தேசத் துரோகி ....?

 "கொரோனா நிலை குறித்து, நான் அதிகம் பேசினால் என் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படலாம், எனவே நான் பேசாமல் இருப்பதே நல்லது!” என பாஜக எம்.எல்.ஏ தன் சொந்தக் கட்சி குறித்தே பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுத்திவரும் பாதிப்புகள் நாட்டையே அவல நிலைக்குத் தள்ளியுள்ளன. சிகிச்சையளிக்கப் போதுமான படுக்கை வசதிகள் இல்லாதது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தகனம் செய்ய இடமில்லாதது எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது தேசம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாதிப்புகள் சற்று மோசமாகவே இருக்கின்றன. கான்பூர், உன்னாவ் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களிலிருந்து கொரோனாவால் பலியாவோரின் உடல்களை முறைப்படி தகனம் செய்யாமல், இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ்களில் கொண்டுவந்து, கங்கை நதியில் வீசுவதாக வரும் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்தது. இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து ஊடகங்களிலும், இணையத்திலும் பேசப்பட்டுவரும் நிலையில் உ.பி அரசாங்கம் இந்த விவகாரத்தில் மௌனம் காத்துவருகிறது. இந்தநிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் பா.ஜ.க அரசின் தலைவர்கள் சிலரும் மாநிலத்தின் கொரோனா நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்

இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், சீத்தாபூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் சூழலில், அங்குள்ள சிகிச்சை மையங்கள் எதுவும் செயல்படாமல் பூட்டுப்போட்ட நிலையிலேயே இருந்துவருகின்றன. இது குறித்து உத்தரப்பிரதேச மாநிலம், சீத்தாபூர் தொகுதியின் ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ ராகேஷ் ரத்தோரிடம் பத்திரிகையாளர்கள், `தேவைப்படும் நேரத்தில் ஏன் சிகிச்சை மையங்கள் இன்னும் மூடிக்கிடக்கின்றன’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் எம்.எல்-ஏக்கள். எங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது... ஒரு எம்.எல்.ஏ நினைப்பதை அப்படியே பேச முடியுமா? எங்கள் நிலை எப்படி இருக்கிறது என்றால், இது குறித்து அதிகம் பேசினால், நாங்களும் தேசத்துரோக வழக்கைச் சந்திக்க வேண்டிவரும். நான் எனது உணர்வுகளை முன்பே தெரிவித்திருக்கிறேன். இது பற்றி உங்களிடம் நான் இனி பேசாமல் இருப்பதே எனக்கு நல்லது” என்றார். பிறகு, கொரோனா அதிகரித்துவரும் சூழலில் ஏன் இன்னும் உ.பி-யில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்று கேள்வியெழுப்பபியதற்கு, ``எல்லாம் சரியான வழியிலேயே நடந்துகொண்டுவருகிறது. என்னால், அரசாங்கம் மேற்கொள்ளும் செயல்களைச் சரியானது என்று வழிமொழிய மட்டுமே முடியும்” என்று அவர் தன் உள்ளுணர்வை மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

சொந்தக் கட்சியைக் குறித்த ராகேஷ் ரத்தோரின் சர்ச்சைக் கருத்துகள் ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே கொரோனா முதல் அலை சமயத்தில், மோடியின் வேண்டுகோளை விமர்சித்து அவர் பேசிய ஆடியோ ஊடகங்களில் வைரல் ஆனது. அதில், ``பிரதமர் மோடி, மக்களைக் கைகளைத் தட்டச் சொல்வதும், மணி அடிக்கச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று. கைகளைத் தட்டுவதன் மூலமாக கொரோனாவை விரட்டி விட முடியுமா... உங்களைப் போன்றவர்கள் கைகளைத் தட்டினால் கொரோனா அகன்றுவிடுமா?" என்று பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------------------------------------------------

