நிம்மதியாக தூங்க..........

இயற்கையாக உடலில் நடக்கும் இயக்கத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதால் நாம் தூங்கி வழிவது மட்டுமின்றி உடலில் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் .
 இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்?

1. மாலைநேர வெளிச்சம்  தேவை 

உங்களால் செல்பேசி, திறன்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை பிரியமுடியாமல் தவிக்கிறீர்களா?
நள்ளிரவு தாண்டியும் சமூக வலைதளத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறீர்களா?
இதற்கு உங்கள் விடை ஆம் எனில், உங்கள் தூக்கத்தை நீங்களே பாதித்தவராக இருக்கக்கூடும்.
ஏனெனில், இந்த சாதனங்கள் வலிமையான நீல நிற வெளிச்சத்தை உமிழ்கின்றன.
இரவு நேரங்களில் இவற்றை பயன்படுத்தும்போது நமக்கு தூக்கம் வருவதுபோல உணரும் சமயங்களில் நமது உடலுக்குள் வெளியாகும் மெலட்டோனினுக்கு இந்நீல நிற வெளிச்சம் தடைபோடுகிறது.
எப்போது நமது உடலுக்குள் மெலட்டோனின் சுரக்கத் துவங்குகிறதோ, அது நாம் தூங்குவதற்கான நேரம் என்பதற்கான சைகை.
இரவு நேரங்களில் தூங்கச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக நீல நிற ஒளியை உமிழும் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது நல்லது .

இல்லையெனில், நீல நிற வெளிச்சத்தை தடை செய்யும் பிரத்யேக கண்ணாடிகள் அணிவது அல்லது இவ்வெளிச்சத்தை குறைக்கும் செயலிகளை பயன்படுத்துவது ஆகியவை உங்களுக்கு உதவக்கூடும்.
நமது தூக்கத்திற்கு எதிரியான டிஜிட்டல் சாதனங்களில் உமிழப்படும் நீல நிற வெளிச்சத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி. மாலை சூரியன் மறைந்த பிறகு வேறு எந்தவித மின்சார வெளிச்சத்தையும் பயன்படுத்துவதையும் குறைப்பது அதிக பலன் தரும்.
படுக்கையறையை முடிந்தவரை இருட்டறையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 மிகக்குறைவான வெளிச்சம் தரும் விளக்குகள் மற்றும் திரைச்சீலைகளை முறையாக பயன்படுத்தவது ஆகியவற்றின் மூலம் இதைச் சாதிக்கமுடியும்.

2.  நேரத்தை முறைப்படுத்துங்கள்

வார இறுதிகளில் அதாவது வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் நீண்ட நேரம் இரவில் விழித்திருக்க நாம் தூண்டப்படலாம்.
ஆனால் நாம் வாரம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்வதே சிறந்தது.
ஏனெனில் இவை வார இறுதி மற்றும் வார நாட்களில் நமது தூக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகளை களைந்து ஒரே மாதிரியான ஓய்வு நேரத்தை அடைந்து உடலானது புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.

தூங்கும் நேரத்தில் வார இறுதி மற்றும் வார நாட்களில் எவ்வளவு தூரம் மாறுபாடு இருக்கிறதோ அதே அளவுக்கு நமது உடல் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
வளர்சிதை மாற்ற கோளாறு மற்றும் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பை இவை அதிகரிக்கின்றன.
வார இறுதியில் தூங்காமல் படுக்கையில் மட்டும் அதிக நேரம் படுத்திருப்பது உங்களது உடலுக்கு மேலும் தூக்கம் தேவை என்பதற்கான ஓர் அறிகுறி .

3. ஓய்வுக்கான இடமாக்குங்கள்
மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள் நமது படுக்கையறையை பொழுதுபோக்குக்கான அறையாக மாற்றிவிட்டன.
உங்களது தூக்கத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால் இந்த சாதனங்களை பயன்படுத்துவதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செல்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கணினி ஆகியவற்றை பிற அறைகளில் வைக்க வேண்டும்.
மேலும் அலாரம் வைப்பதற்கு பிரத்யேக கடிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது படுக்கைக்கு அருகே மொபைலின் தேவையை தவிர்க்கமுடியும்.
படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது நல்லது.
ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலையில் நமது உடலுக்கு தூக்கம் கிடைக்க எளிதாக இருக்கும்.

