ரெம்டெசிவிர்

 வைரஸ்கள் மனித உடலில் நுழைந்தவுடன் ஒன்று இரண்டாக, இரண்டு நான்காகப் பிரிந்து பெருகும். அப்படிப் பிரிந்து எண்ணிக்கையில் அதிகரிக்க சில நொதிகள் அவசியம். அந்த நொதிகளைத் தடுத்து வைரஸ் பெருகுவதைக் குறைக்கும் மருந்துகள்தான் ரெம்டெசிவிர் உள்ளிட்ட ஆன்ட்டி வைரல் மருந்துகள்.

இந்த ரெம்டெசிவிர் கோவிட் நோய்க்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தல்ல. ஹெப்பாடைடிஸ் சி, எபோலா, சார்ஸ் போன்ற ஆர்.என்.ஏ வைரஸ்கள் உண்டாக்கும் நோய்களின் சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்டது. இப்போதைய கோவிட் வைரஸும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ் என்பதால் இதன் சிகிச்சையிலும் பயன்படலாம் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

அப்படி கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்துப் பார்த்ததன் ஆராய்ச்சி முடிவுகள் உலகெங்கும் பலவாறு வந்துள்ளன. ரெம்டெசிவிர் மருந்து கொரோனா வைரஸை அழித்து இறப்பைக் குறைக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. எனினும் இப்போதைய காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனமும் அனுமதி கொடுத்துள்ளது.

சில மருத்துவர்கள் ரெம்டெசிவிரால் நோயின் தாக்கம் குறைவதாக தங்கள் அனுபவத்தில் கூறுகின்றனர். வேறு சில மருத்துவர்களோ ரெம்டெசிவிர் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பெரிய வித்தியாசம் இல்லை எனக் கூறுகின்றனர். இது தவிர ஐவர்மெக்டின், அஸித்ரோமைசின் போன்ற பல
மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. ஆசெல்டாமிவிர் போன்ற ஆன்ட்டி வைரல் மருந்துகள் கூட சில இடங்களில் தரப்படுகின்றன. உண்மையில் கொரோனா தாக்கிய நோயாளிகளில் ரெம்டெசிவிர் தேவைப்படும் நோயாளிகளின் சதவீதம் வெகு குறைவே.

ஆனால், தொடர்ச்சியான செய்திகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலே ரெம்டெசிவிர் தந்தே ஆகவேண்டும் எனும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் “ரெம்டெசிவிர் கூட தராமல் என்ன மருத்துவம் செய்கிறீர்கள்?” என நோயாளியின் உறவினர்கள் சண்டை போடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொடுத்தால் ஏதாவது பலன் இருந்தாலும் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையிலும் பலருக்கு கொடுக்கப்படுகிறது.

முதல் அலையின் போது ஆயிரக்கணக்கானோர் ஐசியூவில் இருந்தபோது ரெம்டெசிவிர் பற்றாக்குறை பற்றி பெரிதாக பேச்சுகள் இல்லை.  இத்தனைக்கும் உற்பத்தி இப்போது இருப்பதைவிட குறைவாகத்தான் இருந்தது. இரண்டாம் அலையை எதிர்பார்த்து ரெம்டெசிவிரை கையிருப்பு வைக்காமல் மத்திய அரசு தவறிவிட்டது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி திடீரென ரெம்டெசிவிர் பற்றாக்குறையை அதிகரித்துவிட்டனர்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ள உதாரணத்தை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.  தீ சிறிய அளவில் எரியும் போதும் தீயணைப்புத் துறை தேவையில்லை. எரிந்து முடிந்து சாம்பலானபிறகும் தீயணைப்புத் துறை தேவையில்லை. சரியாகப் பற்றி எரியும்போது மட்டும்தான் தேவை.

அதுபோல கொரோனா ஆரம்பநிலையில் இருக்கும்போதும் ரெம்டெசிவிர் தேவையில்லை. முழுவதுமாக எரிந்து முடிந்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் கொடுப்பதாலும் பயன் இல்லை. சரியான நேரத்தில் ஆக்டிவ் வைரல் ரெப்ளிகேசன் (active viral replication) எனும் வைரஸ் பல்கிப் பெருகும் காலத்தில் கொடுத்தால்தான் பயன் உண்டு.

இந்த காலகட்டத்தை மருத்துவரால் மட்டுமே நிர்ணயிக்க முடியும். நோய் தொடங்கிய நாள், காய்ச்சலின் அளவு, நேற்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்குமான வித்தியாசம், ஆக்ஸிஜன் அளவு, நுரையீரல் பாதிப்பின் அளவு, இரத்தப் பரிசோதனை முடிவுகள் எனப் பல தரவுகளை வைத்தே மருத்துவர் முடிவு செய்வார்.