கி.ரா

கி.ராவை சுமார் 50 ஆண்டு காலமாக எனக்குத் தெரியும். 45-46 ஆண்டுகளாக இலக்கியம் பேசுமளவுக்கு அவர் நெருக்கமாக இருந்தார். கி.ரா எனப்படும் கி. ராஜநாரயணன் அடிப்படையில் ஓர் இடதுசாரி. நல்லகண்ணு, கோவில்பட்டி அழகிரிசாமி, எஸ்எஸ் தியாகராஜன், ஜனசக்தி ஆசிரியராக இருந்த சீனிவாசன் ஆகியோரெல்லாம் ஒரே வயது. கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடாத அந்த காலகட்டத்தில் ஒன்றாகச் செயல்பட்டார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது, எட்டயபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்தார்கள். நெல்லை சதி வழக்கு விசாரிக்கப்பட்டு கொண்டிருந்தபோது கோவில்பட்டி சதி வழக்கு என்ற வழக்கும் நடத்தப்பட்டு வந்தது. அந்த வழக்கில் கி. ராஜநாராயணன் பெயரையும் சேர்த்திருந்தார்கள். ரசிகமணி டி.கே.சிக்கு கி.ராவை நன்றாகத் தெரியும். அப்போது குமாரசாமி ராஜா சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்துவந்தார். அவரைச் சென்று பார்த்த டி.கே.சி, "இடைசெவல் நாயக்கருக்கு இந்த வழக்கில் என்ன தெரியும்? அவரையும் எதற்கு வழக்கில் சேர்த்திருக்கிறீர்கள்?" என கேட்டார். இதற்குப் பிறகு கோவில்பட்டி சதிவழக்கிலிருந்து கி.ரா விடுவிக்கப்பட்டார்.

1960களில் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது இவரும் ஈடுபட்டு சிறையில் இருந்தார். கி.ராவுக்கு எழுத்தின் மீது ஆர்வம் வருவதற்கு முன்பாக இசையின் மீது பெரும் ஆர்வம் இருந்தது. இசை மேதையாக நாம் வர வேண்டுமென ஆசைப்பட்டார்.

காரக்குறிச்சி அருணாச்சலம், விளாத்திகுளம் சாமிகள், ராஜரத்தினம் பிள்ளை ஆகியோருடன் கி.ராவுக்குத் தொடர்பு இருந்தது. இதற்குப் பிறகு எழுத்தாளராக உருவெடுத்தார். சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்களில் எழுதினார். பிறகு ஆனந்தவிகடனில் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம் பதிப்பகத்தின் மூலம் கோபல்ல கிராமம் நாவல் வெளிவந்தது.

இடைச்செவல் என்பது கோவில்பட்டுக்கு அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம். இந்த கிராமத்திற்கு மின்சாரம்கூட மிகத் தாமதமாகத்தான் வந்தது. பேனா வாங்க வேண்டும் என்றால்கூட கோவில்பட்டிக்குத்தான் வரவேண்டும். அந்தக் குக்கிராமத்தில் இருந்தபடியே இத்தனையும் சாதித்தார் கி.ரா. அவர் பெரிதாகப் படிக்கவில்லை. ஆனால் அவரது கையெழுத்து மிக அழகாக இருக்கும்.

அவரது காலத்தில் தனித் தமிழ் இயக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. ஆனால், கி.ராவைப் பொறுத்தவரை பேச்சுத் தமிழ் மிக முக்கியம் எனக் கருதினார். நாட்டுப்புற கதைகள் அனைத்தும் பேச்சுத் தமிழில் அமைந்தவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடைசிவரை அந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.

அதனால்தான் வட்டாரச் சொல் அகராதியை ஒன்றை உருவாக்க முடிவுசெய்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் கரிசல் வட்டாரச் சொல்லகராதி. இதனை அன்னம் - அகரம் பதிப்பகம் வெளியிட்டது. மாரீஸ், உதயசங்கர், தமிழ்செல்வன் போன்ற பலர் இந்த அகராதி வெளிவருவதற்கு உதவி செய்தனர். அதேபோல, கரிசல் வட்டார சிறுகதைகள் என்று ஒரு தொகுப்பையும் கொண்டுவந்தார். இப்போதைய பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. ஜூனியர் விகடனில் கரிசல் காட்டுக் கடுதாசி என்ற அவரது தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வெங்கடசுப்பிரமணியம் இருந்தபோது இவரை கௌரவ பேராசிரியராக நியமித்தார். அவர் புதுச்சேரிக்கு வந்த பிறகுதான் கதைசொல்லியைத் துவங்கினோம்.

கி.ரா என்னும் கரிசல்காட்டு நெடுங்கதை

பட மூலாதாரம்,சிவகுமா

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மிகவும் விரும்பினார். ஆனால், பல முறை முயற்சி செய்தும் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. ஆனால், மு. கருணாநிதி இவருடைய படைப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் இவருடைய புத்தகங்களை என்னிடமிருந்து கேட்டு வாங்கிப் படித்தார்.

