வணங்குகிறோம்!

அவர்தாம் கலைஞர்!

நூற்­றாண்­டின் தலை­வ­ராம் தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞ­ருக்கு 101 பிறக்­கி­றது.

 95 ஆண்­டு­கள் வாழ்ந்­தார். அதில் 80 ஆண்­டு­கள் பொது­வாழ்­வில் கழித்­தார்.

 70 ஆண்­டு­கள் இத­ழா­சி­ரி­ய­ராக இருந்­தார். 70 ஆண்­டு­கள் எழுத்­தா­ள­ராக வலம் வந்­தார். 60 ஆண்­டு­கள் திரை­யு­ல­கத்­தில் இருந்­தார். 50 ஆண்­டு­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர்.

 60 ஆண்­டு­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர். 5 முறை இந்த தாய்த்­த­மிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர். இப்­படி வாழ்ந்த காலம் முழு­வ­தும்

வர­லா­றாய் வாழ்ந்­த­வ­ருக்கு சூன் -– - 3 பிறந்­த­நாள். இந்த ஆண்டு நூற்­றாண்டு விழா நிறை­யும் ஆண்­டும். நிறை­வாழ்க்கை வாழ்ந்­த­வரை நினைவு கூறி, நன்றி தெரி­விக்­கும் ஆண்டு.

அவர் வாழ்ந்த காலம் முழு­வ­தும் நேர்­வ­ழிப் பாதை தான். “என் பாதை சுய­ம­ரி­யா­தைப் பாதை. தமி­ழின நலன் காக்­கும் பாதை. தமிழ்­நெறி காக்­கும் பாதை. பெரி­யார் பாதை. அண்­ணா­வின் பாதை.

அற­வ­ழிப்­பாதை. அமை­திப்­பாதை. ஜன­நா­யக நெறி­மு­றைப்­பாதை. பாடையே தயார் எனப் பய­மு­றுத்­தி­னா­லும் அந்­தப் பாதை­யி­லி­ருந்து மாற மாட்­டேன்” என்று சொன்­னார் கலை­ஞர். 

சொல்­லி­ய­படி வாழ்ந்­தார் கலை­ஞர். வாழ்ந்த வாழ்க்­கைப் பாதை தான் இன்று அவ­ரது

நூற்­றாண்டு விழாக் கொண்­டா­டும் புக­ழில் கொண்டு போய் உயர்த்தி நிறுத்தி இருக்­கி­றது. அவர் தாம் கலை­ஞர்!

அவ­ரது வாழ்க்­கையே போராட்­டக் கள­மாக அமைந்­தி­ருந்­தது. போராட்­டமே வாழ்க்கை என்­பார்­கள் சிலர், எனக்கு வாழ்க்­கையே போராட்­ட­மாக இருந்­தது என்று சொன்­னார் கலை­ஞர். அவர் எழு­திய நெஞ்­சுக்கு நீதி­யும், தமிழ்­நாட்டு மக்­கள் நெஞ்­சில் எழு­திய நீதி­யும் ஒன்று தான். 

அவ­ரது வாழ்க்­கையே போராட்­டம்­தான்.

 மேலோட்­ட­மா­கப் பார்த்­தால் மிக­மிக உயர்­வான பத­வி­க­ளில் அவர் அமர்ந்து இருந்­த­தைப் போலத் தெரி­ய­லாம். 

அந்­தப் பத­வி­க­ளுக்கு முன்­னும், பத­வி­க­ளில் அமர்ந்­தி­ருந்த போதும் எதிர்­கொண்ட சொல்­ல­டி­யும், கல்­ல­டி­யும் அதி­கம்.

“நீங்­கள் ஒரு­முறை இறப்­ப­தற்­கா­கப் பயப்­ப­டு­ப­வர்­கள். ஆனால் நானோ பல­முறை கொல்­லப்­பட்ட­வன். சூழ்ச்­சி­க­ளா­லும் நய­வஞ்­ச­கத்­தா­லும் என் உடல் மட்­டுமே மர­ணத்­தைக் காண­வில்­லையே தவிர எனது உயிர் பல­முறை மர­ணித்து உயிர்ப்­பித்­துள்­ளது” என்று தலை­வர் கலை­ஞர் ஒரு­முறை சொன்­னார். 

