மண்ணிலே தலை புதைத்து

    ஆளும் அரசு?      


இந்தியா சந்திக்கும் கடும் பிரச்சனைகளில் ஒன்று விசுவரூபம் எடுத்துவரும் வேலையின்மை ஆகும். கோடிக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் படித்துவிட்டு வேலை பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் நெருக்கடி காரணமாக தொழிலாளர்களை பலநிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன.
 கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியை சந்திக்கும் முறைசாரா தொழில்களும் விவசாயமும் ஏற்கெனவே கடும் வேலை யின்மையை தோற்றுவித்துள்ளன.
தற்போதைய நெருக்கடி யும் இணைந்து வேலையின்மை பூதாகரமாக உருவெடுத்து உள்ளது.

சமீபத்திய வேலை இழப்புகள்
கடந்த சில தினங்களாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்: 
பிஸ்கட் தயாரிக்கும் பார்லே நிறுவனம் 10000 ஊழியர்கள் ஆட்குறைப்பு.
  • மாருதி நிறுவனம் 3000 நிரந்தரமற்ற தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.
  • நிசான் கார் உற்பத்தி நிறுவனம் 1700 ஊழியர்களை நீக்கியது.
  • இரு சக்கர வாகனங்கள் உட்பட மோட்டார் வாகன துறையில் 2,30,000 பேர் வேலை இழப்பு.
  • இரயில்வே 3,00,000 ஊழியர்களை குறைக்க திட்டம்.
  • வட இந்திய பஞ்சாலை உற்பத்தியாளர் சங்கம் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் தமது துறையில் மட்டும் 3 கோடி பேர் வேலை இழக்கும் ஆபத்து உருவாகும் என அபாயச்சங்கு.
  • காக்னிசண்ட், சிஸ்கோ போன்ற மென்பொருள் நிறுவனங்களும் ஊழியர் எண்ணிக்கை குறைக்க திட்டம்.
  • ஸ்டார்ட் அப் திட்டத்தில் தொடங்கப்பட்ட ஒயோ ஓட்டல்/ ரிவிகோ/ ஷாப் க்ளூ போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பு.
  • திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களும் கோவை இஞ்சினியரிங் நிறுவனங்களும் கடும் பாதிப்பு. ஏராளமான ஊழியர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் வேலை இழப்பு.
இப்படி இந்த பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது. 
நாம் ஒரு முக்கிய அம்சத்தை நினைவில் கொள்வது  மிக அவசியம். அது என்னவெனில் ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி காரணமாக உருவான ஆனால் பெரிதும் ஊடகங்களில் பேசப்படாத முறைசாரா மற்றும் சிறு தொழில் வேலையின்மை பெரிய எண்ணிக்கையில் உள்ளது. இப்பொழுது கூடுதலாக உருவாகியுள்ள வேலையின்மை கொடுமை இது ஆகும்.