 4. 'காலை' சூரியன்
சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு ஏற்றபடியே நமது உடல் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் நம்மில் பலருக்கு போதுமான காலை வெளிச்சம் கிடைப்பதில்லை அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு பிந்தைய வெளிச்சத்தை அதிகளவில் பெறுகிறோம்.
தினமும் குறிப்பிட்ட அளவு காலை நேர சூரிய வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணமாக காலை நேரத்தில் திரைசீலைகளை விலக்கி வைப்பது அல்லது அதி காலையில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு ஓடுவது போன்றவை நமக்கு மாலை வேளையில் எளிதில் தூக்க உணர்வு வர உதவும்.
உங்களுக்கு காலை வெளிச்சம் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வசிக்கும் பகுதி அதிக குளிர்காலத்தை கொண்டிருப்பதாக இருந்தால் பருவகால பாதிப்பு குறைபாடு போன்ற உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படக்கூடிய வெளிச்சப் பெட்டிகளை இச்சயமங்களில் பயன்படுத்துவது பலன் தரும்.

5. வேலைகளை ஒழுங்குபடுத்துங்கள்
இது தூங்குவதற்கான நேரம் என உடலை தயார்படுத்தும் விதமாக அதற்கு சைகைகளை தரும்வகையில் சில வேலைகளை செய்வது நல்ல தூக்கம் பெற உதவும் என்கிறார்.
 புத்தகம் படிப்பது, ரேடியோ அல்லது இசை கேட்பது, குளிப்பது ஆகியவை மனதை தூக்கத்துக்கு தயார்படுத்தவும் நாம் படுக்கைக்குச் செல்ல தயாராகவும் உதவும்.
பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கத்துக்கு தயார்படுத்த இவற்றைச் செய்கிறார்கள்.

 உணவு ஊட்டுவது, குழந்தைகளை குளிப்பாட்டுவது அதன் பின்னர் படுக்க வைத்து கதை சொல்லி தூங்க வைக்கின்றனர் பெற்றோர்கள். அது சரியான நடைமுறை.
தூக்கத்துக்கு முந்தைய நேரத்தை வழக்கப்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு தூக்கம் வர உதவாது.
இரவு உணவை குறிப்பிட்ட நேரத்துக்கு முடிப்பது, அதாவது படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன் முடித்துவிடுவது போன்றவை இரவுத்தூக்கத்தை மேம்படுத்தும்.


6. காபி தவிருங்கள்
 
இரவு காபி அருந்தினால் தூக்கம் வருவது தடைபடுவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கலாம்.
ஆனால், உங்களுக்கு தெரிந்திருக்காமல் போயிருக்ககூடிய ஒரு விஷயம் என்னவெனில், கஃபைன் சேர்க்கப்பட்ட பானங்களான டீ, கார்பனேட்டட் குளிர்பானங்கள் ஆகியவற்றை மாலை வேளையில் அருந்தியிருந்தால், அவை உங்களுக்கு தூக்கம் வருவதை கடினப்படுத்தலாம்.

ஏனெனில், நமது உடலின் இயக்கத்தில் கஃபைன் தாக்கம் ஐந்து முதல் ஒன்பது மணி நேரம் வரை இருக்கும்.
 மற்றொரு முக்கியமான விஷயம்.

ஒன்று அல்லது இரண்டு கோப்பை மது அல்லது பிராந்தி ஆகியவற்றை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடிப்பதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

மது குடிப்பது தூக்கத்தை மேம்படுத்த எவ்வகையிலும் உதவாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆல்கஹால் ஒரு விசித்திரமான விளைவை ஏற்படுத்தும்.

இது நீங்கள் எளிதில் தூக்கத்தில் விழ உதவும்.
ஆனால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதிலும், தூக்கத்தின் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

  தமிழகம், புதுச்சேரியில்

தீபாவளி வரை மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தீபாவளி வரை, கன மழை கொட்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், எட்டு மாவட்டங்களுக்கு, இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு, நேற்று மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டது. 

அந்த மாவட்டங்களில், நேற்று பரவலாக கனமழை பெய்தது. நேற்று பகலில், 'ரெட் அலர்ட்' விலக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு, இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. 
இதற்கிடையில், மழையும் பெய்து வருவதால், தீபாவளி விற்பனை பாதிக்கப்படுவதுடன், பொது மக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், 'தீபாவளிக்கு முன்தினம் வரை மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் :-
"அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது.
வங்கக் கடலின், மத்திய மேற்கு பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இது, மேலும் வலுப்பெற்று, வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.