பிரபாகரன் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தபோது படிப்பதற்கு புத்தகங்களைக் கேட்டார். நேரு எழுதிய புத்தகங்கள், கோபல்ல கிராமம் ஆகிய புத்தகங்களைக் கொடுத்தேன். கோபல்ல கிராமத்தைப் படித்துவிட்டு மிகச் சிறப்பாக இருக்கிறதே, யார் இவர் என்று கேட்டார். பிரபாகரனை அழைத்துச் சென்று கி.ராவிடம் அறிமுகப்படுத்திவைத்தேன். அப்போது வெளிவந்திருந்த கன்னிமை என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பில் கி.ரா. கையெழுத்திட்டு பிரபாகரனிடம் கொடுத்தார். அதில் கி.ரா. எழுதும்போது, "கரிகாலன்னு என் பேர எழுதுங்க" என்றார் பிரபாகரன். "சோழ நாட்டுக் கரிகாலனைப் போல ஈழ நாட்டுக் கரிகாலனும் வெற்றிபெற வேண்டும்" என எழுதிக் கொடுத்தார் கி.ரா.

வைகோ, சுதந்திரா கட்சியினர் என பல தரப்பினருடனும் நெருக்கமாக இருந்தார் கி.ரா. அவருக்கு 100ஆம் ஆண்டுவிழாவை நடத்துவதற்கான குழுவை இன்னும் சில நாட்களில் அமைக்கவிருந்தோம். அதற்குள் மறைந்துவிட்டார் கி.ரா..

- k.s..ராதாகிருஷ்ணன்.

------------------------------------------------------------------------------------

பொய்யுரை தேவையில்லை!

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு நிறுவனம் கொரோனா வைரசால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் மதிப்பீடு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில், மயானங்களில்  எரிக்கப்படும் சடலங்கள், உள்ளாட்சி நிர்வாகம் வழங்கும் இறப்பு சான்றிதழ், உள்ளூர் பத்திரிகையாளர்கள் மூலமாக தகவல்களை சேகரித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் இந்தியாவில் கிட்டத்தட்ட 4.8 லட்சம் அளவுக்கு கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியாவின் உண்மையான கொரோனா பலி 7.5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என  ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:

இந்தியாவில் கொரோனா மரணங்கள் பல மடங்கு மூடி மறைக்கப்படுகின்றன. குறிப்பாக, குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தினசரி இறப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. குஜராத்தில் மே 1ம் தேதி  முதல் 10ம் வரை வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களின் எண்ணிக்கை இரட்டிப்பு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020ல் ஏப்ரல், மே மாதங்களில் 58,000 பேர் இறந்துள்ளனர். இதுவே இந்த ஆண்டு 1.23 லட்சம் பேர் இறந்துள்ளனர். சுமார் 65,000  இறப்பு சான்றிதழ்கள் கூடுதலாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான இறப்பு விகித அதிகரிப்பு என்றோ, வேறு காரணங்கள் என்றோ கூறிவிட முடியாது.



இவை முழுக்க முழுக்க கொரோனாவால் அதிகரித்த மரணங்களே. ஆனால் இதில் கொரோனாவால் இறந்ததாக மாநில அரசு தரும் எண்ணிக்கை வெறும் 4,218 மட்டுமே. இதே போல உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், பீகார் என  பல்வேறு வட மாநிலங்களில் இறப்புகள் மறைக்கப்படுகின்றன.  இந்தியாவை பொறுத்த வரையில், கொரோனா பாதித்தவராக இருந்தாலும் இதய நோய், நீரிழிவு போன்ற இணை நோய்கள் இருந்தால், மாரடைப்பால் இறந்தவர் என கணக்கு காட்டப்படுகிறது. கொரோனா பாதிப்பில் இறந்ததாக  கூறப்படுவதில்லை. மேலும், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெரிய அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 

இதனால் அங்கு நடக்கும் கொரோனா இறப்புகள் கணக்கிலேயே வருவதில்லை.

கொரோனா மரணங்கள்  மறைக்கப்படுகின்றன என்பதற்கு கங்கையில் மிதக்கும் சடலங்களும், கங்கை கரையில் புதைக்கப்படும் சடலங்களுமே சாட்சி. இறப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருப்பதால்தான் சடலங்கள் குவியல் குவியலாக எரிக்கப்படுகின்றன.


எரியூட்ட விறகு கட்டைகளுக்கு கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தான் அவற்றை அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள், ஆற்றில் சடலங்களை வீசுகின்றனர்.

