"புரட்சி அண்ணி '" பிரேமலதா

“மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது தத்துவ உலகில் ஒரு பிரபலமான வாக்கியம்.  இயற்கை அல்லது இந்த உலகம், எப்போதும் ஏதோ ஒரு முறையிலும் மாறிக்கொண்ட இருக்கும், மாறாதது எதுவுமில்லை என்பதை விளக்குகிறது அந்த வாக்கியம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் “மாற்றம்” என்ற வார்த்தை இப்போது வானாளவ பேசப்படுகிறது. ஆனால் அந்த மாற்றம் குறித்து பேசும் கட்சிகளும், கூட்டணிகளும் ஒட்டுப் பொறுக்கி அரசியலின் முடை நாற்றத்தை அல்லது இந்த போலி ஜனநாயகத்தின் அழுகுணி ஆட்டத்தை மறைக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

தி.மு.க – அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாதா, இவர்களுக்கு மாற்று கிடையாதா, மாறி மாறி இவர்களையே ஆட்சியில் அமர்த்த வேண்டுமா என்பதை மாபெரும் தத்துவ ஞானக் கேள்வியாக டி.வி நிலைய வித்வான்கள் விவாதம் என்ற பெயரில் படுத்தி எடுக்கின்றார்கள்.

அ.தி.மு.கவில் அவர் பெயர் ஜெயலலிதா! தே.மு.தி.கவில் அ வர் பெயர் பிரேமலதா!

இரண்டு கட்சிகளுக்கு மாற்று என்று பேசுபவர்கள் அனைவரும் அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான உத்தியாக இந்த டயலாக்கை அடிக்கடி எடுத்து விடுகிறார்கள் என்று சொல்லப்படுவதை நாம் நிராகரிக்க முடியாது. 

அவர்களில் சில அப்பாவிகளாக இருந்தாலும் தாம் என்ன பேசுகிறோம், யாருக்கு பயன்படுகிறோம் என்ற தன்னறிவு இன்றி ஊடகங்கள் கட்டியமைத்திருக்கும் பொதுப்புத்தியில் சரவண பவன் பாணியில் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறார்கள்! 

ஆகவே இந்த மாற்று வைபவத்தில் புதிய ருசியை தேடும் ஒரு நுகர்வுக் கலாச்சார தேடலும் இருக்கிறது. 
அந்த தேடலை விளம்பரங்கள் வழி நிறுவனங்கள் கற்றுக் கொடுப்பதைப் போல அரசியல் தேடலை ஊடகங்கள், அறிஞர்கள், பிரபலங்கள் என்று பலர் கற்றுக் கொடுக்கின்றனர்.

தி.மு.க – அ.தி.மு.க தலைமை அலுவலகங்களில் ஒன்றரை அல்லது இரண்டே கால் சீட்டுகளுக்காக போலி கம்யூனிஸ்டுகள் இவ்வளவு காலம் தவம் கிடந்தாலும், அதிலும் போயஸ் தோட்டத்தில் “இன்னைக்கு முடிஞ்சு போச்சு, நாளைக்கு வாங்க” என்று தெருவுக்கு விரட்டியடிக்கப்பட்டிருந்தாலும் குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதை மறைத்து விட்டு “மாற்றம்” குறித்து மார் தட்டுகிறார்கள். 

அந்த மார்பு, சந்தர்ப்பவாதம் எனும் டி.பியால் இன்றைக்கோ நாளைக்கோ காத்திருக்கிறது என்றாலும்.
அவருடைய பிறந்த நாளுக்கு அம்மா அவர்கள் வீடு தேடி வாழ்த்து தெரிவிக்கும் அளவுக்கு அம்மா கம்யூனிஸ்டாக இருந்த தா.பாண்டியனது கட்சி கூட இன்றைக்கு “மாற்று” குறித்து பேசுகிறது. 

தொகுதி பிச்சைக்காக போயஸ் தோட்டத்தில் தவம் கிடக்கவோ இல்லை அணி வகுக்கவோ சென்ற நல்லக்கண்ணுவைக் கூட பலர் முதலமைச்சராக முன்மொழிகிறார்கள். 

எளிமையாக வாழும் ஒருவர் பாசிஸ்டாக ஆடும் ஒருவரின் அரண்மனைக்குச் சென்று அம்மா தாயே ஒன்றோ இரண்டோ பாத்து போடுங்கமா என்று கேட்பதை வைத்து அந்த எளிமையின் பொருள் என்ன? என்று எந்த கனவானும் சீமாட்டியும் கேட்பதில்லை.

வைகோவைப் பொறுத்தவரை அவரது அபிமானி ஜூனியர் விகடன் திருமாவேலனாலேயே கேலி செய்யப்படும் முக்தி நிலையை அடைந்து விட்டார். 

