சின்னகுத்தூசி

 சின்னகுத்தூசி

வயிற்று வலியால் அவதிப்பட்ட காலத்திலும்கூட அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன் அறைக்கு வரும், பல்வேறு பத்திரிக்கையாளர்களையும் புன்முறுவலோடு வரவேற்று, அவர்களின் அரசியல், கேள்வி சார்ந்த ஐயங்களுக்குப் பதிலளித்து அசத்துபவர். மாற்றுக் கருத்தினருக்கும், அவர்கள் மனம் கோணாமல் நயமாகப் பதிலளித்து விவாதிப்பவர்.
அக்ரஹாரத்தில் பிறந்து, திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட வாழ்க்கை சின்னகுத்தூசியினுடையது. சின்னகுத்தூசி என்றழைக்கப்படும் இரா. தியாகராசன் திருவாரூரில் இராமநாதன் - கமலா இணையருக்கு 15.6.1934-ல் ஒரே மகனாகப் பிறந்தவர். திருவாரூர் பகுதி திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துகிருட்டிணன், வி.எஸ்.பி. யாகூப், தண்டவாளம் ரங்கராசன் ஆகியோரின் தொடர்பினால், திராவிட இயக்கக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டவர். அப்படியே பெரியார் பாதையில் சங்கமமானவர்.
திராவிட இயக்கத்தின் மூத்த எழுத்தாளரான குருசாமி - தன் எழுத்தாற்றலால், எடுத்துக்காட்டுகள் கூறி, வரலாற்று நிகழ்வுகளை அவ்வப்போதைய அரசியல் நிகழ்வுகளுடன் நினைவாற்றலுடன் ஒப்பிட்டு எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்வதில் வல்லவர். அவரின் எழுத்து, படிப்பவர் நெஞ்சில் குத்தூசி தைப்பதுபோல் பதிவதால் ‘குத்தூசி குருசாமி’ என்ற பெயர் பெற்றார். பின்னாளில் எழுத வந்த இரா. தியாகராசனும் அதையொற்றி, தன் நயமான எழுத்து பாணியால், எதிரிகளை லாவகமாகக் கையாண்டு பதிலடியைக் கொடுத்ததால் ‘சின்னகுத்தூசி’ என்றழைக்கப்பட்டார்.

பள்ளிப் படிப்பு முடித்ததும், பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், சிறப்பு அனுமதி அடிப்படையில் சேர்ந்து, ஆசிரியர் பயிற்சி பெற்று, குன்றக்குடி அடிகளார் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, அடிகளாரின் அன்பைப் பெற்றார். பல்வேறு நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில், ‘கொக்கிரகுளம் சுல்தான் முகமது’, ‘தெரிந்தார்கினியன்’, ‘ஆர்.ஓ. மஜாட்டோ’, ‘திட்டக்குடி அனீஃப்’, ‘காமராசர் நகர் ஜான் ஆசிர்வாதம்’ போன்ற புனைபெயர்களில் அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள், பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம் என்று பல துறைகளையும் தொட்டு கட்டுரைகள் எழுதினார் சின்னகுத்தூசி.
சிறிது காலம் திருவாரூரிலிருந்து வெளியாகிய ‘மாதவி’ என்ற வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். பின்னர், பெரியார் -அண்ணாவின் பாதையிலிருந்து விலகி ஈ.வெ.கி.சம்பத் தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கியபோது, அதன் அதிகாரபூர்வ வெளியீடான ‘தமிழ்ச்செய்தி’ வார இதழ் மற்றும் நாளிதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார் சின்னகுத்தூசி.
கால ஓட்டம் சம்பத்தை காங்கிரஸ் இயக்கத்தில் கொண்டு சேர்த்துவிட காமராஜரின் ‘நவசக்தி’யில் தலையங்க ஆசிரியராகப் பொறுப்பேற்றார் சின்னகுத்தூசி. இன்னும் ‘அலையோசை’, ‘எதிரொலி’ தொடங்கி கடைசிக் காலத்தில் ‘நக்கீரன்’ வரை பல பத்திரிகைகளைப் பட்டியலிட முடியும் சின்னகுத்தூசியின் எழுத்துகளைத் தாங்கி வந்தவை என்று. ஆனால், அவர் உயிரோடும் உணர்வோடும் இரண்டற கலந்தது ‘முரசொலி’ பத்திரிகையில் அவர் ஆற்றிய பணி. “நான் திமுக அனுதாபி; அந்த அடிப்படையில் சமூகநீதிக் கண்ணோட்டத்திலேயே என்னுடைய பணியும் எழுத்தும் இருக்கும்” என்ற நிலையில் இறுதி வரை உறுதியாக நின்றவர் அவர். கருணாநிதிக்கும் சின்னகுத்தூசிக்குமான உறவு இரு பத்திரிகையாளர்களுக்கு இடையிலான உறவு. இவரும் அவரிடம் அப்படியே நடந்துகொண்டார்; அவரும் இவரிடம் அப்படியே நடந்துகொண்டார். எவ்வளவோ பிணக்குகள் உண்டு இருவருக்கும் இடையிலும்; அதையெல்லாம் தாண்டிய ஆழமான நட்பும் நல்லுறவும் இருவரிடத்திலும் உண்டு.
அவர் தங்கியிருந்த திருவல்லிக்கேணி ‘வல்லப அக்ரஹாரம் மேன்சன்’ பல்வேறு பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினரின் சரணாலயமாக இருக்கும். புராணக் கதைகள் தொடங்கி, தமிழக, திராவிட இயக்க அரசியல், காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சியின் தோற்றம், செயல்பாடுகள், இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ், பூமிதான இயக்கம், முஸ்லிம் லீக் இயக்கம் ஆகியவற்றின் வரலாறு, உலகளாவிய நடப்பு நிகழ்வுகள் என்று விரிந்து பேசக்கூடியவர் சின்னகுத்தூசி. அவரது அறைக்குச் சென்றால், பெரும்பாலான நேரங்களில் இளம் பத்திரிகையாளர்களுடன் அவர் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
சின்னகுத்தூசி திருமணம் செய்துகொள்ளவில்லை. எழுத்துப் பணி முழு நேரத்தையும் தின்னக்கூடியது என்று உணர்ந்திருந்தாலோ என்னவோ தனியாளாகவே வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தமிழ்ச் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுவிட்டார். தான் ஏற்றுக்கொண்ட கொள்கை வேறு; தன் வாழ்க்கை வேறு என்று இரு வாழ்க்கை வாழாதவர். அக்ரஹாரத்தில் பிறந்தவர் என்றாலும், அவர் உபநயனம் செய்துகொள்ளவில்லை. முப்புரி நூலையும் அணியவில்லை. ‘வாழ்நாள் முழுவதும் நான் ஒரு முழு மாந்தனாகவே இருந்துவிட்டுப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டவர். பத்திரிக்கையாளர் ஞாநியுடன், காஞ்சி சங்கராச்சாரியாரை ஒருமுறை சந்தித்தார் சின்னகுத்தூசி. சங்கராச்சாரியார், சின்னகுத்தூசியின் எழுத்தாற்றல், நினைவுத்திறனைப் பாராட்டியதுடன் அவர் தனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பதிலுக்குத் தன்னுடன் கொண்டுசென்ற பெரியாரின் இடஒதுக்கீடு, பொதுவுடைமைக் கொள்கை தாங்கிய நூல்களை சங்கராச்சியாருக்கு அன்பளிப்பாகத் தந்து அறை திரும்பினார் சின்னகுத்தூசி.
22.05.2011-ல் சென்னை பில்ராத் மருத்துவமனையில் அவர் மறைந்தார். அவரது உடல் நக்கீரன் அலுவலகத்தில் வைக்கப்பட்டபோது, மு.கருணாநிதி நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன், ‘முரசொலி’யில் ஒரு இரங்கற்பாவையும் வடித்தார். சின்னகுத்தூசியின் இறுதி ஊர்வலத்தில் மூன்று கிலோ மீட்டருக்கு மேலாக நடந்தே சென்று பங்கேற்றார் திமுகவின் இன்றைய செயல் தலைவர் ஸ்டாலின். சின்னகுத்தூசியின் வாழ்வும் பணியும் யாருக்காக அமைந்தன என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல, சின்னகுத்தூசி பயன்படுத்திய ஆயிரக்கணக்கான நூல்கள் சரிபாதி பிரிக்கப்பட்டு, அறிவாலயத்தின் நூலகத்துக்கும், பெரியார் திடல் நூலகத்துக்கும் ஆய்வு செய்யும் ஆர்வலர்களின் வசதிக்காக அளிக்கப்பட்டன!

