கரியான வாழ்க்கை.


ந்தியாவில் உள்ள சுரங்கங்களை வணிகமயமாக்குவது, அதிலும் குறிப்பாக நாட்டில் உள்ள 218 நிலக்கரி பிளாக்குகளில் 41 பிளாக்குகளை தனியாருக்கு கொடுப்பது, அதற்கு உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் ஆதிக்கம் புரியும் கார்ப்பரேட்டுகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பது, அவர்களின் மூலம் ஆண்டுக்கு 225 மில்லியன் டன் உற்பத்தி செய்வது, அதன் மூலம் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 250 மில்லியன் டன் நிலக்கரியின் அளவை ஈடு செய்வது (மூச்சு முட்டுகிறதா) என்று “ஆத்ம நிர்மான் பாரத்” கூச்சல் போடும் மோடி அறிவித்துள்ள திட்டம் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும், நிலவும் போலி ஜனநாயக அரசமைப்பின் தோல்விக்கும் துலக்கமான எடுத்துக்காட்டாகும்.
ஊரடங்கு காலத்தில் மக்களிடம் பெரிய அளவு எதிர்ப்பு ஏதுமின்றி கமுக்கமாக ஏலத்தை நடத்தி முடித்து விடலாம் என்ற நோக்கத்துடன் முதலில் ஜூன் 11ம் தேதியை ஏல நடப்பு தேதியாக அறிவித்தார் மோடி. ஆனால் அவரது எண்ணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணள்ளிப் போட்டு, முகத்தில் கரியை பூசி விட்டார்கள்!
இந்த ஏல தேதிக்கு முதல் நாளான ஜூன் 10ம் தேதியன்று அகில இந்திய அளவிலான போராட்டம் நடந்தது. நிலக்கரி சுரங்கங்கள் உள்ள 8 மாநிலங்களில் 535 சுரங்கங்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்றரை லட்சம் பேர் ஒருநாள் போராட்டத்தில் குதித்தனர். இந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி CIL எனப்படும் கோல் இந்தியா லிமிடெட், SCCL எனப்படும் சிங்கரேணி கொலிரெஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தச் செய்திகள் அனைத்தும் ஊடங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில் மோடி ஜூன் 11 ஏலத்தை ஒத்திப் போட்டு விட்டார். ஏலத்தில் கலந்து கொள்ள தயங்கிய எஜமானர்களின் மனங்குளிர பல சலுகைகளை அறிவித்து தாஜா செய்து மறு வாரமே, ஜூன் 18ல் இ- ஏலத்தை துவக்கினார் மோடி. பழங்குடி மக்களின் வாழ்வு மலரும், 2.8 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டு மின்னுற்பத்தி ஓகோ என உயரும் என்று வழக்கமாக சரடுகளை அள்ளிவிட்டார். ஆனால்  இவற்றினால் சுரங்க தொழிலாளர்களை ஏமாற்ற முடியவில்லை.
ஜூன் 10ம் தேதி வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முடிந்தாலும், பின் வாங்காத மோடியின் திமிர்தனத்தை எதிர்த்து ஜூலை 2,3,4 என 3 நாட்கள் மீண்டும் சுரங்கத் தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் 5.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. இதில் மைய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐசிசிடியு மற்றும் கங்காணி கூட்டமான ஆர்எஸ்எஸ்-சின் கீழ் செயல்படும் பிஎம்எஸ் என 5 மையசங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. அரசு பொதுத்துறை நிறுவனங்களான CIL மற்றும் SCCL நிலக்கரி நிறுவனங்கள்தான் நாட்டின் 92% நிலக்கரியை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் இவற்றின் துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஒரே மாதத்திற்குள் அடுத்தடுத்து, நாடு தழுவிய லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பங்கேற்புடன் இரண்டு வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது. கொரானா கால ஊரடங்கு எதுவும் செல்லுபடியாகவில்லை.
தோண்ட தோண்ட கரி! கொட்டுது கொட்டுது பணம்!!
நிலக்கரி சுரங்கங்களை பற்றி புரிந்து கொள்ள 1980ம் ஆண்டுகளில் வந்த காலா பத்தார் என்ற இந்தி படம் பார்த்தால் தனியார் சுரங்கம் எத்தனை கொடூரமான கொத்தடிமத்தனத்தைக் கொண்டது எனத் தெரியும். மிசா கால சாஸ்நல்லா சுரங்க விபத்தின் கோரம் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு, தனியார் சுரங்க கோரங்கள் பற்றி தெரிந்திருக்கும். சமீபத்தில் வந்த அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வாஸ்ஸிபூர்’ என்ற படமும் சுரங்கக் கொடூரங்களை மையப்படுத்தி வந்த படமே. இவற்றைப் பார்க்க முடியாதவர்கள் நம்மூர் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் கொத்தடிமைத்தனத்தை செய்திகளில் படித்திருக்கலாம் .