வி.சி திருமாவளவனோ கேப்டன் அணி என்று அழைப்பது கவுரக்குறைச்சல் இல்லை என ஆண்டைகளின் மண்டப ஓரத்தில் பரிதாபமாய் நிற்கிறார். அடங்க மறு அத்து மீறு, திருப்பி அடி எல்லாம் மூப்பானர் காலத்தில் தேர்தல் ஜோதியில் கலந்து எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவராக வாழ்த்தி இன்று தே.மு.தி.க எனும் கோமாளிக் கட்சியில் கரைந்து நிற்கிறது.

ஆக மாற்று பேசும் இந்த யோக்கியவான்கள் எவரும் கடந்த காலத்திலேயே யோக்கியமாக எதையும் செய்ய வில்லை என்பதோடு இன்று அவர்கள் முன்னிறுத்தும் கேப்டன் அணியிலேயும் அதே அயோக்கியத்தனத்தையே இலட்சியமாக முன்னிறுத்துகிறார்கள்.

இறுதியில் இத்தனை இலட்சிய மாற்றுக்களையும் சுமந்து கொண்டு விஜயகாந்த், முதல்வர் கனவில் என்ன பேசுவதென்று தெரியாமல் விழிக்கிறார். மைத்துனர் சதீஷோ, மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகள் கேப்டனை முதல்வராக ஏற்றதால் வைகோ, திருமா, கம்யூனிஸ்டு தலைவர்கள் அனைவருக்கும் பதில் மொய்யாய் அமைச்சர் பதவிகளை அன்புடன் அளிக்கிறார். 

இதையெல்லாம் செய்ய வேண்டியது தமது கடமை என்று அந்த கடமையே கூனிக்குறுகுமளவு உருகுகிறார்.
கல்லூரியைக் காப்பாற்றவும், கல்யாண மண்டபத்தை இடித்தவர்களை பழிவாங்கவும் அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்கு, கூடுதலாக லியாகத் அலிகான் வசனங்களுக்கு கைதட்டும் மக்கள் தன்னையும் ஒரு ஆளாக ஏற்கக்கூடும் என்று நினைத்திருக்க கூடும். 

இருப்பினும் ஒரு கட்சி நடத்துவது எவ்வளவு பெரிய சித்திரவதை என்பதையும் அவர் இக்காலத்தில் கண்டிப்பாக உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் பேரம், மரியாதை சந்திப்பு, கிங், மேக்கர், போன்ற வார்த்தைகள் அதிகம் அவரைச் சுற்றி வந்தன. இடையில் அவரது மனைவி, மைத்துனர் அடங்கிய கிச்சன் கேபினட் தே.மு.தி.கவின் கடிவாளத்தை கையிலெடுத்தது.
தே.மு.தி.க என்ற கட்சியின் பெயரே நல்ல நாளில் மூகூர்த்த நேரத்தில் மூன்று பெயர் கொண்ட சீட்டில் ஒன்றை தெரிவு செய்து முடிவு செய்யப்பட்ட ஒரு தரித்திரம். இந்த கின்னஸ் சாதனைக்கு போட்டியாக இந்த தேர்தலிலும் பங்குனி உத்திரத்தில்தான் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை இவர்கள் பதம் பார்த்து கூட்டணி அமைத்தார்கள். 
சில அப்பாவித் தோழர்கள் பகத்சிங் நினைவு தினமென்று ஸ்டேட்ஸ் போட அதை காலி செய்தது இந்த பங்குனி உத்திர பஞ்சாங்க ரிலீஸ்.
விஜயகாந்த் கூட கொஞ்சம் யதார்த்தமாக இருக்கூடிய ஆள் என்பதால்தான் ஜெயாவை எதிர்த்து அவர் பேசுவதும், அ.தி.மு.க ஆதரவு ஊடகங்களை அவர் எள்ளை நகையாடுவதுமாய் இருக்கிறது. இருப்பினும் தி.மு.க – அ.தி.மு.க எனும் இருபெரும் கட்சிகளில் சேர்ந்து ஆளாக வாய்ப்பில்லாத அண்ணன்கள், வள்ளல்கள், ரவுடிகள், ரியல் எஸ்டேட் தரகர்கள், அரசியல் நாட்டாமைகள் பலரும்தான் தே.மு.தி.க எனும் விபத்துக் கட்சியின் தூண்கள். 
அதில் பண்ருட்டி முதல் மைஃபா பாண்டியராஜன் வரை பல பெருச்சாளிகள் இருந்தனர். பிறகு அந்தப் பெருச்சாளிகளில் சிலர் தே.மு.தி.கவின் ரிசல்டைக் காட்டி அ.தி.மு.க கோட்டையில் தங்களை நல்ல விலைக்கு விற்றுக் கொண்டார்கள்.
தே.மு.தி.க பிசினைஸை கவனித்துக் கொள்ளும் பிரேமதலா!
தனது கட்சிக்காரர்கள் அனைவரும் இப்படித்தான், அவர்கள் செலவழிப்பது ‘அதை’ எதிர்பார்த்துத்தான் என்பது விஜயகாந்துக்கும் தெரியும். 
சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவோடு கூட்டணி வைத்து பின்பு மோடி பதவிப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியில் முன் சீட்டு பாஸ் கிடைக்க வில்லை என்று பொன்னாரோடு காய் விட்ட கோபத்தில் இருந்தவர்தான் கேப்டன். அவரைப் பொறுத்தவரை வீட்டுக்கு வந்தவரை உபசரிக்க வேண்டும், மற்றவர் வீட்டுக்கு போனாலும் நன்றாக உபசரிக்கப்படவேண்டும். 
அதானியைக் குளிப்பாட்டும் மோடி குரூப், கேப்டனை குளிப்பாட்டினால் ரிடன்ஸ் கம்மி என்று வரம்பிட்டுக் கொண்டதை அறியுமளவு விஜயகாந்துக்கு அரசியலும் தெரியாது, அறவியலும் புரியாது.