இல்லாவிட்டால் ஆற்றங்கரைகளில் சடலங்களை அடக்கம்  செய்கின்றனர். இந்த சடலங்கள் எதுவும் கொரோனா எண்ணிக்கையில் வருவதில்லை. நகர்ப்புறங்களிலும் நாள்தோறும் பல முதியவர்கள் கொரோனாவுக்கு பலியாகின்றனர். ஆனால் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைத்திருப்பதால்  அவை எதுவும் கொரோனா இறப்பு கணக்கில் வருவதில்லை. எனவே, உண்மையான கொரோனா இறப்பானது தற்போதைய அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட 4 மடங்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர்களை கூட காப்பாற்றாத மத்திய அரசு

இதுவரை கொரோனாவுக்கு 1000 டாக்டர்கள் பலியாகி உள்ளனர் என இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 736 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியான நிலையில், கடந்த 5 மாதத்தில் 244 பேர் பலியாகி உள்ளனர்.  நேற்று முன்தினம் மட்டுமே ஒரேநாளில் 50 டாக்டர்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக பீகாரில் 69 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் உள்ள டாக்டர்களில் வெறும் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி  போடப்பட்டுள்ளதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு போடுவதற்கு கூட போதுமான தடுப்பூசியை உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை" 

என வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகும் இந்தச் சூழலிலும்கூட எதிர்க்கட்சிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிடவில்லை. டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் ஏற்பாடு செய்த காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் நிவாஸ் பிவியை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்துள்ளனர். இன்னொரு பக்கம் மத்திய அரசு வெளிநாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்த விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது.

மே 14-ம் தேதி தேசிய காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், ‘மருத்துவப் பொருள்கள் எங்கிருந்து கிடைக்கின்றன, அதை வாங்குவதற்குப் பணம் எங்கிருந்து வருகிறது, ரெம்டெசிவிர் மருந்துகள் எப்படிக் கிடைக்கின்றன?’ என்று விசாரணை செய்திருக்கின்றனர். இன்னொரு பக்கம், ‘மோடி ஜி எங்கள் குழந்தைகளின் தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டுக்கு அனுப்பினீர்கள்?’ என்று டெல்லியில் போஸ்டர் ஒட்டியதற்காக 10-க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ‘தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது ஏன்?’ என்கிற வாசகத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படமாக பதிவிட்டு, ‘என்னையும் கைது செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

‘இந்தியர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்காமல் 5.8 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்?’ என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ‘மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும், இறக்குமதி செய்வதிலும் காட்டிய பெரும் சுணக்கத்தின் விளைவு இந்த கொரோனா மரணங்கள்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். சி.பி.எம் கட்சியும் ‘தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து தவறான தகவல்களையே வெளியிட்டுவருகிறது’ என்று குற்றம்சாட்டியிருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறை... பழிவாங்கும் நடவடிக்கை... தடுமாறும் மோடி அரசு!

சி.பி.எம் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் நம்மிடம், “உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன என்று விளம்பரம் செய்கிறது மத்திய அரசு. அதில் துளியும் உண்மை இல்லை. சீனாவில் இதுவரை 38 கோடி பேருக்கும், அமெரிக்காவில் 28 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நம் நாட்டில் 18 கோடி பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவில்தான் அதிகமாகப் போடப்பட்டிருக்கிறது.

கோவிஷீல்டு தயாரிப்பு முறைகளை நாம் வெளிநாட்டிலிருந்து வாங்குகிறோம். கோவாக்‌ஸின், ஐ.சி.எம்.ஆருக்குக் கீழ் உள்ள ‘வைராலஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான், பாரத் பயோடெக் என்கிற தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது. அதை ஏன் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட், செங்கல்பட்டு ஹெ.எல்.எல் போன்ற நிறுவனங் களுக்குக் கொடுக்கவில்லை? சர்வதேச நாடுகளிடம் தடுப்பூசி கண்டுபிடிப்பு உரிமையைக் கொடுக்க வேண்டும் என இந்தியா கேட்கிறது. ஆனால், சொந்த நாட்டு மக்களிடம், தடுப்பூசிக்கு ஐந்து சதவிகிதமும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவிகிதமும் ஜி.எஸ்.டி வரி விதிக்கிறது.

அதேபோல, ஏராளமான தகவல்களை மத்திய அரசு மறைத்துவருகிறது. டெல்லியில் ஒரு நாளைக்கு 500-600 மரணங்களை மறைத்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகின்றன. கங்கைக் கரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 900 பிணங்களைப் புதைத்திருக்கிறார்கள். மழையில் மண் கரைந்து பிணங்கள் வெளியே தெரிந்திருக்கின்றன. ஆக்ஸிஜன் படுக்கைகள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆம்புலன்ஸ் வசதிகள், இறந்தவர்களை தகனம் செய்தல் என எந்தவொரு விஷயத்திலும் மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை. அரசும் உதவுவதில்லை, உதவி செய்பவர்களுக்கும் நெருக்கடி கொடுக்கிறார்கள்... எங்கேயிருந்து பணம் கிடைக்கிறது, பொருள் கிடைக்கிறது என காங்கிரஸ் தலைவரைக் கேட்டவர்கள், ஏன் இது போன்ற உதவிகளைச் செய்த பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவில்லை?’’ என்றார் கோபமாக.

-----------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?