அதனால், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும்.

சென்னை, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுச்சேரி, அரியலுார், பெரம்பலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், அலைகள் கொந்தளிப்பாக காணப்படுவதால், மீனவர்கள், அந்த பகுதிக்கு, இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'தீபாவளிக்கு முதல் நாளான, 26ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் மழை தொடர வாய்ப்பு உள்ளது. சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
 சில நேரங்களில், லேசான மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்யும்'
எனக்  கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல மாவட்டங்களிலும், கனமழை நீடிப்பதால், அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை முன்னதாகவே துவங்கி, நன்றாக பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவும் கனமழை
பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், 41 செ.மீ., மழை பதிவானது.மாவட்டத்தில் பெரிய அணையான அப்பர் பவானி, முழு கொள்ளளவை எட்டியதால், வினாடிக்கு, 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அத்திக்கடவு, பில்லுார் போன்ற பகுதிகளில், கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, மாவட்ட
நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மழையால், தோட்டங்களில் பயிரிட்டுள்ள காய்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே, இன்று முதல், 25ம் தேதி வரை, மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு

மழையில், 20 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை, நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்தனர். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மண்சரிவு ஏற்பட்ட இடங்களையும், அவசர கால முகாம்களையும் நேற்று பார்வையிட்டார். கலெக்டர் கூறுகையில், ''மாவட்டத்தின் அனைத்து அபாய பகுதிகளிலும், 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கை தொடர்கிறது. இதற்கு, 42 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குந்தா, குன்னுார் பகுதிகளில், பேரிடர் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர், தயார் நிலையில் உள்ளனர். தற்போது, மாவட்டத்தில், எவ்வித பாதிப்புகளும் இல்லை. சேதமான வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
நீலகிரி மாவட்டத்தில், சமீபத்தில் நடத்தப்பட்ட புவியியல் துறையினரின் ஆய்வில், 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டு, அதில், மிகவும் அபாயகரமான பகுதிகளாக, 70 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன; பட்டியல், மாநில அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி, சத்தி, அரசூர், மாக்கினாங்கோம்பை பகுதிகளில் பெய்த மழையால், கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ௧௯ முதல், ௨௧ம் தேதி வரை சுற்றுலா பயணியர் குளிக்க, தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, பவானிசாகர் அணை நிரம்பி, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 10 ஆயிரத்து, 700 கன அடி நீர் ஆற்றில் வெளியேறியது. இதனால், கொடிவேரி அருவியில் குளிக்க, நான்காவது நாளாக, நேற்றும் தடை நீட்டிக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பவானி ஆற்றங்கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தண்டோரா மூலம், கோபி வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலும், பரவலாக மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், சேலத்தில் பல இடங்களை, மழை நீர் சூழ்ந்தது. ஏற்காடு மலைப் பகுதிகளில், பல இடங்களில் திடீர் அருவிகள் உருவாகின. இதனால், ஏற்காடு மலையடிவாரத்தில் அமைந்துள்ள புது ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.ஏற்காடு மலையிலிருந்து வடியும் மழைநீர், கோரிமேடு, ஏ.டி.சி., நகர் பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், கோரிமேடு பகுதியில் இருந்து பெரிய புதுார் செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது.
விடிய விடிய பெய்த கன மழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றில் மழைநீரை விட அதிகமான கழிவுகள் கலந்துள்ளதால், தண்ணீர் கறுப்பாக பாய்ந்தோடுகிறது. வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாலங்களில் தேங்கியுள்ளன.உத்தமசோழபுரம் ஆத்துக்காடு பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து, நுரை பொங்கி வழிந்தோடுகிறது. இதனால், பாலத்தை கடக்க முடியாமல், மக்கள் அவதிப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மின்னக்கல் செல்லும் சாலையில், திருமணிமுத்தாற்று தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அடுத்த மதியம்பட்டி ஏரி, தரைப்பாலம் வழியாக ஓடும் திருமணிமுத்தாறில், நுரையுடன் மூன்றடிக்கு வெள்ளம் சென்றதால்,
போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
 இதனால், எட்டுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். மதியத்திற்கு மேல் தண்ணீர் குறைந்ததும், இருசக்கர வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டன.சேலம் மாவட்டத்தில், நேற்று காலை, 6:45 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருந்தது. இதனால், அரசு மற்றும் தனியார்
பள்ளிகளுக்கு, நேற்று விடுமுறை விடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கூடல் அணை, அதன் முழு கொள்ளளவான, 25 அடியை எட்டியது. இதனால், உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையும், முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 77 அடி கொண்ட இந்த அணை நீர்மட்டம், நேற்று காலை, 72 அடியை கடந்தது.மழையால், 60 வீடுகள் இடிந்தன. திற்பரப்பு அருவியில் குளிக்க, நேற்றும் தடை விதிக்கப்பட்டது. 500 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள், தண்ணீரில் மூழ்கின.