கொள்­கைக்­கா­ரர்­கள் -– அந்­தக் கொள்­கையை விடாப்­பி­டி­யா­கக் கடைப்­பி­டிப்­ப­வர்­கள் -– அந்­தக் கொள்­கை­யைக் காக்க எதை­யும் செய்­யத் தயா­ராக இருக்­கும் தியா­கி­கள் ஆகிய அனை­வ­ரது வாழ்க்­கை­யும் உலக வர­லாற்­றில் இப்­ப­டித்­தான் இருந்­துள்­ளது. கலை­ஞ­ரின் வாழ்க்­கை­யும் அப்­ப­டித்­தான் அமைந்­தி­ருந்­தது.

அவர் செய்த நன்­மைக்­கான புக­ழைப் போலவே, பழிச் சொற்­க­ளை­யும் அதி­கம் தாங்­கி­னார். பாராட்டு மாலை­களை விட, பழிச் சொற்­க­ளாம் கற்­கள் மூல­மா­கவே அவர் அதிக உரம் பெற்­றார்.

 அவரை அவ­ரது எதி­ரி­களே, கூர்­மை­யாக வைத்­தி­ருந்­தார்­கள். 

வலி­மை­யாக ஆக்­கி­னார்­கள். எதிர்ப்பே அவ­ரைப் பலப்­ப­டுத்­தி­யது. எதிர்ப்பே அவ­ரைத் தலை­வ­ராக ஆக்­கி­யது. பழிச் சொற்­களே தலை­வர்­க­ளுக்கு எல்­லாம் தலை­வ­ராக ஆக்­கி­யது. அவர் தாம் கலை­ஞர்!

கல்­லும் முள்­ளும் தாண்­டு­வ­தா­கவே அவ­ரது பய­ணம் அமைந்­தி­ருந்­தது. தீயைத் தாண்­டியே திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை வளர்த்­தார்.

 பாழ்­பட்­டுக் கிடந்த தமிழ்­நி­லத்தை பண்­ப­டுத்தி –- நவீன தமிழ்­நா­டாக உரு­வாக்க அவர் எடுத்­துக் கொண்ட முயற்­சி­க­ளும், திட்­டங்­க­ளும், உழைப்­பும் சாதா­ர­ண­மா­னது அல்ல. பல பத்­தாண்­டு­கள் ஆகி இருக்க வேண்­டிய செயல்­களை, சில பத்­தாண்­டு­க­ளுக்­குள் செயல்­ப­டுத்­திக் காட்­டி­னார். 

ஒவ்­வொரு நொடி­யும் தமிழ்­நாட்­டுக்­கா­கச் சிந்­திப்­ப­வ­ரால் மட்­டுமே இத்­தனை பெரி­தி­னும் பெரி­தான செயல்­க­ளைச் செய்­தி­ருக்க முடி­யும். அவர் தாம் கலை­ஞர்!

‘அட்­சய பாத்­தி­ரம் இல்­லா­மலே ஐந்து கோடி தமிழ் மக்­க­ளை­யும் அர­வ­ணைத்து நல்­வாழ்வு நல்­கிட அன்­றா­டம் சிந்­தனை செய்­வோம்’ என்று சொன்­ன­வர் மட்­டு­மல்ல, அட்­சய பாத்­தி­ர­மா­கவே இருந்­த­வர் கலை­ஞர்.

மேற்கு வங்க எழுத்­தா­ளர் கர்க் சட்­டர்ஜி சொல்லி இருக்­கி­றார்: “எங்­கள் மாநி­லத்­துக்கு இப்­படி ஒரு கலை­ஞர் கரு­ணா­நிதி இல்­லையே என்று ஏங்­கி­னோம்” என்­கி­றார். அத்­த­கைய ஏக்­கத்தை எல்லா மாநி­லங்­க­ளுக்­கும் உரு­வாக்­கி­ய­வர் கலை­ஞர். அவர் தாம் கலை­ஞர்!