மோடி அரசாங்கத்தில் உருவான வேலையின்மை
சிஎம்ஐஇ (CMIE) எனும் ஆய்வு நிறுவனம் 2018ம் ஆண்டு கடைசி காலாண்டில் மட்டும் 1.1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என கூறுகிறது.  இதில் 91 லட்சம் பேர் கிராமப்புற உழைப்பாளிகள். இவர்களில் 77 லட்சம் பேர் பெண்கள். மேலும் மொத்த உழைப்பாளிகளில் சுமார் 74% பேர் வேலையின்மை எனும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் ஆய்வு அறிக்கை கூறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் உருவான வேலையின்மையின் கொடுமையை கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக்குகின்றன:
                                                                                                           2017                2018           2019
வேலை இல்லாதவர்கள்                                                   2.4கோடி    3.4கோடி    4.5கோடி
20-29 வயதினர் வேலை இல்லாதவர்கள்               1.78கோடி    2.2கோடி    3.07கோடி
வேலை இல்லாத பெண்கள்                                               16.7%             21.8%            27.1%
கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் வேலை இல்லாத 4.5 கோடி பேரில் சுமார் 1.1 கோடி பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயத்துறை (மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகள்) அளிக்கும் வேலை வாய்ப்புகள் 2005ம் ஆண்டில் 25.88 கோடியாக இருந்தது. ஆனால் 2018ம் ஆண்டில் இது 19.73 கோடியாக குறைந்துவிட்டது. இருப்பினும் தேசத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் 42% விவசாயத் துறையில்தான் உள்ளது. 
  • இந்தியா முழுதும் குறிப்பாக பெரு நகரங்களில் கட்டப்பட்ட 12 இலட்சம் வீடுகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளன. கட்டுமானத்துறை 2005ம் ஆண்டு 1.89 கோடி வேலைவாய்ப்புகளை அளித்தது. ஆனால் 2018ம் ஆண்டு இது வெறும் 16 லட்சமாக சரிந்துவிட்டது. இதில் மிக அதிகம் பாதிக்கப்பட்டது வடமாநில தொழிலாளர்கள்தான். எனவேதான் அவர்கள் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர்.
  • ஆலை உற்பத்தி துறையில் 2012-2018 ஆண்டு களுக்கிடையே சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.
  • கடந்த 6 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சந்தையில் நுழையும் உழைப்பாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.75 கோடி பேர். ஆனால் வேலை பெறுபவர்களோ வெறும் 45 லட்சம் பேர். 
  • அதாவது வேலை வாய்ப்பு சந்தைகளில் நுழையும் 4 பேரில் ஒருவர்தான் வேலை பெறுகிறார்.
  •  மீதி  3 பேர் அதாவது 75% பேர் வேலைவாய்ப்பை பெற முடியவில்லை.
இந்த கடுமையான சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதே மோடி அரசாங்கத்திற்கு தெரியவில்லை. அதற்கான திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் இத்தகைய நெருக்கடி உள்ளது என்பதையே இந்த அரசாங்கம் அங்கீகரித்ததாக தெரியவில்லை.
வேலையின்மை மட்டுமல்ல; ஒட்டு மொத்த பொருளாதர நெருக்கடியிலும் மோடி அரசாங்கம் இதே போலவே செயலற்று உள்ளது.

நெருக்கடியின் மையமான அம்சம் என்ன?
இந்த கடுமையான பிரச்சனைகள் குறித்து மோடி அல்லது அமித்ஷா அல்லது வேறு எந்த அமைச்சரும் பேசுவது இல்லை. முஸ்லீம்களை தனிமைப்படுத்த குடிமக்கள் தேசிய பதிவேடு/ மொழி மற்றும் கலாச்சார திணிப்பு/ அறிவியலுக்கு பொருந்தாத வாய் சவடால்கள்/இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தல் ஆகியவற்றில்தான் இவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். பொருளாதார நெருக்கடிகளை திசை திருப்புவதற்கு முயல்கின்றனர்.   கடந்த காலத்தில் மோடி படாடோபமாக அறிவித்த ‘மேக் இன் இண்டியா’/ ‘ஸ்கில் இண்டியா’/ ‘ஸ்டார்ட் அப் இண்டியா’/ சிறுதொழிலுக்கான முத்ரா திட்டம் போன்ற எந்த திட்டமும் வெற்றி பெற இயலவில்லை. ஏன் என கேள்வி எழுப்பி அதனை பரிசீலனை செய்ய மோடி அரசாங்கம் தயாராக இல்லை.

நெருக்கடியின் மையமான அம்சம் மக்களிடம் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருப்பதுதான்.
ஆனால் இதனை மோடி அரசாங்கம் உணரமறுக்கிறது. மாறாக பிரச்சனை மறுபுறத்தில் உற்பத்தி செய்யும் துறையில் இருப்பதாக மதிப்பீடு செய்து அதற்கான நிவாரணங்களை அறிவித்து வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள், கடனுக்கான  வட்டி குறைப்பு, வாராக்கடன் தள்ளுபடி என பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
 மக்களிடம் பணம் இல்லை எனில் அவர்கள் எப்படி பொருட்களை வாங்குவர்?
மக்கள் வாங்கவில்லை எனில் பொருட்கள் எப்படி விற்பனை ஆகும்?
 உற்பத்தி செய்யப் பட்ட பொருட்கள் விற்பனை ஆகவில்லை எனில் எந்த முதலீட்டாளர் மீண்டும் அதனை உற்பத்தி செய்வார்?