சங்கர் குகா நியோகி
உண்மையில் நிலக்கரி சுரங்க கொத்தடிமைத்தனம் என்பது மிகமிக கொடூரமானதும் அதில் நடக்கும் சுரண்டல் கொடுமை பூதாகரமானதுமாகும். இந்த சுரங்கத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிய சங்கர் குகா நியோகி என்ற பிரபலமான தொழிற்சங்க தலைவர் படுகொலை செய்யப்பட்டது பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். அவரின் வழியில் சுரங்கத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிய பெண் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று மோடியால் தன்னைக் கொல்ல சதி செய்ததாக பொய் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 100 விதமான கனிமங்கள் பூமியில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. இந்தியாவில் 3100 சுரங்கங்கள் உள்ளதாகவும் அதில் 550 நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்க பயன்படுவதாகவும், மற்றவற்றில் 560 உலோக சுரங்கங்களாகவும், 1990 உலோகமல்லாத சுரங்கங்களாகவும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கவனியுங்கள்! அரசிடம் இது பற்றி துல்லியமான விவரம் கிடையாது.
1970-கள் வரை இந்த சுரங்கங்களில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை தனியாரிடமே இருந்தது. 1973ல் இந்திரா காந்தி பிரதமராயிருந்த போது நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அதன் பிறகு 1993 ல் அதே காங்கிரசு அரசே அரசாணை மூலம் பல சட்ட திருத்தங்களைச் செய்து தனியாருக்கு தாரை வார்க்கத் தொடங்கியது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மேலும் தாராளமாக்கப்பட்டு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை எனக் கூறி இந்த நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த மன்மோகன் சிங் காலத்தில் நடந்த நிலக்கரி ஏல ஊழல்கள் ஊழல்களின் மகாராணி என்று அழைக்கப்பட்டது. சிஏஜி அறிக்கை மூலம் நாடு முழுதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘கோல்கேட்’ ஊழலின் பிரம்மாண்டம் 10.7 லட்சம் கோடி என்பதிலிருந்து நிலக்கரி சுரங்கம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதிலுள்ள யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் பராளுமன்றத்திற்கு அதே சிஏஜி அறிக்கை தந்தபோது ஊழலின் அளவு 1.82 லட்சம் கோடி என சுருங்கிப் போனது பற்றி எதிர்க்கட்சியான பா.ஜ.ககூட கேள்வி எழுப்பவில்லை. ஆனால் பா.ஜ.கவின் பினாமியான ஊழல் எதிர்ப்புக் கோமாளி அன்னா ஹசாரே போராட்டத்தை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க கும்பல்.
இப்போது தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மிகவும் துணிச்சலாக இந்த ‘டோல்கேட்’ ஊழலையே சட்டப்படி செய்யத் தொடங்கியுள்ளது. சந்தேகமிருப்பவர்களுக்கு மோடியின் வீடியோ கான்பரன்சில் பங்கேற்றவர்களின் பெயரைப் பாருங்கள் – இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சங்கமான ஃபிக்கி (FICCI)-யின் தலைவர், வேதாந்தா, டாடா சன் குழுமம்… என நீள்கிறது. இதிலும் சந்தேகமிருப்பின் அவர்கள் கூறியதைக் கேளுங்கள்: “5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் மிகப்பெரும் அடிவைப்பு இது” – என்கிறது டாடா சன் குழுமம். ”இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தம்” “நாட்டின் கனிம வளங்களைத் திறந்துவிட்டு, பொருளாதாரத்தைத் தூண்டி விடுவதோடு, 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கான கிரியா ஊக்கியாக இது அமையும்” – என்கிறார் ஃபிக்கி தலைவர்.
மன்மோகன் சிங் ‘கோல்கேட்’ ஊழலில் 100 நிலக்கரி தொகுதிகள் டாடா, ஜிண்டால், பிர்லா, எஸ்ஸார், அதானி, லான்கோ……..என பலருக்கும் ஒதுக்கப்பட்டதை நினைவில் கொண்டு தற்போது ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் நிலைமை என்ன ஆகும், யாரிடம் போகும் என்பதை எண்ணிப் பாருங்கள்!
பாரடா சுரங்கத்தின் பரப்பை! கேளடா அதன் கதையை!