-செ. அருள்செல்வன், தொடர்புக்கு: arulselvanchennai@gmail.com










தண்ணீர் வர்த்தகம்  ,,,,,,,,,,,
இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் உலக வங்கியின் கடன் பெரும் திட்டங்களில் பெரும்பாலா னவையில் இடம்பெறும் ஓர் முக்கிய நிபந்தனை தண்ணீர் தனியார்மயமாக வேண்டும் என்பதுதான். தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதும் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத் தின் விதி. இதுபோன்ற நீர் வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தான் புதிய வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வரைவுக்கான அடிப்படை, உலக வங்கியின் கீழ் இயங்கும் “நீர் ஆதாரக் குழு -2030” என்ற அமைப்பு வழங்கிய “தேசிய நீராதார திட்டவரைவுக்கான பரிசீலனை - சீர்திருத்தங்களுக்கான திசை வழிகள்” என்ற அறிக்கையே ஆகும்.
அடிப்படை உரிமையான நீர்:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடி மகனுக்கும் வழங்கியுள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது தூய்மையான குடிநீரை உள்ளடக்கியதே என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வகையில் தண்ணீர் தனியார்மயமாகுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே புறம்பானதாகும். மேலும், இந்திய அரசிலமைப்புச் சட்டம் நீர் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டதாக வரையறுத்துள் ளது. எனவே நீர் குறித்தான எந்த மாற்றமும் மாநில அளவில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அந்த வகையில் உலக வங்கியின் கொள்கையை ஏற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் நீர் தொடர் பான கொள்கை திட்டங்களை வரைய துவங்கியன. குறிப்பாக உத்திர பிரதேசம் (1999), ராஜஸ்தான் (1999), கர்நாடகா (2002), மற்றும் மகாராஸ்டிரா (2003) ஆகிய மாநிலங்கள் நீர் திட்டக் கொள்கைகளை வகுத்தன. நீருக்கான அதிகார மையங்களை அமைக்கும் விதமாக 1997-ம் ஆண்டு ஆந்திரா தனி சட்டம் இயற்றியது. இதன் இடையே மத்திய அரசு தேசிய நீர் கொள்கை 2002யை கொண்டு வந்தது. இந்த திட்ட கொள்கை நீர் தனியார்மயமாக வேண்டும் என்று கூறியது.
2012-ம் ஆண்டு புதிய வரைவு கொள்கையானது நீர் குறித்தான மாநில அரசுகளின் அதிகாரத்தை மறுத்து, பொது அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது மத்திய அரசின் அதிகார பட்டியலுக்கோ மாற்றியமைக்க ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. 1882 - ம் ஆண்டின் இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரர்களுக்கு உரிமையில்லை என்று மாற்ற வேண்டுமென்கிறது இந்த கொள்கை. நீரின் மீது உள்ள மக்களின் பாரம்பரிய உரிமையும், மாநிலங்களின் உரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் ஒருங்கே பறித்து மத்திய அரசின் கட்டுப்பாடில் முழு அதிகாரத்தையும் கொண்டு செல்ல மறைமுகமாக வழி செய்கிறது புதிய தேசிய நீர்க் கொள்கை முன்வரைவு.
இந்த வரைவு அறிக்கையானது, தண்ணீர் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்கு பதிலாக, சமூகக் குழுக்களும் தனியார் துறை யினரும் இச்சேவையை அளிப்பதை ஊக்குவித்து ஆத ரிக்க வேண்டும் என்கிறது. தண்ணீர் மற்றும் கழிவு நீருக்கு வரி விதிப்பது என்றும் வரைவில் கூறப்பட் டுள்ளது.
மின்சாரம் தனியார்மயமாக மாற்றுவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது போல நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. இந்த ஆணையம் கட்டண நிர்ணயம், நீர் ஒதுக்கீடு, கண் காணித்தல், ஆலோசனை வழங்குதல் முதலானவற்றைச் செய்யும்.
தேசிய நீர்க் கொள்கை - 2012 இன் முன்வரைவில், 7 வது அத்தியாயத்தில் முதல் பிரிவு நீர் வர்த்தக பண்டமாக கருதப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. மக்கள் மத்தியில் ஏழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த அத்தியாயம் திருத் தங்கள் மேற்கெள்ளப்பட்டுள்ளது. புதிய திருத்தப்படி விவசாயிகளுக்கு நீர் மானிய விலையில் தரப்படும்.
இப்படி இந்த வரைவு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நேரத்தில் மத்திய அரசு நீர் தொடர்பாக National Water Framework Act என்கிற புதிய சட்டத்தை இயற்ற முன்னாள் திட்ட குழு தலைவர் ஆலாக் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. மேலும் நதி வாரிய சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய நீர்வள துறை முன்னாள் நீதிபதி டோபியா தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது. இவை நமக்கு சுட்டிக்காட்டுவது என்னவெனில் மத்திய அரசு திட்ட வரைவின் அம்சத்தை பல்வேறு வழிகளில் அமல்படுத்த துவங்கிவிட்டது என்பதே.
ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர் களைவிட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக் குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை.
இந்த நிலையில் இந்தியாவில் தண்ணீர் தனியார்மயமானல் அது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சென்றடையும் என்பதை கூறத் தேவையில்லை. இதற்கு உதராணமாக தில்லியில் தனியார்மயமாக்கப்பட்ட தண்ணீர் எப்படி மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன் அளிக்கிறது என்பதை ஓர் ஆய்வு தெளிவுப் படுத்துகிறது (பார்க்க: Sujith koonan & Preeti Sampat, “Delhi Water Supply Reforms”, EPW, 28th April 2012 ).இந்தியாவில் தண்ணீர் தனியார்மயமாவதை எதிர்த்து வெற்றி கண்ட ஒரே போராட்டம் பிளாசிமேடா மக்களுடையது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பாகவும் அவர்களால் வெற்றி பெறமுடிந்தது. இப்படிப்பட்ட போரட்டங்கள் இனி தொடர்கதை ஆகபோவது நிச்சயம்.