ஈரோடு பவானிசாகர் அணையின் மதகுகள் வழியாக, ஆர்ப்பரித்து செல்கிறது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம் கொண்டது. 32.8 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். நீர்மட்டம், 102 அடியை எட்டியதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் இரவு முதல், அணைக்கு வரும் நீர் முழுவதும், பவானி
ஆற்றில் திறக்கப்பட்டது.மாலை நிலவரப்படி, 13 ஆயிரம் கன அடி நீர், ஒன்பது கண் மேல் மதகு மற்றும் ஆற்று மதகு வழியாக, திறக்கப்பட்டு, பவானி ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.


கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரி, செப்., 5ல் நிரம்பியது. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மற்றும் சென்னைக்கு குடிநீர் அனுப்பியதால், ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது.மொத்த கொள்ளளவான, 1,465 மில்லியன் கன அடி, 1,250 மில்லியன் கன அடியாக குறைந்தது. இந்நிலையில், மூன்று நாட்களாக, காட்டுமன்னார்கோவில் மற்றும் வீராணம்
ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, ஏரிக்கு தண்ணீர் வர துவங்கியது.மேலும், கீழணையில் இருந்து, வடவாறு வழியாக, 400 கன அடி தண்ணீர், வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, ஏரியின் நீர்மட்டம், 1,380 மில்லியன் கன அடியாக உள்ளது. மழை எச்சரிக்கை இருப்பதால், ஏரியில் இருந்து, 1,065 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


நடப்பாண்டில் மூன்றாவது முறையாக, மேட்டூர் அணை நாளை நிரம்ப வாய்ப்புள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மொத்த உயரம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி.,காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால், மேட்டூர் அணைக்கு, நேற்று
வினாடிக்கு, 16 ஆயிரத்து, 239 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. மேலும், பவானிசாகர் அணையில் இருந்து, வினாடிக்கு, 13 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர், பவானி ஆறு வழியாக, காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
இதனால், மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு, நேற்று முன்தினம் இரவு முதல், வினாடிக்கு, 500 கன அடியாக குறைக்கப்பட்டது.நீர்வரத்தை விட, திறப்பு வெகுவாக குறைந்ததால், நேற்று முன்தினம், 117.80 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 118.60 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு, 91.25 டி.எம்.சி.,யாக இருந்தது.அணை நிரம்ப, இன்னமும், 2.5 டி.எம்.சி., நீர் தேவை.
 தற்போதைய நிலவரப்படி, நீர் இருப்பு, நாள் ஒன்றுக்கு, 1.25 டி.எம்.சி., அதிகரிக்கிறது.
நீர்வரத்தில், இதே நிலை நீடித்தால், நடப்பாண்டில் மூன்றாவது முறையாக, மேட்டூர் அணை, இன்று நிரம்ப வாய்ப்புள்ளது.
 நடப்பாண்டில், கடந்த மாதம், 7 மற்றும், 23ல் மேட்டூர் அணை நிரம்பியது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால், ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன், 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. சில மணி நேரத்திற்கு பின், கடலில் கலந்தது. மேலும், தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் மழை வெள்ளத்தால், மக்கள் சாலையில் செல்ல முடியாமல் முடங்கினர். பாம்பனில், 18 செ.மீ., மழை பதிவானது.பாம்பன் சின்னபாலம் மீனவர் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடிசை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருட்கள் மிதந்தன. இதனால், மீனவர்கள் அவதிப்பட்டனர். கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டு, மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். மீனவர்கள் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, உணவு அளித்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 'மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், இரண்டு நாட்கள் கனமழை கொட்டித் தீர்க்கும்' என வானிலை மையம், 'ரெட் அலெர்ட்' விடுத்திருந்தது.இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், வருவாய்த் துறை இறங்கியது.பாதுகாப்பு கருதி, வனச்சுற்றுலா தலங்கள் மற்றும் பேரிஜம் ஏரி பகுதியை, இரண்டு நாட்கள் மூடுவதாக, வனத் துறையினர் அறிவித்தனர். இதனால், பிரதான ஏரி, பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக் உட்பட நகர் முழுவதும், சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடியது.

