ஜவ்வரிசியில் கலப்படம் !



 பாயசத்தில் பாய்சன்!

பாலில் தண்ணீர்... மிளகில் பப்பாளி விதை... காபி தூளில் சிக்கரி என சின்னச் சின்னதாகத் தொடங்கிய உணவுப் பொருள் கலப்படம், இன்று அபாயகரமான வேதிப்பொருட்களை கலக்கும் அளவு விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஜவ்வரிசி கலப்படம்!
‘பளிச்’ வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான வேதிப் பொருட்களை ஜவ்வரிசியில் கலப்பது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை உருவாக்கியது. மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சேலம், நாமக்கல் உள்பட பல மாவட்டங்களில் உள்ள ஜவ்வரிசி ஆலைகள் சீல் வைக்கப்பட்டன. 

பிரச்னை நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்ற பிறகு, ‘உணவுப் பாதுகாப்பு துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. ‘மக்களின் உடல்நலம் பாதிப்பதோடு ஜவ்வரிசி தொழிலே அழியும் சூழ்நிலை உள்ளதால் நீதிமன்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கை இப்போது 
மீண்டும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஜவ்வரிசி கலப்பட மோசடிகளை வெளிக்கொண்டு வந்ததுடன், அதிரடியான பல நடவடிக்கைகள் எடுத்து வரும் உணவு பாதுகாப்பு அலுவலரான அனுராதாவிடம் பேசினோம்.

‘‘ஜவ்வரிசி கலப்படம் தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்திருக்கும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
அதிகாரி என்ற முறையில் நானும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறேன். அதனால், இப்போது கருத்து எதுவும் கூற முடியாது. ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். அதிக வெண்மையாக இருக்கும் ஜவ்வரிசியை மக்கள் வாங்காமல் தவிர்க்க வேண்டும். ஜவ்வரிசியை பயன்படுத்தும்போது தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டிய பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

அரசு தரப்பில் தொடர்ந்து விசாரித்தபோது, பெயர் விவரங்களைக் குறிப்பிட வேண்டாம் என்று அதிகாரி ஒருவர் சில விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். ‘‘ஏறக்குறைய 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜவ்வரிசி தொழில் நடந்து வருகிறது. மரவள்ளிக்கிழங்கு அதிகம் உற்பத்தியாகும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஜவ்வரிசி ஆலைகள் நிறைய இயங்கி வருகின்றன. இந்த மாவட்டங்களில்தான் இப்போது கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

பொதுவாக, மரவள்ளிக்கிழங்கின் மேல் தோலை அகற்றிவிட்டே ஜவ்வரிசி தயாரிக்கத் தொடங்குவார்கள். கிழங்கின் தோலை கைகளாலேயே அகற்றிவிட்டு ஜவ்வரிசி முன்பு தயாரிப்பார்கள். இப்போது எந்திரங்கள் பயன்படுத்தித் தோலை அகற்றுகிறார்கள். ஆனால், கிழங்கின் தோலை முழுமையாக அகற்றுவதில்லை. கிழங்கின் தோலில் ஸ்டார்ச் இருக்கிறது என்பதுடன் தோலை முழுமையாக அகற்றாதபோதுதான் எடை கூடுதலாகக் கிடைக்கும் என்பதால், அரைகுறையாகவே தோலை அகற்றி தயாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 

கிழங்கின் தோலை முழுமையாக அகற்றிவிட்டு தயாரிக்கும்போதே சிறிது பழுப்பு நிறத்தில்தான் ஜவ்வரிசி கிடைக்கும். தோல் பகுதி முழுமையாக அகற்றாதபோது இன்னும் அதிக பழுப்பு நிறமாகவே இருக்கும். இதனால், வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய அமிலங்களையும் வேதிப்பொருட்களையும் கலக்கிறார்கள். குறிப்பாக, 2000ம் ஆண்டுக்குப் பிறகுதான் வேதிப்பொருட்கள், அமிலங்கள் போன்றவற்றைக் கலந்து தயாரிக்க ஆரம்பித்தார்கள். கால்சியம் ஹைபோகுளோரைட், சோடியம் போன்ற பிளீச்சிங் ஏஜென்டுகளையும், சல்ப்யூரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலங்களையும், டினோபால் என்ற பவுடரையும் வெண்மைக்காகப் பயன்படுத்துகிறார்கள். 