அதிலும் ஆன்ட்டிவைரல் மருந்து வேண்டுமா, துணை பாக்டீரியல் நிமோனியாவிற்கான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் வேண்டுமா, எந்த ஆன்ட்டி வைரல் மருந்தை தேர்ந்தெடுப்பது, சிறுநீரகம், கல்லீரலின் நிலை என்ன என்பதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் மருத்துவரும் முடிவெடுப்பார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல மாத காலம் மருத்துவமனையில் இருந்தார். அத்தனை காலமும் ரெம்டெசிவிர் மருந்து தேவையா என்றால் கிடையாது. வைரஸ் பல்கிப் பெருகும் காலத்தில் மட்டுமே அது தேவை, அப்போது மட்டுமே அது வேலை செய்யும். அதன் பிறகான காலத்தில் சிகிச்சை என்பது வைரஸால் தாக்கப்பட்ட நுரையீரலை சீர்படுத்துவதுதான்.

பலரும் மாதக்கணக்கில் ஐசியூவில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அத்தனை காலத்திற்கும் ரெம்டெசிவிர் தேவையில்லை. அதேபோல மிக லேசான தொற்றுக்கும் ரெம்டெசிவிர் எடுத்துக் கொள்வது மெழுகுவர்த்தியை அணைக்க தீயணைப்புத்துறையை அழைப்பது போலத்தான். இன்றைய பற்றாக்குறை சூழலில் அதுவும் தவறு.

இப்போது நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ரெம்டெசிவிரோ, ஆசெல்டாமிவிரோ, அதனைப் பரிந்துரைக்கும் முடிவை மருத்துவர்களிடம் விட்டுவிட வேண்டும். ரெம்டெசிவிர் கொடுத்தால்தான் பிழைப்பார் என்றோ, கொடுக்காமல் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்றோ மருத்துவ முடிவுகளில் தலையிடுவது தவறு.

அதேபோல மருத்துவர்களும் எந்தவித நிர்ப்பந்தத்திற்கும் வளையாமல் அறிவியல் முறைப்படி பரிந்துரைக்க வேண்டும்.அரசு ரெம்டெசிவிர் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீதும், செயற்கையாக தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். நிபுணர் குழு அமைத்து ரெம்டெசிவிர் பயன்பாடு குறித்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றைச் செய்தாலே பல மணிநேர ரெம்டெசிவிர் வரிசை களைத் தவிர்த்துவிட முடியும்.

இச்செய்தி அரசுக்கும் போய்ச் சேர்ந்திருப்பதால், இப்பொழுது ரெம்டெசிவிர் நேரடியாக மருத்துவமனைகளுக்கே தரப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது மக்கள் நலன் சார்ந்த அரசு என்பதற்கு இந்த உத்தரவே உதாரணம்.

அறிவியலையும் மருத்துவர்களையும் முழுமையாக நம்புவோம். தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்போம். தேவைக்காக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிவோம். சமூக இடை
வெளியைக் கடைப்பிடிப்போம். கொரோனா தொற்று தாக்காமல் நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.
------------------------------------------------------------------------
இந்துத்துவா கொடும் வைரஸ்
பரப்பும் 
கங்கைக் கரை ஓரம் மனிதப் பிணங்கள்...
கங்கைக் கரை ஓரம் மனிதப் பிணங்கள்…