நேற்று காலை முதலே சூறைக்காற்று வீசிய நிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
 மதியத்திற்கு பின் லேசான சாரல் மற்றும் வெயில் தலை காட்டியது.கொடைக்கானல் அருகே உள்ளது பெருமாள்மலை. இங்கிருந்து, தேனி, பெரியகுளத்திற்கு, 38 கி.மீ.,க்கு நெடுஞ்சாலைத் துறையினர், சாலை அமைத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், இந்த சாலையில் இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடிபாடுகளை அகற்றி, இலகு ரக வாகனங்கள் செல்லுமளவிற்கு நெடுஞ்சாலைத் துறை சீரமைத்தது. இரண்டாவது நாளாக, பாறைகளை துளையிடுவது, இடிபாடுகளை அகற்றும் பணி நேற்றும் தொடர்ந்தது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்

லெனின் அக்டோபர் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார்(1917)ஹங்கேரி தேசிய தினம்
முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)

ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)


கி.மு.42 - சீசரைக் கொல்லும் சதியில் முக்கியப் பங்காற்றிய ப்ரூட்டஸ் தற்கொலை செய்துகொள்ளக் காரணமான ஃபிலிப்பி யுத்தத் தோல்வி ஏற்பட்டது.

 ஜூலியஸ் சீசரின் படுகொலை இத்தொடரில் 2019 மார்ச் 15இல் இடம்பெற்றுள்ளது. எளிய மக்களின் நலனுக்கான சீர்திருத்தங்களைச் சீசர் மேற்கொண்டிருந்ததால், அவர் கொல்லப்பட்டதும், மிகச் சிலரான உயர்குடிச் செல்வந்தர்கள், தங்கள் தலைவரைக் கொன்றுவிட்டதாக மக்கள் வெகுண்டெழுந்தது உள்நாட்டுப் போராக வெடித்தது.
சீசர் கொலையின் முக்கியச் சதிகாரர்களான ப்ரூட்டசும், கேஷியசும் ரோமிலிருந்து வெளியேறி, கிரேக்கம், மாசிடோனியாவிலிருந்து சிரியா வரையான பகுதிகள் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளைக்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
   சீசருடன் இன்னொரு கான்சலாக இருந்தவரான மார்க்கஸ் ஆண்ட்டனியஸ்(மார்க் ஆண்ட்டனி), சீசரின் தத்துப்பிள்ளை கையஸ் ஆக்டேவியஸ்(பின்னாளில் அகஸ்ட்டஸ் சீசர்), சீசரின் முக்கியத் தளபதியான மார்க்கஸ் லெப்பிடஸ் மூவரும் மேற்குப் பகுதியின் ராணுவம் முழுவதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, செனட்டின் எதிர்ப்புகளை முறியடித்து, இரண்டாவது முக்கூட்டணியை உருவாக்கினர்.

ஏற்கெனவே, கி.மு.50களில், ஜூலியஸ் சீசர், பொம்ப்பெயஸ் மேக்னஸ், லிசினியஸ் கிராசஸ் ஆகியோர் இணைந்து செயல்பட்டது முக்கூட்டணி என்று அழைக்கப்பட்டிருந்ததால், இது இரண்டாவது முக்கூட்டணி என்று குறிப்பிடப்படுகிறது.
படைகளின் மிகச்சிறந்த பெரும்பகுதி, 28 லீஜியன்கள் அளவுக்கு முக்கூட்டணியிடம் இருந்த நிலையில், தங்களிடமிருந்த படைகளுடன், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோரைக்கொண்டு 19 லீஜியன்கள் படையை ப்ரூட்டஸ் தரப்பினரும் திரட்டினர்.
அக்காலத்திய ரோமானிய லீஜியன் என்பது, சுமார் 5,000 வீரர்கள் அடங்கிய அணியைக் குறிக்கும். அக்காலத்திய மரபின்படி, சீசருக்கு தெய்வீக நிலையை(டிவஸ் லூலியஸ்) முக்கூட்டணி அறிவித்ததுடன், சீசரால் தத்தெடுக்கப்பட்டிருந்த வாரிசான ஆக்டேவியசையும், தெய்வ மகன்(டிவி ஃபிலியஸ்) என்று அழைக்கத் தொடங்கியிருந்தது.

