இலங்கை நிலவரம் ,கலவரம்.

 ரூபாய் நோட்டில் கோடுகள்

இந்திய கரன்சி நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? 
ஒருவேளை இந்த கோடுகளை நீங்கள் கவனித்திருந்தால், வெவ்வேறு நோட்டுகளில் அதன் மதிப்புக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை மாறுபடுவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

உண்மையில் ரூபாய் நோட்டுகளில் ஏன் இந்த கோடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தெரியுமா? 

இந்த கோடுகள் நோட்டுகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களைத் தருகின்றன. 

100, 200, 500 மற்றும் 2000 நோட்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

நோட்டுகளில் உள்ள இந்த கோடுகள் 'பிளீட் மார்க்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. 

இந்த கோடுகள் பார்வையற்றோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை ஆகும். நோட்டில் உள்ள இந்த வரிகளை தொட்டு பார்த்தாலே அது எவ்வளவு ரூபாய் நோட்டு என்று சொல்லி விடலாம். 

அதனால்தான் 100, 200, 500 மற்றும் 2000 நோட்டுகளில் வெவ்வேறு எண்ணிக்கையிலான கோடுகள் இருக்கின்றன.

100 ரூபாய் நோட்டில் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும். அதைத் தொட்டால் அது 100 ரூபாய் நோட்டு என்பது பார்க்காமலேயே நமக்குப் புரியும். 

அதே நேரத்தில், 200 ரூபாய் நோட்டின் இருபுறமும் நான்கு முகடுகள் இருக்கும். அதோடு மேற்பரப்பில் இரண்டு பூஜ்ஜியங்களும் இடம்பெற்றிருக்கும்.

500 ரூபாய் நோட்டுகளில் 5 கோடுகளும், 2000 ரூபாய் நோட்டுகளில் இருபுறமும் 7-7 கோடுகளும் இருக்கும். 

இந்த கோடுகளின் உதவியுடன், பார்வையற்றவர்கள் இந்த நோட்டையும் அதன் மதிப்பையும் எளிதாக அடையாளம் காண முடிகிறது.



-------------------------------------------------------------------------

காயின் ஸ்விட்ச் கூபர்  

எச்சரிக்கை!!

இந்தியாவின் முன்னணி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தளங்களில் காயின் ஸ்விட்ச் கூபரும் (CoinSwitch Kuber) ஒன்று. 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காயின் ஸ்விட்ச் கூபர் பிட்காயின், எதிரியம் மற்றும் டோஜ்காயின் உட்பட 80க்கும் மேற்பட்ட டிஜிட்டல் காயின்களை கையாண்டு வருகிறது.

தற்சமயம் காயின் ஸ்விட்ச் கூபர் அதன் வாடிக்கையாளர்களின் பணத்தை Withdrawal செய்தல் மற்றும் காயின்களை விற்பனை செய்வது ஆகிய இரண்டு ஆப்சனையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

இதனால் யூனிகார்ன் பிராண்டான காயின் ஸ்விட்ச் தளம் ட்விட்டரில் பல சரமாரியான கேள்விகளை சந்தித்து வருகிறது.

கடந்த ஒரு வருடமாகவே காயின் ஸ்விட்ச் கூபர் கிரிப்டோகரன்சிகளின் உலகளாவிய பரவலாக்கத்தின் காரணமாக அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்கவில்லை. உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய கிரிப்டோ பயன்பாடுகளையும் அனுமதித்து வந்துள்ளது.

காயின் ஸ்விட்சில் அரசாங்க வழிகாட்டுதல்கள் ஏதுமின்றி டிஜிட்டல் சொத்துக்களை வர்த்தகம் செய்ய அல்லது முதலீடு செய்ய முதலீட்டாளர்களை அனுமதித்தும் வந்தது.

இந்த நிலையில் காயின் ஸ்விட்ச் கூபர் அந்நியச் செலவாணி மேலாண்மைச் சட்டம் ((Foreign Exchange Management Act - FEMA) மற்றும் பிற சட்டங்களுக்கு (other laws) இணங்க பணத்தை திரும்பப் பெறுவதையும் மற்றும் காயின்களை விற்பனை செய்வதையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த பிரச்சனையை காயின் ஸ்விட்ச் கூபர் விரைவில் சரிசெய்யும் என்றும், இது தற்காலிகமான செயல்தான், அதனால் வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்புத் தருமாறு அதன் மார்கெட்டிங் டீம் ட்விட்டர் தளத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

-------------------------------------------------------------------

இலங்கை நிலவரம் ,கலவரம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னரான சந்தர்ப்பத்தில், இலங்கையில் தங்கத்தின் விலை அதிக பட்சமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவிற்கு சென்றதாக கொழும்பு - செட்டியார் தெரு தங்காபரண வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றன.

