போர் அறிவிப்பு வரும் முன்னே?

 தேர்தல் அறிவிப்பு வரும் பின்னே.!
காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என்று தில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் அழைத்து செல்லப்பட்ட வாகன அணி வகுப்பில்பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
நாடு முழுதும் இதுபற்றிய விவாதம் கிளம்பிய நிலையில், “இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும், இந்தியாவின் ரத்தம் கொதித்துப் போயிருக்கிறது.
 நமது ராணுவத்துக்கு பதில் நடவடிக்கை மேற்கொள்ள முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்று அறிவித்தார் பிரதமர் மோடி.


இதற்கேற்றாற்போல் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் இந்திய விமானப்படையின் விமானங்கள் ‘வாயுசக்தி 2019’ என்ற பெயரில் சில தினங்களுக்கு தாக்குதல் ஒத்திகையில் இறங்கின.

இதன் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாதாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டிவி மூலம் மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘’புல்வாமாதாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. எங்களிடம் நிரூபியுங்கள்.
 அப்படி ஆதாரம் இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கைஎடுப்போம். பயங்கரவாதத்துக்கு ஆதரவாகபாகிஸ்தான் மண்ணில் யாரும் இல்லை.பயங்கரவாதத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் தான். இங்கு 70,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று பேசினார்.

“இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதெல்லாம் தேர்தலை மனதில் வைத்துதான் சொல்லப்படுகிறது.
 அவ்வாறு தாக்குதல் நடக்கும் பட்சத்தில் நாங்கள் திருப்பித்தாக்க யோசிக்கமாட்டோம்.
போரை தொடர்வது எளிது, ஆனால் அதனை முடிவுக்கு கொண்டுவருவது கடினம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம். தாக்குதல் நடத்துவதனால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. எனது தலைமையில் பாகிஸ்தான் புதிதாக உருவாகியிருக்கிறது.
 அமைதியை மட்டுமே விரும்புகிறது” என்றும் அவர் கூறினார்.

புல்வாமா தாக்குதல் நடைபெற்று நான்குநாட்களுக்கு பிறகு இம்ரான்கான் மேற்கண்டவாறு கூறினார்.இதற்கிடையில் இந்தியாவில் முதன் முறையாக புல்வாமா தாக்குதல் பற்றி உளவுத்துறை சொல்லியும் மத்திய அரசு ஏன் மெத்தனமாக இருந்தது, தேர்தல் நேரத்தில் இந்த தாக்குதல் நடக்கக் காரணம் என்ன என்றுமோடி அரசை நோக்கி கடும் கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.

மேலும் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு பில்லியன் டாலர் கணக்கில் நிதியுதவி அளித்ததோடு, பாகிஸ்தானைப் பாராட்டி கூட்டறிக்கை வெளியிட்ட சவூதி இளவரசர் சல்மானை தில்லியில் மரபுகளை மீறி கட்டித் தழுவி வரவேற்றதன் மூலம் உயிர் நீத்த மாவீரர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்திவிட்டார் பிரதமர் மோடி என்றும் கண்டனக் கணைகள் எழுந்துள்ளன.

புல்வாமா தாக்குதல் சம்பவம் அரசுக்கு எதிராகவே திரும்பக் கூடும் என்ற நிலையில் தேர்தல் அறிவிக்கைக்கு முன்னதாகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் அவசரமாக தில்லிக்கு அழைக்கப்பட்டு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களோடு முக்கிய ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்.

 இதெல்லாம் ராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னதான, சர்வதேச தகவமைப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் என்றும் தில்லியில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிப்ரவரி மாத இறுதியில் பாகிஸ்தான் மீதான தாக்குதலும் அதையடுத்து தேர்தல் அறிவிக்கை வெளியீடும் நடந்தால் ஆச்சரியமில்லை என்று தில்லியில் இருக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

இதைக் கட்டமைக்கும் விதமாக, புல்வாமாமாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு திட்டமிட்டுள்ளது என உளவுத் துறை எச்சரிக்கைஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படைமற்றும் ஜம்மு- காஷ்மீர் காவல் துறை ஆகியனஇணைந்து தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.