உற்பத்திக்கான தேவை இல்லை எனில் எந்த முதலீட்டாளர் வங்கியில் கடன் வாங்குவார்?
முதலீட்டாளருக்கு கடன் வாங்க முகாந்திரம் இல்லை எனில் வங்கிகள் கடன் வட்டியை குறைத்து என்ன பயன்? இந்த சாதாரண கேள்விகளை கூட  எழுப்பி விடை காண மோடி அரசாங்கம் தயாரக இல்லை.
 கார்ப்பரேட் நலனை குறியாக கொண்டுள்ள எந்த அரசாங்க மும் இத்தகைய கேள்விகளை எழுப்ப முன்வராது!


என்ன செய்ய வேண்டும்?
உழைப்பாளிகளின் கைகளில் பணத்தை புழங்க வைப்பது இன்றைய முக்கிய தேவை ஆகும். இதற்கு சிறந்த வழி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான். தனியார் துறையினர் தமது மூலதனத்திற்கு சரியான இலாபம் இல்லாததால் முதலீடு செய்ய மறுக்கின்றனர்.
‘மயிலே மயிலே இறகு போடு’ என மோடி அரசாங்கம் அவர்களை கெஞ்சி கொண்டுள்ளது.
இத்தகைய சூழல்களில் அர சாங்கமே முதலீடு போடவும் செலவழிக்கவும் முன்வர வேண்டும். முதலில் கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்புக்கு வழங்கும் முதலீட்டை பல மடங்கு உயர்த்த வேண்டும். இன்றைக்கு மோடி அரசாங்கம் மொத்த உற்பத்தி (ஜி.டி.பி)யில் 0.2% மட்டுமே இதற்கு ஒதுக்கீடு செய்கிறது. 2010ம் ஆண்டு இது 0.6 ஆக இருந்தது.

குறைந்த பட்சம் அந்த அளவிற்காவது உயர்த்த வேண்டும். இது கணிசமான கிராமப்புற உழைப்பாளிகளின் கைகளில் பணத்தை சேர்க்கும்.
கிராமப்புறத்தை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கையை இடதுசாரிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
சட்டம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தை சார்ந்த மாத்யூ ஐடிகுலா போன்றவர்கள் இப்பிரச்சனை குறித்து பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.

இந்தியாவில் 5000க்கும் அதிகமான நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களை பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் அல்லது அரசாங்கங்கள் நேரடியாக நிர்வகித்து வருகின்றன. நகரங்களில் பல பணிகளை செய்ய இயலும். உதாரணத்திற்கு சாலை பராமரிப்பு, நடைபாதைகளை பராமரிப்பது, அரசாங்கத்தின் பல்வேறு கட்டிடங்கள் பரா மரிப்பு, பசுமை இடங்களை பாதுகாத்தல், நீர்நிலைகளை மீட்டு பராமரித்தல், நகரங்களுக்குள் அல்லது அருகில் உள்ள சிறு வனங்கள் அல்லது மரங்கள் உட்பட பயிரினங்களை பாதுகாத்தல் போன்ற பல பணிகளை இத்திட்டம் மூலம் செய்ய இயலும்.
ஒரு நாளைக்கு ஒரு உழைப்பாளிக்கு ரூ 500 வீதம் 100 நாட்களுக்கு ஊதியம் அளித்தால் கூட நகர்ப்புற மக்களின் கைகளில் பணத்தை தர முடியும்.
மேலும் வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்க வாய்ப்புள்ள கல்வி/மருத்துவம்/உள்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உழைப்பாளிகள் தாம் ஈட்டிய பணத்தை செலவு செய்ய முன்வருவர். அது பொருட்களின் கிராக்கியை அதிகரிக்கும்; உற்பத்தி அதிகரிக்கும்; அதி கரிக்கும் உற்பத்தி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக் கும்; அது மீண்டும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்- இப்படி சங்கிலி தொடர் பலனை இது உருவாக்கும்.
உழைப்பாளிகள் மீது அக்கறை உள்ள எந்த ஒரு அரசாங்கமும் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். ஆனால் மோடி அரசாங்கம் இதனை செய்யுமா என்பதே மிகப்பெரிய கேள்வி குறி.
இதனை செய்ய மறுத்தால் இந்த அரசாங்கத்தை செய்ய வைக்க வேண்டிய கடமை மக்கள் இயக்கங்களுக்கு உள்ளது!                                                                                                                                                                                                                                    -அன்வர் உசேன்
விவரங்கள்  
1. ஜெயன் ஜோஸ் ஜோசப் (01.10.2019) இந்து ஆங்கில பத்திரிக்கை/ 2.ஜினாய் ஜோஸ் (பிசினஸ் லைன் 30.09.2019)
3. திகேந்தர் சிங் பன்வார் கட்டுரை
4. நியூஸ் கிளிக் (29.09.2019)
5. பொருளாதார ஆய்வாளர் பேரா. ஜெயதி கோஷ் பேட்டி.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்
உலக தர நிர்ணய தினம்