இடையில் அவர் எந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற முடிவை அண்ணி பிரேமலாதா எடுத்துக் கொண்டார். யோகா தினத்தில் ஆசனங்களை செய்யாமல் விஜயகாந்த திணறிய போதும் சரி, கூட்டத்தில் உளறும் போதும் சரி, பிழை திருத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டார் பிரேமலதா. 
எனினும் அவர் விஜயகாந்தைப் போல கொஞ்சமாவது யதார்த்தமாக இருப்பவரல்ல. அதாவது பரம்பரை பாசிஸ்டுக்குரிய அத்தனை பண்புகளும் அவருக்குண்டு. அ.தி.மு.கவில் அவருக்கு பெயர் ஜெயலலிதா. தே.மு.தி.கவில் அவரது பெயர் பிரேமலதா.
“தமிழகத்தின் வசந்த காலமே, எங்கள் விழாக் கோலமே, தமிழ் வீரமங்கையே, புரட்சி அண்ணியே” என்று தே.மு.தி.கவினர் தமிழகமெங்கும் ஏதோ ஒரு நம்பிக்கையில் செலவழித்து தட்டியோ பிளக்ஸோ வைக்கின்றனர். 

உடல்நிலை காரணமாகவோ இல்லை ரிமோட் கண்ட்ரோல் அண்ணி காரணமாகவோ இந்த தேர்தலில் விஜயகாந்தின் நகைச்சுவை பேச்சுக்களை நாம் அதிகம் கேட்க முடியாது என்பதால் அண்ணிதான் தே.மு.தி.கவின் நட்சத்திர பேச்சாளர்.

கூட்டிக் கழித்து சொன்னால் பிரேமலதா என்பவர் யார்? 
மக்களின் உரிமையான ஜனநாயகம் என்பது தனது கைப்பையில் இருக்கும் ஏ.டி.எம் கார்டு போலவும், அதிகாரம் என்பது தனது காலில் இருக்கும் செருப்பு போலவும் கருதுகின்றவர். மக்கள் சப்தமிடாமல் கையேந்தினால் தனது கார்டை போட்டு கொஞ்சம் பணம் கொடுப்பார்.
 சத்தம் போட்டால் செருப்பால் அடிப்பார். இந்த உலகில் இருக்கும் எதுவும் சீமாட்டி மனது வைத்தால் மட்டுமே மக்களுக்கு கிடைக்கும் என்ற ராயல் சீமாட்டியின் பார்வை அப்படியே பிரேமலதாவுக்குப் பொருந்துகிறது. மக்களை அடி முட்டாள்களாகவும், அடிமைகளாகவும் கருதுவதில் அம்மாவையே விஞ்சிவிட்டார் அண்ணி. 

அவரது பேச்சின் சில பகுதிகளைக் கேளுங்கள்!

“இப்போதே தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக பெரிய பெரிய வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் பேசியிருக்கிறோம்” என்கிறார். 

இது உண்மையென்றால் இந்த பேரத்திற்காக எவ்வளவு வாங்கியிருக்கிறார் என்று போலிக் கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தில் இருக்கும் தோழர்கள் அதுவும் நமது அருமைக்குரிய அண்ணன் மாதவராஜ் போன்றோர் கேட்பார்களா? 