1971 முதல் கட்டமாகவும் 1973ல் இரண்டாம் கட்டமாகவும் சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்டது. இந்த சுரங்கங்களின் மூலம் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்தியாவின் தேசிய வருவாயில் சுரங்கத் துறை ஆண்டுக்கு 2.4% முதல் 2.7% வரை பங்களிப்பு செலுத்துகிறது. இதிலும் குறிப்பாக நிலக்கரி சுரங்கங்களின் மூலம் 2020 மார்ச் முடிய இருந்த முதல் காலாண்டில் 6,024 கோடி லாபம் கிடைத்துள்ளது. பொதுத்துறையான கோல் இண்டியா நிறுவனம் இதில் முக்கிய பங்களிக்கிறது. கோல் இண்டியா நிறுவனம் 2019ல் 607 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தையும் நமது ‘தேச பக்தி’ கும்பல் மறைத்து நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு அடைய தனியார் முதலீடு அவசியம் என்று சுதேசி பஜனை புரிகிறது. அதுமட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும், அதற்கு தேவையான நிலக்கரி உற்பத்திக்கும் தனியார் தான் ’ஆபத்பாந்தவன், அனாத ரட்சகன்’ எனவும் சதிராடுகிறது.
இந்த சதிராட்டங்களின் பின்னே முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார காரணம் உள்ளது. அதை போராடும் தொழிசங்கங்கள் பார்க்க மறுக்கின்றனர். 1990 களில் உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களின் உற்பத்தி வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து இயற்கை வளங்கள் ஏராளமான அளவு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவை எழுந்தது. அதற்கு வழி செய்யும் வகையிலேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயம் தாராளமயம் உலகமயம் போன்றவற்றை வலியுறுத்திய காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் அமைந்திருந்தன. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் அதுவரை அரசுடமையாக்கப்பட்டிருந்த பல்வேறு பொதுத் துறைகளின் விதிகள் தளர்த்தப்பட்டு தனியார் மூலதனம் நுழைவதற்கு வழியேற்படுத்தப் பட்டது. அந்த வழியில் தான் இப்போது பட்டவர்தனமாக 33,000 கோடி முதலீடு அதுவும் 100% அன்னிய முதலீடு அவசியம், அதன் மூலமே சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைக்க முடியும். இதற்காகவே சர்வதேச டெண்டர் என்றெல்லாம் நியாயப்படுத்துகிறது மோடி கும்பல்.
ஆனால் மின்சாரத் தேவைகள் பற்றிய களநிலைமைகள் இன்று மாறி விட்டது எனக் கூறுகிறார் அரசு நிறுவனமான தேசிய காணுயிர் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், சத்புதா பவுண்டேசன் என்ற சுற்றுச் சூழல் அமைப்பின் நிறுவனருமான கிஷோர் ரித் என்பவர். 2012ம் ஆண்டில் மின்சார தேவையானது உற்பத்தியை விட அதிகமிருந்தது. அதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் தனியார் பலரும் மின்னுற்பத்தி செய்ய அனுமதி கோரினர். பெரும்பாலும் அனல் மின் நிலையங்கள் என்பதால் நிலக்கரி பயன்பாடும் அதிகரித்தது. ஆனால் இன்று மாற்று எரிசக்தி கொண்டு மின் உற்பத்தி செய்ய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகி விட்டது. இந்த நேரத்தில் காலாவதியாகிப் போன முறையில் மின் உற்பத்தியில் இறங்கினால் லாபம் கொழிக்க முடியாது என்று கைவிட்டு விட்டனர். அதுமட்டுமின்றி 2020 மார்ச் 24ம் தேதிய நிலவரப்படி மின்தேவை 40% ஆக வீழ்ந்து விட்டது. இதனால் தான் அரசு எதிர்பார்த்த அளவு நிலக்கரி சுரங்கத் தொகுதி ஏலத்திற்கு பெரியளவு தனியார் முதலாளிகள் வரவில்லை. இந்த கொரோனா காலத்தில் முதலீடு செய்ய லாப உத்திரவாதம் உள்ள துறைகளையே கார்ப்பரேட்டுகள் தேடியலைகிறது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
’சுரங்க அனுபவம் இல்லாதவர்களும் டெண்டரில் பங்கேற்கலாம்; லாபம் உடனடியாக கிடைக்கும் வகையில் தயார் நிலையில் உள்ள சுரங்கங்களை ஏலம் விடுகிறோம்; என CILன் சொந்த அமைப்பான மத்திய சுரங்க திட்டம் & வடிவமைப்பு நிறுவனத்தை தனித்து, சுயேச்சையாக செயல்பட சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலம் சுரங்க மற்றும் நிலக்கரி உற்பத்தியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு இந்நிறுவனம் உதவும் என்று வேறு அறிவித்துள்ளனர். கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடும் வகையில் சுரங்க சட்டங்களில் 1992 முதல் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றி சில விவரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்
“நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972-73-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படுகிறது. அதன் பின் சுமார் இருபதாண்டுகளுக்கு அச்சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை 1992-ம் ஆண்டு நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. இக்கமிட்டியின் வேலை என்னவென்றால், தனியார்களுக்கு நிலக்கரிச் சுரங்க உரிமையை தாரை வார்ப்பது எப்படி என்று அரசுக்கு வழிகாட்டுவது தான். இக்கமிட்டி, 143 நிலக்கரித் தொகுப்புகளை (coal blocks) இதற்காக அடையாளம் கண்டது.