==============================================================================================
காவல்துறை மீதுதான் சந்தேகம்.
----------------------------------------------------------
சென்னை – வேளச்சேரி பகுதியில் கடந்த 22.02.2012 அன்று நள்ளிரவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக அபய்குமார், வினய் பிரசாத், வினோத்குமார், ஹரிஷ்குமார், சந்திரிகாராய் ஆகிய 5 நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 23.01.2012 அன்று சென்னை – பெருங்குடி பரோடா வங்கியில் 19 இலட்ச ரொக்கமும், 20.02.2012 அன்று சென்னை- கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் 14 இலட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து விபரம் தெரிவித்தால் 1 இலட்சம் பரிசுத் தொகை கிடைக்கும் என்று சென்னை காவல் ஆணையர் திருமிகு.திரிபாதி அவர்கள் 22.02.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதுமட்டுமல்லாமல் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக கருதக்கூடிய மர்மநபரின் அசைகின்ற புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர்.
velacheri_encounter_400இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கக்கூடிய நபரோடு 4 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வேளச்சேரி பகுதியில் தங்கிருந்ததாகவும் இவர்களை பிடிக்கச் சென்றபோது வீட்டிலிருந்த வங்கிக் கொள்ளையர்கள் போலீசாரை சுட்டதாகவும் அதில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும் போலீசார் தற்காப்புக்காக வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் 24, 25 பிப்ரவரி 2012 ஆகிய தேதிகளில் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். மோதல் மரணம் நடந்த பகுதிகளில் குடியிருப்பவர்கள், போலீசார், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் திரட்டிய தகவலின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.
வேளச்சேரி மோதல் மரணம் போலி மோதல் மரணம் என்றே எமது ஆய்வில் தெரிய வருகிறது. தமிழகத்தில் கடந்த 29.05.2006 முதல் 23.02.2012 இன்று வரை போலி மோதல் சாவில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதற்காகவும், வன்முறையில் ஈடுபடுகிறவர்களை ஒடுக்குவதற்காகவும் மோதல் மரணம் நடத்தப்படுகிறது என்று கூறினாலும் சட்டத்தின் அடிப்படையில் இவை மிகக்கொடிய மனித உரிமை மீறலாகும். போலீசாரின் போலி மோதல் மரணத்தால் பல உண்மைகள் சிவில் சமூகத்திற்கு தெரியாமல் போகிற ஆபத்தும் ஏற்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் உயிரோடு பிடிக்கப்பட்டு குற்றத்திற்கான காரணங்கள், பின்னணி உள்ளிட்ட பல உண்மைகள் சிவில் சமூகத்திற்கு தெரிய வருகிறபோது குற்றத்தை தடுப்பதற்கு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். அதை தவிர்த்து உயிரை தற்காத்துக் கொள்வதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் மோதல் மரணம் நடந்ததாக தொடர்ந்து போலீசார் பொய் பரப்புரை செய்து வருவது ஏற்புடையதல்ல.
இதுவரை தமிழகத்தில் நடந்த எல்லா போலி மோதல்மரணங்களிலும் போலீசார் தங்கள் தரப்பு கருத்துக்களை என்ன கூறி வந்தார்களோ, அதே கருத்துக்களைத்தான் வேளச்சேரி மோதல் மரணத்திலும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மைகள் கண்டுபிடிக்க முடியாமல் – குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கூறிய கருத்துக்களே உண்மையாக பதிவு செய்யப்பட்டு அவை நீதிமன்ற தீர்ப்புகளாக வெளிவருகிறபோது நம்முடைய ஜனநாயகம் மிகப்பெரிய அவலத்தில் சிக்கிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த சிக்கல் தொடரக்கூடாது என்கிற அடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு வேளச்சேரி மோதல் மரணத்தின் உண்மைகளை சிவில் சமூகத்திற்கு தெரியப்படுகிறது.
 கடந்த 21.02.2012 மற்றும் 22.02.2012 ஆகிய நாட்களில் வங்கிக் கொள்ளையர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிற வேளச்சேரி வீடு பூட்டியிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 வேளச்சேரி பகுதியில் நடந்த மோதல் மரணம் குடியிருப்புக்கு அருகாமையில் 22.02.2012 அன்று இரவு 8.00 மணியளவில் சில போலீசார் சீருடை அணிந்தும், சில போலீசார் சீருடை அணியாமலும் அப்பகுதியில் கண்காணித்து வந்துள்ளனர்.
 கடந்த 22.02.2012 அன்று இரவு 12.00 மணியளவில் காவல் வாகனங்களோடு சில தனியார் வாகனங்களும் உடன் வந்தன என்று ஒருவர் எமது குழுவினரிடம் தெரிவித்தார்.
 வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் போலீசார் வெளியிட்ட பிறகும் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறக்கூடிய புகைப்படத்தின் நபரும் மற்றவர்களும் எவ்வித பதட்டமும் இல்லாமல் வேளச்சேரியில் தங்கியிருக்க முடியுமா?
 வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வேளச்சேரியில் தங்கியிருந்ததாக தகவலின் அடிப்படையில் 14 பேர் கொண்ட போலீசார் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். தகவல் கொடுத்தவர் உண்மையான தகவலை கொடுத்தாரா? பொய்யான தகவலை கொடுத்தாரா? அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்பதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா? தகவலின் அடிப்படையில் மட்டுமே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு அப்பகுதிக்குச் செல்ல முடியுமா? வங்கிக் கொள்ளையர்கள் அங்கே தங்கியிருந்ததாக உறுதிபடுத்தினாலும் அதற்கான தகுந்த ஆதாரங்களை திரட்டிக்கொண்டு அவர்களை கைது செய்திருக்கலாம். மிகக்கொடிய குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களை பிடிப்பதற்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அப்பகுதிக்குச் சென்றிருக்கலாம். அவர்கள் யார்? அவர்கள் பின்னணி? என்பதெல்லாம் எதுவுமே தெரியாமல் அவர்களை மோதலில் சுட்டுக் கொன்றிருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
 கடந்த 22.02.2012 அன்று இரவு 11.00 மணியளவில் வேளச்சேரி பகுதியை கண்காணித்துக் கொண்டிருந்த சில போலீசார் விரைவாக அப்பகுதியை விட்டு வெளியேறியதாகவும் ஒரு சில போலீசார் மட்டும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
 வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்கியிருந்த வீடு மிகவும் குறுகலான இடத்தில் உள்ளது. சென்று வருவதற்கு ஒரே வழிதான் உள்ளது. இந்நிலையில் மிகவும் எளிதாக பிடித்திருக்கக்கூடிய இந்த நபர்களை துப்பாக்கியால் சுட்டுதான் பிடித்திருக்க வேண்டுமா?
velacheri_encounter_621
 போலீசாருக்கும் வங்கிக் கொள்ளையர்களுக்கும் இடையே மோதல் நடந்திருந்தால் வீட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு தடங்கள் இருந்திருக்கும். 14 பேர் கொண்ட போலீசார் துப்பாக்கியால் சுட்டிருந்தால் கொல்லப்பட்டவர்களின் இரத்த சிதறல்கள் சுவற்றிலும் பிற பகுதிகளிலும் பதிந்திருக்கும். ஆனால் தரையில் மட்டுமே கொல்லப்பட்டவர்களின் இரத்தம் சிந்தியுள்ளது. இது மோதல் நடந்ததற்கான அறிகுறியாகத் தெரியவில்லை. இரத்தம் சிந்திய சடலங்களை கொண்டு வந்து கிடத்தியது போன்றுதான் உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 30 பேர் கொண்ட தனிப்படை இருக்கின்ற நிலையில் ஒரு குறுகிய பகுதியில் தங்கியிருந்ததாக கூறக்கூடிய 5 நபர்களை உயிருடன் பிடிப்பதற்குக்கூட நம்முடைய போலீசாருக்கு திறன் இல்லாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
 கடந்த 22.02.2012 அன்று சென்னை காவல் ஆணையர் திரிபாதி கூட்டிய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மேற்குவங்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்கிற கருத்து எப்படி விவாதிக்கப்பட்டது?
 வேளச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய பலரும் துப்பாக்கிச் சூடு நடந்த சத்தம் கேட்கவில்லை என்றுதான் கூறுகிறார்கள். ஒரு சிலர் சத்தம் கேட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் விடியற்காலை 4.00 மணியளவில் அங்குள்ள மக்களிடம் போலீசார் என்கவுன்டர் நடந்துள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கூறியுள்ளனர். போலீசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே மோதல் நடந்தால் துப்பாக்கிச் சத்தம், அலறல் சத்தம், பதட்டம் போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும். துப்பாக்கிச் சூடு நடந்த வீடு தனி வீடாக இருந்திருந்தாலும் ஓரளவு போலீசார் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். சாதாரண மக்கள் தங்கியிருக்கக்கூடிய குறுகலான பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் மோதல் நடந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
velacheri_encounter_360 வங்கிக் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக கூறப்படுகிற காவலர்கள் கிறிஸ்டின் ஜெயசீலன் மற்றும் ரவி ஆகியோர் எப்போது பார்த்தாலும் கண்களை மூடிக்கொண்டே இருக்கின்றனர். இதெல்லாம் ஒருவிதமான நாடகமாகவே தெரிகிறது. ஆகவே மோதல் மரணத்தில் ஈடுபடுகிறவர்கள் மட்டுமல்ல இதுபோன்ற போலி காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 போலி மோதல் மரணம் மட்டுமல்லால் போலி முகவரியை போலீசார் தெரிவித்துள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்று போலீசார் வெளியிட்டுள்ள முகவரி போலியானது என்று கண்டுபிடித்து வெளியிட்ட பிறகு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மும்பையில் கொள்ளையடித்தவர்கள், அவர்களுக்கு பெண்களோடு உல்லாசமாக இருந்தவர்கள் என்றெல்லாம் தொடர்ந்து புனையப்படுகிற கதை உண்மையல்ல.
 சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக கொல்லப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை போலீசார் செய்யத் தவறிவிட்டனர். இதுபோன்ற மோதல் மரணங்களுக்கு போலீசார் மட்டும் காரணமாக இருந்துவிட முடியாது. சில அரசியல் சக்திகளும் காரணங்களாக இருக்கலாம். அவற்றின் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
 5 பேர் மோதல் மரணங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதாக காவல்துறை இயக்குனர் கூறியிருப்பது வரவேற்கக்கூடியதல்ல. சி.பி.சி.ஐ.டி போலீசார் என்பவர்கள் தமிழக போலீசார். இவர்களால் எப்படி உண்மையை வெளிக்கொணர முடியும்? ஆகவே சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டால் உண்மைகள் வெளிவராது.
 கடந்த வாரம் சென்னை போலீசார் 10 ஆயிரம் ரௌடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் 25 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மோதல் மரணம் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்ததாக பத்திரிக்கையில் செய்தி வெளிவந்திருந்தது.
 தமிழகத்தில் நாளுக்கு நாள் கொள்ளைச் சம்பவங்களும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு போலீசார் சட்டத்தின் அடிப்படையில் புலனாய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு இத்தகைய குறுக்கு வழியிலான நடவடிக்கை சமூகத்தில் நடக்கக்கூடிய வன்முறையை ஒழித்துவிடாது.
வேளச்சேரி மோதல் மரணம் பலபேருக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கிற போலீசாரின் கூற்று ஏற்புடையதல்ல. இம்மோதல் மரணம் நடந்த பிறகுகூட 23.02.2012 இன்று மதுரையிலும் இராமநாதபுரத்திலும் வங்கிக் கொள்ளை முயற்சி நடந்திருப்பதாக தெரிய வருகிறது. சமீப காலங்களில் மட்டும் வங்கிக் கொள்ளை அதிகளவு நடப்பதற்கான காரணங்கள் என்ன? இதை அரசு ஆய்வு செய்திருக்கிறதா?
 தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய கொலை, கொள்ளை, மின்வெட்டு, விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு என்கவுன்டரை நடத்தி அதன் மூலம் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று ஒரு அரசு காட்ட முயற்சித்தால் அதைவிட அபத்தம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது.
 சுட்டுக் கொல்லப்பட்ட நபர்கள் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் கொள்ளையடித்த பணம் எங்குள்ளது? இவர்களோடு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் யார்? என்கிற விபரம் போலீசாரால் கண்டுபிடிக்கப்படாமல் போனது துரதிஷ்டவசமானது.
velacheri_encounter_620
 சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களில் ஒருவரை மட்டுமே அடையாளம் காட்டிவிட்டு மற்ற நபர்கள் யார் என்று கூட தெரியாத நிலையில் அவர்களையும் சேர்த்தே சுட்டுக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்ற விசாரணை இல்லாமல் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட 5 நபர்கள் மிகக்கொடிய குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்கிற உண்மைகளை பத்திரிக்கைகள் மூலம் வெளியிட்டு தங்கள் தரப்பு நியாயங்களை நீதியாக அறிவித்துக் கொண்டிருப்பதை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும்.
 சென்னை மாநகர ஆணையர் திரு.திரிபாதி அவர்கள் கடந்த 22.02.2012 மற்றும் 23.02.2012 ஆகிய தேதிகளில் நடத்திய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு ஒற்றுமை உள்ளது. கடந்த 22.02.2012 அன்று சென்னை மாநகர ஆணையர் திரிபாதி அவர்கள், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர் ஒருவரின் அசைகின்ற புகைப்படத்தை வெளியிட்டு இவர்களை பிடிப்பதற்கு 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் சிலர் வடமாநிலங்களுக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். வங்கிக் கொள்ளை பற்றிய தகவல் தெரிவிப்பதற்கு ரூ.1 இலட்சம் ரொக்கமும் பரிசு கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் பற்றிய தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்தார். மறுநாள் 23.02.2012 அன்று மோதல் மரணத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் குற்றஞ்சாட்டவர்களின் முகவரி, குற்றப் பின்னணி உள்ளிட்ட பல தகவல்ளை வெளியிட்டார். இதற்கிடையே 23.02.2012 அன்று தினத்தந்தி பத்திரிக்கையில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி, போலீசாருக்கு சவாலாக இருக்கக்கூடிய நபர்கள் எங்களை தூண்டிவிட்டார்கள், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்கிற ரீதியில் பேட்டி கொடுத்துள்ளார். ஆகவே மேற்குறிப்பிட்ட இரண்டு பத்திரிக்கையாளர் கூட்டமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளன. குற்றவாளிகள் பிடிக்கப்பட்ட பிறகு தான் 22.02.2012 அன்று பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது.
ஆகவே இதனடிப்படையில் சில பரிந்துரைகளை எமது அமைப்பு அரசிற்கு முன்வைக்கிறது.
பரிந்துரைகள்
• வேளச்சேரி மோதலில் ஈடுபட்ட போலீசார் மீதும், உயர் அதிகாரி மீதும் 302 இ.த.ச. அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
• இம்மோதல் மரணத்தை கோட்டாட்சியர் விசாரணை செய்யாமல், உச்சநீதிமன்றத்தினுடைய கண்காணிப்பில் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் சி.பி.ஐ. போன்ற போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
• 5 பேர் மோதல் மரணம் சம்பந்தமாக எவரையும் விசாரணை செய்வதற்கு தமிழக போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் சாட்சி அளிப்பவர்களின் வாக்குமூலம் ரகசியம் காக்கப்பட வேண்டும்.
• வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட 5 நபர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதுவதனால் ஹிந்தி பேசக்கூடிய பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்கு தேசிய அளவில் பிராந்திய விரோதப்போக்கினை ஏற்படுத்தும். ஆகவே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் அடிப்படையிலும், விஞ்ஞானப் பூர்வ விசாரணையின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குனர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்.

_________________________________________________________________
தண்ணீரே!- உன் விலை என்ன?
 _______________________________________                                                                                                                  -க. கனகராஜ்
கடந்த 31.1.2012 அன்று நகல் தேசிய நீர்க்கொள்கை, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 29-ம் தேதிவரை இக்கொள்கையின் மீது பொதுமக்கள், அமைப்புகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இதற்கு முன்னர் 1987 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் தேசிய நீர்க்கொள்கைகள் உருவாக்கப்பட் டன. நீர் பயன்பாடு குறித்த சட்டங்கள் தேசிய அளவில் இல்லை. சில மாநிலங்களில் நிலத் தடி நீர் பயன்பாடு குறித்த சட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் 2007-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற் றும் நிர்வாகம்) சட்டம் -2003 அறிவிக்கை வெளியிடப்படாததால் அமலுக்கு வரவில் லை. மஹாராஷ்டிராவில் 2005-ம் ஆண்டு நீராதார ஒழுங்குமுறை ஆணையம் அமைக் கப்பட்டது. பொதுவாக தேசிய நீர்க்கொள் கையே இந்த இயற்கை வளம் குறித்த வழி காட்டுதலாக இதுகாறும் இருந்து வந்தது. 