ப்ரூட்டசிடமிருந்த படையினரின் சீசரின்மீதான விசுவாசத்தை எவ்வளவு முயற்சித்தும் ப்ரூட்டசால் மாற்ற முடியாததால், சீசரின் வாரிசின் படையை எதிர்த்து அவர்களால் தீவிரமாகப் போரிட முடியவில்லை. நிலத்திலும், நீரிலும் நடைபெற்ற போர்களின் இறுதியாக அக்டோபர் 23இல் ஃபிலிப்பியில் நடைபெற்ற யுத்தத்தில், ஆக்டேவியசின் படைகள் தீர்மானகரமான வெற்றியைப்பெற்றன.
சிறு படையுடன் தப்பிச்சென்ற ப்ரூட்டஸ், சரணடைவதைத்தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் தற்கொலை செய்துகொண்டார்.
வாரிசாக ஆக்டேவியசை சீசர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்திராத, சீசருக்குப்பின் ஆட்சியதிகாரத்தை எதிர்பார்த்திருந்த ஆண்ட்டனி, பின்னர் க்ளியோபாட்ரா உதவியுடன் ஆக்டேவியசுடன் போரிட்டதே, ரோம் முடியரசாகவும், அகஸ்ட்டஸ் சீசர் பேரரசராகவும் காரணமானதை இன்னொரு நாள் விபரமாகக் காணலாம்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 கற்காலத்துக்குச் செல்லும்மருத்துவம்

மோடி உள்ளிட்ட பிஜேபி தலைவர்கள், அறிவியலுக்கு புறம்பாக, வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவது ஒன்றும் புதிதல்ல.
இந்த முட்டாள்த்தனமான உளறல்களுக்கு அடிப்படை அமைத்துக் கொடுத்ததே மோடிதான்.

அக்டோபர் 2014ல், பிரதமராக ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோடி, “மகாபாரதத்தில் கர்ணன் அவர் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை.  மகாபாரத காலத்திலேயே, ஜெனடிக் அறிவியல் வளர்ந்திருந்தது.  அந்த அடிப்படையில்தான் கர்ணன், அவரின் தாயின் வயிற்றில் பிறக்காமல் வெளியில் பிறந்தார்.

நாம் அனைவரும், பிள்ளையாரை வணங்குகிறோம்.  அந்த காலத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யும், அறுவை சிகிச்சை நிபுணர் இருந்ததால்தான், மனிதனின் உடலில் யானையின் தலையை வைக்க முடிந்தது” என்றார்.
  மோடி இவ்வாறு பேசியது, மும்பையில் மருத்துவர்களின் இடையே என்பது குறிப்பிடத்தக்கது.

பிஜேபி எம்.பி பிரக்யா தாக்கூர், பசு மாட்டின் மூத்திரம் கேன்சரை குணப்படுத்தும் என்றார்.
ஜனவரி 2019ல், இந்திய அறிவியலாளர்கள் மாநாட்டில் பேசிய, ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஸ்வர ராவ், மரபணு ஆராய்ச்சி மற்றும், செயற்கை கருத்தரிப்பு மூலமாகத்தான், மகாபாரதத்தில் கவுரவர்கள் 100 பேர் ஒரே தாய்க்கு பிறந்தார்கள் என்றார்.
திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், மகாபாரத காலத்திலேயே இண்டெர்னெட் இருந்தது என்று கூறினார்.

இப்படி இவர்கள் உளறுவது புதிதல்ல என்றாலும், இத்தகைய முட்டாள்த்தனங்களுக்கு, அங்கீகாரம் அளித்து, மக்கள் வரிப் பணத்தில் இது குறித்து ஆராய்ச்சி செய்வது, இப்போது தொடங்கியிருக்கிறது.

கேரவன் மாத இதழ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், கோமா நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, ரிக் வேதத்தில் உள்ள, மகாமிருத்துஞ்சை மந்திரத்தை சொல்லி,  அதன் மூலம் அவர்களை உயிர் பிழைக்க வைக்க, ஆராய்ச்சியில் ஈடுபட, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நிதி உதவி செய்துள்ளது.