ஜவுளித்துறையில் துணிகளை வெண்மை நிறமாக்கப் பயன்படும் வேதிப்பொருட்கள் இவை. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சில ஜவ்வரிசி ஆலைகளில் நடத்திய சோதனைகளில் இந்த வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது செய்திகளாக வெளியாகியிருக்கிறது.  பாயசம், அப்பளம், வடகம் உள்பட பல உணவுப் பொருட்களில் ஜவ்வரிசியைப் பயன்படுத்தி வருகிறோம். தென்னிந்தியாவில் அரிசியை அதிகம் பயன்படுத்துவது போல மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வடமாநிலங்களில் ஜவ்வரிசியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். 

விரத காலங்கள், விசேஷங்கள் போன்றவற்றில் ஜவ்வரிசி அதிகம் பயன்படுத்தும் பொருளாக இருக்கிறது. ஜவ்வரிசி பயன்பாடு இத்தனை முக்கியமானதாக இருக்கும்போது, இந்த வேதிப்பொருட்கள் எத்தகைய ஆபத்தை உருவாக்கும் என்பதை உற்பத்தியாளர்கள் உணர்வதில்லை. உற்பத்தியாளர்கள் முறையாகத் தயாரித்தாலும், வெண்மை நிறம் கொண்டதாக இருந்தால்தான் விற்பனையாகும் என்று வியாபாரிகள் உற்பத்தியாளர்களை நிர்ப்பந்திப்பதும் நடக்கிறது. ஏற்கெனவே, ஜவ்வரிசி தயாரிப்பில் ஈர மாவு, மக்காச்சோள மாவு கலப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்போது பெரும் பிரச்னையாக வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. 

முழுக்க வியாபாரம் என்ற எண்ணத்தில் மட்டுமே பார்க்காமல் பலரும் விரும்பி உண்ணும் ஓர் உணவுப்பொருள் என்பதையும், சேர்க்கப்படும் வேதிப்பொருட்களின் அபாயகரமான பின்விளைவுகளையும் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் உணர வேண்டும். இந்தத் தவறை உற்பத்தி அளவிலேயே அரசாங்கம் தடுக்க வேண்டும். முறைப்படி தயாரித்தால் எந்த வேதிப்பொருளும் கலக்காமலேயே தரமான ஜவ்வரிசியை தயாரிக்க முடியும்’’ என்கிறார் அவர். 

ஜவ்வரிசியில் இதுபோல் வேதிப்பொருட்கள் கலப்பதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்று இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவரான கணேஷிடம் கேட்டோம்.‘‘உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான் உடல் இயல்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆரோக்கியக்கேடான உணவுப்பொருட்கள் உள்ளே சென்றால் பசியின்மை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்றுப் புண் என்று வயிறு தொடர்பான பல பிரச்னைகள் ஏற்படும். அதுவும் இந்த ஜவ்வரிசியில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள் இன்னும் ஆபத்தானவை.

வேதிப்பொருட்களின் கலப்படத்தால் உணவை கிரகிக்கும் தன்மை குடலுக்குக் குறையும், ரத்தசோகை ஏற்படலாம், எடை இழப்பு, நீரிழிவு இருந்தால் பருமன், புற்றுநோய் என பல அபாயகரமான பின் விளைவுகள் உருவாகலாம். எல்லா உணவும் கல்லீரலில் சென்று தான் செரிமானமாகிறது என்பதால் கல்லீரல் கோளாறுகளை இந்த ரசாயனங்கள் கண்டிப்பாக உருவாக்கும். கல்லீரலில் என்சைம்கள் உற்பத்தியும் அதீதமாக நடக்கலாம். ஹெவி மெட்டல்கள் என்று சொல்லக்கூடிய கடினமான வேதிப்பொருள் கலப்படம் என்றால் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 

இப்போது சில நோய்களுக்கான காரணங்களை மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அடையாளம் தெரியாத குழப்பத்தில் உணவுக் கலப்படம் முக்கிய காரணமாக  இருக்கலாம். கலப்பட ஜவ்வரிசி உணவுகளை குழந்தைகள் சாப்பிடும்போது அவர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கும். மந்தத்தன்மை, எரிச்சல், கவனக்குறைவு என்று பல புதிய பிரச்னைகளை
குழந்தைகளிடம் இப்போது பார்க்கிறோம். இதற்கும் உணவுப்பொருள் கலப்படம் முக்கிய காரணமாக இருக்கக்கூடும்’’ என்கிறார். 
வேதியியல் பேராசிரியரான உஷாவிடம் இந்த வேதிப்பொருட்களின் தன்மை பற்றிக் கேட்டோம்.