கொள்கையை மாற்ற வேண்டிய தேவை என்ன?

இப்போது தேசிய நீர்க்கொள்கை- 2002க்கு மாற்றாக புதிய கொள்கையின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மக்களின் நலன் என்கிற நோக்கிலிருந்து இந்த மாற்றம் செய்யப்படவில்லை. 2005-ம் ஆண்டு உலக வங்கி “வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற் காக நீர் - நான்காவது உலக நீர் அமைப்பின் ஓர் கருத்து ஆவணம்” என்கிற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. அந்த ஆவ ணம் “பாசனம், தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றிற்காகவும் அவற்றிற் குள்ளும் சந்தைக்கான போட்டியை தூண்டி விட வேண்டும்” என்கிறது. காலால் இடப் பட்ட இந்த ஆணையை இந்திய அரசு சிர மேற்கொண்டு செயல்பட்டிருக்கிறது. 

தேசிய நீர்க்கொள்கை -2002 பொது நீரா தாரங்களில் பயன்பாட்டிற்கான முன்னுரிமை யை தீர்மானித்திருக்கிறது. 1) குடிநீர், 2) விவ சாயம், 3) நீர் மின்சாரம், 4) சுற்றுச்சூழல், 5) விவ சாயம் சார் மற்றும் விவசாயம் சாரா தொழில் கள், 6) போக்குவரத்து மற்றும் இதர பயன் பாடுகள் என்பதுதான் அந்த முன்னுரிமை வரிசை. இப்போது முன்னுரிமை தீர்மானிக் கப்படவில்லை. இதன்பொருள் என்ன வெனில், விவசாயப்பயிர்கள் கருகிக்கொண் டிருந்தாலும் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொடுக்க முடியும். யாரும் கேள்வி கேட்க முடியாது. 

களவாடப்படும் மாநில உரிமை
இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், இரு அரசாங்கங்கள் பட்டியல் என்ற மூன்று பகுதிகள் உள் ளன. இதில் மாநில பட்டியலில் 17-வது பிரி வில் “பாசனம், கால்வாய்கள், நீர்தேக்கம், நீர் மின்சாரம்” ஆகியவை அடங்கியுள்ளன. புதிய கொள்கை இதை மறுத்து ஒரு சட்டம் உரு வாக்கப்பட வேண்டுமென்கிறது. அதேபோல 1882-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சொத் துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையில்லை என்று மாற்றவேண்டுமென்கிறது புதிய கொள்கை. 

நீரையும் விட்டு வைக்காத லாபப்பசி .

குடிதண்ணீர், சுகாதாரம் தவிர இதர அனைத் துப்பயன்பாட்டிற்கும் “பொருளாதாரப் பண்டம்” என்று தண்ணீரைப் பார்க்க வேண்டுமாம். அதாவது குளத்து நீரோ, ஆற்றுநீரோ, நிலத்தடி நீரோ விவசாயத்திற்கு வேண்டுமென்றால் காசிருந்தால்தான் வாங்கலாம். ஐயோ! பாவம்!!

குடிநீரை விட்டு விட்டார்களே என்று அவசரப்பட்டு மகிழ்ந்துவிட முடியாது. குடிநீர் பயன்பாடு குறித்து இந்த நகல் கொள்கையின் 3.1 மற்றும் 3.3 பாராக்களில் சொல்லப்படுகிறது. 

3.1 - மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி கள் அனைத்து குடிமக்களுக்கும் வீட்டி லிருந்து மிக அருகில் குடிப்பதற்கும் சுத்தம் சுகாதாரத்திற்கும் அத்தியாவசியமான குறைந்தபட்ச அளவை உத்தர வாதப்படுத்த வேண்டும். (இப்போது இத் தேவைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவு நபருக்கு நாளொன்றுக்கு கிராமப்புறங் களுக்கு 45 லிட்டரும் நகர்ப்புறங்களுக்கு 90 லிட்டரும் பெருநகரங்களுக்கு 135 லிட்டரும். இது கிடைப்பதில்லை என்பது வேறு விஷ யம். ஆனால், இதை குறைப்பார்களாம்) 

3.3. - மனிதன் பிழைத்திருப்பதற்கு (ளுரசஎiஎயட) குறைந்தபட்ச தேவையையும், சுற்றுச் சூழல் தேவையையும் பூர்த்தி செய்த பிறகு தண்ணீர் “பொருளாதாரப்பண்டம்” ஆக பாவிக்கப்பட வேண்டும். 

இப்படி பிழைத்திருப்பதற்கு, அத்தியா வசியமான, குறைந்தபட்ச அளவைக்கூட உத்தரவாதப்படுத்துவது பற்றி எவ்வித சட்டப் படியான பாதுகாப்பும் சொல்லப்படவில்லை. 

விலையில்லா தண்ணீரா? இலவச தண்ணீரா?

மத்திய-மாநில, உள்ளாட்சி நிர்வாகங்கள் இதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு, தண்ணீர் தொடர்பான சேவைகள் அனைத்தும் சமுதாயம் அல்லது தனியார் வசம் உரிய “பொது - தனியார் பங்கேற்பு” வகையில் மாற்றப்பட வேண்டும் என்கிறது நகல்கொள்கை. தண்ணீர் சேவை தனியார் வசம் இருக்குமாம். ஆனால், மத்திய-மாநில, உள்ளாட்சி அமைப்புகள்தான் பிழைத் திருக்கத் தேவையான குறைந்தபட்ச அளவை உத்தரவாதப்படுத்த வேண்டுமாம். அதாவது அரசு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிக் கொடுக்க வேண்டும். விலையில்லா தண்ணீரா, இலவச தண்ணீரா, ஆம் ஆத்மிக் கான பாசமா என்ன பெயர் வைப்பதென்பது மட்டும் அரசாங்கத்தின் கையில் இருக்கும். 

அரசாங்கத்திற்கு வேலையே இல்லையா? 

அது மரியாதை இல்லை; அது மரியாதை இல்லை என்று அழுத்திச்சொல்கிறது நகல் கொள்கை. பாரா 13.4-ல் அரசு எப்படி செயல் பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக் கிறது. 

“சேவையளிப்பவர் என்னும் அரசின் பாத்திரம் படிப்படியாக மாற்றப்பட வேண்டும். நீர் ஆதாரங்களை திட்டமிட்டு, அமல்படுத்தி நிர்வகிக்கும் அமைப்புகளை (தனியாரை) வலுப்படுத்த ஒழுங்குபடுத்துவது மற்றும் உதவி செய்வது என்ற பணியைச் செய்ய வேண்டும்” 

நான் வேடிக்கை பார்க்கச் சம்மதிக் கிறேன் என்றும் நீ கொள்ளையடிக்க உரு வாக்கும் நிறுவனத்தை வலுப்படுத்துவேன் என்றும் உளமார உறுதிகூற முன்வந்திருக் கிறது அரசாங்கம். 

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்று நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்படுமாம். அது கட்டண நிர் ணயம், நீர் ஒதுக்கீடு, செயல்பாட்டை கண் காணித்தல், கொள்கை மாற்றம் குறித்து ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றை செய்யுமாம். பெட்ரோல் விலையை கம்பெனி களே நிர்ணயிக்கும். மின்சார கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையும் நிர்ணயிக்கும். தண்ணீர் கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும். 

என்ன விலை நீரே?

தண்ணீரின் விலை? அதிகமில்லை ஜென்டில்மேன்! என்கிறது நகல் கொள்கை. தண்ணீர் விலை என்பது யாதெனில் “நீர் திட் டங்களின் நிர்வாகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றை முழுமையாக வசூலிக்கிற வகையில் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும்” என்கிறது. (பாரா 7.2) 

ஆட்டையும் மாட்டையும் கடித்தால் போ துமா? தொடர்ச்சியாக மனிதனைக் கடித்துத் தானே ஆக வேண்டும். பாரா 7.5 இப்படி கடிக் கிறது. “மின்சாரத்திற்கு மிகக் குறைவாக கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டி ருப்பதால் மின்சார மும் தண்ணீரும் விரய மாக்கப்படுகின்றன. எனவே, இது மாற்றப்பட வேண்டும்”. 

இந்த லாபம் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஒரு நிறுவனம் தனது தொழிற்சாலைக் கழிவுகளை பிரித்தெடுக்க வேண்டியது அதன் கடமை இல்லையா? நீ சாதாரண பொதுஜனம் என்றால் கடமையைச்செய், பலனை எதிர்பாராதே என்கிறார்கள். ஆனால், நீ முதலாளியாய் இருந்தால் “கடமையைச் செய், மானியமும் ஊக்கத்தொகையையும் பெறுவாய்” என்கிறது நகல் கொள்கை. 

12.8-ல் “தொழிற்சாலை கழிவுகளை பிரித் தெடுப்பதற்கும், தண்ணீரின் மறுசுழற்சி மற் றும் மறு பயன்பாட்டிற்கும் ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் கொடுக்கப்பட வேண் டும்” என்கிறது. 

மக்களுக்காக மக்களால் மக்களே நடத் தும் ஜனநாயக அரசின் லட்சணம் இதுதான்.

ஆனால், முதலாளித்துவம் தன் நலனுக் கான எந்த ஒரு கொள்கையையும் தன் நல னுக்கானது என்று சொல்லாது. அது மக்க ளின் நலன், தேசத்தின் நலன், உலகத்தின் நலன் என்று தம்பட்டம் அடிக்கும், மக்களை நம்பச்செய்யும். 