அதைத் தொடர்ந்து தேசிய நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தில் ஜூன் மாதம் 1993-ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, சக்தி உற்பத்தி (மின்சாரம்) மற்றும் நிலக்கரியை மூலப் பொருளாகக் கொண்ட பிற தொழில்களில் ஈடுபடும் தனியார் கம்பெனிகள் நிலக்கரியை வெட்டியெடுக்கலாம் என்பது சேர்க்கப்படுகிறது. பின்னர் 1996-ம் ஆண்டு மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு சிமெண்டு கம்பெனிகளும் நிலக்கரியை வெட்டியெடுத்துக் கொள்ள வகை செய்யப்படுகிறது. இப்படி படிப்படியான சட்ட திருத்தங்கள் மூலம் நாட்டின் அரியவகை இயற்கை வளமான நிலக்கரி தனியார்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது.
93-ல் துவங்கி 2010 காலகட்டம் வரை சுமார் ஐந்து முறை சுரங்கச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 2006-ம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கத்தில் நூறு சதவீதம் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வகை செய்யும் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.” (ஜூலை 5, 2012 வினவு-லிருந்து)
இப்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள திருத்தம் முழுக்க சுரங்கத்தில் 100% அன்னிய முதலீட்டுக்கு தடையற்ற அனுமதி மற்றும் உற்பத்தியை வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதி என ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தான் தேசத் துரோகம் என போராடும் நிலக்கரி சுரங்க சங்கங்கள் எதிர்க்கின்றன. இல்லை இது வளர்ச்சிக்கானது என மத்திய அரசு கூறுகிறது. யாருடைய வளர்ச்சி? கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி!
சட்டம் அதன் கடமையை செய்யாது! அரசியல் போராட்டமே விடிவை தரும்!!
இந்த சுரங்க ஏலங்களை எதிர்த்து சட்டப்பூர்வ வாய்ப்புகளை பயன்படுத்தலாமே என சில அறிவாளிகள் போதிக்கின்றனர். அவர்கள் கூறுவதைப் போல சில மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்துள்ளனர். பெரும்பான்மையாக ஆதிவாசி மக்கள் வாழும் ஜார்கண்ட் மாநில அரசு உச்ச நீதி மன்றத்தில்  தொடர்ந்த வழக்கில் முதல் பாயிண்ட்டாக ‘எல்லா அரசியல் சட்ட விதிகளுக்கு எதிராக, பரந்த நிலப்பரப்பில் சுரங்க நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து, இயற்கை, மக்களின் வாழ்வை தாராளமாக சூறையடிக் கொழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு தாராள அனுமதியளிக்கிறது இந்த ஏல அறிவிப்பு’ என்கிறது அதன் நீதிமன்ற மனு.
மேலும் முக்கியமாக அரசியல் சட்டத்தில் வரையறுத்துள்ள “ஷெட்யூல்ட் பகுதி”, வரம்புகள், மாநில உரிமைகள், பழங்குடி மக்களின் உரிமை, அடர்ந்த வனப்பகுதி, நிலச் சீர்திருத்த சட்ட விதிகள், தேசிய விலங்கான புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் வாழும் பகுதி என பல அம்சங்களின் அடிப்படையில் இந்த ஏல நடவடிக்கையின் சட்ட விரோத தன்மைகளை எதிர்த்து மனு செய்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு. ஏறக்குறைய இதே போன்ற வாதங்களை முன்வைத்து மகாராட்டிர மாநிலம், மபி, சட்டிஸ்கர் என மாநிலங்கள் எதிர்த்து வழக்குகளைத் தொடுத்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையையும், மின் உற்பத்தி கார்ப்பரேட் நிறுவனங்களான ரிலையன்சு, அதானி பவர் உள்ளிட்ட கொள்ளைக் கூட்டத்தை பாதுகாப்பதையும், வோடஃபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சார்பான தீர்ப்புகளையும் பார்க்கும் போது நமக்கு நம்பிக்கையில்லை.
