ஒரு அல்வாவின் கதை,,,,

நெல்லைக்கு சுற்றுலா வருபவர்களும், தொழில் நிமித்தமாக வருபவர்களும் மறக்காமல் வாங்கி செல்லும் பண்டம் இருட்டுக்கடை அல்வா.

வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களை கூட இருட்டுக்கடை அல்வா சுண்டி இழுத்து வருகிறது. அந்த அளவுக்கு பிரசித்தம் பெற்ற இந்த இருட்டுக்கடை நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ளது.

இந்த கடையில் 45 வாட்ஸ் பல்பு மட்டுமே போடப்பட்டுள்ளதால் வெளிச்சம் குறைவாக இருக்கும். இதனால் இதற்கு இருட்டுக்கடை என்ற பெயர் ஏற்பட்டது.

தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையே திறக்கப்படும் இந்த இருட்டுக்கடையில் அல்வா வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும்.

கடை திறக்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் கூடி விடுவார்கள். இந்த அளவுக்கு காந்தம் போல் அனைவரையும் கவர்ந்திழுத்த இருட்டுக்கடை அல்வாவை நெல்லையில் அறிமுகப்படுத்தியவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர்.

சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல குடும்பத்தினர் பிழைப்பு தேடி நெல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சொக்கப்பட்டி அரண் மனையில் பணிக்கு சேர்ந்தனர்.

அவர்களில் ஒருவர்தான் 1882-ம் ஆண்டு வந்த ஜகன்சிங். ராஜஸ்தான் இனிப்பு வகைகள் செய்வதில் ஜகன்சிங் வல்லவர். அவர் சில ராஜஸ்தான் வகை இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். ராஜஸ்தான் இனிப்பு வகையில் ஒன்றான அல்வாவையும் தயாரித்து தள்ளுவண்டியில் தெருத்தெருவாக சென்று விற்று வந்தார்.

வழக்கமான இனிப்பையே சுவைத்து வந்த அப்பகுதி மக்களுக்கு ஜகன்சிங்கின் புது வகை இனிப்பான அல்வா மிகவும் பிடித்து விட்டது. இதனால் அல்வாவுக்கு தனி மவுசு ஏற்பட்டது. இதனால் அல்வா வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது.


ஜகன்சிங் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதில் ஈடுபடுத்தி வியாபாரத்தை விருத்தி செய்தார். அவர்களின் வழி தோன்றல்கள் தான் நெல்லை பகுதியில் சுவீட் கடைகளை நடத்தி அல்வா வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதில் இருட்டுக்கடை தனி முத்திரை பதித்தது. இதனால் அங்கு அல்வா விற்பனை நாளுக்கு நாள் அமோகமானது.அல்வா என்றாலே இருட்டுக்கடைதான் என்ற நிலை மக்கள் மனதில் ஏற்பட்டது. இதனால் நெல்லையின் பல இடங்களில் இருட்டுக் கடை என்ற பெயரில் புதிய கடைகள் முளைத்தன.

பஸ்,ரெயில் நிலையங்களிலும் பலர் இருட்டுகடை அல்வா என்ற பெயரில் பிளாஸ்டிக் பைகளில் தரம் குறைந்த அல்வா விற்று வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகுகின்றனர். இந்தநிலையில் நெல்லை டவுனில் இருட்டுக்கடை(ஒரிஜினல் கடை) நடத்தி வரும் சுலோசனா பாய் , நெல்லை முதலாவது விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே 1900-ஆண்டில் இருந்து என்னுடைய மாமனார் கிருஷ்ணசிங் லாலா கடை நடத்தி வருகிறார். அதில் அல்வா மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த கடையில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அல்வா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடையில் 45 வாட்ஸ் மின்சார பல்ப் மட்டுமே எரிய விடப்படும்.

வெளிச்சம் குறைவாக இருப்பதால் இந்த கடையை இருட்டுக்கடை அல்வா கடை என்று மக்களால் அழைக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.                                                                                                                     இந்தநிலையில் நெல்லை சந்திப்பில் `திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா 'என்ற பெயரில் அந்த பகுதியை சேர்ந்த செய்யது முகைதீன் என்பவர் கடந்த 22-6-2007 முதல் கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இருட்டுக்கடை என்ற பெயரில் அவர் கடை நடத்துவதால் என் வியாபாரம் பாதிக்கிறது. எனவே இருட்டுக்கடை பெயருக்கு முன்போ, பின்போ வேறுவார்த்தைகளை சேர்த்து அல்வா கடை நடத்தக்கூடாது என்று உறுத்துக்கட்டளை பிறப்பிக்க வேண்டும். பை, பேக்குகளில் இந்த பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது.

2007-க்கு பிறகு விற்பனைக் கணக்குகளையும் லாபத்தையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் 27 சான்றுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரரின் கடையை பிரதிபலிக்கும் படியாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்று அச்சடித்தோ, விளம்பரம் செய்யவோ கூடாது.

இருட்டுக்கடை என்ற வார்த்தையுடன் முன்போ, பின்போ வேறு வார்த்தைகள் சேர்த்து அந்த முகவரியில் அல்வா வியாபாரம் செய்யக்கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 செய்யது முகைதீன்  இருட்டுக்கடை பெயரில் அல்வா கொடுக்க முயன்றது முடியாமல் போய்விட்டது.
 இருட்டுக்கடை பெயரில் மட்டுமல்ல .அல்வாக்கு பெயர் பெற்ற சாந்தி,லட்சுமி,ராஜா கடைகளின் பெயரிலும் நெல்லையில் பல இடங்களில் கடைகள் முளைத்து வியாபாரம் செய்கின்றனர்.அதுவு நெல்லை பேருந்துநிலையம் போன்ற வெளியூர் மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் இவர்களின் போலி அல்வாக்கடைகள் அதிகம். பெருந்து நிலையத்டில் இறங்கி சுற்றிலும்  பார்த்தால் சாந்தி அல்வாக்கடைகள் வரிசைக்கு நான்கு இருக்கும்.சாந்திக்கு முன் கண்ணுக்குத்தெரியாதஎழுத்துக்களில் இனிய,புதிய.உங்கள்,எங்கள் என்று எழுதியிருப்பார்கள்.
 வாங்கி ஏமாந்தால் அரிசி வடித்த கஞ்சியில் சிறிது இனிப்பைச்சேர்த்தாற்போல் இருக்கும். அத்துடன் அல்வா ஆசையே நெல்லைப் பேருந்து நிலையத்துடன் மறந்துபோய்விடும்.
 சரி ஒரு அல்வாவுக்கு இப்படி செய்தியும்,விளக்கமும் தேவையா என்கிறீர்களா? என்ன செய்ய இருட்டுக்கடை அல்வாவுக்கு நான் அடிமைங்க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?