திருடனுக்கே வக்காலத்து ?

பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 700 கோடி அளவிற்கு நடந்துள்ள மோசடியில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மத்திய பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளையில், ரூ. 11 ஆயிரத்து 700 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியது, நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. 
லலித் மோடி, விஜய் மல்லையா வரிசையில் தற்போது நீரவ் மோடியா? என்று மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், இந்திய அரசோ, இவ்வளவு பெரிய தொகையை மோசடி செய்த நீரவ் மோடியை, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் வெளிநாட்டுக்கு தப்பவிட்டு, இப்போது வரை அமைதியாக இருக்கிறது.
நீரவ் மோடியின் மோசடி தொடர்பாக, கடந்த ஜனவரி 31-ஆம் தேதியே வங்கி நிர்வாகம், சி.பி.ஐ.யிடம் புகார் அளித்து விட்டது.

அமலாக்கத்துறையினரும் அன்றைய தினம் நீரவ் மோடியின் நிறுவனங்களில் சோதனை நடத்துகின்றனர். ஆனால், ஒருவர் மீது கூட கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. 

ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பந்தப்பட்டவர்களை வெளிநாட்டிற்குத் தப்பவிடாமல் தடுக்கும் வகையில் லுக்-அவுட் நோட்டீஸ் கூட வெளியிடவில்லை.

இறுதியில், பஞ்சாப் நேசனல் வங்கியில் நடந்த ரூ. 11 ஆயிரத்து 700 கோடி மோசடி ஊடகங்களிலும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னரே, சிபிஐ சுறுசுறுப்பாகி, நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி, அண்ணன் நிஷால், மாமா முகுல் சோக்ஷி, மோசடிக்கு உதவிய ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் உள்ளிட்டோர், ஐபிசி 120பி மற்றும் 420-இன் கீழ் சிபிஐ வழக்குகளைப் பதிவு செய்கிறது.

ஆனால், எதிர்பார்த்தது போல, லலித் மோடி, விஜய் மல்லையா வரிசையில், நீரவ் மோடியும் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிவிட, இந்தியாவில் இருந்த ‘ஏமாளி’களான வங்கியின் முன்னாள் அதிகாரி கோகுல்நாத் ஷெட்டி, ஊழியர் மனோஜ்கரத், நீரவ் மோடி நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் உரிமை பெற்ற அதிகாரி ஹேமந்த் பட் உள்ளிட்ட சிலரை மட்டும் தற்போது சிபிஐ கைது செய்துள்ளது.

அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீரவ் மோடிக்கு சொந்தமான நகைக்கடை, தொழிற்கூடம், அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ரூ. 5 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான வைரம், தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்துள்ளது.இந்த நிலையில் பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேடு விஷயத்தில், மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், அதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை  அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக, வழக்கறிஞர்களான வினீத் தாண்டா, ஏ.எல். சர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களையும் தாக்கல் செய்தனர். “பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்; வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது தொடர்பாக வரைமுறைகளை வகுக்க வேண்டும்” என்று மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், புதன்கிழமையன்று தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியது. 
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது.


அப்போது, “விஜய் மல்லையா வெளிநாட்டிற்குத் தப்பியபோது மத்திய அரசு எவ்வாறு எதுவும் செய்யவில்லையோ, அதேபோல நீரவ் மோடி விஷயத்திலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது; எனவே, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்; நீரவ் மோடியை 2 மாதங்களுக்குள் இந்தியா கொண்டு வர உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் வினீத் தாண்டா வாதிட்டார்.அதற்கு மோடி தலைமையிலான மத்திய பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “நீரவ் மோடி, முகுல் சோக்ஷி மீதான மோசடி புகார் தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது; அப்படி இருக்கும்போது, அதை விசாரிக்க தனியாக ஒரு சிறப்பு விசாரணை அமைப்பு உருவாக்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஏற்காது என்றும், அதனை கடுமையாக எதிர்க்கிறது” என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் கருத்தையே வழிமொழிவது போல, “தற்போது நாளேடுகளில் வரும் செய்தியைப்படித்து விட்டு, அது தொடர்பாக பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது பேஷனாகப் போய்விட்டது; நீரவ் மோடி மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும்போது, புதிதாக ஒரு அமைப்பு மூலம் விசாரணைக்கு கோருவது சரியல்லை” என கூறி விட்டனர். 

அத்துடன், விசாரணையை மார்ச் 16-ஆம் தேதிக்கும் அவர்கள் ஒத்திவைத்தனர்.
பஞ்சாப் நேசனல் வங்கியில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது; அந்த மோசடிகள் குறித்து பிரதமர் விசாரணை செய்யவேண்டும்’ என்று வங்கியின் மூத்த அதிகாரிகள் 5 பேர் 2015-ஆம் ஆண்டு மோடிக்கு கடிதம் எழுதியிருந் தனர். அந்தக் கடிதம் ஊடகங்களிலும் வெளியாகிறது.