மக்களின் போராட்டங்களை கண்டு சிறிதும் பின் வாங்காத மோடி ஏல நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. ஜூன் 18ம் தேதி ஏலம் நடப்பதற்கான துவக்கம் பற்றி அறிவிக்கப்பட்டது. ஏலம் முடியவில்லை. ஏனென்றால் அப்போதும் அரசு எதிர்பார்த்த அளவு ஏலதாரர்கள் வரவில்லை. எனவே தனது கார்ப்பரேட் சேவையில் சிறிது மனம் தளராத மோடி ஆகஸ்டிலிருந்து ஏலம் விடப்படும் என அறிவித்துள்ளார்..
நிலத்தடி நீர் அரசுக்குச் சொந்தம் என விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என சட்டம் போட்டுள்ள இந்த அரசுதான், நிலத்திற்குக் கீழே உள்ள கனிம வளங்கள் அரசுக்குச் சொந்தம் என்ற அடிப்படை அரசியல் சட்டத்தைத் திருத்தி, அந்த கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்த்ததோடு, அதை தனது லாபமிக்க வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என கூவிக் கூவி நாட்டையே விற்கிறது. தேசபக்தி, சுய சார்பு பொருளாதாரம் போன்ற பித்தலாட்டங்களுக்கு முடிவு கட்டாமல் சுரங்கங்களை மட்டுமல்ல நாட்டையும் காப்பாற்ற முடியாது!
இதற்கு வழக்கமான சட்ட பூர்வ போராட்டங்கள், மொட்டை மாடி, அட்டை ஏந்தி போராட்டம், போலீசு அனுமதியுடன் அடையாளப் போராட்டம் போன்றவை உதவாது. ஸ்பெயினில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் போராடியதைப் போல போர்க்குணமுடன் போராடுவதும் சுரங்க தொழிலாளர்களின் போராட்டத்தை இதர பிரிவு பொதுத்துறை தொழிலாளர்களின் போராட்டத்துடன் இணைப்பதும், அரசியல் ரீதியாக நாட்டை மறுகாலனியாக்காதே! என போர்க் குரலுடன் வீதிக்கு வந்து போராடுவதும் காலத்தின் கட்டாயமாகும்.
--------------------------------------------------)
 என்னென்ன செய்ய வேண்டும்.
"பல்துறை வல்லுநர்களின் கருத்துரைகளைக் கேட்டு, 'உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை', 'தொலை நோக்காக நிறைவேற்ற வேண்டியவை' என்ற அடிப்படையில் சில முக்கிய ஆலோசனைகளை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக நான் வழங்கும் ஆலோசனைகளில் கவனம் செலுத்தி, கொரோனாவின் பேரழிவிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் உடனடியாக எடுத்திட வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
“தொடர்ச்சியாக நடந்துவரும் ஊரடங்கினால், மக்களுக்கு வாழ்வாதார இழப்பும்; வாழ்க்கையில் பெரும் பின்னடைவும்; மாவட்டங்களில் கடுமையான நோய்த் தொற்றும்; மக்களை, திரும்பிய பக்கமெல்லாம் சுற்றி வளைத்திடும் சோதனைகள் திரண்டு மிரட்டி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
கொரோனா நோய்த் தொற்று குறித்த விவரம் அ.தி.மு.க அரசுக்கு ஜனவரி மாதத்திலேயே தெரிந்திருந்தும், பரீட்சார்த்த முறையிலான நடவடிக்கைகளில் ஒவ்வொன்றாக ஈடுபட்டு, அடுத்தடுத்து செய்த தவறுகளாலும், குழப்பங்களாலும் - தற்போது மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் விபரீதமாகி, மக்களை நிம்மதியிழக்க வைத்து, அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமின்றி, எந்தவொரு அரசியல் கட்சியின் ஆலோசனைகளையும், காது கொடுத்துக் கேட்கும் ஜனநாயகப் பக்குவம் இன்றி நிராகரித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் மனமில்லாமல் மறுத்து - தன்னிச்சையாக அ.தி.மு.க அரசு செயல்பட்டதால், இன்று கொரோனா நோய்த் தொற்று 'கிராமப்புற பரவலாக' மாறி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன.
இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு, அரைகுறை வாழ்க்கை நிலை நான்கு மாதத்திற்கும் மேல் நகருவது தொடர்கிறது.
இந்தச் சூழ்நிலையில், பொறுப்புள்ள பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், மருத்துவ - பொருளாதார - தொழில்துறை வல்லுநர்களைக் காணொலிக் காட்சி மூலம் அழைத்துப் பேசி அவர்களின் கருத்துரைகளைக் கேட்டேன். அதில், 'உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை', 'தொலைநோக்காக நிறைவேற்ற வேண்டியவை' என்ற அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் அளித்த சில முக்கிய ஆலோசனைகளை, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சேர்ப்பது எனது கடமை என்ற அடிப்படையில் இங்கு முன்வைக்கிறேன்.