இந்த நகல்கொள்கையின் ஆரம்பத்திலும் தண்ணீர் இயற்கை வளம்; உயிர் வாழ்வாதாரம், உணவுப்பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி அனைத் திற்கும் அடிப்படை. அப்படிப்பட்ட நீர் பற்றாக் குறையாகி வருகிறது. உலக மக்கள் தொகை யில் நாம் இந்தியர்கள் 17 சதவீதம் பேர். ஆனால், மீளக்கிடைக்கும் நீர் உலக ஆதா ரத்தில் வெறும் 4 சதவீதம்தான். நாம் இருக் கும் நிலப்பரப்பு உலகின் பரப்பில் வெறும் 2.6 சதவீதம்தான்.ஜனத்தொகைஉயர்ந்துகொண்டே போகிறது, புவி வெப்ப மாகிக் கொண்டே இருக் கிறது, மனித தேவை அதிக மாகிக்கொண்டே இருக்கிறது என் றெல்லாம் கவலையோடு ஆரம்பிக்கிறதுநகல்கொள்கையின்முன்னுரை. 

இதையெல்லாம் படித்து மக்கள் கண் ணீரில் நீர் ஒழுக நின்று கொண்டிருக்கும் போது, அழாதே இதற்கெல்லாம் தீர்வு கண்டு விட்டேன். பேசாமல் இந்த இயற்கை வளத் தை விற்றுவிடுவோம் என்கிறது அரசு. இந்தக் கொள்கை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட் டால் குடிநீரும் பாசனநீரும் கானல்நீராகும். காசுள்ளவனுக்கு மட்டும் சாத்தியமாகும். உரத்தும் ஒன்றுபட்டும் இதற்கு எதிராக போராட வேண்டும்.

கட்டுரையாளர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்.


________________________________________________________________________________
aஅண்ணா நூலகம் மாற்றம்,

ருணாநிதி செய்தது அத்தனையையும் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தால்... அவர் செய்த நல்லதும் தப்பாது அல்லவா? அப்படித்தான் சென்னை, கோட்டூர்புரத்தில் செயல் பட்டு வந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் சிதைக்கஆரம்பித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் என்ற நெரிசல் மிகுந்த இடத்துக்கு அது மாற்றப்படும். கோட்டூர்புரம் நூலகம் இருந்த கட்டடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்து இருக்கிறார். அரசியல்வாதிகளை விட, இதில் கருத்துச் சொல்ல வேண்டியவர்கள் எழுத்தாளர்கள்தான். அவர்களையே கேட்டோம்!
 
சா.கந்தசாமி: சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது இந்த நூலகம். நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, 'இப்படி தமிழ்நாட்டில் ஒரு நூலகம் இல்லையே’ என்று ஏங்கியிருக்கிறேன். அண்ணா நூலகம் தமிழகத்தின் கனவு. எங்கே காற்று வேண்டும், எங்கே வெளிச்சம் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து, படிப்பதற்கும் எழுதுவதற்கும் என்றே வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தை, எப்படி மருத்துவமனையாக்க முடியும்? மருத்துவம் அவசியம்தான். ஆனால், அது சென்னைக்கு மட்டும்தானா? வேறு எந்த நகரத்திலும் குழந்தைகள் இல்லையா?
பொன்னீலன்: மருத்துவமனை கட்ட இடமா இல்லை? இந்த அரசுக்குக் கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நடவடிக்கை. இது அறிவுல கத்துக்கு விடப்பட்டுள்ள சவால். எழுத்தாளர்களை இந்த அரசு அவமானப்படுத்தியுள்ளது. அறிவுலகத்தின் மீதான ஒடுக்குமுறை என்பது சமூக ஒடுக்குமுறைக்கான ஒத்திகை. இது மிகவும் வருத்தம் தரக்கூடியது, சகிக்க முடியாதது.
தொ.பரமசிவம்: தமிழ் அடையாளத்தை அழிப்பதே யாழ்ப்பாண நூலகத்தை அழித்ததன் நோக்கம். அண்ணா நூலகக் கட்டடத்தை மருத்துவமனை ஆக்குவதும், தமிழ் அடையாளத்தை அழிக்கும் செயல்தான்!
அசோகமித்திரன்: நன்றாகச் செயல்படும் ஒரு அமைப்பை கலைக்கக் கூடாது. படிப்பதற்குரிய உற்சாகமான ஒரு சூழலைத் தரவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கட்டப்பட்ட நூலகம் அது. பராமரிப் பில்லாத ஒரு அரசு மருத்துவமனையாக்குவதை விட இந்த நூல கத்தை நூலகமாகவே வைத்துக் கொள்ளலாமே.
மேலாண்மை பொன்னுசாமி: முந்தைய அரசின் சாதனைகளை முறியடிப்பது என்பது சரி. ஆனால், அவற்றை ஒழித்துக் கட்டக்கூடாது. இது மிகவும் தவறான அணுகுமுறை. ஷாஜஹானுக்குப் பிந்தைய மன்னன் அப்படி நினைத்திருந்தால் இன்றைக்கு தாஜ்மஹால் இருந்திருக்காது. ராஜராஜசோழனுக்கு அடுத்து வந்த மன்னன் நினைத்திருந்தால்... தஞ்சை பெரிய கோயில் இருந்திருக்காது. கரிகால சோழனைத் தொடர்ந்தவன் அப்படி நினைத்திருந்தால் கல்லணை இருந்திருக்காது.
கீரனூர் ஜாகீர் ராஜா:  நூலகம் திறக்கப்படுகிறபோது, 'ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது’ என்று சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் நடக்கிற கதை வேறு. ஏற்கெனவே, வாசிப்பில் பின்தங்கி உள்ள சமூகமாகவே தமிழ் சமூகம் மதிக்கப்படுகிறது. அரசின் இதுபோன்ற அதிரடியான செயல்பாடுகள் அதற்கு ஒரு மறைமுகக் காரணியாக அமைந்துவிடக் கூடாது.
சல்மா: மரணப்படுக்கையில் இருந்தபோதுகூட, அண்ணா படிப் பதில் ஈடுபாட்டோடு இருந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வரின் பெயரில் அமைந்துள்ள நூலகத்தை இடமாறுதல் செய்வது அநீதியானது. அரசியல் விரோதம் அறிவை விருத்தி செய்யும் விஷயத்தில் தலையிடக் கூடாது.
வண்ணதாசன்: இது இன்னொருவித 'யாழ் நூலக’ எரிப்பன்றி வேறில்லை. உயர் மருத்துவம் உடனடி யாகத் தேவைப்படுவது குழந்தைகளுக்கு அல்ல; இந்த அரசுக்குத்தான். அசுரப் பெரும்பான்மை என்பது, சொல்லுக்கு சொல் உணரப்படுகிறது; பிணம் தின்னல் தொடர்கிறது.
கலாப்ரியா: நூலகத்தை மாற்றிவிட்டு குழந்தைகள் மருத்துவமனை அமைப்பதை 'கெட்டிக்காரத்தன மான’ செயலாக நினைக்கலாம் முதல்வர். ஆனால், நல்ல செயல் இல்லை. கெட்டிக்காரராக இருப்பது சுலபம், நல்லவராக இருப்பது கடினம். இது தப்பு, தவறு இல்லை. ''தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும்..'' நான் சொல்லவில்லை எம்.ஜி.ஆர். சொன்னது.
சிவகாமி: நூலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டிய நிர்பந்தம் இப்போது அரசுக்கு என்ன? கருணாநிதி காலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு காரணத்தைத் தவிர வேறெந்தக் காரணத்தையாவது அரசால் சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர் இந்தள வுக்கு அராஜகமாகவும், தான் தோன்றித்தனமாகவும் நடந்து கொள்வதைத் தடுப்பதற்கு என்னதான் வழி?
நாஞ்சில் நாடன்: நூலகம் சமுதாயத்தின் அத்தியா வசியமான ஓர் உறுப்பு. நம் மக்களுக்கு அதை பயன் படுத்தத் தெரியவில்லை என்பது உண்மை. அதனால் வாசிப்புப் பழக்கத்தை அதிக ரிக்க என்ன செய்யலாம் என்றுதான் ஒரு அரசாங்கம் யோசிக்கவேண்டும். அதை விட்டு, நூலகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுப்பது ஒரு சமூக அவலம்
ஆ.சிவசுப்பிரமணியன்: நூலகம், மருத்துவமனை இரண்டின் உள்கட்டமைப்பு களும் வெவ்வேறு மாதிரி யானவை. ஒரு நூலகம் எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் இருந்தால் மட்டும் போதாது, அங்கு அமைதியான சூழல் வேண்டும். மேலும் புத்தகங்கள் என்பவை சிமென்ட் மூட்டைகளோ, வெங்காய மூட்டைகளோ அல்ல... நினைத்தால் இடம் மாற்றி விடுவதற்கு. எல்லா விஷயங்களையும் அரசியல் நோக்கத்துடனேயே பார்ப்பதும் அணுகுவதும் ஆபத்தானவை.
சு.வெங்கடேசன்: இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்வில் எடுக்கப்பட்ட முடிவு. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கது. டி.பி.ஐ. வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்குக் கூட போதுமான இடங்கள் இல்லை. எப்படி லட்சக் கணக்கான புத்தகங்களைப் பராமரிக்கப் போகிறார்கள்?
வ.கீதா:மன்னர் ஆட்சிக் காலங்களில் கூட, ஒரு மன்னன் வெற்றி பெற்ற பிறகு, பழைய அரசனின் கட்டடங்களை உடைக்கவில்லை. ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் ஜெயலலிதா, முடியாட்சியை விட மோசமாக நடந்துகொள் கிறார்.
அழகிய பெரியவன்: ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் வாசிப்பு குறைந்திருக்கிறது என்கிற ஆதங்கம் உண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த குறைபாடுகளுக்கு ஒரே மருந்து புத்தகங்கள்தான். ஆனால், தான் ஆட்சி செய்யும் மக்கள் அறிவுமயப் படுத்தப்பட்ட சமூகமாக மாறி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது அ.தி.மு.க அரசு. இருக்கிற மருத்துவமனைகளையே இன்னும் சிறப் பாகப் பராமரிக்காத தமிழக அரசு, மேலும் மருத்துவமனைகளை உருவாக்கப் போவதாகச் சொல்வது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் கூடிய அபத்தம்.
புனிதபாண்டியன்: சட்டசபைக் கட்டடத்தையும் தலைமைச் செயலகத்தையும் தன் ஆணவப் போக்கினால் மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், அப்போது 'இது ஏதோ கருணாநிதியின் சொந்தப் பிரச்னை’ என்பதைப் போலப் பலரும் மௌனமாக இருந்ததால், இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் கை வைக்கிறார். சமச்சீர்க்கல்வி, அறிவை விரிவு செய்யும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டை மாற்றுவது போன்ற தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாடு சார்ந்த விஷயங்களைச் சீர்குலைப்பது ஆகியவை ஜெயலலிதாவின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான்!