சமையல் எரிவாயு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள், பஸ் கட்டணங்கள், முச்சக்கரவண்டி கட்டணங்கள் என அனைத்து விலைகள் மற்றும் கட்டணங்களும் இன்று வரை நாளாந்தம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் அமெரிக்க டொலரை நெகிழ்வு தன்மையுடன் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தது.

இவ்வாறான நிலையில், இன்று தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து, அதிவுயர் விலையை எட்டியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், டொலரின் தாக்கம் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதாக செட்டியார் தெரு தங்காபரண வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், தங்காபரண விற்பனை குறித்து பிபிசி தமிழ், கொழும்பு செட்டியார் தெரு பகுதியில் கள ஆய்வொன்றை மேற்கொண்டது. இதன்படி, இலங்கையின் பிரதான தங்காபரண விற்பனை பிரதேசமாக விளங்கும் கொழும்பு - செட்டியார் தெரு பகுதி, வழமைக்கு மாறாக வெறிச்சோடி காணப்படுகின்றது

கொழும்பு செட்டியார் தெரு பகுதி
படக்குறிப்பு,

கொழும்பு செட்டியார் தெரு பகுதி

பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் வாடிக்கையாளர்கள் முழுமையாகவே இல்லாத நிலைமையும், ஏனைய சில வர்த்தக நிலையங்களில் குறைந்தளவிலான வாடிக்கையாளர்களும் வருகைத் தந்திருந்ததை காண முடிந்தது.

இலங்கையின் இதற்கு முன்னரான காலத்தில் சேமிப்பிற்காக தங்கத்தை கொள்வனவு செய்த மக்கள், இன்று திருமணம் போன்ற அத்தியாவசிய நிகழ்வுகளுக்காக மாத்திரமே தங்கத்தை கொள்வனவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான பின்னணியில், தங்கத்தின் விலை அதிகரிப்பு குறித்து, அகில இலங்கை தங்காபரண விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''தங்கத்தின் நிலைமை நாளுக்கு நான் கூடிக் கொண்டே தான் செல்கின்றது. இலங்கையை பொருத்த வரையில், இலங்கையின் பொருளாதார நிலை தான் தங்கத்தின் பாதிப்பாக இருக்கின்றது. இலங்கையில் இன்று வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதியின் அளவிற்கு தான் தங்கத்தின் விலையும் இருக்கின்றது. ஆகவே ஒவ்வொரு நாளும் நாணய பெறுமதி கூடிக் கொண்டு போகும் பொழுது, தங்கத்தின் விலையும் கூடிக் கொண்டே தான் போய் கொண்டிருக்கின்றது.

இலங்கையை பொருத்த வரையில் பொருளாதாரம் ஒரு ஸ்திர நிலைக்கு வந்தால், தங்க விலை குறையலாம். இந்த தங்க விலை ஏற்றத்தால், இன்று பெரும் பகுதியான தங்க வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.

அகில இலங்கை தங்காபரண விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம்
படக்குறிப்பு,

அகில இலங்கை தங்காபரண விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம்

அவர்களுக்கு என்ன வகையில், என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. எல்லாவற்றுக்குமே இலங்கையின் பொருளாதாரம் தான் காரணம் என்று உறுதியாக கூறலாம். இந்த நிலையிலிருந்து மாறுவதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம் எமது சங்கத்தின் மூலம்.

இன்று வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருமே தங்கத்தை தான் கொண்டு வருகின்றார்கள். யாருமே டொலரை கொண்டு வரவில்லை. எல்லாருமே தங்கத்தை தான் கொண்டு வருகின்றார்கள். அவ்வாறு அவங்க கொண்டு வர தங்கம், ஒரு சிறு உந்துக்கோளாக இருக்கின்றது. ஆகவே வெளிநாட்டிலுள்ளவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வரும் பொழுது நீங்கள் தங்கத்தை கொண்டு வாருங்கள். எங்களுடைய தேவையை சிறிதளவாவது குறைத்துக்கொள்ளுங்கள்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் 80 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட தங்கம், தற்போது இரு மடங்காக அதிகரித்து ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையில் நடைபெறும் திருமண வைபவ நிகழ்வுகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் தங்கத்தை கொள்வனவு செய்து வருவதாக அகில இலங்கை தங்காபரண விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவிக்கின்றார்.