உடனடியாக நிறைவேற்ற வேண்டிய ஆலோசனைகள் :
1) ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினைச் சமாளிப்பதற்கு, 'அனைவருடைய கையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கத்' தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாங்கும் திறனை உயர்த்த வேண்டும்.
2) ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அளித்த 1,000 ரூபாய் போதாது என்பதால், குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாகப் பணமாக வழங்கப்பட வேண்டும்.
3) ஊரடங்கு காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்வதை முறைப்படுத்தலாம். ஆனால் அறவே தடை செய்யக் கூடாது. பொருட்கள் செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.
4) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்.
5) ஏராளமான வணிக அமைப்புகள் மூடப்பட்டுள்ளன. பல செயல்பட இயலாமல் உள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆதலால், கிராம மக்களின் வருமானத்தை வலுப்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை வருடத்திற்கு 250 நாட்களாக உயர்த்திட வேண்டும்.
6) அரசாங்கம் அதன் மூலதனச் செலவினங்களைச் சுகாதாரத் துறையிலும், தேவையான பிற தேவைகளிலும் அதிகரிக்க வேண்டும். இது பணப்புழக்கத்தை மேம்படுத்துவதோடு தற்போதைய நிலைமையைச் சமாளிப்பதற்கும் உதவும்.
7) ஜி.எஸ்.டி. வரி விகிதம் மாற்றி அமைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். தற்போதைய ஜி.எஸ்.டி. கட்டமைப்பில், மத்திய அரசு மிக நீண்ட நிலுவைத் தொகையைக் கொண்டிருப்பதால், மாநில அரசுகளுக்குச் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. ஆதலால், கொரோனா நெருக்கடி தீரும் வரையிலாவது மாநிலங்கள் தங்களை ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.
தொலைநோக்கு பரிந்துரைகள் :
1) தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பொதுவான வருமான கட்டமைப்புத் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதன்மூலம் நெருக்கடி நேரங்களில் மட்டுமில்லாமல் மற்ற காலங்களிலும் அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படை நிதிப் பாதுகாப்பை வழங்கிட முடியும்.
2) அனைவரும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமே இலவச மருத்துவ வசதிகள் உள்ளதால், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிறந்த மருத்துவ வசதிகளை ஏழைகள் பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அரசு இலவச மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு முழுமையான சமூகப் பாதுகாப்பை வழங்கும். அது எதிர்கால நெருக்கடிகளின் போது அவர்களின் பிரச்சினைகளைத் தணிக்க உதவும்.
கொரோனா நோய்த் தொற்றைக் குறைத்து- அந்த நோயை அறவே தமிழகத்தில் ஒழித்திடவும் - கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பின்னடைவுகளில் இருந்து மீண்டு - இயல்பு நிலை திரும்புவதற்கும் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகள் மிகவும் ஆக்கபூர்வமானவை என்றே நான் கருதுகிறேன்.
ஆகவே, அவர்களுடைய ஆலோசனைகளை இந்த அறிக்கை வாயிலாக வெளியிட்டு இருக்கிறேன். எத்தனையோ ஆலோசனைகளை அவ்வப்போது தெரிவித்தும்கூட - "பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக என்ன சொன்னார் ஸ்டாலின்” என்று, வெறுப்பு - விரோதத்துடன் 'கொரோனா பேரிடர் நேரத்திலும்' காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்வதைத் தவிர்த்து - கருணை மிகுந்த அணுகுமுறையை வளர்த்துக் கொண்டு, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ள மேற்கண்ட ஆலோசனைகளில் கவனம் செலுத்தி, கொரோனாவின் பேரழிவிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-----------------------------------------------------)
வன்முறைக் கட்சி எது.

“மூன்று இளம் மாணவியர் எரித்துக் கொலை, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதே ஆசிட் வீச்சு என வன்முறையினையே வரலாறாகக் கொண்ட அ.தி.மு.க.,வின் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தி.மு.க.,வை விமர்சிப்பதற்கு அடிப்படைத் தகுதியே இல்லை” என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இதுத்ப்டர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'ஊழல், ரவுடித்தனம், கொடநாடு, பையனூர் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவது, கொடநாட்டில் கொள்ளை - கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையானோர்களைக் காப்பாற்றுவது' - போன்றவற்றின் பிறப்பிடமாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க.,வைப் பார்த்து 'வன்முறைக் கட்சி' என்று கூறுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்களின் உயிர்காக்கும் வாக்கி டாக்கிகள் வாங்கியதில் ஊழல் செய்து, கொள்ளையடித்து, ஊழலில் ஊறிப் போயிருக்கும் ஜெயக்குமாருக்கு தி.மு.க.,வைப் பற்றி விமர்சிக்க அடிப்படைத் தகுதியும் இல்லை; அருகதையும் இல்லை!
திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் சம்பவம் நடந்த இடத்திற்கு, தனது நிலத்தைப் பாதுகாக்கப் போகவில்லை. அமைச்சர் பொய்ப் பிரச்சாரம் செய்வது போலவோ, அ.தி.மு.க.,வினர் அடுத்தவர் நிலங்களை, தியேட்டர்களை, பங்களாக்களை மிரட்டி எழுதியது போலவோ செய்வதற்காக அங்கு போகவில்லை. கோவில் நிலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை முன்னிட்டு அங்கு சென்றார்.
தங்கள் பகுதியில் உள்ள கோவில் நிலம் ஒரு தனியார் நிலத்திற்காகத் தாரைவார்க்கப்படுகிறது என்றால் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை அப்பகுதி மக்களுக்கு இருக்கிறது. அந்த மக்களின் கோரிக்கைக்கு உதவிட வேண்டிய பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு இருக்கிறது. தட்டிக் கேட்டதற்காக வீடுவரை விரட்டி வந்து தாக்கும் விதத்தில் அந்த ரவுடிகளை காவல்துறை அனுமதித்தது ஏன்?
ஆனால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க முக்கிய பிரமுகர்களின் பினாமி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் வாய் திறக்கவில்லை.
எங்கோ 'பழைய பாசம்' இன்னும் அவருக்கு உள்மனதில் ஒளிந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் தன்னை சட்டம் படித்தவர் என்று சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால் கிரிமினல் சட்டத்தின்கீழ் முதலில் குற்றச் செயலில் ஈடுபடுபவர் யார்?அதாவது “Aggressor” என்று சொல்லப்படுபவர் யார்? அதற்கு என்ன அர்த்தம் என்பது கூட அமைச்சருக்குத் தெரியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
குற்றச் சம்பவத்திற்கு முதல் காரணம் யார் என்பதை விசாரித்துக் கண்டுபிடிப்பதுதான் புலனாய்வு அதிகாரியின் வேலை. அந்த வேலையை காவல்துறை அதிகாரிகள் செய்தால் அ.தி.மு.க முக்கியப் பிரமுகர் சிக்கி விடுவார் என்பதற்காகவே, தி.மு.க எம்.எல்.ஏ மீது மட்டுமே பொய் வழக்குப் போட வேண்டும் என்ற ஒரே உள்நோக்கத்துடன் விசாரணை துவங்கியவுடனேயே அமைச்சர் ஜெயக்குமார் 'வழக்கின் போக்கை' திசை திருப்பும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார்.
50 ரவுடிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தது அ.தி.மு.க முக்கிய பிரமுகரின் பினாமி. ஆனால் அதை அப்படியே மறைத்து விட்டு- தி.மு.க எம்.எல்.ஏ மீதும், அரிவாள் வெட்டுக்கு உள்ளான அவரது தந்தை மீதும் வழக்குப் போடத் தூண்டியது யார்? அமைச்சர் ஜெயக்குமார்தானா?
போலிஸ் மாவட்டங்களை ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொண்டு தி.மு.க.,வினர் மீது ஆங்காங்கே பொய் வழக்குகள் போடுவது போல் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களின் போலிஸ் துறையை அமைச்சர் ஜெயக்குமார் எடுத்துக் கொண்டு விட்டாரா என்று கேட்க விரும்புகிறேன்.
அ.தி.மு.க முக்கியப் பிரமுகரின் உதவியுடன் குமாரும், அவரது அண்ணன் தாண்டவமூர்த்தியும் 50 ரவுடிகளைப் பயங்கர ஆயுதங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். முன்கூட்டியே புகாரளித்தும் அதைக் காவல்துறை தடுக்கத் தவறியுள்ளது. சம்பவம் நடைபெற்ற பிறகு அந்த ரவுடிகள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலில் வெட்டுக்காயம் பட்ட எம்.எல்.ஏ.,வின் தந்தை மற்றும் அந்தப் பகுதி மக்கள் அளித்த புகாரை மறைத்துவிட்டு, கோவில் நிலத்திலிருந்து எம்.எல்.ஏ.,வின் வீடுவரை விரட்டி வந்த ரவுடிகளைக் காப்பாற்றும் விதத்தில் அமைச்சர் அறிக்கை விடுவது ஏன்?
ஜெயராஜும், பென்னிக்ஸும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டபோது போகாத உயர் போலிஸ் அதிகாரிகள் இங்கு மட்டும் விரைந்து சென்றது ஏன்?