முதல் சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
 இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது(1968)


1979 - சமூகத்தில் சமமான  உரிமைகள் கோரி,  ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் பங்கேற்ற ஓரினச்சேர்க்கை யாளர்கள், பாலின முரண்பாடு கொண்டவர்கள் உள்ளிட்டோரின் முதல் தேசியப் பேரணி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.
இயற்கைக்கு அல்லது பொதுவாக ஏற்கப்பட்டுள்ள பாலுறவுக்கு முரண்பட்டவை, தற்காலத்திய பண்பாட்டுச் சீரழிவாக (கலி முற்றிவிட்டது!) பொதுவாகப் பார்க்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. கி.மு.9000களில் ஆண் தன்பாலினப் புணர்ச்சியைச் சித்தரிக்கும், கற்களில் செதுக்கப்பட்ட உருவங்கள் கிடைத்துள்ளன. கி.மு.7000களின் ஓவியங்கள், இருபால் பாலுறுப்புகளையும்கொண்ட மூன்றாம் பாலினத்தைச் சித்தரித்துள்ளன.
கி.மு.2900களில் பெண் உடையுடன் புதைக்கப்பட்டுள்ள ஆண் பிணம், மாற்றுப்பாலின உணர்வுகள் அக்காலத்திலேயே இருந்ததை நிரூபிக்கிறது.

முதல் ஒரே பாலின (ஆண்) இணையர் கி.மு.2400இல் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஒரே கல்லறையிலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வரலாறு முழுவதும் காணக் கிடைக்கும் இத்தகைய பாலின முரண்பாடுகள் பற்றிய செய்திகள், இவை இயல்பான மனித உணர்வுகள் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. மிருகங்களிடையேயும் காணப்படும் இத்தகைய தன்பாலின, இருபாலின உறவுகள், இவை தவறான ‘சிந்தனையால்’ ஏற்படுபவையல்ல என்பதை உணர்த்துகின்றன.
மிருகத்தனம் என்று நாம் குறிப்பிடும் வன்புணர்வு என்பது விலங்குகளிடம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பொதுவாக ஏற்கப்பட்டுள்ளவற்றிற்கு மாறானவர்கள் என்பதாலேயே பல சமூகங்களும் இத்தகையோருக்கு மரணம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்கியுள்ளன.
 சமூக சீர்திருத்தவாதியான ஜெரோமி பெந்தம், மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத இவ்வுறவுகளை எப்படிக் குற்றமென்று கூறலாம் என்று 1785இல் எழுதியதே இவர்களுக்கான முதல் ஆதரவுக்குரல் என்றாலும், அவர் அதை வெளியிடவே இல்லை!
பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, 1792இல் தன்பாலினச் சேர்க்கையை அங்கீகரித்து, சமவுரிமை வழங்கிய முதல் நாடாக பிரான்சு ஆனது.
 வளர்ந்த நாடுகள் பலவும் தற்போது அங்கீகரிக்கத் தொடங்கியிருந்தாலும், உலகின் பல பகுதிகளிலும், மனிதர்களாக ஏற்கக்கோரி போராடிக் கொண்டிருக்கிற இவர்களைக் குறிப்பிட எல்ஜிபிடி - லெஸ்பியன்(பெண் தன்பாலினச் சேர்க்கை), கே(ஆண் தன்பாலினச் சேர்க்கை), பைசெக்சுவல்(இருபாலரிடமும் உறவு), ட்ரான்ஸ்ஜெண்டர்(திருநங்கை, திருநம்பி) - என்ற பதம் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
 தன்பாலின உறவைப்போற்றி எழுதிய கிரேக்கப் பெண் கவிஞர் சாஃபோ பிறந்த லெஸ்போஸ் தீவின் பெயரிலிருந்தே லெஸ்பியன் என்ற சொல் உருவானது.
 பிற உறவுகளைக் குறிக்க வரலாறு முழுவதும் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், எல்ஜிபிடி என்ற பதம் 1980களில்தான் உருவானது.
பெயர் என்னவானாலும், அவர்கள் மனிதர்கள் என்பதை ஏற்றால் மட்டுமே நாம் நாகரிகமடைந்த மனிதர்களாவோம்!
                                                                                                                                    - அறிவுக்கடல்

Anbalagan V(முகநூலில்)
 
இவ்வளவு நாடகமும் நடந்தேறியதால்தான் அத்தனையுமே நாடகம் என்கிறோம்...

