக்கு விடிவே இல்லை''
- பேராசிரியர் பிரபாகர் விளக்கம்
தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கும், அதிகரித்து வரும் கடன் சுமைக்கும் இடையே உள்ள ஒரு சமநிலைப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் வழிகள் மற்றும் கடனைக் குறைப்பதற்கான உறுதியான திட்டங்கள் இதில் எந்தளவுக்குச் சாத்தியமாகியுள்ளன என்ற நடுநிலையான விவாதம் பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான பிரபாகர் நக்கீரன் டிவிக்கு அளித்த பேட்டியில் தமிழக பட்ஜெட் குறித்த தனது பார்வைகளை பகிர்ந்து கொண்டார்.
''தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை மேலாண்மை குறித்து பல்வேறு விமர்சனங்களும் ஏமாற்றங்களும் பரவலாக எழுந்துள்ளன. இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய ஒன்லைன் கதையாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், தமிழக அரசு இனிவரும் காலங்களில் கடன் வாங்குவதை நிறுத்தவே முடியாது என்பதை மிக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதுதான்.
தேர்தல் சமயத்திற்கு முன்பாக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடன் வாங்குவதை முற்றிலும் நிறுத்துவோம் அல்லது கடனின் அளவைக் கணிசமாகக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்திருந்தார்கள்.ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் மூன்று மாதங்களிலேயே சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்குப் புதிய கடன்களை வாங்கியுள்ளனர்.
அதுமட்டுமன்றி, இந்த நடப்பு நிதியாண்டிற்குள் மேலும் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கப் போவதாகவும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதன் மூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழகத்தால் கடன் வாங்குவதை நிறுத்த முடியாது என்ற சூழல் தெளிவாகத் தெரிகிறது.
நாம் வாங்கும் கடன்களுக்கான வட்டிச் சுமை மட்டுமே ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.மாநிலத்தின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 24% தொகை, நாம் வாங்கிய கடன்களுக்கான வட்டியைத் திருப்புச் செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
ஒன்றிய அரசிடமும் இதே போன்ற நிலை இருந்தாலும், ஒரு மாநில அரசு தொடர்ந்து இவ்வளவு பெரிய வட்டிச் சுமையைச் சுமப்பது ஆரோக்கியமானது அல்ல.
கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரங்களின்போது, கடன் வாங்கித்தான் சமூக நலத்திட்டங்களைச் செய்கிறார்கள் என்ற ஒரு எதிர்மறையான பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
ஆனால், தற்போதும் அதே கடன் வாங்கும் சிஸ்டத்தை அடுத்த 50 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
அமெரிக்கா போன்ற நாடுகள் 40 டிரில்லியன் டாலர் கடனைக் கடந்திருந்தாலும், அவர்களின் நாணயமான டாலர் உலகளாவிய ரிசர்வ் கரன்சியாக இருப்பதால் அவர்களால் பணத்தை அச்சிட்டுச் சமாளிக்க முடியும்.
ஆனால், தமிழகத்திற்கோ அல்லது இந்தியாவிற்கோ அத்தகைய வாய்ப்புகள் கிடையாது. நமது தினசரி செலவுகளுக்கே கடந்த மூன்று மாதங்களாகக் கடன் வாங்கியிருப்பது பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய அபாய எச்சரிக்கை ஆகும்'' என்றார்.