ஓக்கி போய் சாகர் .

தென் மாவட்டங்களை, 'ஒக்கி' புயல் துவம்சம் செய்த நிலையில், மீண்டும் ஒரு புதிய புயல் உருவாகி, தமிழகத்தை நோக்கி, வேகமாக நகர்ந்து வருகிறது. 
அதனால், இன்று இரவு முதல்தொடர் மழை துவங்கும் என்பதாலும், நாளையும், நாளை மறுநாளும், கன மழை கொட்டும் என்பதாலும், அனைத்து மாவட்ட நிர்வாகமும், உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்திய பெருங்கடலில், கன்னியாகுமரி அருகே உருவான, 'ஒக்கி' புயல், டிச., 1ல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களை துவம்சம் செய்த பின், அரபிக் கடல் வழியாக நகர்ந்து வருகிறது. இந்த புயல், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தை நோக்கி செல்கிறது.


வரும், 5ம் தேதி, சூரத் - மும்பை இடையே, கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால், அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையை நோக்கி நகரக்கூடிய, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது.
வங்கக் கடலில், அந்தமான் அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ள, இந்த புயல்சின்னம், இன்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அதன்பின், சென்னை கடற்பகுதியை நோக்கி, நகரத் துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடலில் ராட்சத அலைகள் எழும்; கடல் கொந்தளிப்பாக காணப்படும். காற்றழுத்த மண்டலம், நாளை இரவில், புயலாக மாறும். இந்த புயலுக்கு,ஹிந்தியில், 'சாகர்' என, பெயர் சூட்டப்பட உள்ளது. சாகர் என்றால், கடல் என அர்த்தம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறும்போது, சென்னைக்கு அருகே வந்து விடும் என்றும், இந்த புயல், சென்னை அருகே, கடலிலேயே சூறாவளி காற்றுடன் நகர்ந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது.

டிச., 7 மற்றும் டிச., 8ல், ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகில், சாகர் புயல், கரையை கடக்கலாம் என, தற்போதைய கணிப்புகள் தெரிவிக்கின்றன.அதேநேரத்தில், அதன் திசை மாறி, கடந்த ஆண்டு வந்த, 'வர்தா' புயலைப் போல நேரடியாக, சென்னை வழியாக கரையை கடக்கவும், அதிக வாய்ப்புகள் உள்ளன. 
புயல் நகரும் வேகம், கடலின் சூழலை பொறுத்து, கரையை கடக்கும் இடம் மாறுபடும்.இந்த புயல் சின்னத்தால், தமிழக கடலோர மாவட்டங்களில், கன்னியாகுமரி முதல் சென்னை வரையும், தெற்கு ஆந்திரா பகுதிகளிலும், இன்று இரவு முதல் மழை துவங்கும்.

முதலில், மிதமாக துவங்கும் மழை, படிப்படியாக மிக கன மழையாக மாறும். டிச., 9 வரை, கன மழையை எதிர்பார்க்கலாம் என, வானிலை கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

தற்போதைய நிலையில், வங்கக் கடல் பகுதிக்குள், டிச., 9 வரை, மீனவர்கள் செல்லாமல் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், புதிய புயலால், நீர்மட்டம் மிக அதிகமாக வாய்ப்புள்ளது.

எனவே, பெருவெள்ளம் ஏற்படாமல் சமாளிக்க, அனைத்து மாவட்ட நிர்வாகமும், உஷார் நிலையில் இருக்குமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க, பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை அருகே புயல் நெருங்கும்போது, 100 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்; மரங்கள் வேரோடு சாயும். 
பழைய கட்டடங்கள், ஓட்டு வீடுகள், குடிசைகளுக்கு சேதம் ஏற்படும். 
ஆறு, ஏரிகளுக்கு நீர் வரும் பகுதிகள், நீர் வெளியேறும் பகுதிகள், தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
மின் கம்பங்கள், மொபைல் போன் கோபுரங்களுக்கு, பாதிப்பு ஏற்படும் என்பதால், மின் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?