                                                                                                                    நன்றி:- ஜூனியர் விகடன்

________________________________________________

சி.பி.ஐ சோதனையின் மறுபக்கம்.

                           

"ஏர்செல்' நிறுவனத்தை விற்க நிர்பந்தம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, சன் "டிவி' கலாநிதி மற்றும் அவரது சகோதரர் தயாநிதியின் வீடுகள் உட்பட ஒன்பது இடங்களில் மட்டும் நேற்று சி.பி.ஐ., பெயரளவுக்கு ரெய்டு நடத்தியது. பரபரப்பான இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மலேசியா, மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், இந்த வழக்கில் இப்போதைக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி, கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அதில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த போதும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தன என, குற்றம் சாட்டப்பட்டது. "தயாநிதி கடந்த 2004 - 2007ல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தன் பதவியைப் பயன்படுத்தி, மறைமுகமாக நிர்பந்தம் செய்தார்' என்று அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் கடந்த மே மாதம் புகார் கொடுத்தார். ஜனவரி, மே மாதங்களில் எழுந்த ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தாமதமாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் துவக்கியது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள தயாநிதி, கலாநிதி வீடுகள், சன், "டிவி' அலுவலகம் மற்றும் டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மட்டும் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சன், "டிவி' நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் ஏராளமான அலுவலகங்கள் உள்ளன. இதன் துணை நிறுவனங்கள் வேறு ஏராளமாக உள்ளன. அந்த அலுவலகங்கள் பக்கம் சி.பி.ஐ., கவனத்தைச் செலுத்தவே இல்லை.

தலைநகர் டில்லியில் சி.பி.ஐ., வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொலைத்தொடர்புத் துறை முன்னாள் மத்திய அமைச்சர் (தயாநிதி), சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் (கலாநிதி), பிரிட்டன் மற்றும் மலேசியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குனர், மற்றொரு மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர், சென்னை, மலேசியா, பிரிட்டனில் இயங்கும் மேலும் மூன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பெயர் தெரியாத அதிகாரிகள், நபர்கள் மீது, சி.பி.ஐ., நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளது.இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி), ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7, 12 மற்றும் 13 (1)(டி)யுடன் இணைந்த பிரிவு 13 (2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெய்டு குறித்து சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:தயாநிதி மற்றும் கலாநிதி மீதான வழக்கு பற்றிய அத்தனை ஆவணங்களும் ஏற்கனவே எங்கள் வசம் உள்ளன. இப்போது நாங்கள் தேடிக் கொண்டிருப்பது, அவற்றுக்கான துணை ஆவணங்கள் மட்டுமே. இந்தச் சோதனையில் எந்த ஆவணமுமே கிடைக்காவிட்டாலும், வழக்கை நடத்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இப்போது நடக்கும் ரெய்டு வழக்கை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சி தான்.இன்னும் சில ஆவணங்கள், பத்திரிகைகள் மூலமாக, பொதுமக்களின் பார்வைக்கே வந்துவிட்டன. அந்த வகையில், கலாநிதி, தயாநிதி மீதான வழக்கு, சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறது. கைது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக எதுவும் சொல்வதற்கில்லை. இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பாதையில், இந்த வழக்கும் செல்லும்.சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பு இருப்பதால், எங்களுடைய செயல்பாடுகளில் எந்த வகையான அலட்சியமோ, கவனக்குறைவோ இருக்கப் போவதில்லை. இரு நாட்களுக்கு முன் தான், அவர்களிடம் டில்லியில் எங்கள் உயரதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையைத் தொடர்ந்து, மலேசியா, மொரீஷியஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் விசாரணை நடத்த வேண்டும். அதற்கு எத்தனை காலம் ஆகும் என இப்போது கூற முடியாது. அதன் பின் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பெயரளவுக்கு நடந்த ரெய்டு, குற்றப் பத்திரிகை தாமதம் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது, தயாநிதி, கலாநிதி மீதான நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று தான் கூறப்படுகிறது. "ஒன்பது மாதங்கள் கழித்து, ஒரு சில இடங்களில் மட்டும் ரெய்டு நடத்தி எவ்வளவு ஆவணங்களை கைப்பற்றி விட முடியும்?முக்கியமான ஆவணங்கள் எல்லாம் இன்னுமா இந்த அலுவலகங்களில் இருக்கும்? வழக்கை திசை திருப்பவும், மத்திய அரசு சந்தித்து வரும் பிரச்னைகளில் இருந்து மீடியாக்களின் கவனத்தை திருப்பவும் தான் இது போன்ற நாடகத்தை சி.பி.ஐ., நடத்துகிறது,' என, கம்யூனிஸ்ட், பா.ஜ., கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தயாநிதி மீது முதல் தகவல் அறிக்கை, நேற்று முன்தினம் பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் தயாநிதி, கலாநிதி, ரால்ப் மார்ஷல், அனந்தகிருஷ்ணன் தவிர, சன் டைரக்ட் மலேசிய கம்பெனிகளான, ஆஸ்ட்ரோ, மேக்சிஸ் ஆகிய மூன்று கம்பெனிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அட்டை பெட்டிகளில் அள்ளி செல்லப்பட்டன:தயாநிதியின் டில்லி வீட்டிற்குள், காலை 7.30 மணிக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தத் துவங்கினர். இடைவிடாது அவர்கள் சோதனையைத் தொடர்ந்தனர். மதியம் உணவு இடைவேளையின்போது கூட, வெளியில் யாரும் வரவும் இல்லை. தயாநிதியின் வீட்டின் முன், செய்தியாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர்.யாரையும் உள்ளே நுழைய விடாது கேட் இழுத்துப் பூட்டப்பட்டிருந்தாலும், உள்ளே கார் பார்க்கிங் ஏரியாவில் டவேரா கார் நின்று கொண்டிருந்தது. சோதனையை 4 மணி வாக்கில் முடித்துவிட்டு அந்த காரில் கிளம்பி, அதிகாரிகள் வெளியில் செல்லலாம் என்று எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தனர். சோதனையின் முடிவில், நான்கு பெரிய அட்டைப் பெட்டிகள் டவேரா காருக்குள் ஏற்றப்பட்டன. அந்த பெட்டிகளில், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வேறு ஒரு வழியாக அந்த டவேரா கிளம்பிச் சென்றுவிட்டது. பின்னர் நடந்தே வெளியில் வந்த அதிகாரிகள், வீட்டின் முன் வந்து நின்ற இன்னொரு காரில் ஏறிச் சென்று விட்டனர்.

"டிவி' தெரிந்த ரகசியம் : சென்னையில் உள்ள, சன், "டிவி' தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவே, பிரபல ஆங்கிலச் செய்தி சேனலின் நேரடி ஒளிபரப்பு வாகனம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதிகாலை 6 மணியளவில் அந்த நிறுவனத்தின் நிருபர்கள் வந்தனர். பின்னர் தான் சி.பி.ஐ., அதிகாரிகள் ஒரு காரில் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தனர். "சி.பி.ஐ., ரெய்டு குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்; அவர்கள் தான் எங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ரெய்டு எல்லாம் சும்மா ஒப்புக்குத்தான்' என அவர்கள் பேசிக் கொண்டனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி): குற்றச்சதி. இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலும் தண்டனை வழங்கத்தக்க கிரிமினல் குற்றங்களுக்கு உரிய சதித் திட்டத்தைத் தீட்டுதல். இந்தப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாத சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7: ஏதேனும் ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான வருமானம் தவிர, கூடுதல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளும் அலுவல் சார் நடவடிக்கை. இப்பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 12: ஏதேனும் ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான வருமானம் தவிர, கூடுதல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளும் அலுவல் சார் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இப்பிரிவின்படியும் ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13 (2) உடனான 13 (1)(டி): ஒரு பொது ஊழியர் லஞ்சமாகவோ, சட்டவிரோதமான வகையிலோ, தனக்காகவோ, பிறருக்காகவோ அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொதுநல நோக்கமில்லாத செயலைச் செய்து, அதற்காக பொருளோ, பயனோ ஆதாயமாக அடைதல். இத்தகைய குற்ற நடத்தையில் ஈடுபடும் அரசு ஊழியருக்கு, ஓராண்டுக்கு குறையாமல், ஏழாண்டுகள் வரையிலான சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

சென்னையில் ரெய்டு நடந்த இடங்கள் : 1.போட் கிளப் ரோட்டில் முதல் அவென்யூவில் உள்ள தயாநிதி வீடு
2.2வது அவென்யூவில் உள்ள கலாநிதி வீடு
3.7மந்தைவெளிபாக்கத்தில் உள்ள சன், "டிவி' அலுவலகம்
4.நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி சுனிதா ரெட்டி வீடு
5.கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அலுவலகம்
                                                                                                                                                                நன்றி:தினமலர்

_____________________________________________--

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்?