2014ம் ஆண்டில், அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றிய, அஷோக் குமார் என்ற, நரம்பியல் நிபுணர், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட அரசிடம் நிதி உதவி கோரினார்.
  தலையில் அடிபட்டு, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, கோமா நிலையில் உள்ள நோயாளிகள் அருகே அமர்ந்து, மிருத்துஞ்சய் மந்திரத்தை ஓதினால், அந்த நோயாளிகள் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
அவரின் இந்த கருத்துரு, அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இது அறிவியலுக்கு எதிரானது என்று நிராகரிக்கப்பட்டது.  அடுத்ததாக, அஷோக் குமார்,  ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு இதே கருத்துருவை அனுப்புகிறார்.
 அவரின் கருத்துரு ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு மாதத்துக்கு 26 ஆயிரம் ரூபாய் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் மூளை தொடர்பாக, பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தாலும், இன்னும் மருத்துவர்களால், மூளையின் செயல்பாடுகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.
 தலையில் அடிபட்டு, ரத்தக் கசிவு ஏற்பட்டால், உடலில் எந்த பகுதி செயல்பாடுகளை இழக்கும் என்று சொல்ல முடியாது.   அப்படி செயல்பாடு இழந்தாலோ, அல்லது கோமா நிலைக்கு சென்றாலோ, அந்நோயாளிகளை காப்பாற்றுவது ஏறக்குறைய முடியாது என்றே சொல்லலாம்.
 அதன் காரணமாகத்தான், ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உலகெங்கும் வற்புறுத்தப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு நிதி உதவி கோரி, டாக்டர் அஷோக் சொன்ன காரணம்தான் விசித்திரமானது.

ராமாயணத்தில், இலங்கைக்கு பாலம் கட்டுவதற்கு முன், ராமர் மிருத்துஞ்சை மந்திரத்தை பயன்படுத்தினார்.  புராதன இந்தியாவில், போரில் காயமடைந்த வீரர்களை குணப்படுத்த மிருத்துஞ்சை மந்திரம் பயன்படுத்தப்பட்டது”.

இந்த ஆராய்ச்சித் திட்டம் தொடங்கியதும், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களுக்கு, இத்திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று புரியவில்லை.

உடனே, அஷோக் குமார், டெல்லியில் உள்ள சமஸ்கிருத பல்கலைக்கழமான லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீட பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியர்களை வரவழைத்தார்.
அதிலிருந்து ஒரு பேராசிரியர் வந்து, வெறும் மந்திரம் சொன்னால் போதாது…
 நோயாளியின் மீது கங்கை நீரை தெளித்து மந்திரம் சொன்னால், நோயாளிக்கு அதிக பலன் கொடுக்கும் என்று, சிகிச்சையை தொடங்கினார்.

கோமா நிலைக்கு சென்ற நோயாளிக்கு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மந்திரம் சொல்வதை தொடங்க வேண்டும்.  
 ஏழு நாட்கள் கால அவகாசத்தில் 1.25 லட்சம் முறை மந்திரம் சொன்னால், நோயாளி உயிர் பிழைப்பார் என்று சொல்லி, 
அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று, 2016  முதல் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

இது வரை ஒரே ஒரு நோயாளி கூட கோமாவிலிருந்து பிழைத்து வந்ததாக தெரியவில்லை.

அறிவியலுக்கு புறம்பாக, பகுத்தறிவுக்கு எதிராக, நம்மை கற்காலத்துக்கு அழைத்துச் செல்லும் பணிகளை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.  
 இந்த போக்கு, பள்ளிப் பிள்ளைகளின் பாடத்திட்டங்களை மாற்றுவதிலிருந்து தொடங்குகிறது என்பதுதான் ஆபத்தான விஷயம்.
இந்த மூடநம்பிக்கைகளையும், பிற்போக்குத்தனங்களையும், அம்பலப்படுத்தும் கடமை, இடதுசாரிகளுக்கும் திராவிட கட்சிகளுக்கும் இருக்கிறது.
பகுத்தறிவு ஒளியை கையில் ஏந்தும் கடமையும் அவர்களுக்கு உண்டு.
தரவுகள் : கேரவன் மாத இதழ்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?