எங்க மேல ஏன்யா எறிஞ்சு விழறீங்க...முதல்ல அவர நிறுத்தச்சொல்லுங்க!

---------------------------------------------------------------------------------------------------------------------------------
 குதிரைகளுக்கு உணவாகும் காஷ்மீர் ஆப்பிள்கள்!
சட்டப்பிரிவு 370 நீக்கம், ஊரடங்கு தடை உத்தரவுகள் போன்றவற்றால், காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
காஷ்மீர் ஆப்பிள்களை மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என்று மோடி அரசு கூறியது. 

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கும், காஷ்மீர் விவசாயிகளிடமிருந்து ஆப்பிள் கொள்முதலை படோடோபமாக துவக்கி வைத்தார். 
 ஆப்பிள் விவசாயிகளைக் பாதுகாக்கும் திட்டம் என்ற பெயரில் சந்தை தலையீடு திட்டமும் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இந்த திட்டங்களால் காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சந்தைத் தலையீடு திட்டத்தின் கீழ் ஆப்பிள்களை வாங்குவதற்கு அதிகளவில் யாரும் முன்வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், மரங்களிலிருந்து பழுத்து கீழே விழும் ஆப்பிள்களைத் துண்டு துண்டாக நறுக்கி, அவற்றை வெயிலில் உலர்த்தும் வேலையில், காஷ்மீர் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது உலர்ந்த ஆப்பிள்கள், குளிர்காலங்களில் கால்நடைகளுக்காவது உணவாகப் பயன்படும் என்ற அடிப்படையில், அவற்றை வெட்டி நறுக்கி வருகின்றனர்.

ஆப்பிள்களைப் பொறுத்தவரை, அவற்றை மரங்களிலேயே பறித்து விட வேண்டும்; தானாகவே பழுத்து கீழே விழுந்து விட்டால், அந்த பழங்களுக்கு சந்தையில் மதிப்பிருக்காது என்றும், நான்கில் ஒரு பங்கு அளவிற்கு விலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையிலேயே ஆப்பிள்களை வாங்குவதற்கு யாரும் இல்லாததால், காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகள் கடும் நஷ்டத்தை அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
------------------------------------------------------------------------------------------------------------------------------
வடகிழக்கு பருவமழை அக்டோபர் -17 முதல் துவங்கும் ?
சென்னை வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன்
" வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. அதனால் தென் மாநிலங்களின் கடலோர பகுதியில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்று வீச துவங்கியுள்ளது.
எனவே அக்.17 முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளது.
 வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரியாக 44 செ.மீ. பெய்யும். இந்த ஆண்டும் அந்த இயல்பான மழையே பெய்யயலாம். சில நேரங்களில் மழை வெளுத்துக் கட்டவும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய வானிலையை பொறுத்தவரை மாநிலத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். வடக்கு கடலோரம் அல்லாத மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். " இவ்வாறு அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்கிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நீர்நிலைகளுக்கு முக்கிய ஆதாரமாக இந்த பருவமழை கருதப்படுகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தென்மேற்கு பருவமழை பெய்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான நீரை வழங்கும்.
இந்த மழையால் தென் மாநிலங்களில் கேரளா கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் நேரடியாகவும்; தமிழகம் மற்றும் ஆந்திராவில் உபரி நீர் வழியாகவும் நீர்நிலைகள் நிரம்பும்.
 இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 8ல் துவங்கி கொட்டோ கொட்டென்று கொட்டியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் பெய்து வருகிறது. கடந்த ஆண்டு மழை குறைவாக பெய்ததால் அனைத்து மாநிலங்களிலும் அணைகள் நீர்நிலைகள் வறட்சியில் இருந்தன.
இந்த ஆண்டு பெய்த மழை நீர்நிலைகளை நிரப்பி வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சில மாநிலங்களில் பருவமழையின் தீவிரத்தால் பல முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 தமிழகத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் இருந்து வந்த காவிரி நீராலும் கேரளாவில் இருந்து வந்த உபரி நீராலும் பல அணைகள் நிரம்பியுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட 50 சதவீதம் கூடுதலாக இந்த ஆண்டு மழை பெய்துள்ளது.