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ளது திருமூர்த்தி அணை. வனங்களால் சூழப்பட்டு கண்ணுக்கு அழகாக காட்சி அளிக்கும் அணையில் ‘ஆபத்தும்’ இருப்பதாக சொல்லப்படுகிறது.  வனங்களுக்கு இடையே பஞ்ச லிங்க அருவி இருக்கிறது. இது ஓடையாக வழிந்தோடி அணையில் சங்கமிக்கிறது. பஞ்சலிங்க அருவியிலும், அணை கரையிலும் மக்கள் குளிப்பது வழக்கம். இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி சாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதற்கு நிராசையுடன் இறந்தவர்களின் ஆவிதான் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தோடு சொல்கிறார்கள்.
அணை கட்டி 53 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அருவியிலும், அணையிலும் மூழ்கி மூச்சு திணறி பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. ‘அணையில் உள்ள யானைகஜம், காளியம்மன்கோயில், பரையங்காடு பள்ளம் ஆகிய இடங்களில் குளிப்பவர்கள் அநியாயமாக பலியாகின்றனர். இங்கு நீச்சல் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள்கூட இறக்கின்றனர். இதற்கு கெட்ட ஆவிகளின் நடமாட்டம்தான் காரணம். இந்த ஆவிகள்தான் அணையில் குளிப்பவர்களின் உயிரை பலி வாங்குகின்றனÕ என்று திகிலுடன் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
அணை கட்டுவதற்கு முன்பு, மலையில் இருந்து ஓடி வரும் நீர், பாசனத்துக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்டதாகவும், பாலாற்றை தடுத்து அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உயிரை விட்டதாகவும், அவர்களின் ஆவிதான் நிராசையுடன் அணையை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் சிலரோ, ‘அணையில் மூழ்கி பலியாவோர் பெரும்பாலும் வெளியூர்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் தங்கள் பகுதியிலேயே திதி கொடுக்கின்றனர். இதனால் மனம் சாந்தி அடையாமல் ஆவிகள் அணையிலேயே திரிந்து  பலரை பலி வாங்குகின்றனÕ என்றும் கூறுகின்றனர். ‘குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தண்ணீருக்குள் யாரோ இழுத்தது போன்று மூழ்குகின்றனர். உயிருக்கு போராடுபவரை காப்பாற்ற செல்பவரும் பலியாகி விடுகிறார். சடலங்களையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதுÕ என்று சொல்லும் மக்களின் பேச்சில் பயத்துக்கு குறைவில்லை.
அணையில் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் இதே ஆவி கதைகள் உலா வருகின்றன. இதற்கு காரணம் இங்கும் அடிக்கடி பலிகள் நேர்வதுதான். பரிகார பூஜைகள் செய்து ஆவிகளை சாந்தம் அடைய செய்தால் தான் இறப்புகளை தவிர்க்க முடியும் என்று சிலர் சொல்கின்றனர். அதே போல் பஞ்சலிங்க அருவியில் ஏற்படும் பலி சம்பவங்களுக்கு காரணம், அருவியில் திடீரென்று பெருக்கெடுக்கும் வெள்ளம். குளிக்கும்போது சாதாரணமாக கொட்டும் நீர், திடீரென்று பெருக்கெடுக்கும்போது அருவியில் குளிப்பவர்கள் தாங்க முடியாமல் தப்பி விடுகிறார்கள். அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கு குளிப்பவர்கள்தான் வெள்ளத்தில் தப்பிக்க வழியில்லாமல் அடித்துச்செல்லப்படுகின்றனர். அங்குள்ள ஒட்டப்பாறை, ஏழுமுக்கு, மாமரத்து கஜம் ஆகிய இடங்களில் உள்ள பொந்துகளில் சிக்கி உயிரை விடுகின்றனர்.
அணையில் குளிக்கவும், அருவிக்கு செல்லும் ஓடை வழித்தடங்களில் குளிப்பதையும் வனத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை கடுமையாக தடுத்து நிறுத்தினால் உயிர்ப்பலியாவது நிற்கும். அது வரை ஆவி, பலி வாங்கல் என்று கூறுவது மர்மமாக தான் இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். ‘பேயும் இல்லை. பிசாசும் இல்லை. அணையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் சிக்குபவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கிறார்கள்Õ என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இருப்பினும் ஆவி பயம் மக்களை விட்டு இன்னும் அகவில்லை.
                                                                                    -உடுமலை எஸ்.கண்ணன்[புதிய உலகம்-தளத்தில் இருந்து மீள்பதிவு]
-------------------------------------------------------------------------------
-அணு மின் நிலையம் பற்றி............!
                                         


 கூடங்குளம் மின் நிலையத்தை மூடக்கோரி  ரோமன் கத்தோலிக்க தேவாலய பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் பகுதி மக்களைத் தூண்டி விட்டு போராட்டங்கலை நடத்தி  வருகின்றனர்.இது குறித்து, பிரதமர்க்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியதால், பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, தமிழகத்திற்கு வந்து பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, கூடங்குளம் அணு உலையை நிறுத்திவைக்க, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இதனால், உண்ணாவிரத போராட்டம், தற்காலிகமாக வாபசாகியுள்ளது.


இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடினால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. "அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்கு பின், தமிழகத்தில் மின்வெட்டு நீக்கப்படும்' என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 462 மெகாவாட், தமிழகத்திற்கு கிடைக்கும் என்ற கணக்கில் தான், இந்த அறிவிப்பு வெளியானது.ஆனால், தற்போது தமிழக அரசே முன்வந்து, கூடங்குளம் அணு உலையை மூட ஆதரவு தெரிவிக்கும் போது, கூடுதல் மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின்வெட்டால் தமிழகம் தொடர்ந்து பாதிக்கும் நிலை உள்ளது.


இதுகுறித்து, மின்துறை மேலதிகாரி கூறும்போது, "நிலக்கரி பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப கருவிகள் தட்டுப்பாட்டால், தமிழகத்தில் தற்போது பணிகள் நடக்கும் மின் திட்டங்களின் நிறைவு காலம், திட்டமிட்டதை விட தாமதமாவதால், மற்ற மின்திட்ட உற்பத்தியை நம்பமுடியாது. ஆனால், கூடங்குளம் திட்டம் மட்டுமே குறிப்பிட்ட காலத்தில் முடியும் நிலையில் உள்ளது."அங்கு குறிப்பிட்ட காலத்தில் மின் உற்பத்தி துவங்கினால், மின்வெட்டு பிரச்னை தீரும் என, கணக்கிட்டோம். ஆனால், போராட்டங்களால் கூடங்குள மின் உற்பத்தியும் தாமதமானால், வரும் ஆண்டுகளிலும், தமிழகத்தில் மின்வெட்டை நீடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்' என்றார்.


இதற்கிடையில், தற்போதே காற்றாலை மின்சாரம் பகல் நேரத்திலும், காலை நேரத்திலும் மிகக்குறைவாக உள்ளதால், மின்வெட்டு நேரம் மீண்டும் மூன்று மணி நேரமாக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல், தமிழகத்தில் காற்று வீசுவது குறையும் என்பதால், காற்றாலை மின்சார உற்பத்தி பெருமளவு குறைந்து விடும். இதை சமாளிக்க, தமிழக மின்வாரியத்திற்கு கூடங்குளம் மின்சாரம் வரவேண்டிய அவசியமாகியுள்ளது. எங்கோ நடந்துவிட்ட விபத்துக்காக அணுஉலைகளை மூடச் சொல்வது என்ன நியாயம் என்ற கேள்வி, பெரும்பான்மை மக்களிடமிருந்து எழுகிறது. விபத்துகள் அதிகரிப்பால், விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் பயணம் செய்யாமல் இருக்கிறோமா; காதுகளுக்கும், மூளைக்கும், இதயத்திற்கும் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என்பதால், மொபைல் போன் பயன்பாட்டை தவிர்த்து விட்டோமா; சுனாமி வந்ததால், மீன் பிடிப்பதும், கப்பல் பயணங்களும் நின்று விட்டதா; வாகனங்கள், தொழிற்சாலைகளின் புகையால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு, ஓசோன் மண்டலம் ஓட்டையாகி, உலகம் வெப்பமயமாகிறது என்ற அறிவுறுத்தலால் தொழிற்சாலைகளை மூடி விட்டோமா?


இப்படி எத்தனையோ, ஆபத்தான கேள்விகள் எழுந்தாலும், சுயநலனுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் உலக மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற நோக்கத்தில் தான், புதிய திட்டங்களை அரசு கொண்டு வருகிறது.நாட்டின் முன்னேற்றம் என்பது மக்கள் நலன் சார்ந்ததே. கூடங்குளம் போன்ற திட்டங்களை அரசு உருவாக்கும்போது, மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு பின்பே திட்டத்தை இறுதி செய்கிறது.அப்படியிருக்கையில், தேவையற்ற பீதியையும், அச்சத்தையும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் செயல்பாடுகள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதாகவே கருதப்படும். பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயங்களில், இது போன்ற அமைப்புகளும், தனிநபர்களும் காட்டும் அக்கறையை விட, நிர்வகிக்கும் அரசு, அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் என்ற உண்மையை, சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் தான், இப்பிரச்னைக்கு எளிதான தீர்வு வரும்.


" முறையானஅணு உலைகளால் ஆபத்து குறைவு':
உலக அளவில், 99 அணு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், 57 சதவீதம் அமெரிக்காவில் தான் நடந்துள்ளன. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், "த்ரீ மைல் ஐலேண்ட்' அணு உலையில், குளிர்கலனில் கோளாறு ஏற்பட்டு, கொதிகலன் வெடித்தது.இதில், எந்த உயிர்சேதமும் இல்லை. சோவியத் ரஷ்யாவில் இடம் பெற்றிருந்த உக்ரைனில், "செர்னோபைல்' அணுமின் உலையில், நடந்த விபத்தில், 56 பேர் பலியாயினர். 4,000 பேர் பாதிக்கப்பட்டனர்; லட்சக்கணக்கானோர் முன்னெச்சரிக்கையாக இட மாற்றம் செய்யப்பட்டனர்.ஆனால், கதிர்வீச்சு பாதிப்பால், 2,500 பேர் வரை கேன்சர் நோயால் இறந்தனர். உலகிலேயே இந்த அணு மின் விபத்துதான் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.
ஜப்பானின் தோகைமோரா அணு உலையில், 1999ம் ஆண்டு விபத்தில் இரண்டு பேர் பலியாயினர். இதேபோல், 2004ல் ஜப்பான் மிகாமா அணு உலையில் கொதிகலன் வெடித்த விபத்தில், நான்கு பேர் பலியாயினர். பின், கடந்த மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி இயற்கை பேரழிவில், "புகுசிமா டைச்சி' அணு உலையில் கொதிகலன் வெடித்த விபத்தில், தொழிலாளர்கள் மூன்று பேர் பலியாயினர்; 80 ஆயிரம் பேர் குடியிருப்புகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.


அணு மின் நிலையங்களை விட, மற்ற மின் நிலையங்களால் தான் அதிக பாதிப்பு என, ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதன்படி, 1992ம் ஆண்டு வரை, 20 ஆண்டுகள் குறித்த ஆய்வில், அனல்மின் நிலையங்களால், 6,400 பேர், எரிவாயு மின் நிலையங்களால் 1,200 பேர், நீர்மின் நிலையங்களால், 4,000 பேர் வரை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு, 24 ஆயிரம் பேர், அனல்மின் நிலைய விபத்துகளால் இறந்தும், 40 ஆயிரம் பேர் அனல்மின் நிலைய சுற்றுச்சூழலால் இதய கோளாறு ஏற்பட்டு பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வகையில், அணுமின் நிலையங்களை விட மற்ற மின் நிலையங்களால் ஏற்படும் இழப்புகள் தான் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.


