கைலாச அதிபர் புலம்பல்

குறைகளே இ.கு.ச
1947–ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்ற பிறகு பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், ஜெயின்கள், கிறிஸ்தவர்கள் போன்றோர் மத ரீதியிலான வேறுபாடுகள் காரணமாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு தஞ்சம்தேடி அகதிகளாக வந்தனர்.

எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியாவில் பல ஆண்டுகளாக வசித்துவரும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இந்த மசோதாவின்படி, இந்த நாடுகளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல், இந்தியாவில் குடியிருந்து வரும் இந்த மக்கள் 6 ஆண்டுகள் வசித்து இருந்தாலே, இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதே முக்கிய நோக்கமாகும்.
கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதிக்கு முன்பு குடிபெயர்ந்து வந்த மேற்கண்ட மதங்களை சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் இந்த குடியுரிமை மசோதாவின் கீழ் பயன்பெறமுடியாது என்பதுதான் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்ப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், அருணாசலபிரதேசம், சிக்கிம், திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் இப்போது பெரிய போராட்டம் நடந்து வருகிறது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சில் இது நிற்காது என்பதால், சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டப்போகிறோம் என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், நேற்று இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல் அளித்தவுடன் காங்கிரஸ் கட்சியும் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த மசோதாவின் மீது பேசிய தமிழக எம்.பி.க்கள் உள்பட பலர், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்திருக்கும் இலங்கை தமிழர்களுக்கும், மியான்மரில் இருந்து வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் குடியுரிமை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டி இருப்பது பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. 

இலங்கை தமிழர்களை பொறுத்தமட்டில், 1983–ம் ஆண்டு முதல் 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு    தஞ்சம் கேட்டு வந்தனர். அவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு திரும்பி சென்றுவிட்டார்கள். தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் 107 முகாம்களில் இருக்கின்றனர்.
இதில் தற்போது 59,595 பேர் வாழ்கிறார்கள். இவர்களைத்தவிர, 34,638 பேர் முகாம்களைவிட்டு வெளியே குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் முடிவுக்கு பிறகு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கே மீண்டும் போய்விட்டனர்.
மீதம் உள்ளோரில் வெகுசிலரை தவிர, மற்றவர்களெல்லாம் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள். நாங்கள் 3 தலைமுறைகளாக தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோம். இங்கேயே படித்து, இங்கேயே திருமணம் முடிந்து வேலைபார்க்கிறோம். எங்கள் பேரக்குழந்தைகள்கூட இங்குதான் படிக்கிறார்கள். எனவே, உணர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாகவே வாழும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. இந்திய குடியுரிமை இல்லாததால் பல இடையூறுகள் அவர்களுக்கு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் இந்த சட்டத்தில், இலங்கை தமிழர்களையும் சேர்த்து இருக்கவேண்டும். அவர்களை சேர்க்காமல் இருப்பது இந்த சட்டத்தில் ஒரு குறை.
-----------++--+++-----------------------------------
புலம்பும் கைலாசா நாட்டு அதிபர்
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு தேடப்படும் குற்றவாளி. ஆனால், உலகத்தின் பார்வையில் தன்னை ஒரு உயர்ந்த ஆன்மிகவாதியாகவும், ஒடுக்கப்பட்ட மதப்பிரிவின் பாவப்பட்ட கடவுளாகவும் (அதாவது துன்புறுத்தப்படும் அவதாரப் புருஷனாக) காட்டிக்கொள்ள பலவித்தைகளைச் செய்துவரும் வினோதர்.


சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சிஷ்யைகளோடு வாழ்ந்து வந்துகொண்டிருந்த நித்தியானந்தாவுக்கு இது போறாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவு தூரத்துக்கு போறாத காலம் என்றால், என்னைக் காப்பாற்றுங்கள் என்ற கூக்குரலைக் கடித வழியாக சத்தமில்லாமலும், என்னை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாதுய்யா என்ற சவடாலை காணொலி வழியாக கர்வமாகவும் வெளிப்படுத்தும் அனாதை அந்நியன் ஆகி இருக்கிறார்.
சரி யாருமே உதவக்கூடிய இடத்தில் இல்லையா என்றால், வெளிப்படையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், இண்டர்போல் தேடும் ஒரு நபர் இணையத்தில் மட்டும் திரிகிறாரே எப்படி? (புதிய புதிய வீடியோக்கள் நடப்பு சம்பவங்களுக்கு பதில் சொல்லும் விதமாக பதிவேற்றப்படுகின்றன)
அப்படியென்றால் யாருக்கோ கடிதம் எழுதுகிறார் என்கிறீர்களே.
யாருக்கு எழுதுகிறார் என்று பார்த்தால் கண்டுபிடித்து விடலாமே என்கிறீர்களா? அங்குதான் அடுத்த லெவல் அக்கப்போரைத் தொடங்கியிருக்கிறார் நித்யானந்தா…
மனிதப் பதர்களோடெல்லாம் இவர் இப்போது பேசுவதில்லை. நித்யானந்தாவின் டீலிங் இப்போது எல்லாம் நாட்டாமை டூ பங்காளி…

பங்காளி டூ நாட்டாமை என்ற போக்குக்கு மாறிக் கொண்டிருக்கிறது . ஆம். அவர் கடிதம் எழுதுவது ஐ.நா. சபைக்கு. பேசுவது மீனாட்சியிடம்.( அதிலும் செல்லமாக மீனாட்சி மீனாட்சி என்றால் என்னாச்சு என்னாச்சு என்று பதிலளிக்கிறாராம். )