அந்த ரவுடிகளுக்கு இன்னும் அடைக்கலம் கொடுப்பது அமைச்சர் ஜெயக்குமாரா அல்லது அந்தப் பகுதியில் உள்ள அ.தி.மு.க முக்கியப் பிரமுகர்களா?
அமைச்சர் ஜெயக்குமாரே “நான் துப்பாக்கி வைத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அவர் வீடுவரை ரவுடிகள் விரட்டி வந்தால் தற்காப்பிற்கு வானத்தை நோக்கிச் சுடுவாரா? மாட்டாரா?
அப்படித்தான் அன்றைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ., வீட்டிலும் நடைபெற்றது. தங்கள் உயிரைப் பாதுகாக்க, தனது வீட்டிற்கே கொல்ல வந்த ரவுடிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள வானத்தை நோக்கி எம்.எல்.ஏ.,வின் தந்தை சுட்டதை திசைதிருப்பி, ஏதோ நிலத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சி போல் பேசுவதும் - கோவில் நிலத்தைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டத்தை ஏதோ எம்.எல்.ஏ., தனது சொந்த நலனுக்காக நடத்திய போராட்டம் போல் சித்தரிப்பதும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேண்டாத வேலை; விபரீதமான உள்நோக்கத்தின் வெளிப்பாடு.
அதைவிட ஒரு எம்.எல்.ஏ., மீது பொய் வழக்குப் போட்டு ஒட்டு மொத்த தி.மு.க.,வை விமர்சிப்பது மிகக் கேவலமான, கேடுகெட்ட செயல் மட்டுமல்ல; உண்மையில் இதில் சம்பந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முக்கிய பிரமுகரை காப்பாற்றும் அதிகார துஷ்பிரயோகம்!
தி.மு.க.,வை வன்முறைக் கட்சி என்று அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார் “நேரில் வாம்மா... பேசிக்கலாம்" என்ற 'ஆடியோ புகழ்' அமைச்சர் ஜெயக்குமார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும்; ஒரு பெண் என்றும் பாராமல் சந்திரலேகா அவர்களின் முகத்தில் ஆசிட் வீசி, அவர் முகத்தை சீர்குலைத்த கட்சி, ரவுடிக் கட்சியான அ.தி.மு.க.
டாக்டர். சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அசிங்கமாகப் போராட்டம் நடத்தி, உயர்நீதிமன்ற வளாகத்திலேயே செருப்பு வீசிய வன்முறைக் கட்சி அ.தி.மு.க.
தர்மபுரியில் மூன்று இளம் மாணவிகளைக் கொடூரமாக, சக மாணவிகள் கதற, உயிரோடு எரித்துக் கொன்ற கொலைகாரக் கட்சி அ.தி.மு.க.
கொடநாடு கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் தெரிந்த ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டார்களே, அது எந்தக் கட்சி ஆட்சியில்? சாட்சாத் அ.தி.மு.க. ஆட்சியில்தான்!
அதுவும் இப்போது அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சராக இருக்கும் ஆட்சியில்தான்!
அதுமட்டுமல்ல; ஊழலில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே கட்சி அ.தி.மு.க.,தான்!
ஊழலுக்காக முதலமைச்சர் பதவியை இழந்த ஒரே கட்சி, அதுவும் உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்ட ஒரே கட்சி அ.தி.மு.க.,தான்.
இதையெல்லாம் மறைத்து, தற்காப்புக்காக - குறிப்பாகக் கோவில் நிலத்தைப் பாதுகாக்க, அதுவும் வானத்தை நோக்கிச் சுட்டதற்கு பொய் வழக்குப் போட்டு தி.மு.க எம்.எல்.ஏ.,வை கைது செய்திருப்பது அ.தி.மு.க.,வின் திட்டமிட்ட சதிச் செயல்.
இதை சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நிச்சயம் சட்டத்தின்முன் நின்று சந்தித்து, நியாயத்தை நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
ஆகவே, வன்முறைக்கும், ஊழலுக்கும், ரவுடித்தனத்திற்கும், நிலம், தியேட்டர்களை மிரட்டி அபகரிப்பதற்கும் 'புகழ்'பெற்ற அ.தி.மு.க ஆட்சியின் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த அறிக்கை, புலனாய்வைத் திசைதிருப்பவும், அ.தி.மு.க.,வில் உள்ள உண்மை குற்றவாளிகளைத் தப்பவிடவும் எடுத்துள்ள முயற்சி. இது முறியடிக்கப்படும்!
குள்ளநரித்தனமும், குறுக்குப் புத்தியும் கொண்ட அமைச்சர் ஜெயக்குமாரால் தி.மு.க.,வை சிறுமைப்படுத்தி விடலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். அவரால் மட்டுமல்ல; அவருடைய வன்முறைக் கட்சியாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று எச்சரிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
----------------------------------+---------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?