மக்கள் அடையாளம்

 தமிழ்நாடு அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கென புதிதாக "மக்கள் ஐடி" என்ற பெயரில் தனித்துவமிக்க புதிய அடையாள எண்ணை வழங்கப்போவதாக  செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மின் ஆளுமை முகமை சமீபத்தில் ஒரு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 
அதன்படி, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் ஒரு தனித்துவம் மிக்க அடையாள எண்ணை உருவாக்க விரும்புவதாகவும் அதற்கான திறன் கொண்ட நிறுவனங்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த டெண்டர் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு மக்கள் ஐடி என்ற பெயரில், இந்திய மக்களுக்கு என ஆதார் எண் இருப்பதைப் போல தமிழ்நாட்டு மக்களுக்கு என ஒரு தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியானது.


தமிழ்நாடு அரசு தற்போது அந்த டெண்டரில் முன்வைத்திருக்கும் குறிப்புகளின்படி, "மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் தகவல் தொகுப்பை தமிழ்நாடு அரசு உருவாக்க விரும்புகிறது.
 அந்தத் தகவல் தொகுப்பை உருவாக்குவதன் மூலம், திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துதல் ஆகியவை மேம்படும் என்று அரசு கருதுகிறது.
இந்தத் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமிக்க ஓர் அடையாளம் உருவாக்கப்படும். 
இது மக்கள் ஐடி எனப்படும். 

இந்த ஐடிக்கான எண்கள் ஏதாவது ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் 'Random' முறையில் உருவாக்கப்படும்.
இந்த ஐடியில், 10 அல்லது 12 எண்கள் இடம்பெற்றிருக்கலாம். 
தற்போதைய மக்கள் தொகையையும் எதிர்கால மக்கள் தொகையையும் மனதில் கொண்டு இந்த எண்கள் எவ்வளவு நீளம் என்பது முடிவு செய்யப்படும்.
ஒருவருக்கே இரண்டு எண்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதைத் தவிர்க்க, ஆதார் எண்கள், குடும்ப அட்டை எண் போன்றவற்றில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்பட்டு, ஒரே பயனாளி இருமுறை தகவல் தொகுப்பில் இடம் பெறாமல் தவிர்க்கப்படும்.

ஏற்கெனவே அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி வருவோருக்கு, இந்த மக்கள் ஐடியை ஒதுக்கீடு செய்ய, அவர்கள் அளிக்கும் தகவல்களும் தற்போதுள்ள தரவுத் தொகுப்பில் உள்ள தகவல்களும் ஒப்பிடப்படும்.

இரு தகவல்கள் துல்லியமாக இருப்போருக்கு உடனடியாக மக்கள் ஐடி ஒதுக்கீடு செய்யப்படும். 
அப்படியில்லாத நிலையில், கருவிழியைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்டு, ஐடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மக்கள் ஐடி' என்பது புதிய திட்டம் அல்ல.  2013ஆம் ஆண்டின் ஆளுநர் உரையிலும் 2013-14ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலும் முதன் முதலாக இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு 'மாநிலத்தில் குடியிருப்போரின் தரவுத் தொகுப்பு' அதாவது State Residents Data Hub ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டது.
 அதன்படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலிருந்து தமிழ்நாட்டில் வசிப்பவர்களின் தகவல்களை எடுத்து, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கென 'மக்கள் செயலி' உருவாக்கப்பட்டது.

இந்த மக்கள் செயலியில், ஆதார் மூலம் கிடைத்த தகவல்கள் தொகுக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளுக்கும் வழங்கப்படும்.
 இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கண்காணிக்கவும் சிறப்பாகச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் தகவல்களும் ஒன்றாகத் திரட்டப்பட்டு, பாதுகாப்பான முறையில் அனைத்து துறைகளோடும் பகிரப்படும். ஒவ்வொரு துறையிலும் பயனடைவோரின் விவரம், ஆதாருடன் இணைக்கப்படும்.  குடிமக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கும் ஒரு வழிமுறையையும் உருவாக்க முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி 'மக்கள் ஐடி' என்பது ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வசிக்கும் பல கோடி பேரின் தகவல்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஆதார் எண் VS மக்கள் ஐடி
இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஆதார் எண்ணிற்கும் மக்கள் ஐடிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஆதார் அடையாளத்தைப் பொறுத்தவரை, எல்லா தகவல்களுடனும் சம்பந்தப்பட்ட குடிமகனுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். மக்கள் ஐடியில் அப்படி எந்த அடையாள அட்டையும் வழங்கப்படாது.

ஆதார் அட்டையின் நோக்கம், அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு, வங்கிகளில் பயன்படுத்துவதற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை உருவாக்குவது. ஆனால், மக்கள் ஐடியைப் பொறுத்தவரை, இதிலும் தனித்துவமான எண் இருக்குமென்றாலும்கூட, அவை தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்குள் மட்டும் பயன்படுத்தப்படும். 

ஆதார் எண் இல்லாத பயனாளிகளும்கூட, மக்கள் ஐடியின் மூலம் அரசுத் துறைகளுக்குள் அடையாளம் காணப்படுவார்கள்.
ஆதார் எண்ணை எல்லா இடங்களிலும் ஒற்றை அடையாளமாக பயன்படுத்த முடியும். ஆனால், மக்கள் ஐடி எண்ணை அப்படிப் பயன்படுத்த முடியாது.

ஆதார் எண்ணைப் பெற, சம்பந்தப்பட்டவர்கள் கைரேகை, கருவிழிப் படல அடையாளம் போன்றவற்றை அரசுக்குத் தர வேண்டும். ஆனால், மக்கள் ஐடிக்கு என இது போன்ற அடையாளங்கள் எதுவும் சேகரிக்கப்படமாட்டாது. 

மக்கள் ஐடி என்பது, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் பலன்களைப் பெறுபவர்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் ஒரு எண் மட்டுமே.
ஆதார் எண்ணைப் பொறுத்தவரை, சில தருணங்களில் ஒரே எண்ணுடன் வேறு வேறு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
அந்தத் தருணத்தில் KYC சரிபார்த்தல் தேவைப்படுகிறது. 

ஆனால், மக்கள் ஐடியில், பல துறைகளிலும் உள்ள அடையாளங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒருவரது 'Golden Record' உருவாக்கப்படும். அதில் இது போன்ற பிரச்சனைகள் இருக்காது.

 ஆதார் எண்ணைப் பொறுத்தவரை, வெவ்வேறு சேவைகளோடு வாடிக்கையாளர்கள் அதனை இணைக்க வேண்டும்.
 மக்கள் ஐடியில் அப்படி எந்த சேவையோடும் இணைக்க வேண்டியதில்லை.

 பல துறைகளிலும் உள்ள புள்ளிவிவரங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகே இந்த ஐடி உருவாக்கப்படும்.

ஆனால் இதன் மூலம் இங்கு சட்டவிரோதமாக்க் குடியேறி குற்றச்செயலில் ஈடுபடும் வடமாநில இளைஞர்களை வேறுபடுத்தி கண்காணிக்க முடியும் ,என்பதால் சில வலதுசாரி இந்துத்துவாவினர் இந்த மக்கள் அடையாள அட்டையை தமிழ்நாடு அரசு கொண்டுவர எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
-----------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?