இதனிடையே, காஷ்மீரில் 155 அரசியல் தலைவர்கள் மற்றும் 18 பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்து ஒருவாரமே ஆகியுள்ள நிலையில் காஷ்மீரில் தலைவர்களின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜம்மு- காஷ்மீர் மாநிலதலைமைச் செயலாளர் பி.வி.ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.
 “பிரிவினைவாத தலைவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது அரசுவளங்களை வீணாக்குவதாக உள்ளது. இவற்றை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.
அதனால் இவர்களுக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்படுகிறது” என்று மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, வாகித் பர்ரா, முன்னாள் அரசு அதிகாரி சாஹா பேசல் உள்ளிட்ட 155 அரசியல் தலைவர்கள் மற்றும்பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த சையத் அலி ஷா கீலானி, ஜே.கே.எல்.எப். தலைவர் யாசின் மாலிக், ஓராண்டுக்கும் மேலாகச் சிறையிலிருக்கிற சாஹித் அல் இஸ்லாம், நயீன் காம் உள்ளிட்ட 18 பேருக்கான பாதுகாப்பை ரத்துசெய்ய காஷ்மீர் அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

காஷ்மீரில் பாஜக ஆதரவோடு ஆட்சியமைத்த மெகபூபா முப்தியின் ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இந்த நடவடிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய நீரோ நரேந்திர மோடி..


தனது ரோம் நகரம் பற்றி எரிந்த போது, பிடில் வாசித்தா நீரோ மன்னனை போல, காஷீரில் 40 CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் உத்தரகாண்ட் மாநில வனவிலங்கு பூங்காவில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி...

புல்வாமா தாக்குதல் நடந்த போது நேரம் மதியம் 3.10 இருக்கும்.
அந்த நேரத்தில் ஜிம் கார்பெட் பூங்காவில் இருந்த பிரதமர் மோடி மாலை 6.30 மணி வரை இருந்தார்.

அங்கு டிஸ்கவரி சேனல் டாக்குமென்டரிகாக நடந்த பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார்.

பின்னர் தன்கார்ஹி கேட் வழியாக அவர் வெளியே வந்த போது 6.40 மணியாக இருந்தது.

 புல்வாமா தாக்குதல் நடந்தவுடனே அவருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டும் புன்னகை மாறாமல் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்த அவர் தாக்குதலைக்கண்டித்தோ,பலியான வீரர்களுக்கு அனுதாபம் தெரிவித்தோ எந்த வித அறிக்கையையும் விடவில்லை.

புல்வாமா தாக்குதலில் வீரர்களை இழந்து நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும் போது முதலைகளுக்கு மத்தியில் ஆவணப்படத்துக்கான ஷூட்டிங்கில் மோடி வழக்கமான புன்சிரிப்புடன்  நடித்துக்கொண்டே இருந்துள்ளார்.

 டிஸ்கவரி சேனல் படப்பிடிப்பாளர்களுக்கு படப்பிடிப்பு முடிந்த பின்னர்தான் தாக்குதல் தகவலே தெரிந்துள்ளது.

இது போன்ற பிரதமர் உலகில் வேறெங்காவது பார்த்திருப்போமா.இந்த ஆண்டு ஆஸ்கார் கண்டிப்பாக இவருக்கே.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 அதானி மருத்துவமனையில் 
1,018 குழந்தைகள் மரணம்.
பிரதமர் மோடியின் நெருக்கமான நண்பரும், நாட்டின் பெருமுதலாளிகளில் ஒருவருமான கௌதம் அதானி, தனது அதானி பவுண்டேசன் சார்பில், குஜராத் மாநிலம் குச் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரில் மருத்துவமனை ஒன்றைநடத்தி வருகிறார்.
இந்நிலையில், அந்த மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் சந்தோக்பென் அரேதியா எழுப்பிய கேள் விக்கு, குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் பதிலறிக்கை தாக்கல்செய்துள்ளார்.
 அதில், அதானியின் ஜிகே பொது மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் 1,018 குழந்தைகள் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


2014-15ஆம் ஆண்டில் 188குழந்தைகள், 
2015-16ஆம் ஆண் டில் 187 குழந்தைகள்,
 2016-17ஆம் ஆண்டில் 208 குழந்தைகள், 
2017-18ஆம் ஆண்டில் 276 குழந்தைகள், 
2018-19ஆம் ஆண்டில் 159குழந்தைகள் அதானி பவுண்டேசனுக்குச் சொந்தமான ஜிகே பொதுமருத்துவமனையில் பல்வேறுநோய்கள் மற்றும் மருத்துவக்கோளாறுகள் காரணமாக இறந் துள்ளனர்” என்று புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய கடந்த ஆண்டு மே மாதத்தில்குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், குறைப்பிரசவம், தொற்றுநோய்கள் மற்றும் சுவாசக்கோளாறுகள் போன்ற பல்வேறு காரணங்களே குழந்தைகளின் மரணத்துக் குப் பின்னால் இருந்ததை இந்த குழு கண்டறிந்துள்ளதாகவும் நிதின்படேல் சமாளித்துள்ளார்.