இந்தியா இலங்கை போன்ற சர்வாதிகாரிகளின் பிடிக்குள் கட்டுண்டிருக்கும் நாடுகளில் அரச கட்டமைப்பின் அடிப்படை கூட இல்லமால் போய்விட்டது என்ற உண்மையைக் கொரோனா வெளிப்படுத்தியிருக்கிறது. இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி கொரோனாவிற்கு எதிராக தம்மிக்க பாணி என்ற ஆயுர்வேத பானத்தை அருந்தலாம் என வெளிப்படையாக அறிவித்த சில வாரங்களுக்கு உள்ளாகவே கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் இந்துத்துவா பாசிச அரசின் முழு அங்கமுமே மூட நம்பிக்கையின் மொத்த உருவமாகிவிட்டது. உலக மக்களும் உலகின் பல்வேறு நாளிதழ்கள் உட்பட ஊடகங்களும் இந்திய பாரதீய ஜனதா அரசின் செயலின்மையை விமர்சிக்க பிரித்தானியாவின் ஆர்.எஸ்.எஸ் கிளை மோடியைப் பாராட்டி கூட்டம் போட்டதுடன் மத்திய அரசிற்காக பணம் சேர்க்கவும் ஆரம்பித்துவிட்டது.
இந்திய வைரஸ்
இவை அனைத்திற்கும் மாறாக உலகின் மற்றொரு பகுதி இந்தியாவை உலகின் தொற்று மையமாகக் கருதும் நிலை தோன்றியுள்ளது. இந்தியாவின் விம்பம் மாட்டின் மலக் கழிவும், சிறு நீரும் மட்டுமன்றி கொரோனா வைரசும் ஆக மாற்றமடைந்துவிட்டது.
பிரித்தானியா முழுவதிலும் மருத்துவமைகளில் நோய்த் தொற்றால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் ஆயிரத்திற்கும் குறைவாகவுள்ள அதே வேளை சராசரி 9 மரணங்கள் மட்டுமே சம்பவிக்கின்றன. இந்திய வைரஸ் என அழைக்கப்படும் உருமாறிய பி1617.2 வகை பிரித்தானியாவில் உலாவுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2323 நோயாளிகளுக்கு இந்திய வகை பிரித்தானியாவில் தொற்றியுள்ளமை தொடர்பாக பிரித்தானிய அரசு கவனம் செலுத்துகிறது.
எந்தத் திட்டமும், நிர்வாகத்திறனுமற்ற பின் தங்கிய பிற்போக்கு மதவாத அரசான இந்திய ஒன்றிய அரசின் ஆளுகைக்குக் கீழுள்ள சுகாதார சேவை முழுமையாகச் செயலிழந்துள்ளது. தொற்றுக்கான மருத்துவத்திற்கு தேவையான பிராணவாயு, முறையான நெறியாள்கை இன்மையால் நூற்றுக்கணக்கான மரணங்கள் நாளந்தம் நிகழ்கின்றன. கங்கை ஆறு பிணங்களைச் சுமந்து சென்று ஊர்வலம் செல்கிறது.
தவிர பின் தங்கிய வட இந்திய மானிலங்களில் நோய்த் தொற்று தொடர்பான அறிவூட்டல் இல்லாமையாலும், இந்திய அரசிடமிருந்து உள்வாங்கிக்கொண்ட மூட நம்பிக்கையாலும் வீடுகளிலும் தெருக்களிலும் மரணித்துப்போகும் மக்கள் தொகை இந்தியாவினதும் அதன் அரச நிர்வாகத்தினதும் கோர முகத்தின் குறியீடாகிவிட்டது.
இந்தியாவில் நாளாந்தம் 2.6 மில்லியன் தடுப்பூசிகளே தயாரிக்கப்படுகின்றன. இன் கணிப்பின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மொத்த சனத்தொகையில் 75 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கு குறைந்தது 2 வருடங்களாவது ஆகும் என்பதால் எதிர்வரும் காலங்களில் பல்வேறு கட்ட அலைகளுக்கு முகம்கொடுக்க முடியாத இந்தியா தொற்று மையமாக மாறி வருகிறது. வல்லரசுக் கனவில் வாழ்ந்த் இந்திய மத்தியதரவர்க்கம் உலகின் வல்லரசுகளிடம் மருந்திற்காகவு உணவிற்காகவும் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது.
இவை அனைத்திற்கும் அப்பால் தடுப்பூசிகளின் உற்பத்தி தொடர்பான எந்த முன் நடவடிக்கையும் திட்டமும் இந்திய அரசால் முன் மொழியப்படவில்லை. எந்தக் கூச்சமும் இன்றி இந்திய மத்திய அரசு தனது “சாதனைகளைப்” பிராச்சாரம் செய்துகொண்டிருக்கிறது.