அப்படிக் கேட்டால் தா.பா-நல்லக்கண்ணு-இராமகிருஷ்ணன் வகையறாக்கள் அதற்கு வெளி என்றால் பிரபஞ்சம், கம்பெனி என்றால் காலக்ஸி, பேச்சு என்றால் லேகியம், என்று ஒரு பதிலை வைக்க மாட்டார்களா என்ன?

“பொங்கலுக்கு ஒரு வாரம் விடுப்பு, ஜல்லிக் கட்டை மீண்டும் நடத்துவோம், ரமணா படத்தைப் போல ஊழல் ஒழிப்புப் படை,  இறுதியில் கேப்டன் ஆட்சிக்கு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.35”க்கு கொடுப்பாராம். இவையெல்லாம் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கோட்டை பதவியை குறிவைத்து அண்ணி முழங்கிய போர்ப்பறைகள். 

முகமது பின் துக்ளக் அல்லது லூயி போனபர்ட் போன்ற வரலாற்றின் கைப்புள்ளைகளை இங்கே நிஜத்தில் காண்கிறோம்.

பெட்ரோல் விலை, மின்கட்டணம் உள்ளிட்டு பல்வேறு சேவைகள், கட்டணங்கள் அனைத்தும் ஒழுங்கு முறை ஆணையங்கள் எனப்படும் முதலாளிகள், அதிகாரிகள் அடங்கிய அரசாங்கங்களுக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகின்றது. 

கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சட்டபூர்வமாகவே தாரைவார்க்கப்பட்டு மக்கள் நலன் சமாதியாகும் காலத்தில் இப்படி பச்சையாக பொய்யுரைக்க முடியுமென்றால் அதை என்னவென்று சொல்வது?
எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் சட்டசபைக்கு போனாரா, பேசினாரா என்று ஜெயாவின் பாசிசத்தை சிறந்த ஆட்சி நிர்வாகம் என்று ஏற்றுக் கொண்ட அறிவுஜீவி அடிமைகள் கேட்கிறார்கள். 

ஆனால் ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் தே.மு.தி.க என்ன போராட்டத்தை நடத்தியிருக்கிறது?

கோவன் கைதைக் கண்டித்த அறிக்கையைத் தாண்டி தமிழகத்தில் ஒரு டாஸ்மாக் கடையைக் கூட இவர்கள் ஏன் உடைக்கவில்லை? 

பெட்ரோல் விலை உயர்வைக் குறைப்பதற்கு முன்னால் அதை உயர்த்திய அரசை, மோடி கட்சியை எதிர்த்து இவர்கள் ஏன் சுண்டுவிரலை கூட அசைக்கவில்லை?

ஊழலுக்கு ரமணா படை அனுப்புவதற்கு முன்னால் ஆண்டாள் அழகர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கமால் டிமிக்கி கொடுத்ததையும்,எதிர்த்துக் கேட்ட பேராசிரியர்களை ஆள் வைத்தும் அடித்தார்களே அந்த கல்லூரி ஓனரை பெண்டு கழட்ட படை அனுப்புவாரா அந்த அண்ணி?

ஜல்லிக்கட்டு நடத்துவதை உச்சநீதிமன்றம் சமாதியாக்கிய நிலையில் பிரேமலதா என்ன செய்வார்? கேப்டனை அனுப்பி உச்சநீதிமன்றத்தில் குண்டு போடுவாரா? 
இல்லை பாசிச ஜெயாவை விடுவித்த குமாரசாமியைக் கண்டித்து ஒரு கூட்டத்திலாவது பேசுவாரா ? 

பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் உள்நாட்டில் மூடுண்ட தொழில்களும் வேலையிழந்த தொழிலாளிகளும் வாழும் நாட்டில் இன்னும் எத்தனை பேர் தாலியை அறுக்க இவர்கள் பன்னாட்டு முதலாளிகளை அழைக்கிறார்கள்?

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்று என்ற பெயரில் ஜெயா எதிர்ப்பு வாக்குகளை உடைக்கும் பணி இருப்பது உண்மை என்றாலும், மக்கள் நலக்கூட்டணியோ இல்லை அவர்கள் தூக்கிச் சுமக்கும் கேப்டன் அணியோ தி.மு.க – அ.தி.மு.க கட்சிகளை விட கேவலமான முறையில் இருப்பது உண்மையில்லையா?

மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கை துவங்கி, இந்துத்துவ சார்பு வரை அனைத்து பீடைகளையும் விருதுகளாக அழகு காட்டும் கேப்டன் கட்சிதான் மாற்று என்றால் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளலாம்.

                                                                                                                                           -வினவு தளம்.
===================================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?