எனினும், அதானி மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருப்பது, குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
====================================================
ன்று,
பிப்ரவரி-22.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம்(1732)
ஸ்பெயின், புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819)

வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினரி என்ற பெயரில் துவங்கப்பட்டது(1853)
சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம்(1857)

எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன(1958)
====================================================
பாஜகவின்  பேரம் முடிந்தது.
அதிமுகவில் சோதனை ஆரம்பம்.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு 48 மணி நேரம் கூட முடியாத நிலையில், அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக பதவிவகித்து வரும் கே.சி.வீரமணி, வேலூர்மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துவருகிறார்.
 வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் உள்ள வீரமணியின் இரண்டு வீடுகள், திருமண மண்டபம், அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் பிப்ரவரி 21 வியாழனன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுபோலவே ஓசூரில் வசிக்கும் வீரமணியின் அண்ணன் மகள்வீடு, அங்கிருக்கக் கூடிய ஹோட் டல் மற்றும் ஏலகிரியிலுள்ள ஹோட்டலிலும் சோதனை நடைபெற்றது.
வீரமணி

வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 9 இடங்களில் இந்தசோதனை நடைபெற்றதாக தகவல்கள் கூறின.

மேலும், அமைச்சரின் அரசியல் உதவியாளர் சீனிவாசன் வீட்டிலும் சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள வீரமணியின் நண்பர் பரமேஸ்வரன் இல்லத்திலும் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாஜக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 கூட்டணி அமைத்து 48 மணி நேரம் கூட ஆகாத நிலையில், அதிமுகவில் திராவிட இயக்க பின்னணி கொண்ட அமைச்சரான வீரமணிக்கு எதிராக நடைபெறும் இந்த சோதனை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனிடையே, ஹோட்டல் ஒன்றில் அமைச்சர் வீரமணி சிலருடன் பணம் குறித்து பேரம் பேசும்போது எடுக்கப்பட்ட ரகசிய வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் வீரமணி மீது நில மோசடி புகார் நிலுவையில் இருந்து வருகிறது.

வேலூர் புதியபஸ் நிலையம் அருகில் உள்ளரூ.300 கோடி ரூபாய் நில விவகாரத்தில் அமைச்சர் வீரமணி தலையீடு இருப்பதாகவும், தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி அவர்தங்களை மிரட்டி வருவதாகவும் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.

அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்திருக்கும் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோரின் வீடுகளிலும் வியாழனன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் பணம் குறித்துஅமைச்சர் சிலருடன் பேசும்போதுரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட நில பேர விவகாரம் தொடர்பாக இந்த உரையாடல் நடந்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே சோதனை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகா செய்யுங்கள்.பிரதமர் ஆகுங்கள்.
 ‘பதஞ்சலி’ நிறுவன முதலாளியும், போலி சாமியாருமான ராம் தேவ், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் துள்ளார்.
அப்போது, யோகா பயிற்சி என்பது சாதாரணமானது அல்ல; யோகா பயிற்சிசெய்பவர்கள் ராஜயோகத்தை அடைய முடியும் என்று வழக்கம்போல அவிழ்த்து விட்டுள்ளார்.

“நேரு, யோகா பயிற்சி செய்து வந்தார். அதனால் அவருக்கு ராஜயோகம் கிடைத்து, அவர் பிரதமர் ஆனார். அடுத்து, இந்திரா காந்தி யோகா பயிற்சி செய்தார். அவரும் பிரதமர் ஆனார்.

பிரதமர் மோடி, ஒருசாதாரண தேநீர் வியாபாரியின் மகன். அவர் எப்படி பிரதமராக உயர்ந்தார்? என் றால், அதற்கும் யோகாதான் காரணம்.
 ஆதித்யநாத் யோகா செய்து செய்துதான் உத்தரப்பிரதேசத்திற்கே முதல்வராகி இருக்கிறார்” என்று வரிசையாக பட்டியல் போட்டுள்ளார்.

அத்துடன் விடாத ராம்தேவ், ராகுல் காந்தி கூடதற்போது யோகா பயிற்சிதான் செய்து கொண்டிருப்பதாகவும் ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பிடித்துக் கொண்ட செய்தியாளர் ஒருவர், “அப்படியானால் ராகுல்காந்தியும் விரைவில் பிரதமர் ஆவார்” என்று சொல்கிறீர்களா? என்று கேட்டதும் ஆடிப்போன ராம்தேவ், “தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை” என்று அசடு வழிந்துள்ளார்..
------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பால் இணைந்த கூட்டணி-தமிழிசை 

பணத்துக்காக இணைந்த பண்பில்லாத கூட்டணின்னு சொல்றாங்க விட்டுத்தள்ளுங்க அக்கா.
எச்சியை துடைச்சுட்டு ஒண்ணுமே நடக்காதது மாதிரி போஸ் கொடுப்பது நமக்கு புதுசாக்கா.?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?