“இரவு என்­ப­தைத் தனது உழைப்­பிற்­கென நீட்­டிக்­கப்­பட்ட பகல் பொழு­தாக்­கிக் கொண்டு தமி­ழுக்­கும் தமி­ழ­ருக்­கும் தொண்­டாற்­றி­டும் பாட்­டா­ளியே கலை­ஞர்” என்று சொன்­னார் திரைப்­பட இயக்­கு­நர் மகேந்­தி­ரன். 

“ஒரு நாளைக்கு கரு­ணா­நிதி எத்­தனை மணி நேரம் தூங்­கு­கி­றார் என்­பதை மறைந்­தி­ருந்து பார்த்­தால் தான் தெரி­யும், இந்த உயர்­வுக்­குப் பின்­னால் இருக்­கும் உழைப்பு” என்று கலை­ஞ­ருக்கு 44 வயது இருக்­கும் போதே பாராட்­டிப் பேசி இருக்­கி­றார் பேர­றி­ஞர் அண்ணா. 

தமி­ழின இயக்­கத்­தின் தலை­வ­ரான பிற­கும், தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் ஆன­ பிற­கும் இந்த உழைப்பை நிறுத்­த­வில்லை கலை­ஞர். அவர் தாம் கலை­ஞர்!

இவ்­வ­ளவு சூறா­வளி அர­சி­ய­லுக்­கும் மத்­தி­யில் எழு­தி­னார். 6 பாகங்­கள் ‘நெஞ்­சுக்கு நீதி’.

4 ஆயி­ரத்து 171 பக்­கங்­கள். 54 தொகு­தி­க­ளாக வெளி­வந்­துள்­ளது அவர் எழு­திய கடி­தங்­கள். சட்­ட­மன்ற உரை­கள் 12 தொகு­தி­க­ளாக வெளி­யாகி உள்­ளது. 

அவ­ரது மொத்த எழுத்­துக்­க­ளை­யும் தொகுத்­தால் 500 தொகு­தி­க­ளுக்­கும் மேலே வரும். பேச்­சு­க­ளைத் தொகுத்­தால் அதை­விட இரண்டு மடங்கு வரும். 18 நாட­கங்­கள் எழுதி இருக்­கி­றார். 75 திரைப்­ப­டங்­க­ளுக்கு வச­னம் எழுதி இருக்­கி­றார். 

சின்­னத் திரை­யை­யும் விட்டு வைக்­க­வில்லை. கையெ­ழுத்து இத­ழில் வாழ்க்­கை­யைத் தொடங்­கி­னார். 

கையெ­ழுத்து போடும் அள­வுக்கு பலம் இருக்­கும் வரை எழு­தி­னார்.

கார்ட்­டூன் போட்­டார். ரயி­லில் எழு­தி­னார். ஜெயி­லில் எழு­தி­னார். கோட்­டை­யில் எழு­தி­னார். கோபா­ல­பு­ரத்­தில் எழு­தி­னார். தனி­மை­யி­லும் எழு­தி­னார். பெருங்­கூட்­டத்­துக்கு மத்­தி­யி­லும் எழு­தி­னார். 

துணுக்கு எழு­தி­னார். பாக்ஸ் கட்­டி­னார். பல­ரது பல்­லை­யும் பதம் பார்த்­தார். 

எழு­து­கோல், பதி­னோ­ரா­வது விர­லாக இருந்­தது. அந்த விர­லையே அதி­கம் பயன்­ப­டுத்­தி­னார். அவ­ரது சிந்­தனை ஏதோ ஒரு விதத்­தில் வியர்­வை­யைப் போல வெளியே வந்து கொண்டே இருந்­தது. 

கலி­போர்­னியா பல்­க­லைக் கழ­கப் பேரா­சி­ரி­யர் ஜார்ஜ் ஹார்ட் சொன்­னார்: “கலை­ஞர் கரு­ணா­நிதி போல் அத்­தனை படைப்­பு­கள் எழுத வேறொ­ரு­வர் முயன்­றால் அதற்கு ஒரு பிறவி போதாது” என்று சொன்­னார்.

பல பிற­வி­களை ஒரு பிற­வி­யில் வாழ்ந்­த­வர் கலை­ஞர். 

பல­ரது செயல்­க­ளை­யும் ஒரே காலத்­தில் செய்து காட்­டி­ய­வர் கலை­ஞர். 

அவர் தாம் கலை­ஞர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?