இதற்கு எந்த பதிலும் வராத நிலையில், மீண்டும் 2015- அக்டோபரில் நினைவூட்டுக் கடிதம் ஒன்றையும் பிரதமருக்கு வங்கி அதிகாரிகள் அனுப்புகின்றனர்.
இதன்பிறகு, நிறுவனங்களின் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்திலிருந்து வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்று வருகிறது.
 “பிரதமர் கட்டளையின் கீழ் உங்கள் புகார் மனு மீது நடவடிக்கை எடுத்துவிட்டோம்; இந்த பிரச்சனை இத்தோடு முடிந்து விட்டது” என்று ஒற்றை வரி பதிலாக அந்த கடிதம் முடிகிறது. 
மக்கள் பணத்தில் சொகுசு கார்கள் 


‘எதற்கு நான் சரிப்பட மாட்டேன்’ என்ற வடிவேலு பட காமெடி போல, ‘என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என்று கடைசி வரை எந்த விவரமும் தரப்படவில்லை.
பிரதமர் அலுவலகமே மோசடியை மறைக்க முயலும்போது, நாம் என்ன செய்ய முடியும்? என்று அதிகாரிகள் இத்துடன் அமைதியாகி விடுகிறார்கள்.
அதற்குப் பிறகுதான் சமூக ஆர்வலர் ஹரிபிரசாத் என்பவர், வங்கி அதிகாரிகள் இதுவரை மோடிக்கு அனுப்பிய கடிதம், ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் என அனைத்தையும் ஒன்று திரட்டி மீண்டும் மத்திய நிதித்துறை, ரிசர்வ் வங்கி, பிரதமர் அலுவலகம், மற்றும் சிபிஐ-க்கு என 2016-ஆம் ஆண்டு ஒரே கோப்பாக புகார்களை அனுப்புகிறார். 

அந்த விவரங்களை ஊடகங்களுக்கும் தருகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய 31 வங்கிகள் நீரவ் மோடியின் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டு, அந்த வங்கி அதிகாரிகள் குறித்த விவரங்களையும் அவர் பிரதமருக்கு அனுப்புகிறார்.ஆனால் அவர் அனுப்பிய கடிதங்கள் எதற்கும் பதில் இல்லை. 
வங்கி அதிகாரிகளைப் போல இவரும் நினைவூட்டுக் கடிதம் அனுப்புகிறார். 

‘பல்வேறு பத்திரிகைகளிடம் சென்றும் நீதி கிடைக்கவில்லை என்றுதான் உங்களிடம் வந்துள்ளோம்; ஆனால், நீங்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவில்லை’ என்று அதில் குறிப்பிடுகிறார். 
அந்த கடிதத்தில் சுமார் ரூ. 9 ஆயிரத்து 800 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்து இருக்கலாம் என்றும், அதேபோல் நீரவ் மோடி வருமான வரி காட்டாதது குறித்தும் சுட்டிக்காட்டுகிறார்.
2018-ஆம் ஆண்டு தில்லியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், “நான் 2 ஆண்டுகளாக நீரவ் மோடியின் மோசடி குறித்து இந்தியாவின் மிகவும் உயர் பதவியில் உள்ள நபர்களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்துவிட்டேன், ஆனால் அவை கிணற்றில் வீசிய கல்லாகவே போய்விட்டது” என்றும் ஹரிபிரசாத் பேட்டி அளிக்கிறார்.

இதனிடையே, 2015-ஆம் ஆண்டிலேயே, நீரவ் மோடி மீதான மோசடி புகாரைப் பெற்றுக் கொண்டதற்குப் பின்னரும், தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நீரவ் மோடியின் மாமனார் முகுல் சோக்ஷியுடன் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு பேசுகிறார்; அப்போது ‘வணிகத்தில் சிறந்தவர் முகுல் பாய்’ என்று பாராட்டு மழையும் பொழிகிறார்.
கடந்த ஜனவரி 23-ஆம் தேதி கூட சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் நீரவ் மோடியுடன், பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். 
மோடி நண்பர்களால் அவசரப்பிரிவில் இந்திய பொருளாதாரம்.


அவர் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்து விட்டார் என்ற புகார்கள் எழுந்த பின்பும் இது நடக்கிறது.எந்தநேரமும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, மோசடி, ஊழல், கறுப்புப் பணம் என்று முழங்கும் பிரதமர் மோடி, தற்போது நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியில் ரூ. 11, 700 கோடி கொள்ளை போன பின்பும் கூட அமைதியாக இருக்கிறார். 

ஒரு வார்த்தை வாய் திறந்து பேச மறுக்கிறார்.இவையெல்லாம் தற்செயலானதாக இருக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு இல்லாமல் இது நடக்காது. பிரதமருடனான தொடர்பு இல்லாமல் நீரவ் மோடியும் மோசடி செய்திருக்க முடியாது.

எனவேதான், நீரவ் மோடியின் மோசடி குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தற்போது கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. 

எங்கே மாட்டிக்கொள்வோமா? என்ற அச்சத்தில் மத்திய பாஜக அரசு சிறப்புப் புலனாய்வுக்குழுவின் விசாரணை எதிர்க்கிறது.

அதற்குநிதித்துறை மட்டுமல்ல  நீதிமன்றமும் ஒத்துப்போகிறது.

இந்திய வளங்களை அந்நிய நாடுகளுக்கு தாரை வார்ப்பதில் பாஜக ஆட்சி மீண்டும் வெள்ளையர் ஆட்சியைப்போலவே நடக்கிறது.

கொள்ளையர்கள் கையில் நாட்டை ஒப்படைத்து வேடிக்கைப் பார்க்கிறது.
=======================================================================================
ன்று,
பிப்ரவரி-22.
  • ஸ்பெயின், புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819)
  • வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினரி என்ற பெயரில் துவங்கப்பட்டது(1853)
  • எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன(1958)
=======================================================================================
கமல்ஹாசனின் கட்சிக் கொடி.
ஆறு கைகள் இணைந்துள்ள நிலையில், நடுவில் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. 
வெள்ளை, சிவப்பு, கறுப்புநிறங்களால், கொடி உருவாக்கப்பட்டு உள்ளது.
ஆறு கரங்களும், ஆறு மாநிலங்களை குறிக்கிறது என்றும், நடுவில் உள்ள நட்சத்திரம், மக்களை குறிக்கிறது என்றும் கமல்ஹாசன்  விளக்கம் அளித்தார்.
======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?