இந்துத்துவம் உருவாக்கிய வைரஸ்

கும்பமேளாவில் கூடியிருக்கும் பின் தங்கிய சமூகம்

இந்திய அரசால் அனுமதியளிக்கப்பட்டு ஊக்குவிகப்பட்ட கும்ப மேளா என்ற இந்துத் திருவிழாவில் முகக் கவசங்கள் இன்றி இலட்சக்கணக்கானவர்கள் கொரோனாவை அரச ஆதரவோடு பரப்பியிருக்கிறார்கள். ஏப்பிரல் மாதத்தில் நடைபெற்ற இந்தத் திருவிழாவை ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி அரசு கொரோனாவிற்கான தொற்று மையமாக்கியிருந்தது. மதவாத அரசின் சுகாதார அமைச்சர் ஹாஷ் வர்தனிடம் இத்திருவிழா தொடர்பாகக் கேள்வியெழுப்பிய போது அது தன்னுடைய துறை சார்ந்தது இல்லை என தப்பிக்கொண்டார். இதே அமைச்சர் மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் இந்தியாவில் கோரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி இந்திய பின் தங்கிய மதவெறி அரசின் பாசிச பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டதாக நம்பவைத்தே அரசியல் பிரச்சாரக் கூட்டங்களையும், கும்பமேளா போன்ற மதச் சடங்குகளையும் நடத்துவதற்கு ஊக்கமளித்தார். ஏப்பிரல் 12ம் திகதியில் ஆரம்பித்து நடைபெற்ற இந்துமத நிகழ்வான கும்பமேளாவே இந்தியத் தொற்றின் ஊற்றுமூலமாகத் அமைந்தது. சரியாக 9 நாளில், 21ம் திகதி ஏப்பிரல் மாதம் 314644 தொற்றாளர்கள் வட இந்தியாவில் கண்டறியப்பட்டனர். அப்போதும் கூட மேற்கு வங்கத்தில் குடிகொண்டிருந்த மோடியும் இந்திய அரசின் அடியாள் கும்பல்களும் அங்கு அரசியல் கூட்டங்களை சாரிசாரியாக மக்களைக் கூட்டி நடத்திக்கொண்டிருந்தன.கைங்கை நதியை இந்துத்துவத்தின் புனித நதியாகவே உலகம் முழுவதும் இந்தியா ஒரு விம்பத்தைக் கட்டமைத்திருந்தது. இன்று மனிதப் பிணங்களை மரணத்தின் பின்னான பெறுமானங்களுடன் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ பதிலாக ‘புனித’ நதியில் வீசியெறியும் நிலை தோன்றியுள்ளது.
டெல்லியில் கொரோனா நோயாளர்களுக்கான மையங்களை நடத்துவதற்காக இராணுவத்தின் உதவியை மானில அரசு நாடியுள்ளது. பீ,.பீ.சீ நிறுவனத்திற்கு நேர்காணல் வழங்கிய இந்திய மருத்துவர் ஒருவர், இந்தியாவின் தலை நகர் டெல்லியில் மக்கள் பிராண வாயுவைத் தேடி நகர் முழுவதும் அலைந்து திரிவதாகக் குறிப்பிடுகிறார்.

பிரித்தானிய பொதுமுடக்க வரலாறு
1. 15.03.2020 இலிருந்து 30.06.2020 முதலாவது பொது முடக்கம் பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், அத்தியாவசியமற்ற அனைத்து உயர் தெரு வணிகங்களும் மூடப்பட்டு, மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி கட்டளையிடப்பட்டனர், அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்பட்டனர். மே 2020 முதல் சட்டங்கள் மெதுவாக தளர்த்தப்பட்டன. மே 13 முதல் மக்கள் வெளிப்புற பொழுதுபோக்குக்காக வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 1 ஆம் தேதி, வீட்டை விட்டு வெளியேறுவதற்கான கட்டுப்பாடு இரவில் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாற்றப்பட்டது, மேலும் ஆறு நபர்களுடன் வெளியே சந்திக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
2. பெரும்பாலான பொது முடக்க கட்டுப்பாடுகள் ஜூலை 4 அன்று நீக்கப்பட்டன. விருந்தோம்பல் வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. இயக்க வணிகங்களில் புதிய சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல் “கோவிட் பாதுகாப்பாக” வெளியிடப்பட்டது. ஆறு பேருக்கும் அதிகமான கூட்டங்களைத் தவிர்க்குமாறு அரசாங்கம் இன்னும் மக்களுக்கு பரிந்துரைத்திருந்தாலும், முப்பது பேர் வரை கூடிய கூட்டங்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டன.
3. செப்டெம்பர் மாதம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.. இரண்டாவது அலை தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன, இந்த நிலை மூன்றாவது பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. செப்டெம்பர் 14ம் திகதி கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக தற்காலிகமாக விதிகள் தளர்த்தப்பட பிரித்தானியாவில் புதிய கோவிட் அலை தோன்றி மரணங்கள் அதிகரித்தன. இந்த நிலையில் புதிய பொது முடக்கம் தீவிரப்படுத்தப்பட்டு 6ம் திகதி ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதே வேளை பிரித்தானியா முழுவதும் தடுப்பூசிகளுக்கான மையங்கள் திறக்கப்பட்டு கட்டம் கட்டமாகத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
மூன்று மாதங்களுக்குள் 21.7 மில்லியன் பொது மக்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்க்கப்பட்டுவிட்டது. 67 மில்லியன் சனத்தொகையில் 32 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுவிட்டன. மேலும்சனத்தொகையில் 72 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதால் பிரித்தானியா ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி பிரித்தானியா வழமைக்குத் திரும்பிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, பொது முடக்கம் தற்காலிகமான பரவலைத் தடுத்தாலும், தடுப்பூசி மட்டுமே நிரந்தரத் தீவைத் தரும் என நிறுவப்பட்டுள்ளது. உலகின் தொற்று மையமாக மாறியுள்ள இந்தியாவில், மொத்த சனத்தொகையில் 3 வீதமானோர் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்பது அவமானகரமான உண்மை.