‘‘நம்முடைய  வயிற்றுக்குள் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் செரிமானத்துக்கு உதவி செய்கிறது. நேரம் தவறி சாப்பிடுகிறவர்களுக்கு இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகமாக சுரந்து குடல் பகுதியில் எரிச்சலையும், புண்ணையும் உருவாக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஜவ்வரிசியில் கலக்கப்படுகிற மேற்கண்ட வேதிப்பொருட்கள், நம்முடைய வயிற்றில் இயற்கையாக உருவாகும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைவிட பல மடங்கு வீரியம் கொண்டவை. 

சாதாரணமாக ஒரு சோப்பில் இருக்கும் வேதிப்பொருட்கள் அலர்ஜியானாலே அரிப்பு, தோல் உரிதல், புண் போன்றவற்றை 
உண்டாக்கிவிடுகிறது. ஆப்டிக்கல் ஒயிட்னர் போன்ற வேதிப்பொருட்கள் உடலின் உள்ளுறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்துவிடும். ஆரம்பகட்டத்தில் இது நமக்குத் தெரியாது. மிகவும் மெலிதாக இருக்கும் ரத்தநாளங்கள் அரிக்கப்பட்டு ரத்த வாந்தி வரும்போதுதான் பிரச்னை புரிய ஆரம்பிக்கும்’’ என்று திகில் கிளப்புகிறார்.



கன்ஸ்யூமர் அசோசியேஷன் அமைப்பின் தொடர்பு அலுவலரான சோமசுந்தரம் மேலும் பல முக்கிய தகவல்களைக் கூறுகிறார். 

‘‘மருத்துவமனையில் காயங்களுக்குக் கட்டு போடுவதற்காக வெள்ளை நிற பேண்ட் எய்ட் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த பேண்ட் எய்ட் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஆப்டிக்கல் ஒயிட்னர் என்ற வேதிப்பொருளைப் பயன்
படுத்தித் தயாரிக்கிறார்கள். 

ஆனால், இந்த ஆப்டிக்கல் ஒயிட்னர் புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டது என்பதால் காயங்களின் மீது நேரடியாகக் கட்டக் கூடாது என தடை செய்யப்பட்டிருக்கிறது. ஜவுளித்துறையில் வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் இந்த ஆப்டிக்கல் ஒயிட்னர்தான் ஜவ்வரிசியில் கலக்கப்படுகிறது என்பது மிகவும் கொடுமையான ஒரு செய்தி. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரியான அனுராதா போலவே எல்லோரும் நேர்மையாக செயல்பட்டால்தான் இதுபோன்ற உணவுக் கலப்பட மோசடி
களை தடுக்க முடியும். 

ஜவ்வரிசி மோசடி வெளிவந்தபிறகு அவருக்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும், பல அரசியல் தலையீடுகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. அவரை வேறு துறைக்கு மாற்றம் செய்தபோதும் நீதிமன்றம் சென்று போராடி மீண்டும் அதே பணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். இந்த தைரியமும், உறுதியும் எல்லா அதிகாரிகளிடமும் இருந்தால் மோசடிகள் நடக்காமல் தடுக்க முடியும். 

நுகர்வோர் அமைப்பின் மூலமும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதுவரை, மக்கள் கவனமாக இருக்க வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார் சோமசுந்தரம். மக்களின் உயிருக்கு உலை வைக்கிற, ஜவ்வரிசி தொழிலை நம்பியிருக்கிறவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறஇந்த மோசடிக்கு நீதிமன்றமும், அரசும் விரைவில் முடிவுரை எழுதும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்!


