சவாலே,சமாளி

 நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்து பட்டாபிஷேக விழாநடந்துளது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

 வாரிசு அரசியல் குற்றச்சாட்டு, சொந்த கட்சி சீனியர்களிடையே காணப்படும் முணுமுணுப்புகள், கொத்திக்குதற காத்திருக்கும் எதிர்க்கட்சிகள், ஓர் அமைச்சராக அவரின் செயல்பாடுகள்... என உதயநிதிக்கு எதிர்கொள்ள சவால்கள் நிறைய உள்ளன.

"2018-ம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கி, கட்சியின் இளைஞரணி செயலாளராகி, இப்போது நான்கே ஆண்டுகளில் தமிழக அமைச்சராகவும் பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு, திமுகவில் மற்ற யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்குமா?" என்றால் நிச்சயம் கிடையாது.

* அண்டை மாநிலமான கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் எனப் பல மாநிலங்களில் கட்சி வேறுபாடின்றி ' அரசியல் வாரிசுகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் பரவலாக இருக்கத்தான் செய்கின்றன.

* அதே சமயம், அப்படி அரசியலுக்கு வரும் 'வாரிசு தலைவர்கள்', சொந்த கட்சியிலேயே சீனியர்களைத்தாண்டி கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தும், எதிர்க்கட்சிகளை சமாளித்தும், இதுபோன்ற இன்ன பிற பல சவால்களை எதிர்கொண்டு தாக்குப்பிடித்தால் மட்டுமே அரசியலில் நிலைத்து நிற்க முடியும்.

அந்த வகையில், உதயநிதி ஸ்டாலினுக்கும் பல சவால்கள் காத்திருக்கின்றன. முதல் சவால்... எல்லோரும் முன்வைக்கிற 'வாரிசு அரசியல்' குற்றச்சாட்டுதான். 

இந்த 'வாரிசு அரசியல்' குற்றச்சாட்டை அவர் எதிர்காலத்தில் கட்சியில் பதவி கிடைக்காத சீனியர்களிடமிருந்தே எதிர்கொள்ள நேரிடும்.

அதே சமயம் இப்போதைக்கு பொன்முடி, எ.வ. வேலு உள்ளிட்ட பல சீனியர் அமைச்சர்கள் உதயநிதி அமைச்சராவதை வரவேற்றுள்ளனர்.

கட்சியின் மிக சீனியரான பொதுச் செயலாளர் துரைமுருகனோ, " கருணாநிதி அமைச்சரவையில் துரைமுருகன் இருந்தான். ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பான். 

நாளை உதயநிதியின் அமைச்சரவையிலும் இருப்பான்" எனக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், உதயநிதியை எதிர்கால முதல்வர் ரேஞ்சுக்கு உயர்த்தி பேசி இருந்தார்.

ஸ்டாலினுக்கு பின்னர் அல்லது ஸ்டாலின் இருக்கும்போதே கட்சியின் தலைமை உதயநிதியிடம் வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், தந்தை வழியில் அவரும் துணை முதல்வர், முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு இல்லை என்று மறுத்துவிட முடியாது.

இருப்பினும் உதயநிதி அமைச்சராவதை ஆதரிக்கும் கட்சியின் சீனியர்கள், தங்களது வாரிசுகளையும் அமைச்சராக்க நிர்பந்திக்கும்போதுதான் பிரச்னைகள் விஸ்வரூபமெடுக்கும். ஏற்கெனவே டி.ஆர். பாலு போன்றவர்கள் தங்கள் வாரிசுகளை அமைச்சராக்க ஸ்டாலினை வலியுறுத்தியதாக முன்னரே செய்திகள் அலையடித்தன. எனவே சீனியர்களை சமாதானப்படுத்தக்கூடிய சவால்களும் அவருக்கு காத்திருக்கின்றன.

.தான் பொறுப்பேற்க உள்ள துறையில் அவர் எத்தகைய சாதனைகளைச் செய்தார் என்பதை அவர் வெளியுலகிற்கு காட்ட வேண்டும்.

மேலும் அமைச்சராகி விட்டதால், இனி டெல்லி பாஜக-வின் கவனம் உதயநிதி மீது திரும்பும். தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் எனத் திட்டமிடும் பாஜக, திமுக-வின் எதிர்கால தலைவராக பார்க்கப்படும் உதயநிதியை ஆரம்பத்திலேயே தட்டிவைப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்.

இன்னொருபுறம் கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பையும் அவர் கவனிக்க வேண்டியதுள்ளது. 

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞரணியினருக்கு சீட் வாங்கி கொடுப்பது மட்டுமல்ல, அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. 

இது தவிர கட்சியில் மெல்ல மெல்ல தனது ஆதரவு வட்டத்தை உருவாக்கவும், அப்போது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகளையும் உதய நிதி எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?