இந்நிலையில் இம்மாதம் 10ம் தேதி முதல் வட மாநிலங்கள் மற்றும் மத்திய மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகத் துவங்கியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று வலுவிழந்து வரும் நிலையில் வட கிழக்கு பருவக்காற்று வீச துவங்கியுள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு முக்கிய மழை ஆதாரமான வடகிழக்கு பருவமழை அக். 17ம் தேதி துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
2018ல் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் இந்த ஆண்டு மழை வெளுத்து கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
அறிவியல் கதிர்

1. வேதியியல்  அட்டவணை 150 

பூமியில் இயற்கையாக கிடைக்காமல்செயற்கையாக தயாரிக்கப்படும் மூலகங்கள்செயற்கை மூலகங்கள் எனப்படுகின்றன.இதுவரை24 செயற்கை மூலகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் ஒகநேஷன் என்ற மூலகம் மாஸ்கோ அருகிலுள்ள கூட்டு மூலக்கூறு ஆய்வகத்தில் ரசிய அமெரிக்க கூட்டு குழுவினரினால் 2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.2015ஆம் ஆண்டு அது புதிய மூலகம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு 2016இல் ஒகநேஷன் என்று பெயரிடப்பட்டது.Og என்ற குறியீடும் அணு எடை 118ம் கொண்டது. இதைக் கண்டுபிடித்தவர் யூரி ஒகநேஷன். வேதியியல் அட்டவணையில் கன மூலகங்களைக் கண்டுபிடித்ததில் பெரும்பங்காற்றியவர்..
ஒரு விஞ்ஞானி உயிருடன் இருக்கும்போதே அவரால்கண்டுபிடிக்கப்பட்ட மூலகத்திற்கு அவரது பெயர் சூட்டப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னால் சீபோர்கியம் என்ற மூலகத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது. அதிக அணு எண்ணும் அதிக அணு எடையும் கொண்ட ஒகநேஷன் கதிர்வீச்சு தன்மையால்மிகுந்த நிலையற்ற தன்மை கொண்டது.
 2005 இலிருந்து இதுவரை ஐந்தாறு மூலக்கூறுகளே அறியப்பட்டுள்ளது. எனினும் இது ஆராய்ச்சி நோக்கில் முக்கியத்துவம் கொண்டதாம்.

2. கடைசிவெள்ளைக் காண்டாமிருகம்?
 நஜின் மற்றும்ஃபடு என்ற பெயர்கொண்ட உலகின் கடைசி இரண்டு வெள்ளை காண்டாமிருகங்களின் ஏழுசினைமுட்டைகளை விஞ்ஞானிகள் செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்துள்ளார்கள்.
 இதே இனத்தை சேர்ந்த சுனி மற்றும் சாட் என்ற பெயர் கொண்ட ஆண் மிருகங்களிடமிருந்து எடுக்கப்பட்டு உறைநிலையில் வைக்கப்பட்ட விந்துக்களைக் கொண்டு இக்கருத்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.
 45 வயதான சுடான் என்ற பெயர் கொண்ட உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் கடந்த வருடம் கென்யாவில் இறந்துவிட்டது.

