மேட் இன் சீனா

 சீன ஏஐ சாட்பாட் டீப்சீக்கின் எழுச்சி உலகளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், சீனாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை.

ஏனென்றால், 'மேட் இன் சீனா 2025' என்ற லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் தனது நிபுணத்துவத்தை சீனா மெதுவாக வளர்த்து வருகிறது.

ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, டீப்சீக்கின் வெற்றி என்பது ஒரு பிரமாண்ட திட்டம் வெற்றியடைந்தது என்பதற்கான மற்றுமொரு சான்று.

'மேட் இன் சீனா 2025' எனும் திட்டம் 2015-இல் சீன அரசால் அறிவிக்கப்பட்டது.

சீன பொருட்கள் என்றால் மலிவான மற்றும் குறைவான தரம் கொண்டவை என்ற அடையாளத்தை மாற்றுவதே அத்திட்டத்தின் குறிக்கோளாக இருந்தது.

அதன்படி, 2025ஆம் ஆண்டுக்குள் சீனா ஆதிக்கம் செலுத்த வேண்டிய பகுதிகளாக பத்து தொழில்நுட்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், மின்சார கார்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரி தொழில்நுட்பம் போன்ற துறைகள் அதில் அடங்கும். இதில் குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்களில் சீனா பெரிய சாதனையாளராக உருவாகி வெற்றி பெற்றுள்ளது. சில தொழில்நுட்பங்களில் மிகுந்த நம்பிக்கை தரும் இலக்குகளையும் எட்டியுள்ளது.

"'மேட் இன் சீனா 2025' எனும் திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்பது என் கருத்து. பல தொழில்களில் சீனா முன்னணி இடத்தை அடையும் போட்டியில் உள்ளது மற்றும் சில தொழில்களில் சீனா முன்னணி இடத்தில் உள்ளது.

குறிப்பாக, பிஒய்டி (BYD) போன்ற மின்சார கார் தயாரிப்பாளர்கள் காரணமாக, மோட்டார் வாகன தொழில்களில் முன்னணியில் உள்ள ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை சீனா முந்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பாளராக இருப்பது சீனாவுக்கு மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் துறையில் பெரும் நன்மையை அளித்துள்ளது.

சர்வதேச எரிசக்தி ஏஜென்சியின்படி (IEA), சோலார் பேனல்கள் தயாரிப்பின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் 80-95 சதவீதம் சீனாவின் வசம் உள்ளது.

சீனா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையமாக இருப்பதாகவும், 2028ஆம் ஆண்டுக்குள் உலகின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 60 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், ட்ரோன் தொழிலும் சீனா முன்னணியில் உள்ளது. உலகின் முதல் 10 ட்ரோன் உற்பத்தியாளர்களில் மூவர் சீனாவை சேர்ந்தவர்கள் என்று பிபிசி ஆராய்ச்சியில் தெரியவந்தது.

முன்னதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நோக்கங்களை அடைவதற்காக, 250க்கும் மேற்பட்ட சிறு இலக்குகளைக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கியது. சௌத் சீனா மார்னிங் போஸ்ட் பகுப்பாய்வின்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 86 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் மார்ஷல் ஃபண்ட் சிந்தனைக் குழுவின் நிர்வாக இயக்குநரும், முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனின் முன்னாள் ஆலோசகருமான லிண்ட்சே கோர்மன் கூறுகையில், "அரசு ஆதரவு பெற்ற முதலாளித்துவத்தின் மாதிரியைப் பயன்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது" எனக் குறிப்பிடுகிறார்.

வெளிநாட்டுத் திறன்களை ஈர்ப்பதிலும், கூட்டு முயற்சிகள் மூலம் சீன நிறுவனங்களுடன் ஒத்துழைக்க சர்வதேச நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் சீனா வெற்றிகரமாக உள்ளது. 

அதற்காகப் பெரும் தொகையும் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வின்படி, சீன அரசாங்கம் 1.5 டிரில்லியன் டாலர்களை ஆராய்ச்சி, மேம்பாடு அல்லது வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதற்கு மானியமாக சேகரிக்கத் திட்டமிட்டது.

அந்த அறிக்கைப்படி, 2020ஆம் ஆண்டில் 627 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது

சமீபத்திய ஆண்டுகளில் சில மேற்குலக நாடுகள் தங்கள் தொழில்நுட்பம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு கடுமையான தடைகளை விதித்துள்ளன. அதாவது, சில தொழில்நுட்பங்களில் சீனாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே மேற்குலக நாடுகளின் திட்டம்.

இந்த தடை நடவடிக்கைகளின் மூலம், சில தொழில்நுட்பங்களில் கடினமாக முயற்சி செய்ய சீனா ஊக்கம் பெற்றதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சீனா தற்சார்புடன் செயல்படத் தொடங்கியிருப்பது, 'மேட் இன் சீனா 2025' எனும் திட்டத்துக்கான முக்கிய உந்துதலாக இருந்தது. இந்தியாவில் மேக் இன் இந்தியா என்று ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?