                                                                                                                                     
 - ஞானதேசிகன்

நன்றி:குங்குமம் டாக்டர்.
========================================================================================
இன்று,
மே -02.
  • இந்திய திரைப்பட இயக்குனர் சத்யஜித் ராய் பிறந்த தினம்(1921)
  • இத்தாலி ஓவியர் லியானர்டோ டா வின்சி இறந்த தினம்(1519)
  • உலகின் முதலாவது ஜெட் விமானம், லண்டன்-ஜோகன்னஸ்பர்க் இடையே பறந்தது(1952)
========================================================================================

மாற்றாந் தாய்க்கு ஒரு மடல்!



முன்னாள் நடிகை இன்றைக்கான முதல்வர் ஜெயலலிதா அவர்களே..

''தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் நீங்கள் தாய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் தாயல்ல… மாற்றாந் தாய் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே இந்த மடல்.

தாயின் பரிபூரணமான பாசத்தையும், அளவில்லாத அன்பையும் இந்த உலகத்தில் எதனோடும் ஒப்பிடவே முடியாது. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும், உணர்வு பூர்வமாக அறிந்து கொண்ட விஷயம் இது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையிலும் தாய்க்குதான் முதலிடம். அத்தகைய தாய்ப்பாசத்தை வைத்து, கீழ்த்தரமான அரசியல் செய்யும் உங்களை மன்னிக்கவே முடியவில்லை.

கருணையின் வடிவமானவள்தான் தாய். அத்தகைய கருணை எதுவுமில்லாமல், ஈவு, இரக்கம் சற்றும் பாராமல், ஆயிரக்கணக்கான மக்களை நாள் முழுவதும் வெயிலில் வாட்டி வதைக்கும் கொடுமையான அரக்ககுணம் படைத்த, அகங்காரம் பிடித்த சர்வாதிகாரியாகத்தான் உங்களைப் பார்க்க முடிகிறது. எந்தத் தாய் தன் குழந்தையை துன்பத்தில் வாடவிட்டு, சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாள்? மண்டையைப் பிளக்கும் வெயிலில், பிள்ளையின் தலையை தன் முந்தானையால் மூடிக் கொண்டு நடப்பவள்தான் தாய். கொதிக்கும் மணலில், தன் செருப்பை பிள்ளைக்கு அணிவித்து, காலில் கொப்புளம் போட தன்னையே வருத்திக் கொள்பவள்தான் தாய். இரண்டு புறமும் ஏராளமான ஏர் கூலர்கள் சூழ, பிரச்சார மேடையில் சுகமாய் அமர்ந்திருக்கும் உங்களை, பெற்ற தாயின் இடத்தில் எப்போதுமே வைத்துப் பார்க்க முடியாது. ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனுக்கும், மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வாடிக் கொண்டிருக்கும் போது, ஆட்சியின் சாதனைகளை பட்டியலிடும் கேவலமான உங்கள் போக்குக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

செம்பரம்பாக்கம் வெள்ளத்தால் சென்னையே மூழ்கிக் கிடந்த போது, ஊரில் இருக்கும் எங்கள் பெற்றோர்கள் எப்படி பதறினார்கள் என்பது உங்களுக்குத் தெரிய நியாயம் இல்லை. மொட்டை மாடியில் உயிர் பயத்துடன், உணவுக்கும் தண்ணீருக்கும் தவித்த எங்களை, நீங்கள் தொலைக்காட்சி வாயிலாகவாவது பார்த்தீர்களா? இப்போது பறக்கும் உங்கள் ஹெலிகாப்டர் அப்போது எங்கே போனது? முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் இருந்த நீங்கள், இப்போது ஹெலிகாப்டர் ஏறி தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்.
உங்களது உடல் நலம் குறித்து பல தகவல்கள் வருகின்றன. அதையும் தாண்டி, பரப்பரன அக்ரஹார சிறையில் இருந்து, ஜாமீனில் வெளியே வர, உடல்நலனைத்தானே காரணம் காட்டினீர்கள்? சரி.. உண்மையிலேயே உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால், உங்கள் பிள்ளைகளுக்கு அதை நீங்கள் தெரியப்படுத்த வேண்டாமா? உங்களை முதலமைச்சராக அமர்த்தி அழகு பார்த்தவர்கள், உடல் நலம் பெறவேண்டும் என பிரார்த்தனை செய்ய மாட்டார்களா? உடல் நலத்தைக் காரணம் காட்டி, காணொலிக் காட்சி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அம்மா… உங்கள் திடீர் ஆவேசம் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