3. நிலவின்மித்ரா பள்ளம் 
ஆகஸ்ட் 23அன்று சந்திரயான் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த டெரைன் மேப்பிங்கேமிரா-2 எடுத்த நிலவின் மேற்பரப்புக் காட்சிகளை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
அந்தப் படத்தில் ஜேக்சன், மேக்,கொரோலீவ், மித்ரா ஆகிய பள்ளங்கள் காட்டப்பட்டிருந்தது.
இதில்மித்ரா பள்ளமானது பத்மபூஷன் விருது பெற்றவரும் கதிரலை இயற்பியலில் பல கண்டுபிடிப்புகளை செய்தவருமான பேராசியர் சிசிர் குமார் மித்ராவின் பெயரில் அழைக்கப்படுகிறது.
1890இல் பிறந்த  அவர் இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்றபின் பாரிஸ் சென்று அலைவரிசைகள் குறித்த ஆய்வில் இரண்டாவது முனைவர் பட்டம் பெற்றார். அங்குசிறிது காலம் கியூரி நிறுவனத்தில் மேரி கியூரியின் கீழ் பணி புரிந்தார்.
வளிமண்டலத்திலுள்ள அயனோஸ்பியர்(ionosphere) குறித்த ஆய்வுகள் மூலம்அந்த மண்டலத்தில் புற ஊதாக் கதிர்கள் நடுப்படலமாக(E layer)உள்ளது என்றும் இரவில் வானம் முழுக் கருமையாக இல்லாமல் ஒளிச் சிதறல்களாக காட்சியளிப்பதற்கு அதிலுள்ள படலத்திலுள்ள அயனிகள்தான் (ions) காரணம்போன்ற கண்டுபிடிப்புகள் அவருடைய சாதனைகளில் குறிப்பிடத்தகுந்தவை. 1947ஆம் ஆண்டு ‘மேல் வளி மண்டலம்’என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

4. விண்வெளி மோதல்கள்
அமெரிக்காவிலுள்ள தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்க்கு சொந்தமான ஸ்டார்லின்க் எனும் செயற்கைக்கோளும் ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியிருந்த  ஆய்வு செயற்கைக்கோள் ஒன்றும் மோதவிருந்தனவாம்.
 இதனால்ஐரோப்பிய ஒன்றியம் தனது செயற்கைக்கோளின் பாதையை மாற்ற வேண்டியிருந்ததாம். பூமிக்கு மேல் 320 கி.மீ தொலைவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இந்த சம்பவம் விண்வெளிப் பயணங்களின் பாதுகாப்பு குறித்தும் விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்தும் கவலையை எழுப்பியுள்ளது.

5. உயிரியல் கத்திரிக்கோல் 
புனேவிலுள்ளஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழகத்தை(IISER) சேர்ந்த அறிவியலாளர்கள் குழு McrBC  என்ற சிக்கலான பேக்டீரியா புரோட்டீனின் அணு அமைப்பை நிர்ணயித்துள்ளார்கள்.இந்த புரோட்டீன் பேக்டீரியாவின் செல்லில் வைரல் தொற்றுக்களைதடுக்க உதவும் ஒன்றாகும்.
இது ஒரு கத்திரிக்கோல் (molecular scissor) போல் செயல்படுகிறது.
உயிரியல் உதவிப் பேராசிரியர் கயரட் சசி கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் இந்த மகத்தான கண்டுபிடிப்பு இரண்டு மதிப்பு மிக்க அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலக்கூறு கத்திரிக்கோல் வேலை செய்யும் விதத்தை புரிந்துகொள்ள இது ஒரு பெரிய முன்னேற்றம் என்று சொல்லப்படுகிறது.
பேஜஸ் என்னும் வைரஸ் அணிகள் பேக்டீரியாவின் செல்களை தாக்கி அவைகளை அழிக்கின்றன.
இவைகளை பயன்படுத்தி பேக்டீரியா தொற்றுக்களை குணப்படுத்தும் முறை பேஜ் சிகிச்சை என்றழைக்கப்படுகிறது. McrBC புரோட்டீன் அமைப்பை கண்டுபிடித்திருப்பது இந்த சிகிச்சை முறையில் நீண்ட கால தாக்கத்தை உண்டுபண்ணும்.மேலும் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட பேக்டீரியா தொற்றுக்களை சமாளிக்கவும் உதவும்.

                                                                                                                                                       - ரமணன்

------------------------------------------------------------------------------------------------------------------------------
 
மாமல்லபுரம் சிற்பங்களை சீன அதிபருக்கு காட்டியது போல் 
நம் நாட்டின் அரசியல்வாதி & மணல் கொள்ளையர்களின் இந்த கைவண்ணத்தையும் காண்பித்திருக்கலாமே?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

அது பாஜக கைக்காசைப்போட்டு வாங்கியிருந்தால் நீங்க சொல்வது சரி.இந்த ரபேல் விமானத்தில் எனது வரிப்பணமும் இருக்கு மங்குனி அமைச்சரே ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?