இந்தியாவில், 16 அணுமின் நிலைய விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், 2003ல் உத்தர பிரதேசம் நரோரா அணு உலையில், ரியாக்டரில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு, நிலையம் செயலிழந்தது. 1991ல், கல்பாக்கம் அணு உலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. பின், 2003ல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், ஐந்து ஊழியர்கள் கதிர்வீச்சு தாக்குதலுக்கு ஆளாகினர்.ஆனால், இந்தியாவில், உயிர் சேதங்களோ, கதிர்வீச்சு பிரச்னைகளோ இதுவரை ஏற்படவில்லை. இதேபோல், 2004ல் சுனாமி ஏற்பட்ட போது, கல்பாக்கம் நிலையம் தானாகவே செயலிழந்தது. இதன்மூலம் இந்திய அணு உலைகள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.


கனிம நிறுவனங்களால்தான் ஆபத்து:
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில், பூமிக்கடியில் அதிகளவில் கனிமங்கள் உள்ளன. இதை, சில தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக பயன்படுத்துகின்றன. இங்கு கனிம சாம்ராஜ்யம் நடத்துவோர் மட்டுமே, எதையும் சாதிக்கமுடியும் என்ற நிலை உள்ளது.கடந்த காலங்களில், வெறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலை போன ஒரு ஏக்கர் நிலம், தற்போது, 10 லட்ச ரூபாய்க்கு விலை போகிறது. 2007ல், முந்தைய தி.மு.க., ஆட்சி முயற்சியுடன், இங்கு, 2,500 கோடி ரூபாய்க்கு, "டைட்டானியம்' தொழிற்சாலை அமைக்க, டாடா நிறுவனம் முன் வந்தது. ஆனால், சாத்தான் குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கர் நிலமெடுக்க வேண்டிய நிலையில், சில அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள், தனியார் கனிம நிறுவன அதிபர்களின் பின்னணியுடன், போராட்டம் நடந்தது.இதனால், இனி தமிழகத்தில் எந்த தொழிற்சாலையும் துவங்கப் போவதில்லை எனக் கூறி, டாடா நிறுவனம் திரும்பி சென்றது. தென்மாவட்டத்தில், அரசியல்வாதிகளின் துணையுடன் தனியார் கனிம நிறுவனங்கள், நிலங்களை தோண்டி, கனிமங்களை தன்னிச்சையாக விற்பனை செய்த வண்ணம் உள்ளன.


தற்போது, அணு மின் நிலையம் வந்ததால், அதைச் சுற்றி, 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, கனிமங்கள் வெட்டியெடுக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் அமைக்கவோ அனுமதியில்லை என்பது, பெரும் தொழிலதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதனால், பல தொழிலதிபர்களும் கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதாக, மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது, கனிம வளங்களை அரசு கைப்பற்றி, முறைப்படுத்தாவிட்டால், தென்மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, கனிம ஏற்றுமதி தனியார் நிறுவனங்களின் போட்டிகளாலேயே பாதிக்கப்படும் ஆபத்து உருவாகும்.


யுரேனிய இருப்பால் பாதுகாப்பு:
கூடங்குளம் அணு உலையில், இரண்டு உலைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், ஆண்டுக்கு, 75 டன் யுரேனியம்-235 பயன்படுத்தப்படும். ரஷ்யாவிடமிருந்து, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே, இரண்டு உலைகளுக்காக, 150 டன் யுரேனியம் வாங்கப்பட்டுள்ளது. இவை, கூடங்குளம் உலைகளில், நிரப்பப்பட்டு, "கிரிட்டிகாலிட்டி' என்ற ஆய்வுக்கு தயாராகியுள்ளன. தற்போது, போராட்டம் வலுத்துள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யுரேனியத்தை பயன்படுத்தவே முடியும். இதை மீண்டும் ரஷ்யாவிற்கு விற்க முடியாது. உலைகளை மீண்டும் திறந்து யுரேனியத்தை அப்புறப்படுத்தி, வேறு எங்கும் எடுத்துச் செல்லவும் முடியாது என்பதால், மிகவும் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அணு உலையை இயக்கிதான் யுரேனிய எரிசக்தியை பயன்படுத்த முடியும். இதுகுறித்து, அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, "மின்நிலையத்தின் உற்பத்தி பணிகள் துவங்கும் நிலையில், தொழில்நுட்ப ரீதியாக அதை நிறுத்தமுடியாது. மேலும் எரிசக்தியை உலைகளில் வைத்துவிட்டதால், இனி உலையைமூடுவது எளிதல்ல' என்றார்.


 மறுசுழற்சி அனுமதி கிடைக்கவில்லை:
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அணு மறுசுழற்சி அனுமதி பெற, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி, அமெரிக்கா தரும் யுரேனியத்தை இந்தியா பயன்படுத்திய பின், அமெரிக்க நிபந்தனைகளுக்கு ஏற்ப, வலுவிழந்த அணுவை மறுசுழற்சியில் பயன்படுத்த அனுமதி உண்டு. ஆக்கப்பூர்வமான மின் உற்பத்திக்கும், ராணுவத்திற்கும் இந்த மறுசுழற்சியை மேற்கொள்ள முடியும். கூடங்குளத்தின் இரண்டு உலைகள், ரஷ்யாவில் வாங்கப்பட்டு, நிபந்தனையின்றி யுரேனியமும் ரஷ்யாவிடம் வாங்கப்படுகிறது. இவற்றிற்கான மறுசுழற்சி அனுமதியை ரஷ்யா, இந்தியாவிடம் அளித்துள்ளது.இது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனால், அங்கே அடுத்து நிறுவவுள்ள, 3வது, 4வது ரியாக்டர்கள், அமெரிக்க உதவியுடன் அமையவுள்ளது. இதற்கு மட்டும், அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதி தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அணு மின்நிலைய அதிகாரி கூறியதாவது:இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி, அமெரிக்காவிடம் வாங்கும் யுரேனியத்தை நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம். ஆனால், கூடங்குளம் திட்டம், இந்த ஒப்பந்தத்தில் வராது என்பதால், ரஷ்யாவிடம் வாங்கும் அணுவை, மறுசுழற்சி செய்ய சர்வதேச அனுமதி கிடைக்கவில்லை.அனுமதிக்காக தொடர்ந்து முயற்சிக்கிறோம். சர்வதேச அளவில் இதற்கு பேச்சு நடக்கிறது. இந்நிலையில் தான், அணு உலையை திறக்கக் கூடாது என திடீர் போராட்டம் நடந்துள்ளது. எனவே, போராட்டத்திற்கு பின்னால், யார் தூண்டி விடுகின்றனர் என்பது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.இப்பகுதி மக்களிடம், கடந்த பல ஆண்டுகளாக பேசி, நிலம் வாங்கி, அங்குள்ளோருக்கு கான்ட்ராக்ட் கொடுத்து, வேலைக்கு உள்ளூர் ஆட்களை தேர்வு செய்து பல சலுகைகளை தந்துள்ளோம். எங்கள் திட்டத்தால், கடந்த பல ஆண்டுகளாக இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றிய கிராமங்கள், பல பயன்களை பெற்றன.ஆனால், 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, 10 ஆண்டுகால உழைப்பின் பலனை அனுபவிக்க வேண்டிய நேரத்தில், திடீரென போராட்டம் நடத்துகின்றனர். இதில், அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, போராட்டம் நடத்த மிகப்பெரிய சக்திகளும், அரசியல் காரணங்களும் பின்னணியில் இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


மறுசுழற்சி ஏன்?
அணுமின் உற்பத்திக்கு யுரேனியம்-235 மற்றும் தோரியம் பயன்படுகின்றன. இந்தியாவில், ஒடிசா மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளில், தோரியம் அதிகமாக கிடைக்கிறது. இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் உள்ள கடற்கரை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தோரியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து, இந்தியா யுரேனியம் வாங்குகிறது. யுரேனியத்திற்கு அதிக தட்டுப்பாடு உள்ளதால், அதன் விலையும் அதிகம். சர்வதேச அளவில், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் கட்டுப்பாட்டில் யுரேனிய விற்பனை நடக்கிறது. இதில், ஐக்கிய நாட்டு நிரந்தர பாதுகாப்பு நாடுகளின் கண்காணிப்பும் உள்ளன.யுரேனியத்தை ஒரு முறை வாங்கி, அதை பிளந்து மின்சாரம் தயாரிக்க முடியும். மீண்டும், மீண்டும் 60 முறை யுரேனியத்தை பிளந்து வெப்ப சக்தி ஏற்படுத்தி, அணுமின்சக்தி பெறப்படுவது தான் அணு மறுசுழற்சி. முதல் முறை பயன்படுத்தப்பட்ட வலுவிழந்த அணுவிலிருந்து, புளுட்டோனியம் கிடைக்கும். இதை, மீண்டும் குறிப்பிட்ட யுரேனியத்துடன் சேர்த்து, மீண்டும் மின்சார உற்பத்தி செய்யலாம். இந்தியாவில், மறுசுழற்சிக்காக தமிழகத்தில் கல்பாக்கத்தில், 500 மெகாவாட் அணு உலை கட்டப்பட்டு வருகிறது.


பல நாடுகள், அணு மறுசுழற்சியை தவறாக ராணுவத்திற்கு பயன்படுத்தலாம் என்பதால், மறுசுழற்சிக்கு அனைத்து நாடுகளுக்கும் அனுமதியில்லை. பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் மட்டுமே, அணுசக்தி மறுசுழற்சி நிலையங்கள் வைத்துள்ளன. அமெரிக்காவுக்கு இந்த அனுமதி இருந்தாலும், தன் நாட்டில் மறுசுழற்சி செய்வதில்லை என சமீபத்தில் முடிவெடுத்துள்ளது.இந்தியாவிற்கு, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தப்படி, மறுசுழற்சி அனுமதி கிடைத்தாலும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சி மற்றும் அமெரிக்க கட்டுப்பாட்டில், பல நிபந்தனைகளுடன் மட்டுமே, அதை மேற்கொள்ள முடியும். இந்த ஒப்பந்தம் தான், 123 (ஒன், டூ, த்ரீ) ஒப்பந்தம் எனப்படுகிறது.
  ()-முகப்பு->0

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?