திருமண நிகழ்வுகளை தவிர, வேறு எந்தவொரு தேவைகளுக்கும் இன்று தங்கத்தை கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்கள் முன்வருவதில்லை என கூறும் அவர், இந்த நிலைமை தொடருமாக இருந்தால் இந்த தொழில்துறை எதிர்காலத்தை பெரிதும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் என அவர் குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீகாந்த்
படக்குறிப்பு,

ஸ்ரீகாந்த்

இதேவேளை, தங்கம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

''தங்கத்தை சார்ந்து இருக்கிற எங்களுக்கு தங்க வியாபாரம் நடந்தால் தான், எங்கட வியாபாரம் நடக்கும் என்ற ஒரு கட்டாயம் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தில தங்க நுகர்வோர் தங்கத்தை குறைவாக கொள்வனவு செய்வதால், அதன் பாதிப்பு பெரியளவில் எங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் உற்பத்தியாகக்கூடிய இயற்கையாக கிடைக்கக்கூடிய இரத்தினக்கற்களாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய கற்களாக இருந்தாலும் சரி அந்த வியாபாரத்தில் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

தங்கத்தின் விலை அதிகமானதால பெரியளவுல பாதிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யும் போது, அதற்கான பணத்தை நாங்க டொலரில் தான் செலுத்துகிறோம். 240, 250 ரூபாவிற்கு காணப்பட்ட டொலரின் பெறுமதி, இன்று கறுப்பு சந்தையில் 310 ரூபா வரை போய்கொண்டிகிறது.

அந்த ரீதியில பார்க்கும் போது, நாங்க டொலர்ல செலுத்தும் போது, முன்னரை விடவும் 25 வீதம் அதிகமாக தான் இருக்கிறது. இதை எங்க நுகர்வோருக்கு அதிக விலையில் விற்கும் போது, கற்களை தங்கத்தில் பதிக்கலாமா வேண்டாமா என யோசிக்கின்றார்கள். கற்களுக்கும் ஒரு தொகை செலவிடப்படும் என நுகர்வோர் யோசிப்பதால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது" என ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

தங்க நகை வாங்குது தற்போது பெரியதொரு கனவாகி விட்டது என தங்க நகை கொள்வனவுக்காக வருகைத் தந்த வாடிக்கையாளரான சகுந்தலா தெரிவித்தார்.

சகுந்தலா
படக்குறிப்பு,

சகுந்தலா

''போன வருசம் வாங்குற நேரம் சாதாரணமா 80,000 - 85000 ரூபா கிட்டதான் வாங்கினோம். இப்போ 1.61 லட்சம் ரூபாய் என்கின்ற நேரம் ரொம்பவே பெரிய பாதிப்பா இருக்கு. காரணம் எங்களுக்கு இப்ப இருக்க பொருளாதார பிரச்சினையில அவ்வளவு கொடுத்து வாங்க முடியுமா தெரிய இல்ல. கட்டாய தேவை இருக்குற நாங்க வந்திருக்கோம். எங்களுக்கு வேடிங் எல்லாம் இருக்குற நேரம் கட்டாயம் நகை ஒன்று வாங்கனும்.

ஒரு பவுனை விட்டு, கால் பவுன் கூட வாங்க முடியாத நிலைமை இருக்கு. காரணம் இவ்வளவு விலை கூடி போனதால. இது எல்லாம் குறைச்சா அரசாங்கத்திற்கு பெரிய உதவியா போகும். முன்ன நாங்க கால் பவுனை வாங்குறதா இருந்தால் 20 - 25000 ரூபாவிற்கு வாங்கலாம். போன வருசம் வாங்கினோம். இப்போ இவ்வளவு பெரிய ஏற்றத்துக்கு வந்ததை ஏற்றுக்கொள்ளவே ஏலாது.

ஒரு நேர சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நேரம், நகைய வாங்கி வச்சிக்க ஏலாது. தங்க நகை வாங்குவது இப்போது எங்கள போன்றவர்களுக்கு பெரிய கனவு. யோசிக்க வேண்டிய விசியம்." என வர்த்தக நிலையத்திற்கு வருகைத் தந்த வாடிக்கையாளரான இராமையா சகுந்தலா தெரிவித்தார்.

நன்றி: பிபிசி.

-------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?