சரி, உங்கள் தேர்தல் பிரச்சார வீடியோ பதிவுகளை, போட்டுப் பார்த்தீர்களா? . நீங்கள் பேசும் போது யாருமே கவனிக்கவில்லை. பெயருக்குக் கூட கைத்தட்டவும் இல்லை.. காரணம், வெயில் ஒரு புறம் வாட்டி வதைக்க, வியர்வை மழையில் நெளிந்து கொண்டிருந்தார்கள். கையில் கிடைத்ததை வைத்து விசிறிக் கொண்டிருந்தார்கள். கடனுக்கு மாரடிக்க வந்தவன் கண்ணீர் விட்டால் என்ன? விடாவிட்டால் என்ன? உங்களைப் பொறுத்தவரை கூட்டத்தைக் காண்பித்தால் போதும்.. கேமராக் கண்களில் நிறையும் அளவுக்குக் மக்கள் தலைகள் தெரிய வேண்டும் என்பதுதானே புத்தியில் இருக்கிறது. 

காவல்துறையினரின் மூர்க்கத்தனமான போக்கால், விருத்தாச்சலம் பொதுக்கூட்டத்தில் வெயிலில் வாடி வதங்கி, உயிர் துறந்தவர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?  

பணத்தால் மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என மனக்கோட்டை கட்டாதீர்கள். மக்களின் வரிப்பணத்தில், அவர்களுக்கான திட்டங்களைத் தீட்டவும், செவ்வனே அவற்றை செய்யவும்தான் உங்களைப் பிரதிநிதியாக  அமர்த்தியிருக்கிறார்களேத் தவிர, நீங்கள் சுகமாக வாழ, நோகாமல் ஹெலிகாப்டரில் வந்து போக யாரும் இங்கே வரி செலுத்தவில்லை.

எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது… நீங்கள் பொதுமக்களுக்கு மட்டும்தான் தாயா? இல்லை உங்கள் கழக தொண்டர்களுக்கும் தாய்தானா? அனுதினமும் தன் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று, இந்த உலகத்தில் எந்தத் தாய் எதிர்பார்க்கிறாள்? ஏன், மாற்றந்தாய் கூட, இப்படி ஒரு கொடுமையை செய்வதில்லை. பார்க்கும் போதெல்லாம் காலில் விழ வேண்டும், உங்களைப் பார்த்தவுடன், கூனிக் குறுகி, உடலை வளைத்து, தரை வரைத் தொட்டு வணக்கம் செலுத்த வேண்டும், வாயைப் பொத்திக் கொள்ள வேண்டும் என உங்கள் அமைச்சரவை சகாக்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அதை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால் வாய் திறந்து சொல்லியிருக்கலாமே? தன்மானத்தை இழந்து, சுயத்தை இழந்து, கேவலம் பதவி ஆசைக்காக உங்கள் காலில் விழும் அடிமைகள் எல்லாருமே, மனதில் வன்மத்துடன்தான் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்துதான் இருக்கும் என நினைக்கிறேன்.

உங்களை முன்னாள் நடிகை என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. எந்நாளும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அப்போது திரைப்படத்தில், இப்போது வாழ்க்கையில். ஆனால், இனிமேல் உங்கள் படம் ஓடாது என்பதை, கடைகோடி மக்களில் ஒருவனாக உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உயிர் பயம் வந்தால் கடவுளை நினைப்பது மனிதனின் இயல்பு.. தோல்வி பயம் வந்தால் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்வது உங்கள் இயல்பு… தீபாவளி லேகியம் போல, உங்களுக்கு எம்.ஜி.ஆர் என்ன தேர்தல் லேகியமா?

உங்களுக்கு தெம்பிருந்தால், திராணி இருந்தால், நல்லாட்சி செய்ததாக நம்பிக்கை இருந்தால், நீங்கள் பட்டியலிடும் சாதனைகள் உண்மையாக இருந்தால், எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லாமல், இந்தத் தேர்தலைச் சந்திக்க முடியுமா?

வேதனையுடன்,

தமிழன் பிரசன்னா.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?