பொருளாதாரம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது?.
ஐரோப்பிய நாடுகளில் சோவியத் புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்களையும், சோசலிச இயக்கங்களையும் எதிர்கொள்வதற்காக மக்கள் நல அரசுகள் ஐரோப்பாவில் உருவாக்கப்படன. சோவியத் போன்றே தாமும் வேலையற்றவர்களுக்கு உதவித்தொகை, இலவச மருத்துவம் போன்றவற்றை வழங்குவோம் என பிரான்சில் 60 களில் ஏற்பட்ட மக்கள் – மாணவர் எழுச்சியின் பின்னர் ஐரோப்பா முழுவதும் அரசுகள் அறிவித்தன. அதே மக்கள் நல அரச மாதிரி என்பது கொரோனா காலத்தில் பொருளாதாரத்தைச் சரிவடையாமல் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறது.
பொதுமக்களில் போதிய வருமானம் இல்லை என அரசாங்கத்திடம் தெரிவித்த அனைவருக்கும் எந்தவகையான விசாரணைகளுமின்றி குடும்பத்திற்குத் தேவையான பணம் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்டது. வங்கிகள் ஒவ்வொரு தனி மனிதனதும் பணப் பரிமாற்றம் தொடர்பான விபரங்களை அரசிற்கு வழங்கியதால் இந்த நடை முறை இலகுவாக்கப்பட்டது. சிறு தொழில்களுக்கு முன் விசாரணை எதுவுமின்றி அரசாங்கம் உத்தரவாதம் வழங்கும் ஐம்பதாயிரம் பவுண்ஸ் கடன் தொகை வழங்கப்பட்டது. கோரோனா தாக்கத்தால் வேலை இழக்கும் நிலையிலிருந்தவர்களுக்கு வேலையைப் பாதுகாப்பதற்காக அரசாங்கமே நிறுவனங்களின் சார்பில் ஊதியத்தை வழங்கிற்று. ஆக, மக்களின் கொள்வனவுத் திறன் பெருமளவில் தாக்கத்திற்க் உள்ளாகவில்லை. பொருளாதாரத்தை மீளமைப்பது இலகுவாக்கப்பட்டது. 100 வீதம் மருத்துவம் இலவசம் என்பதால் கொரோனா சிகிச்சைக்காக மக்கள் பணம் செலவிடவேண்டிய தேவை ஏற்படவில்லை.

இந்திய வகை வரஸ் பிரித்தானியாவில் அதிகமாகக் காணப்படுவதால் பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்குப் பயணத்தடையை ஜேர்மனிய அரசாங்கம் விதித்துள்ளது. உலகம் இந்தியாவிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்தும் இன்றைய சூழலில், இந்திய வகை வரஸ் எனக் குறிப்பிடுவது இந்தியாவை அவமதிப்பதாகும் என நரேந்திர மோடியின் கோரமான கோமாளி அரசு பேஸ்புக், ரிவிட்டர் தலைமையகங்களை எச்சரித்துள்ளது. இந்திய அரசு தனது ஆட்சிக்காலத்தை முடித்துக்கொள்ளும் போது, அந்த நாடு, உலகிலிருந்து முழுமையாகத் தனிமைப்படுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் பிணங்கள் ஆக்கப்படுவதும், இன்னொரு பகுதியினர் ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடிமையாக்கப்படுவதும் கோரோனா தாக்கத்தை எதிர்கொள்ளத் தவறியமையால் நடந்தேறப்போகிறது.இந்த நிலையில் இந்தியாவில் ஒரு நிழல் அரசு ஒன்று அமைக்கப்பட்டால் மட்டுமே ஆபத்திலிருந்து மீள முடியும்.

-சபா நாவலன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?