10 ஆண்டுகளில் நித்யானந்தா மீது நடத்தப்ப்பட்டிருக்கும் கொலை முயற்சிகளைப் பட்டியலிட்டு ஐ.நா.வுக்கு விளக்கி ஒரு நீண்ட கடிதம் எழுதியிருக்கிறார்.
சுமார் 745 பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தின் முகப்பு பக்கம் இப்படி விவரிக்கிறது இந்த கடிதத்தை பற்றி.
ஒரு அவதாரமாகப் பிறந்த என்னை, எப்படி இந்த உலகம் அவதாரம் என்று கண்டுகொண்டது எனத் தன் பிள்ளைப் பருவத்து ஆன்மிகப் பிரயத்தனங்களை விளக்குவதில் தொடங்கி, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்ட விதத்தை, அரசு செய்த குற்றம் என்னும் தொனியில், விளக்கும்படியாக எழுதப்பட்டிருக்கிறது இந்த ஆவணம்.

தன் மீது இந்த நாடு, காவல்துறை, ஊடகங்கள், மாஃபியாக்கள் நடத்திய பெரும் கொடுமைகளை விளக்குவதற்காக எழுதப்பட்டதாகச் சொல்கிறது இந்த ஆவணம்…
ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய சுயம் சேவக்)., வி.எச்.பி ( விஸ்வ ஹிந்து பரிஷத் ).,பாரதிய ஜனதா கட்சி ஆகியவை திட்டமிட்டு நித்யானந்தரின் சொத்துகளை அபகரிக்கப் பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ( மூல ஆவணத்தில், பக்கம் எண் 30 )

மேலும்,தனக்கு எதிராகச் சதிசெய்தவர்கள் என்றொரு நீண்ட பட்டியலை இந்த ஆவணம் சொல்கிறது. இதில் கலைஞர் கருணாநிதி, கலாநிதி மாறன், துக்ளக் குருமூர்த்தி, முன்னாள் சன் குழும நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, நக்கீரன் கோபால் எனப் பலரும் அடங்குவர்.
மேலும் , காசுமீர பாசுபதம் என்னும் காஷ்மீரி சைவ முறையைப் பின்பற்றும் இந்த ஆதிசைவர்கள் 10000 ஆண்டுகால பாரம்பரியமும்,, 1000 ஆண்டுகாலமாக அழிக்கப்பட்டு வரும் கதையும் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்து இனப்படுகொலை என்று தலைப்பிடப்பட்டு, தன் வரலாறு சொல்லும் இந்த ஆவணத்தில் என்னென்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த ஆவணத்தை முழுமையாக உங்களுக்கு இங்கே வழங்குகிறோம். கீழே இருக்கும் இணைப்பில் அந்த 745 பக்க முழு ஆவணத்தையும் பெறலாம்.
எங்கே இருக்கிறார் நித்தி என்பதுதான் எல்லோருடைய கேள்வியும். அதற்குப்பதில் சொல்ல முடியாத , ஐ.நா.வை நோக்கி புலம்பித் தள்ளியிருக்கிறார்.
---------------------------------------------------------------------------
இங்கு இ.கு.சட்டம் செல்லாது.
மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோ
தா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்.

எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி 5 நாட்களாக வன்முறை தலைவிரித்தாடியது. மே.வங்கத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவமும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் லாகோலா ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் போரடாங்கா, ஜாங்கிபுர், பாரக்கா ரயில்நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு தெற்கு பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜெக்தீப் தங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். ரயில் மற்றும் பஸ்களுக்கு தீவைத்து பொது மக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.
--------------------------------------------------------------------+--
பாஸ் டேக்.
நாடு முழுவதும் உள்ள தேசிய சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 'பாஸ்டேக்' கட்டண முறை கட்டாயமாகிறது.
இந்த திட்டத்தினால், பஸ் மற்றும் லாரிகள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் வேகமாக செல்லும் என்பதால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் சுமார் 540 சுங்கச்சாவடிகள் உள்ளன. 
இவற்றை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதற்கு முடிவு கட்டும் வகையில், நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை (பாஸ்டேக்) அமல்படுத்த திட்டமிடப்பட்டது. 
இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த சுங்கச்சாவடியிலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக பிரத்யேகமாக 'பாஸ்டேக்' என்ற வழி உருவாக்கப்பட்டுள்ளது. 
இதில், செல்வதற்கு 'பாஸ்டேக்' என்ற கார்டை பயன்படுத்த வேண்டும்.
இந்த கார்டை அனைத்து சுங்கச்சாவடியிலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக பாஸ்டேக் கார்டுகள் சில ஏஜென்ஸிகள் மூலமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 இங்கு பெற்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆன்லைனிலும் இதற்கான விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். பிறகு வங்கியின் மூலமாக முன்னரே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். 
இதை ஆக்டிவேட் செய்வதற்கு வாகனத்தின் ஆர்சி புக், உரிமையாளரின் போட்டோ, லைசென்ஸ், பான் கார்டு விபரங்கள் கேஓய்சி படிவமாக இருக்க வேண்டும். பாஸ்டேக் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பணத்தை செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 
பிறகு அந்த கார்டை தமது வாகனத்தில் உள்ள கண்ணாடியில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ரீசார்ஜ் செய்யப்பட்ட கார், சுங்கச்சாவடியில் நுழைந்த உடன், அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒரு இயந்திரம் கண்ணிமைக்கும் நொடியில் வாகனத்தின் வருகையை கண்டறிந்து பதிவு செய்து விடும்.
---------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?